"இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்களின் படையெடுப்பும்" பற்றிய "ஏர்" தனது விமர்சனத்தில் ...

ஏர் காலாண்டிதழ் (மார்ச 2003), எனது நூலின் உள்ளடகத்துக்கு வெளியில் நின்று, விமர்சனம் என்ற பெயரில் தூற்றிவிடுகின்றனர். அடிப்படையான எனது விவாத உள்ளடகத்துக்குள் நின்று விமர்சிக்க வக்கற்றுப் போகின்றனர்.

 எனது நூல் இலங்கையின் ஒட்டு மொத்த இன வரலாற்றைப் பற்றியதோ, உலகமயமாதல் பற்றியானதோ அல்ல. இலங்கையில் மொத்த இன வரலாற்றை அடிப்படையாக கொண்டு தொகுக்கப்பட்டது அல்ல. மாறாக தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களின் நிலையில் நின்று, அந்தப் போராட்டத்தை சரியான பாதைக்கு எப்படி எடுத்துச் செல்ல வேண்டியது என்ற அடிப்படையில் நின்று, அதற்குள் விமர்சிக்கின்றது. அமைதி, சாமதானம் என்றும் மீள யுத்தம் என்ற கோசங்களை முன்வைக்கும் சமகால அனைத்து பினாமிய அடிப்படைகளையும் தகர்க்கும் வகையில், இந்த நூல் மிக குறிப்பாக அடிப்படைத் தரவுகளுடன், மறுக்க முடியாத உண்மைகளுடன் அரசியல் ரீதியாக தொகுக்கப்பட்டது. இது தான் இந்த நூலின் வெற்றி. அதனால் தான் விமர்சத்தை வெளியில் சென்று வைக்கின்றனர். குறிப்பாக சமர் இதலில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் இதுவரை யாரும் முன்வைக்காத அடிப்படைத் தரவுகளுடன், தமிழ் தேசியத்தின் பெயரில் முஸ்லீம் மக்களை எப்படி வேட்டையாடி படுகொலை செய்தனர் என்ற ஒரு விரிவான கட்டுரையை எழுதிய போதும் இது தான் நடந்தது. முஸ்லீம் இனவாதிகள் தமிழரைக் கொன்றதை நான் பேசவில்லை என்ற புலம்பியது போல், இந்த நூல் மேலான விமர்சனங்கள் அமைகின்றது.



இந்த நூல் சிங்கள இனவாதிகளின் வரலாற்றையோ, முஸ்லிம் மக்களின் பிற்போக்கு மதப்பிரிவைப் பற்றியோ, இடதுசாரிகளின் சந்தர்ப்பவாத பிழைப்பவாத இனவாதத்தையோ, மலையாக பிழைப்புவாத சக்தியின் மோசடிகள் பற்றியோ, தமிழ் துரோக குழுக்களின் காட்டிக் கொடுப்பை பற்றியோ எந்த விதத்திலும் விரிவான விவாதத்துக்கு எடுக்கவில்லை. சமகால நிகழ்ச்சி நிரலில் அமைதி சமாதானம் என்று கூறிக் கொண்டு முன்வைக்கும் தீர்வுகள் மேலும், காட்டிக் கொடுப்புகள் மேலும், ஏகாதிபத்திய கைக்கூலி நடத்தைகளுக்கு வண்ணப்பூச்சு அடிக்கும் மோசடிகள் மேலும் குறிப்பான துல்லியமான விமர்சனத்தை உள்ளடக்கின்றது. புலியின் குழு நலனுக்கு வெளியில், எதைப் போராட்டமாகவும் பேச்சு வார்த்தையின் உள்ளடக்கமாக இருக்க வேண்டும் என்பதைச் சுற்றியே, வரலாற்று தரவுகளை இந்த நூல் தொகுத்துள்ளது. இதைத் தாண்டி இதன் எல்லைக்கு அப்பால் விமர்சிக்க முற்படுவது, அரசியல் ரீதியான உள்ளடகத்துடன் கூடி காழ்ப்புர்ணர்வு கொண்டது. இதற்கு அப்பால் எடுத்துக் காட்டும் பல விடையங்கள் மேல் உண்மையை அடிப்படையாக கொண்டு, உங்களை விட கடுமையான விமர்சனங்களை கொண்டவர்கள் நாங்கள்.  



