மக்களை எதிரியாக்கும் தத்தம் மன விருப்பு வெறுப்புகள் விமர்சனமாகும் போது.

"இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்களின் படையெடுப்பும்" பற்றிய "எக்ஸில்"  தனது விமர்சனத்தில் ....

 

"இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்களின் படையெடுப்பும்" என்ற எனது நூல் தொடர்பாக, கனடாவில் இருந்து ஒற்றை வரியில் மின் அஞ்லில் மூலம் கருத்து ஒன்றை மஸ்ரர் அனுப்பியிருந்தார்.

அந்தப் கருத்தில் இந்த நூல் "பாசிப் புலிகளான மாபியவுக்கு இரயாகரன் இந்த நூல் மூலம் வக்களத்து வாங்கியுள்ளதாக" குறிப்பிட்டுள்ளார்.



ஒரு புறம் தேசபக்தன் இந்த நூல் புலிகளை விமர்சிப்பதாகவும், தேசியத்தை அழிப்பதாகவும் கூறுகின்றது. மற்றொரு பக்கத்தில் புலிக்கு வக்களத்து வாங்குவதாக கூறி நூலை நிராகரிக்கின்றது. உண்மையில் இவர்கள் அனைவரும் மக்களின் அடிப்படை தேசிய நலன்களில் இருந்து, விடையத்தை பார்க்க மறுக்கின்றனர். மாறாக தத்தம் மன விருப்பு வெறுப்புக்கு எற்ப, நூலை பற்றி கருத்துகளை முன்தள்ளுகின்றனர். இந்த வகையில் எக்சில் இதழ் -13 இல் வெளிவந்த மற்றொரு விமர்சனத்தைப் பார்ப்போம்.



எனது நூலில் நான் குறிபிட்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றனர். "சமூகத்தில் இனம் கடந்து புரையோடிப் போயுள்ள சாதிய கொடுமைகளை முற்றாக நீக்கவும், அதற்கெதிரான அனைத்து முயற்சிகளை முற்றாக தடை செய்யவேண்டும்;. என்பதையும் அனைத்து சாதிப்படி நிலைகளும்; ஒழித்துக் கட்டப்பட வேண்டும்;. பிறப்பை முன்னிறுத்திய உழைப்பை வரையறுக்கும் சாதிய கூறுகள் முற்றாக தடை செய்ய வேண்டும் என்பதையும் சாதிய ரீதியான ஒடுக்குமுறையை வரலாற்று ரீதியாக அடையாளம் காணவும், இதற்கும் இந்து மதத்துக்கும் உள்ள உறவு தெளிவாக வரலாற்று ரீதியாக அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்பதையும், தீண்டாமை ஒரு சமூகக் குற்றமாக பிரகடனம் செய்யவேண்டும்;." என்பதை எனது நூலில் இருந்து எடுத்துக் காட்டிய எக்ஸில் "இது போன்ற போதிய சட்டங்கள் இந்திய யாப்பிலும் இருக்கின்றது" என்று கூறி விமர்சிக்க முற்படுகின்றனர். இதில் வேடிக்கை என்ன என்றால், எனது நூலில் பல உள்ளடங்கள் சரியாக இருப்பதாக எடுத்துரைக்கும் எக்ஸில், அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இணங்க சாதிய உள்ளடகத்துக்கு இந்த அணுகுமுறையை கையாளவில்லை. ஆனால் எனது எடுகோள் அனைத்தும், அது முன்னிறுத்தும் குறிக்கோள் அனைத்தும் நூலின் முழுபகுதிக்கும் ஒரே மாதிரியானவையாக உள்ளது.



