சொங்காம் சஞ்சித் (Chongkham Sanjit) என்ற இளைஞரின் வயது 27. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மக்கள் விடுதலைப்படை என்ற இயக்கத்தில் சிறிது காலம் இருந்தார். 2000ஆவது ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.
2006ஆம் ஆண்டில் உடல் நலம் குன்றியதால் மக்கள் விடுதலைப்படையிலிருந்து விலகினார். எனினும் 2007ம் ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டு தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், ஒரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 23ம் தேதி காலையில், இம்பால் நகரின் சட்டசபை வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் க்வைரம்பான்ட் கெய்தல் கடைவீதிப்பகுதியில் மணிப்பூர் போலிஸ் கமாண்டோப் படை தீவிரவாதிகள் மீதான தேடுதல் வேட்டையை நடத்தியது. அப்போது அப்பகுதியில் சஞ்சித் இருந்துள்ளார்.
கமாண்டோ படையினர் அவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.2
கமாண்டோ படையினருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் அவர் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அவரிடம் ஆயுதங்கள் இருந்ததற்கான அறிகுறியே தெரியவில்லை.
அவர் முகம் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் மிகவும் இயல்பாக இருந்தது.
திடீரென சஞ்சித்தை வளைத்துப்பிடித்தனர் கமாண்டோ படையினர். அவரை அருகிலிருந்த மைமு மருந்துக்கடையினுள் இழுத்துச் சென்றனர்.எந்த ஆயுதமும் வைத்திருந்ததற்கான முகாந்திரமற்ற நிலையில், சஞ்சித்தை சுற்றி ஆயுதபாணிகளான கமாண்டோப் படையினர் சூழ்ந்தனர். சில விநாடிகளில்...
சஞ்சித்தின் சடலம் வெளியே இழுத்து வரப்பட்டது. அவரது உடல் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டது அப்போது அவரது உடலின் அருகில் கமாண்டோ படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரபினா தேவி என்ற கர்ப்பிணி பெண்ணின் உடல் கிடந்தது.
ஆனால் சஞ்சித்தின் குடும்பத்தினரோ, நோயுற்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அவரது உறவினருக்கு மருந்து வாங்குவதற்காகவே சஞ்சித் அப்பகுதியில் இருந்ததாகவும், அவரிடம் ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர்.
இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரர், அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அச்சம் இருப்பதால் இந்த புகைப்படத்தை வெளியிட துணியவில்லை. ஆனால் டெஹல்கா பத்திரிகையின் செய்தியாளர் தெரசா ரஹ்மானுக்கு இந்த சம்பவம் குறித்தும், புகைப்படம் குறித்தும் தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிப்பூர் கமாண்டோ படையினரின் இந்த வீரசாகசம் டெஹல்கா, 8 ஆகஸ்ட் 2009 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சி நடப்பதாக கூறும் இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளே நடந்து வருகின்றன. ஆனால் இதுபோன்ற புகைப்பட ஆதாரங்கள்தான் சிக்குவதில்லை.
http://sundararajan123.blogspot.com/2009/08/blog-post.html
< Prev | Next > |
---|