எனது நூல் மேலான விமர்சனத்தில் ஏர் இதழ் "நூலின் துவக்கம் முதல் இறுதி வரை இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டம் ஆட்சி மொழி துவங்கி, தரப்படுத்தல் ஊடாக எப்படியெல்லாம் அரசு ஒடுக்குமுறை மூலம் பரிணாமம் பெற்றது என்பதைக் காணமுடியவில்லை. சாவடால்கள், வெறுப்புக் குவியல்கள், அங்கீகரிக்க மறுக்கும் மனோபாவம், இடதுசாரி கையாலாகத்தனத்தின் புலம்பல் இவைகளைத் தான் காணமுடிகின்றது" என்று கூறி விமர்சனம் என்ற பெயரில் புலிகளாகவே நின்று மிரட்டுகின்றனர். எது சவாடல்?, எது வெறுப்பு குவியல்? என்பதை இட்டு ஒன்றையும் முன்வைக்க முடியவில்லை. அங்கிகரிக்க மறுக்கும் போக்கு என்று, எதையும் மக்கள் நலனில் இருந்து எடுத்துக் காட்ட முடியவில்லை!. இவர்கள் கௌவ்விப் பிடித்த கண்ணி என்ன? இலங்கை அரசின் இனவாதத்தின் வளர்ச்சியை பற்றி முழுமையாக வைக்கவில்லை என்பதைத் தான்.



இந்த நூலின் நோக்கம் அதுவல்ல. அதைப் பற்றி பேச தமிழ் தேசிய உலகமே இருக்கும் போது, எல்லா வித பினாமியமும் மூக்கால் சினுங்கி அதை முன்வைக்கும் போது, அதில் பெரியளவில் அப்பலப்படுத்த வேண்டிய முக்கியத்துவம் அவசியமற்றதாகவே உள்ளது. பெருந் தேசிய வரலாற்று பக்கங்களை, நான் சமர் மற்றும் பல்வேறு இடங்களில் எழுதி வந்துள்ளோம்;. இந்த நூல்; அதை கணிசமாகவும் மிகவும் தெளிவாவும், உள்ளடத்தின் தேவை தெளிவுபடுத்தும் எல்லைக்குள் அதை அம்பலம் செய்கின்றது. தமிழ் தேசியம் மீதான எனது  விமர்சனத்தின் சராம்சமே, சிங்கள இனவாதத்துக்கு தமிழ் தேசியம் எப்படி காலகாலமாக துணை போகின்றது என்பதை அம்பலப்படுத்துவதாக இருக்கின்றது. இதன் மூலம் இனவாதத்தை மறுதளித்து போராட அழைக்கின்றது.



எனது கருத்தை இடதுசாரி கையாலாகத்தனத்தின் புலம்பல் என்று ஏர் கூறும் போது, அறியாமையும், வக்காளத்து வாங்கி பிழைப்பதும்; மண்டிக் கிடக்கின்றது. இன்று எம் மண்ணில் புலம்புவதற்கு கூட தமிழ் தேசிய பாசிசம் அனுமதிக்கவில்லை. அது இலங்கையில் இருந்து புலம்பெயர் நாடுகள் ஈறாக இதுவே எதார்த்தம்;. எப்படி நாம் நீங்கள் கூறுவது போல் புலம்புகின்றோம்; என்ற நீங்கள் கேட்க கூடும்;. நாங்கள் துப்பாக்கி குண்டுகளை எங்கும் எந்தக் கணத்திலும் எற்றுக் கொள்ளும் தயார் நிலையில் நின்றுதான், நீங்கள் கூறும் புலம்பலை செய்கின்றோம். நடந்ததைச் சொல்லி புலம்ப, கதைக்க கூட வாயற்ற நிலையில் தான், தமிழ் தேசிய பாசிசம் சமூக பாசிசமாகியுள்ளது. எந்த மனிதனும் தமிழ் பாசிசத்தைச் சொல்லி எம் மண்ணில் புலம்ப முடியாது. மரணமும், சித்திரவதையும் தரிசிக்காது, இதை யாரும் செய்ய முடியாது. இது எம் மண்ணின் தேசிய எதார்த்தம்.