இங்கு தத்தம் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டு, நூலை தவறாக விமர்சிக்க முனைகின்றது. இதற்கு எந்த அடிப்படையும் இருப்பதில்லை. இந்தியா அரசியல் அமைப்பு இதைப் பற்றி குறிப்பிடுகின்றது என்பது தவறானது. அங்கு இப்படி இருக்கின்றது என்பதும் தவறானது. நான் ஒட்டுமொத்தமாக முன்வைத்தவை எதுவும் இந்தியா அரசியல் சட்ட அமைப்பில் கிடையாது.  நாம் முன்வைப்பது பாட்டாளி வர்க்க ஆட்சியில், அதாவது தொழிலாளர் விவசாயி வர்க்க ஆட்சியில் சாதியத்தை எப்படி கையாள்வது என்பதைப் பற்றியே. எனது நூல் பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் சார்ந்தது. பாட்டாளி வர்க்க ஆட்சி அல்லாத எந்த அமைப்பிலும் சாதியை ஒழிக்க முடியாது. பாட்டாளி வர்க்க ஆட்சியில், அதன் சொந்தப் புரட்சியில் பெருமளவில் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களே அதிகாரத்தைக் கொண்டிருபப்பார். இதை எல்லாம் புரிந்து கொள்ளாத எந்த அரசியல் நோக்குமற்ற எக்ஸ்சில்; போன்றவர்களுடன், தத்தம் குறுகிய நலன்களுக்குள் இருந்து இதை விவாவதிப்பவர்களுடன் விவாவதிப்பதில் பயனில்லை. சாதி ஒழிப்பது என்பதில் நேர்மையான பார்வை உள்ள ஒவ்வொருவருடனும், நாம் விவாதிக்க முடியும். சாதி ஒழிப்பது எப்படி என்பதில், யாரும் வம்பளக்க முடியாது.



நாம் அடிப்படைக் கோசமாக முன்வைத்தவைகளை வெறும் சட்ட விடையமாக, முதலாளித்துவ எல்லைக்குள் வைத்து இதை புரிந்து விவாவதிப்பதன் மூலம் விவாவதத்தையே அர்த்தமற்றதாக்கின்றனர். வெறும் நிர்வாக வடிவத்தில், சமுதாயத்துக்கான தீர்வை பற்றி நாம் பேசுவதாக கற்பனையில் புனைந்த பின்பு, விமர்சனம் ஒன்றை கட்டமைக்கின்றனர். எனது இந்த நூலும், இந்த நூலின் உள்ளடக்கமும் சமுதாய இயக்கமின்றி, பாட்டாளி வர்க்க ஆட்சி அமைப்பு இன்றி, அதாவது ஒரு புரட்சி இன்றி எதுவும் சாத்தியமற்றது. வெறும் சட்டங்கள் மூலம், சமூகத்தில் இழையோடியுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது. இதை மார்க்சியவாதிகள் விட, யாரும் சிறப்பாக புரிந்து கொண்டவர்கள் எதார்த்தத்தில் சமூக இயக்கத்தில் இல்லை. மார்க்சியவாதிகள் மட்டும் தான், பிரச்சனையின் முழுமையை, அதன் தோற்றத்தில் இருந்து ஆராய்கின்றனர். இந்த வகையில் எனது நூல், குறிப்பாக இன்றைய சம கால தேசிய சிக்கல் மேலான, மாற்று அரசியல் நடைமுறைகான வழியை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.



இங்கு பெண்கள் பிரச்சனை, சாதியம் என நீண்ட சமூகப் பிரச்சனைகளில், கையாளப்பட வேண்டிய அடிப்படையான உள்ளடகத்தை குறிப்பாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பெண்கள் பிரச்சனை பற்றி விரிவாக இது பேசவில்லை. அது தனியான நூலுக்குரிய விரிவான பொருளாக இருந்தது. அதை நான் 1000 மேற்பட்ட பக்கங்களில் ஆராயந்து முன்வைக்கும் எனது மூன்று நூல்களும், தெளிவாக அவற்றுகான விளக்கங்களையும் தீர்வையும் முன்வைக்கின்றது இதே போன்று சாதியமைப்பைப் பற்றிய ஒரு ஆய்வை செய்த வரும் நான், அதை விரைவில் அச்சில் கொண்டு வர உழைக்கின்றேன். இதுபோன்று உலகமயமாதல் பற்றியும் விரைவில், எனது நூல் வெளிவர உள்ளது.



எனது நூலின் உள்ளடக்கம், அதன் நோக்கம், அதன் அடிப்படையான அரசியல் வழி தெளிவாக வரையறுக்கின்றது. சாதிய அமைப்பு வன்முறையிலான ஒரு மக்கள் புரட்சி இன்றி அழிக்கப்பட முடியாது. சாதி அமைப்பின மேல்; பாட்டாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றும் போது, தொடர்ச்சியான நீண்ட பல கலாச்சாரப் புரட்சிகளை நடத்துவது தவிர்க்க முடியாது. இது வன்முறை மற்றும் வன்முறை அற்ற வழிகளில் நடத்தப்படும். சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் ஈவிரக்மற்ற வன்முறையைக் கையாண்டு, ஒடுக்கப்பட்ட சாதிகளின் ஜனநாயக உரிமையை நிலைநாட்டும். பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்தவுடன் உருவாக்கும்; புரட்சிகர சட்டங்கள் தானாக சாதியம் ஒழிந்து விடாது. இது அராஜாகவாதிகளின் இனிமையான கற்பனையாகும். சாதி ஒழிப்பு பற்றி தீர்வு அற்றவர்களின் கற்பனை புனைவுகளாகி, அதுவே விமர்சமாகின்றது.



