அரசியலாகியுள்ள கொரோனா மரணங்கள்

அரசும் அதன் மீதான அதிகாரமே எல்லாம், வைரஸ் என்பது கால் தூசு. இது தான் இயற்கை மீதான முதலாளித்துவ அரசுகளின் கொள்கைகள். இப்படித் தான் கொரோனா வைரஸ் குறித்து முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் கருதியதுடன் - அதையே நடைமுறையாக்கினர்.

ஆனால் இயற்கையும், இயற்கை விதியும் இதைக் கடந்தது என்பதையும் - கொரோனா வைரஸ் தன் வழியில் மனிதனை கொல்லத் தொடங்கிய போது - மனிதனுக்கு புரியத் தொடங்கியது இயற்கை முதலாளித்துவ அதிகாரத்தையும் கடந்ததென்று. தங்கள் வர்க்க அரசியல் அதிகாரங்கள் மூலமும், நவீன தொழில்நுட்பம் மூலமும், வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கொரோனா மரணங்கள் தங்கள் வர்க்க சர்வாதிகார தனியுடமை கட்டமைப்பையே தகர்த்துவிடும் என்ற பொது நெருக்கடியை அடுத்து, வைரஸ் தொற்றினை இயற்கை வடிவத்தில் முடக்கி கட்டுப்படுத்தும் நடவடிக்கையை, மெதுவாகவும் -  அரைகுறையுமாக தொடங்கினர்.

மூலதனத்தை முதன்மைப்படுத்தி முன்னெடுக்கும் முடிவுகளால் ஏற்பட்ட தயக்கம், தாமதம் கொரோனா மரணங்களாகவும் – மரண எண்ணிக்கை அதிகரிப்புமாகவும் பரிணமித்தது. மரணம் இன்று அரசியலாகியுள்ளது. இந்த அரசியலானது வர்க்க அரசியல் முரண்பாடாக மாறவில்லை. மாறாக ஆளும் வர்க்கத்தினுள்ளான முரண்பாடாக மட்டும் - குறுகி வெளிப்படுகின்றது. வர்க்கரீதியாக ஓடுக்கப்பட்ட வர்க்கமோ, வர்க்க அரசியலுக்கு பதில் பொருளாதாரவாத அரசியலுக்குள் முடங்கிக் கிடக்கின்றது. வர்க்க அரசியல் கோரிக்கைக்கும் - பொருளாதார கோரிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டை மார்க்சியம் மிகத் தெளிவாக கொண்டிருந்த போதும், பொருளாதார கோரிக்கைக்குள் அல்லது எதுவுமற்ற கொரோனா அரசியலாக சர்வதேசியம் குறுகிக் கிடக்கின்றது.

இந்த அரசியல் பின்னணியில் உலகின் ஓவ்வொரு நாடும் கொரோனாவுக்கு எதிராக எடுத்த முடிவுகளும் - மக்களின் நலனில் இருந்து எடுக்கப்பட்டதல்ல. இதனால் அது ஏற்படுத்திய விளைவுகள், மக்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றது. வர்க்க அமைப்பாக பிளந்துள்ள சமூகமானது இயற்கை, பொருளாதாரம், சமூகம்.. ரீதியாக, பல முரண்பாடுகளுக்குள் சிக்கி சமூக விளைவுகளைச் சந்தித்து வருகின்றது. அத்துடன் இன, மத, சாதி, நிற முரண்பாடுகளும் இணைந்து, சொல்லொணா மனிதத் துயரத்தை உருவாக்கி வருகின்றது.

அரசுகளின் முதலாளித்துவக் கண்ணோட்டத்துக்கு முரணாக உருவான இயற்கை செயற்பாட்டை அரைகுறையுமாக எதிர்கொண்டனர். எடுக்கப்பட்ட முடிவுகள் மருத்துவ ரீதியான இயற்கை அணுகுமுறைக்கு முரணாக, தங்கள் பொருளாதார கொள்கைக்கு அமைவாகவே எடுக்கப்பட்டது. இப்படி எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைவான மரண விகிதங்களே - இன்று உலகளவில் வெளியாகும் புள்ளிவிபரங்கள். இதுவும் முழுமையானதல்ல மூடிமறைக்கப்பட்டவையே.