எனது கட்டுரை புலம்புவதாக கூறி புல்லரிக்கும் வகையில் சினுங்கும் போதே, தமிழ் பாசிச பினாமியத்துக்கு வக்காளத்து வாங்கி பினாற்றுகின்றீர்கள் என்பதை தாண்டி எதுவும் இதற்குள் இல்லை. நாங்கள் ஒரு வரியை எழுதும் போது, எந்த நேரமும் குண்டுகளை தரிசிக்கும் எதார்த்த மரண உணர்வு இன்றி; நான் எழுதிவிடவில்லை. இந்த நூலும் அப்படித் தான் உங்களுக்கு கிடைக்கின்றது. இந்த விமர்சனமும் அப்படித்தான் உயிர்தெழுகின்றது இது உங்களுக்கு புலம்புவதாக இருந்தால்;, அடிப்படையும் எதார்த்த ஆதாரமும் அற்ற வெற்று வெட்டுகளான அரசியல் பிழைப்புவாதம்தான். தமிழ் நாட்டின் அரசு எந்திரம் அதன் சூழலும் இலங்கை தமிழ் மக்களின் போரட்டத்துக்கு எதிராக இருந்தால், அதை ஈடுசெய்ய இப்படி புலம்புவது தீர்வாகாது. உண்மைகளையும், எதார்த்த நிலைமைகளையும் அடிப்படையாக கொண்டு, போராடுவது தான் மாற்றுப் பாதையாகும்;. மாறாக மற்றவர்களை புலம்புவதாகக் கூறி, சொந்தப் பிரதேசத்தில் வீரமாக இருப்பதாக பினாற்றுவது நேர்மையான அரசியல் அல்ல.  



அங்கீகரிக்க மறுக்கும் மானோபாவம் என்று எதைக் குறிப்பிடுகின்றார் என்பதை மர்மமாகவே விட்டுவிடுகின்றார். ஆனால் உள்ளடக்கம் புலிகளின் பாசிசத்தை அங்கிகரித்து செல்லவில்லை என்பதை குறித்து நிற்கின்றது. நாம் உழைக்கும் மக்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும், ஒரு நாளும் அங்கிகரிக்கப் போவதில்லை. யாரும் அப்படி அங்கிகரிக்க கோரமுடியாது. மக்களின் அடிப்படை நலன் சாராத எதையும், நாம் எப்படி எதற்காக அங்கிகரிக்க வேண்டும். மக்களுக்கு வெளியில் அங்கிகரிக்க கோரும் எந்த கோரிக்கையும், நாம் எதிர்த்து நிற்போம். பிழைப்புவாதமும், சந்தர்ப்பவாதமும், பினாமியமும் கொடி கட்டிப் பறக்கும் போது, அங்கிகரிக்க மறுப்பது பற்றிய பாசிச கருத்தாடலை மனவெட்கம் இன்றி ஏரால் வைக்க முடிகின்றது. உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், ஏர் இதழை வடக்கு கிழக்கில் நடத்த ஒரு நாளும் முடியாது. நடத்தினால்; தூக்கில் தொங்குவதைத் தவிர, வேறு வழி எதுவும் உங்களுக்கு இல்லை. தமிழ் பாசிச தேசியத்தை பினாமிய அரசியலுக்கு வெளியில் மனமாற அங்கிகரித்தாலும், எதையும் பெற்றுத் தராது.



"போராட்டத்தையும் அங்கிகரிக்க மறுப்பது, பேச்சு வார்த்தைiயும் அங்கிகரிக்க மறுப்பது அடம் பிடிக்கும் அணுகுமுறையாகும்;" கிளிப்பிள்ளை போல் நீங்கள் கூறுவதும், அதையே புலிகளாக கூறுவதன் மூலம் மிரட்டப்படுகின்றோம்;. போராட்டம், பேச்சு வார்த்தை என்பன மக்களின் அடிப்படை நலனை முன்னெடுக்காத வரை, நாம் ஏன் அங்கிகரிக்க வேண்டும்;. மக்களுக்கு வெளியில் போராட்டம் என்ற பெயரிலும், பேச்சு வார்த்தை என்ற பெயரிலும் நடக்கும் எதையும், எந்த மக்களும் அங்கிகரிக்க வேண்டியதில்லை. இதை அங்கிகரிப்பது பிழைப்புவாத பினாமிகளை மட்டும் பொறுத்தது. எதை அங்கிகரிக்கின்றோம், ஏன் அதை அங்கிகரிக்கின்றோம் என எதையும் தெரிந்து கொள்ளாத உங்களைப் போன்றவர்களுக்கு மட்டும் பொருந்தும்;. ஆனால் மக்கள் அங்கிகரிக்க வேண்டும் எனின், அவர்களின் சமூக நலன் முதன்மையானது. இந்த நூலில் உள்ள மற்றயை கட்டுரைகள் இதை தெளிவாக முழுமையாக்கும்.