அடுத்த எனது சில கருத்துகளை எடுத்து வைத்து மீண்டும் விமர்சனத்தை வைக்கின்றனர். "சகல இனவாத, மதவாத, சாதியக் கட்சிகளையும் தடை செய்யவேண்டும். மக்களை பிளவுபடுத்தும் இனம், பால், சாதி.. சார்ந்து நடத்தும் பிளவு நடவடிக்கைகளான அரசியல், அமைப்பு வடிவங்கள், கல்வி முறைகள், பொருளாதார கூறுகள், கலை இலக்கிய முயற்சிகள், பண்பாட்டு கலாச்சார கூறுகள், மரபுகள் அனைத்தும் முற்றாக தடை செய்யப்பட வேண்டும்; அத்துடன் இதை எதிர்த்து போராட வேண்டும். மக்கள் இயற்கையான உயிரியல் பிராணியாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்." என நான் எழுதியதை எடுத்துக் காட்டி "தலித்தியம் குறித்து தீர்வுகளில் இப்படி முன்மொழிகின்ற இரயாகரன் வெறும் சட்டங்களினூடு ஆயிரமாண்டு கால வரலாற்றைக் கொண்ட சாதியக் கொடுமைகள் ஒற்றை நொடியில் தீர்ந்துவிடலாம் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். .... சுமார் 20 வருடகாலமாக பிரபாகரன் இதைத் தான் செய்து வருகிறார். அவர் தன்னை ஒரு ஸ்ராலினிஸ்ட் என்று பிரகரடனம் செய்யாதது தான் குறை" என்று எக்ஸில் கூறும் போது, வெறும் சட்ட விடையமாக காட்டி கருத்துரைக்கின்றனர். நான் இதை எந்த இடத்திலும் இதை ஒரு சட்ட விடையமாக குறிப்பிட்டதே இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் வெறுமான எங்கேயாவது சட்டமற்றங்கள் மூலம், சமூகத்தை மாற்றிவிடலாம் என்று எங்கேயாவது எப்போதாவது  கூறியுள்ளனரா!. இல்லை அல்லவா. கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை ஒரு மக்கள் புரட்சி மூலம், தமது சொந்த வர்க்க ஆட்சியை கைப்பற்றுவது பற்றிதான் எப்போதும் பேசியும் போராடியும் வருகின்றார்கள்; சட்டபூர்வமான வழிகளில் ஆட்சி மாற்றம் என்ற கற்பனையில் கம்யூனிஸ்ட்டுகள் கனவு கண்டதில்லை. ஆனால் எக்ஸ்லில் தனது விமர்சனத்துக்கு எற்ற வைகையில், கம்யூனிசத்தைப் பற்றி தமது கற்பனைக்கு எற்ற வகையில் புரட்டிப்; போட்ட விட்டு எறி மிதிக்கின்றனர்.



இங்கு தடை குறித்து எனது கருத்துரைகள் ஒடுக்கும் சமூக வடிவங்களுக்கு எதிராகவே முன்வைக்கபட்டவை. ஆணாதிக்க, சாதிய, மத  ஒடுக்குமுறைகள் என நீண்ட சமூகப் பிரச்சனையில், ஒடுக்கப்பட்ட மக்கள் தமது அதிகாரத்தில் இதை எப்படி அணுகுவது என்பதை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது. மூன்றாம் உலக நாடுகளில் புதியஜனநாயக புரட்சியை முன்வைக்கும் இந்த நூல், ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திர இயக்கங்களுடன் ஐக்கியத்தை முன்வைக்கின்றது. இது தேசிய முதலாளித்துவ சக்தியுடன் இணங்கிச் செல்லும் எல்லைவரை புதிய ஜனநாயகப் புரட்சியை முன்வைக்கின்றது. எகாதிபத்திய மற்றும் தேசிய எதிரிகளை எதிர்த்து, ஒடுக்கபட்ட மக்களின் அனைத்து சுதந்திர இயக்களுடனும் பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைந்தே, பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடத்த முனைப்புக் கொள்கின்றது. இதன் மூலம் பாட்டாளி வர்க்க அல்லாத மற்றயை ஜனநாயகப் பிரிவுகளின் முரணற்ற ஜனநாயக கோரிக்கையை சமூக வாழ்வில் நிறைவு செய்வதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவாக (வர்க்கமாக) நீடிப்பதை இல்லாதாக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் மேல், ஒடுக்கமுறையை கோரும் அனைத்து நடைமுறைகளையும் தடை செய்கின்றது.