அதேநேரம் உலகளவிலான மரண எண்ணிக்கை விகிதங்களைக் கொண்டு – பிற நாட்டை விட தங்கள் நாடுகள் சிறப்பாக செயற்படுகின்றன என்ற பொதுக் கருத்தினை உருவாக்கி அதைக் கொண்டு சரியானவராக தங்களை நிறுவ முனைகின்றனர். அதேநேரம் பிற நாட்டை குற்றம் சாட்டி, தங்கள் முதலாளித்துவ நடத்தைகள் சரியானது என்று காட்ட முனைகின்றனர்.  ஆட்சியிலுள்ள தாங்கள் சரியாகவும், மக்கள் நலன் சார்ந்து இருப்பதானதுமான பொதுக் கருத்தை உருவாக்க, மரண எண்ணிக்கை குறித்துப் பேசுகின்றனர். உலகில் எந்த அரசும் தாங்கள் தவறு இழைத்ததாக கூறி – நடந்த, நடந்து கொண்டிருக்கும் நிலைமைக்கு பொறுப்பேற்க முன்வரவில்லை. மாறாக தாங்கள், தங்கள் அதிகாரத்தை பெற்ற தேர்தல் ஜனநாயக அடிப்படையில் எடுத்த முடிவுகள் என்றும், இதை கேள்விக்கு உட்படுத்த முடியாத ஓன்றாகவே முன்மொழிகின்றனர்.

இந்த நிலைமைக்கு பின்னால், உலகளாவிய உலகமயமாதல் மருத்துவக் கொள்கை எங்கும் ஒன்றாக இருப்பது, உலகமயமாதலை நோக்கிய பயணத்தில் ஏற்பட்ட தாமதங்கள் மரண விகிதத்தை தீர்மானிப்பதில் - ஒரு எதிர்மறையான பங்கை வகித்து வருகின்றது.

உலகமயமாதல் கொள்கை அடிப்படையில், அரசு மருத்துவமனைகள் மூடப்பட்டு, தனியார் மருத்துவமே மருத்துவமாகி வரும் பொதுச் சூழலில் - கொரோனா மரணங்கள் நிகழ்கின்றன. மருத்துவமென்பது பணம் இருப்பவனுக்கேயானது என்ற பின், பணமுள்ளவனுக்கான மருத்துவ  உற்பத்தியாக குறைந்ததுடன், அனைவருக்குமான மருத்துவம் என்பது கொரோனாவுடன் பொது பற்றாக் குறையாக மாறியது. அதாவது அனைவருக்குமான மருத்துவ அடிப்படைக் கட்டுமானமும் - உற்பத்தியும் நவதாராளவாதத்தில் கிடையாது. கொரோனா தொற்று உலக தொற்றாக அறிவிக்கப்பட்ட பின், உலகளாவில் தொற்றுக்கு எதிரான நடவடிக்கை எடுத்த காலத்திற்கு இடையில் இரண்டு மாதங்கள் இருந்தது. இக்காலத்தில் எந்த மருத்துவக் கொள்கையையும் மாற்றிவிடவில்லை. அதேநேரம் எந்த தயாரிப்பையும் புதிதாக செய்திருக்கவில்லை. ஒரு நெருக்கடி உருவான பின், உலக முதலாளித்துவச் சந்தைவிதிக்கு முரணாக, மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் அரச நடைமுறைகள் எதையும் முன்னெடுப்பதை முதலாளித்துவம் மறுதளித்தது. இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்ட காலத்தில் கூட, பற்றாக் குறையை நீக்கும் வண்ணம் உலகமயமாதலுக்கு முரணான உற்பத்தி முறைமையை அரசுகள் அமுல்படுத்தப்படவில்லை. எது உலகமயமாதல் சந்தைவிதியோ, அதுதான் மருத்துவத்தின் அத்தியாவசிய பொருட்கள் மீதான கொள்கையாகத் தொடர்ந்தது. இன்று இந்த விதி மீள இயல்பு வாழ்க்கை திரும்ப தேவைப்படும் - அடிப்படை பொருள்கள் குறித்துமான, அரசுகளின் கொள்கையாகவும் இருக்கின்றது.