அடுத்து "யார் எதிரி என்பதை முன்னிறுத்துவதில் உலகமயமாக்கலா? சிங்கள இனவாதிகளா? யாழ்ப்பாணத் தமிழர்களா? இலங்கை அரசா? இந்திய அரசா? என்பதை எல்லாம் தாண்டி போராடுபவர்களையும் இயக்கங்களையும் எதிரிகளாகச் சித்தரிக்கும் போக்கு இந்த நூலில் வெளிப்படுகின்றது" என்ற கண்டுபிடிப்பை வெளியிடுகின்றனர். போராடுபவர்களையும் இயக்கங்களையும் எதிர்ப்பதாக கூறும் இவர்கள், அதை பன்மையில் கண்டுபிடிக்கின்றனர். இலங்கை அரசுக்கு எதிராக போராடும் இயக்கம் அனைத்தையும் எதிரிகளாக கருதி, நாங்கள் அழிக்கவில்லை. நீங்கள் போராடுவதாக கூறும் இயக்கங்கள் தான் அழித்தன. குற்றச்சாட்டை எம்மை நோக்கி தள்ளுவது, ஏர்க்கு உவப்பான மோசடியாக உள்ளது. இதை கட்டமைக்கும் போது சவடால்கள், வெறுப்புக் குவியல்களை அடிப்படையாக கொள்ளுகின்றனர். இலங்கை அரசை எதிர்த்து இயக்கங்கள் முதல் சமூக நலனில் அக்கறை உள்ள அனைவரையும் யார் அழித்தனர். நீங்கள் யாரை அங்கிகரிக்க கோரி நிற்கின்றிர்களோ, யாரை போராடுபவர்களாகவும் இயக்கமாகவும் அங்கிகரித்து நிற்கின்றீர்களோ அவர்கள் தான் அனைத்தையும் அழித்தனர். இவர்கள் யாரும் உலகமயமாதலையோ, இந்தியாவையோ இலங்கையையோ கோட்பாட்டு ரீதியாக, அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராடவில்லை. சொந்த குழு நலன் சார்ந்து மட்டும், சிலவற்றை எதிர்கின்றனர். மக்களின் அரசியல் பொருளாதார நலன்களில் இருந்து, ஒரு நாளுமே இவர்களை எதிர்த்துப் போராடவில்லை.



ஏர் புலம்புவது ஏன். உண்மையில் ஜெயா அம்மையாரின் தடா முதல் பொடா சட்டத்துக்கு பயந்து நடுங்கியபடி புலம்பும் போது, குறளி வித்தை காட்டுகின்றனர். நீங்கள் கூறும் போராடுபவர்களும் இயக்கங்களும் ஏகாதிபத்திய விசுவாசிகளாக, தரகு நிலப்பிரபுத்துவ விசுவாசிகளாக, யாழ்ப்பாணத்து உயர் வர்க்க சாதித் தமிழனாக, ஆணாதிக்க வாதியாக இருக்கும் வரை, அதை எதிர்த்து போராடுவது தவிர்க்க முடியாது. இந்தியாவில் தமிழ் நாட்டை கொள்ளையிட்டு ஆண்ட பாசிட்டான நடிகர் எம்.ஐp.ஆர்ரின் பாதம் நக்கியவர்கள், இந்தியாவை எதிர்த்து தமது சொந்த குழு நலனுக்கு வெளியில் எப்படி போராடியதாக பறைசாற்ற முடியும்;. "போராடுபவர்களையும் இயக்கங்களையும் எதிரிகளாகச் சித்தரிப்பதாக" கூறி குற்றம் சாட்டும் நீங்கள், யாரெல்லாம் அதை செய்தனரோ அவர்களைப் பாதுக்காக்க எதிர் குற்றச்சாட்டை கட்டமைப்பது ஒரு மோசடியாகும். இந்தியாவில் ஆளும் வாக்கங்களின் செல்ல வளர்ப்பு பிள்ளையாக வளர்ந்தவர்களை, கோட்பாட்டு ரீதியாக இன்று வரை அதை நேசிப்பவர்களை பாதுகாக்க, எமக்கு எதிராக குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. நீங்கள் கூறும் "போராடுபவர்களும்; இயக்கங்களும்" இன்று வரை தமது "எதிரியாக உலகமயமாக்கலா? சிங்கள இனவாதிகளா? யாழ்ப்பாணத் தமிழர்களா? இலங்கை அரசா? இந்திய அரசா?" என எதையும் அடிப்படையாக கொண்டு போராடவில்லை. மாறாக குழுநலன் சாhந்து போராடும் அவர்கள், உழைக்கும் தமிழனை எதிரியாக காண்கின்றனர். சிங்கள், முஸ்லிம் அப்பாவி மக்களை எதிரியாக சித்தாரிக்கின்றனர்.