இதை நீங்கள் "சுமார் 20 வருடகாலமாக பிரபாகரன் இதைத் தான் செய்த வருகிறார். அவர் தன்னை ஒரு ஸ்ராலினிஸ்ட் என்று பிரகடனம் செய்யாதது தான் குறை" என்றால் அதற்காக பாட்டாளி வர்க்கம், உங்களை அறியாமையை அம்பலத்துக்கு கொண்டு வகின்றது. ஸ்ராலினையும் பிரபாகரனையும் ஒப்பிடும் உங்கள் அரசியல், ஸ்ராலினையும் கிட்டலரையும் ஒப்பிடும் எகாதிபத்திய கோட்பாட்டு அடித்தளத்தில் இருந்து உருவாகின்றது. ஏகாதிபத்தியம் கட்டமைத்த பொய்கள் அனைத்தும் அம்பலமாகி வருகின்றது. இதை ஆதாரங்கள் உடன் அம்பலம் வகையில், எனது புதிய நூல் ஒன்று அச்சில் உள்ளது. ஸ்ராலின் மீதான அவதூறுகள் பொய் என்பதை, அண்மைய ரூசியா ஆவணங்கள் மற்றும் புள்ளிவிபர தரவுகள் தகர்த்து வருகின்றது. எல்லாம் திட்டமிட்டு எகாதிபத்திய நோக்குகாக கட்டமைக்கப்பட்டவை என்பது அம்பலமாகி வருகின்றது. ஒடுக்கப்பட்ட உழைக்கு மக்களின் நலன்களுக்காக போராடிய தலைவரை, எகாதிபத்திய கைக்கூலியாக செயல்பாட தயாராக உள்ள பிரபாகரனுடன் ஒப்பிடும் எக்சில் அரசியலின் வெற்று வெட்டுத்தனத்தை எள்ளி நகையாடவே முடியும். இவர்கள் எகாதிபத்தியத்துக்காக தாமகவே முன்வந்து வெட்டியார் வேலையை தலித்தியத்தின் பெயரில் செய்கின்றனர் அவ்வளவே.



சாதி ஒழிப்பை பற்றி எந்த விதமான விளக்கமோ, கோட்பாடோ இவர்களிடம் கிடையாது. சாதியம் பற்றிய எந்த தெளிவும் அற்ற எக்ஸ்சில், தலித்தியத்தின் பெயரில் "தலித்துகளைப் பொறுத்தவரை தங்கள் விடிவை நோக்கிய பயணத்தில் தடை விதிக்கின்ற தமிழ் தேசிய பாஸ்pஸ்டுகளும் ஒன்று தான், உங்களைப் போன்ற கொமினிஸ்டுகளும் ஒன்றதான்" என்று பிரகடனம் செய்கின்றனர். கடைந்தெடுத்த வலதுசாரிய சமூக கண்ணோட்டத்துடன் இப்படி கூறுவது, அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்கு எதிரானது. தமிழ் பாசிட்டுகள் பற்றி இங்கு நாம் பேசவில்லை. அதைப் பற்றி எமது நிலைப்பாட்டை நாம் தொடர்ந்து எழுதி வருகின்றோம். ஆனால் தமிழ் மக்களின் உரிமையைப் பற்றி இவாகள் பேச மறுப்பது ஏன்? தமிழ் மக்கள் சமன் புலி என்ற கண்ணோட்டங்கள் தலையின் உச்சியில் எற்றிவைத்துக் கொண்டு, மக்களுக்கு எதிராக கருத்துரைப்பது புலிகள் அல்லதோரின் கடைந்தெடுத்த அரசியல் வக்கிரமாகும்.



"தலித்துகளைப் பொறுத்தவரை தங்கள் விடிவை நோக்கிய பயணத்தில் ..." என்று கூறும் அந்த தலித் விடுதலையை எப்படி சாதிப்பது என்ற எங்கேயாவது தலித்துகளுக்காக மூக்கால் அழுது புலம்புபவர்கள் சொல்லியுள்ளனரா? கம்யூனிசத்தை எதிரியாக்கி முன்வைக்கும் தலித் விடுதலையை நோக்கிய பாதையை வையுங்கள்;. இதை விட்டுவிட்டு வம்பளப்பதில் என்ன கிடக்கு. உண்மையில் கம்யூனிஸ்டுகள் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு தீர்வை வைக்கும் போதும், அதற்காக போராடும் போதும், அதை பாசிட்டுகளுடன் ஒப்பிடுவதும் நவீன வலதுசாரிய வக்கிரமாகும். இதன் மூலம் தலித் விடுதலைக்கு எதிரானதாக, தமக்குள் தாமே குதியம் குத்துகின்றனர். தலித் விடுதலை எப்படி என்று கேட்டால், ஆளைக் காணோம் வாலை காணோம் என்று மௌனமாகவே ஒடி ஒழிக்கின்றனர்.