அதேநேரம் மரணத்தைக் குறைத்துக் காட்டுவது என்பது எங்குமான பொது நடைமுறையாகி இருக்கின்றது. கொரோனா தொற்று தோன்றியதாக நம்பப்படும் சீனாவில் மரண எண்ணிக்கை குறைவாக இருப்பது தான், மேற்கு ஜனநாயகத்தின் பொதுப் பிரச்சனையாக மாறி இருக்கின்றது. தாங்கள் எப்படி தங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தை முன்னிறுத்தி கொரோனாவுக்கு பலிகொடுத்தோம் என்பதல்ல. சீனத் தரவுகளில் கொரோனாவால் வீட்டில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கையை சீனா புதிதாக இணைத்து வெளியிட்ட போதும், அதன் உண்மைத் தன்மையை மேற்கு விவாதிப்பதன் மூலம் - தங்கள் நாட்டு மரணங்களுக்கான சுய பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள முனைகின்றனர்.

மேற்கில் மரணமடைந்தவர்களின் புள்ளிவிபரங்கள் கூட தவறானவை. குறிப்பாக மருத்துவ மனைகளில் மரணங்களை உள்ளடக்கியதாக - குறைத்துக் காட்டப்பட்டது. முதியோர் இல்லங்கள் - வீடுகளில் நிகழ்ந்த கொரோனா மரணங்களை மூடிமறைத்தும் - இன்னமும் முழுமையாக முன்வைக்கப்படவில்லை.  மரணப் புள்ளிவிபரங்களை குறைத்து வெளியிடுவதே – அதிகாரம் பெற்ற ஆட்சியாளர்களின் இருப்புக்கான அரசியலாக மாறி இருக்கின்றது.

இயற்கையான முதியோர் மரணங்கள் சீனாவிலும் நிகழ்ந்தது - மேற்கிலும் நிகழ்கின்றது.  இது பாரிய எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. சீனாவில் முடக்கம் அமுலில் இருந்த காலத்தில், இயற்கை மரணம் - கொரோனா மரணம் இரண்டும் அக்கபக்கமாக இருந்ததுடன், அதில் வீட்டில் நடந்த கொரொனா மரணத்தை காலம் தாழ்த்தி இணைத்தனர். அதை கேள்விக்கு உள்ளாக்கும் மேற்கின் கொரோனா அரசியல், தங்கள் சுய முகத்தை கேள்விக்குள்ளாக்குவதில்லை. உதாரணமாக பிரான்சில் மருத்துவமனை மரணங்களை மட்டும் அறிவித்து வந்தவர்கள், பாராளுமன்ற கேள்விகளை அடுத்து முதியோர் இல்ல மரணங்களை திடீரென இணைத்தனர். ஆனால் வீடுகளில் மரணித்தவர்கள் எண்ணிக்கை இணைக்கப்படவில்லை.

பிரிட்டனில் முதியோர் இல்லம் மற்றும் வீட்டில் நடக்கும் கொரோனா மரணங்களை புள்ளிவிபர ரீதியாக இணைக்கவில்லை. இப்படி உலகெங்கும் கொரோனா மரணங்கள் அரசியல் காரணங்களால் - மக்கள் முன் மூடிமறைக்கப்பட்டு தான் வெளிவந்தன –வெளிவருகின்றது.

மக்களுக்கு எதிராக அரசுகளும் - மூலதனமும் இணைந்து செய்த குற்றங்களே, பெருமளவிலான மரணங்களுக்கு காரணமாகி இருக்கின்றது. இதை மறைக்க, மரணங்களை மறைப்பது அரசுகளின் அரசியலாக மாறி இருக்கின்றது. ஊடகங்களின் ஒப்பாரியாக மாறி இருக்கின்றது.

Last Updated on Friday, 22 May 2020 21:10