குழுநலன் சார்ந்து பேச்சுவார்த்தையில் முன்வைக்கும் கோரிக்கை முதல் அனைத்து விதமான சமாதான நடடிக்கைகளையும் நாம் அங்கிகரிக்க முடியாது. இலங்கை அரசு மற்றும் சிங்கள இனவாதிகளை மட்டும் எதிர்ப்பதை அடிப்படையாக கொண்டு, அவர்களுடன் மனமொத்து இணைந்து நிற்க முடியாது. நாம் அங்கிகரிக்கவில்லை என்ற குற்றம் சாட்டும் ஏர், "போராடுபவர்களும்; இயக்கங்களும்" (புலிகள்) எமது ஜனநாயக உரிமையை அங்கிகரிக்க மறுப்பதை இட்டு கதைக்கவில்லை. ஆனால் நாம் ஜனநாயகத்தை பற்றி கதைப்பதால் கொல்லப்படுவோம் என்ற நிலையில், எம்மை அங்கிகரிக்க மறுக்கும் பாசிசத்தை இட்டு ஏர் ஒரு துளி தன்னும் அக்கறை கொள்ளவில்லை. ஆனால் எம் மீது குற்றம் சாட்டி எம்மை அங்கிகரிக்க கோருகின்றனர்.



உங்கள் அரசியல் கண்ணோட்டத்துக்கு வெளியில், நாம் வரையறைக்கு உட்பட்ட நிலையில் மட்டும் அங்கிகரிக்கின்றோம்;;. சிங்கள இனவாத பாசிசம் தமிழன் என்பதால் தமிழ் மக்களை அழித்தொழிப்பதால், புலிகள் தமது சொந்த குழு நலன் சார்ந்து எதிர்த்து நிற்கும் போராட்டம், தமிழ் மக்களின் உயிர் உடமைகளை தற்காக்கின்றது என்ற எல்லைக்குள் அங்கிகரிக்கின்றோம். இது கோட்பாட்டு ரீதியாக தேசிய அரசியல் பொருளாதாரம் என்ற எல்லைக்குள் அல்ல. மக்களுக்கு வெளியில், மக்களை சூறையாடியபடி தமது சொந்த குழு நலன் சார்ந்து நிற்கும் போராட்டத்தில், தமிழ் மக்களின் தற்காப்பும் நீடிப்தால், அதை மட்டும் அங்கிகரிக்கின்றோம்;. அந்த வகையில் புலிகளை சிங்கள இனவாதிகள், பிராந்திய விஸ்தரிப்பு வாதிகள், ஏகாதிபத்தியங்கள் அழிப்பதை நாம் எதிர்த்து நிற்கின்றோம்.  



இலங்கையில் தமிழ் தேசிய போராட்டத்தை மக்கள் நடத்தவில்லை. உலகளவில் பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஆளும் வர்க்கமாக உருவாகும் பிரிவுகள் எப்படி மக்களுக்கு எதிராக இயங்குகின்றதோ அதே போல் தான் "போராடுபவர்களும்; இயக்கங்களும்" உள்ளன. வேறுபாடு சட்டபடியான அங்கிகாரம் இன்மையும், ஜனநாயகத்தை மறுத்து பாசிசத்தை ஆனையில் வைத்து அதிகாரத்துக்கு வந்தனர். அதற்கு சட்ட அங்கிகாரத்தைக் கோரி சமாதானம் என்றும் போராட்டம் என்று நடத்தும் மக்கள் விரோத அரசியலை, நாம் ஒரு நாளும் அங்கிகரிக்கப் போவதில்லை. மக்களுக்கும் அதற்கும் எந்த சம்மதமும் இல்லாது, அவர்களின் வாழ்வுடன் தொடர்பற்ற எல்லைக்குள் தான், அனைத்து பேரங்களும் போராட்டங்களும் நடக்கின்றது. சிங்கள இன அழிப்பு பாசிசத்தை எதிர்த்து புலிகள், தமது குழு நலன் சார்ந்த தற்காப்பில் புலிகளுடன் மக்கள் இணங்கி நிற்கின்றனர். இந்த எல்லைக்குள் நாம் இணங்கி நிற்கின்றோம்;. இதற்கு வெளியில் மக்களைக் போல் விமர்சிக்கின்றோம், எதிர்த்துப் போராடுகின்றோம். அதற்கு மேலே ஒரு படி போய் நாம் அதை தொகுத்து வழங்குகின்றோம். அதுவே இந்த நூல். இதை விட நாங்கள் எதையும் இதற்கு வெளியில் பெரிதாக சொல்லவுமில்லை, செய்யவுமில்லை.