மக்களையும் பாசிட்டுகளையும் ஒன்றாக கருதி கருத்துரைக்கும் எக்ஸ்சில் "யோசேப் ஸ்ராலினது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டு நிபந்தனைகளினூடு தமிழ் தேசியத்தின் சுயநிர்ணம் குறித்த விமர்சனம் செய்யும் ஆசிரியர், இன்று அதைக் கோருகின்ற புலிகளை சுயவிமர்சனத்துக்கு எடுக்கின்றார்" வலதுசாரி பாசிட்டுகளின் சுயநிர்ணயம் பற்றிய கண்ணோட்டமும், கம்யூனிஸ்ட்டுகளின் கண்ணோட்டமும் ஒன்றுதான் என்று, உலகில் புதிய அரசியல் கண்டுபிடிப்பை எக்ஸ்சில் வெளியிட்டுள்ளனர். வலதுசாரிகள் சுயநிர்ணயத்தை எற்றுக் கொள்வதில்லை. அதாவது உங்களைப் போல். நீங்களும் சுயநிர்ணயத்தை எற்றுக் கொள்வதில்லை. புலிகளும் உங்களைப் போல் சுயநிர்ணயத்தின் உள்ளடகத்தை எற்றுக் கொள்வதில்லை. அவர்கள் சுயநிர்ணயத்துக்கு வெளியில் பிரிவினையை கோருபவர். நீங்கள் சுயநிர்ணயத்தை மறுத்து அதை எதிர்ப்பவர்கள். கோட்பாட்டு ரீதியான இதில் அரசியல் நோக்கம் ஒன்றாக இருக்கின்றது. தேசமக்களின் தேசிய அடிப்படைகளைக் கொண்ட மக்களின்  நலன்களை, புலிகளும் எக்ஸ்சிலும் ஒரே விதமாக ஒரே குறிக்கோளுடன் எதிர்க்கின்றனர். சுயநிர்ணய அடிப்படையை கைவிட்டதன் மூலம் மக்கள் தேசிய வளங்களை இழப்பதுடன், தமது உழைப்பையும் இழந்து பிச்சைக்காரனாக கையேந்துவதை இட்டு இருசாரரும் அக்கறைப்படுவதில்லை என்பதே எதார்த்த உண்மை.



இந்த அடிப்படையில் "தேசியத்துக்கு எதிரான சகல அன்னிய பொருளாதாரத்துக்கு தடை விதிக்கப்பட வேண்டும். அதாவது உலகமயமாதலை திட்டவட்டமாக எதிர்த்து சுயநிர்ணயத்தை வரையறுக்கவேண்டும். சகல வெளிநாட்டு மூலதனங்களையும், சொத்துக்களையும் நட்டஈடு இன்றி தேசிய மயமாக்கி தேசிய பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் வகையில், தேசிய உற்பத்திகளை இனம் கண்டு அதை வளர்த்தெடுக்கவேண்டும்;.  ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பணப்பயிர் உற்பத்தி முற்றாக தடை செய்யப்பட வேண்டும்." என நாம் முன்வைத்ததை எடுத்துக் காட்டிய எக்ஸில்  "பொருளாதார வாதத்தை முன்நிறுத்திய தீர்வுகளை உலகமயமாதலுக்கு எதிராக தேசியம் சார்ந்து நின்று மொழியப்படுகின்றது." என்று குற்றம் சாட்டுகின்றனர். எக்ஸின் அரசியல் தெளிவாகவே உலகமயமாக்கலை ஆதரித்து, தேசிய சுயநிர்ணயத்தை எதிர்த்து நிற்பது தான் என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. இந்த வகையில் இந்த தொடர் விமர்சனத்தில் புரையோடியுள்ள மக்கள் விரோதக் கண்ணோட்டம் வெட்ட வெளிச்சமாக நிர்வாணமாகவே இருக்கின்றது.

Last Updated on Friday, 18 April 2008 19:26