"இலங்கையைக் கொள்ளைக் காடாக்க முயற்சிக்கும் பன்னாட்டு முதலாளிக்கு எதிரான ஆக்கப் பூர்வமான விமர்சனமாக இல்லை" மிகவும் வேடிக்கையான விமர்சனம்;. இலங்கையில் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு இலங்கை அரசுடன், புலிகள் தமிழ் தேசியத்தின் பின்னால் எப்படி கைகோர்த்துள்ளனர் என்பதை விளக்குவதே இந்த நூல். இதுவரை இலங்கையில் உலகமயமாதலின் ஆதிக்கம் பற்றி, வேறுயாரும் இந்தளவில் தரவுகளை கொண்டு அம்பலப்படுத்திவிடவில்லை. தமிழ் தேசியம் எப்படி சோரம் போகிறது என்பதை துல்லியமாக, உலகமயமாதல் சகப்தத்தில் அம்பலப்படுத்துகின்றது. இலங்கையில் ஏகாதிபத்தியம் கொள்ளை அடிப்பதை முழுமையாக கொண்டு வருவது, மற்றொரு நூலாகவே இருக்க முடியும். இந்த நூலுக்குள் அல்ல. விரையில் வெளியிட தயாரித்து வரும் எனது நூலான, உலகமயமாக்கலும் சர்வதேசியமும் என்ற நூலில் இலங்கை பற்றி சிறப்பான இணைப்பு உண்டு. எதிர்காலத்தில் இலங்கையில் உலகமயமாதல் பற்றி தனியான நூல் ஒன்றை எழுதும் வகையில் குறிப்புகளை சேகரிக்கவும் தொடங்கியுள்ளேன். எதிர் காலத்தில் முழுமையான தரவுகளை கொண்ட, அரசியல் ரீதியாகவே இலங்கையில் உலகமயமாதலை தொகுத்தளிக்கும். இலங்கை இன வ று, இடதுசாரிகளின் துரோக வரலாறுகள் என்று, இது வரை அரசியல் ரீதியாக கொண்டு வரவேண்டிய பல நூல்கள் இருப்பதை நாம் புறக்கணித்துவிடவில்லை. ஆணாதிக்கம், சாதியம், உலகமயமாதல் போன்று இவைகளும் முக்கியமானவைதான். ஆணாதிக்கம் பற்றி எனது மூன்று நூல்கள் பல தரவுகளை தொகுத்துள்ளது. உலகமயமாதல் பற்றி 1000 பக்கங்களை கொண்ட நூல் விரைவில் முடிக்க தருவாயில் உள்ளேன்; சாதிய அமைப்பு பற்றிய நூல் ஒன்று, அதைத் தொடர்ந்து கொண்டு வரும் உழைப்பில் ஈடுபட்டும் உள்ளேன்.



விவாதங்களின் அடிப்படைக்கு வெளியில் நின்று விமர்சிப்பது தர்மிகப் பண்பு அல்ல. நான் விவாதித்த அடிப்படைகள் பிழை என்றால், அதை விமர்சிக்க முடியும்;. அதை நான் வரவேற்பேன்;. இல்லாது விமர்சனம் என்ற பெயரில், உள்ளடகத்துக்கு வெளியில் நின்று அதைச் சொல்லவில்லை, இதைச் சொல்லவில்லை, என்ற துற்றுவது விமர்சனம் அல்ல. புத்தகத்துக்கு வெளியில் நின்று புலம்புவதால் அது விமர்சனமாகிவிடாது. அவை பல சந்தர்ப்பத்தில் மற்றொரு தலைப்புக்குரிய, மற்றொரு பெரிய நூலுக்குரிய விடையமாக இருக்கின்றது என்பதே உண்மை.  

17.11.2003

Last Updated on Friday, 23 May 2008 21:30