குரங்குக்கும் பேச்சுமொழி

நாட்சில் தமிழ், நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ் என்று வட்டார வழக்குகள் தமிழர்களைத் தொல்லைப்படுத்துவது போலவே, குரங்குகளுக்கும் வட்டார வழக்கு பிரச்சினை இருப்பதாக ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மனிதர்களைப் போலவே, குரங்குகளும் அவை வாழுமிடத்திற்கு ஏற்ப பேச்சு மொழியை மாற்றிக் கொள்கிறது என்று ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் மானிடப் பண்புத்துறை பேராசிரியர் நோபுவோ மஸாட்டாக்கா கூறுகிறார்.

 

1990 முதல் 2000 வரையில் ஜப்பானிலுள்ள மக்காகா புஃஸ்காட்டா யக்குயி என்ற குரங்கு இனத்தின் இரண்டு குழுக்களுக்கு உள்ள குரல் தொனியை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.

 

ஒரு குழுவில், தெற்கு ஜப்பானில் உள்ள யக்குஷிமா தீவில் வசிக்கும் 23 குரங்குகள் இருந்தன. இன்னொரு குழுவில், அதே இனத்தைச் சேர்ந்த ஆனால், மத்திய ஜப்பானின் ஒஹிரா மலையில் வசிக்கும் 30 குரங்குகள் இடம் பெற்றிருந்தன. இந்த ஒஹிரா மலைக் குரங்குகள் 1956யில் யக்குஷிமா தீவில் இருந்து குடி பெயர்ந்து சென்றவை.

 

மத்திய ஜப்பானின் மலைக் குரங்கை விட, தெற்கு ஜப்பானின் தீவுக்குரங்கின் குரல், 110 ஹெர்ட்ஸ் அளவுக்கு ஓங்கி ஒலித்ததாம்.

 

இதற்கு என்ன காரணம்?யக்குஷிமா தீவில் உயரமான மரங்கள் இருப்பதால், அவை குரங்கின் தொளியைத் தடைப்படுத்துகின்றன. எனவே, தீவுக்குரங்கு உரத்த குரலில் பேச வேண்டியுள்ளது. இதற்கு மாறாக, ஒஹிரா மலையில் குட்டையான மரங்கள் இருப்பதால், அங்கு வசிக்கும் குரங்குகள் ஓங்கிப் பேச வேண்டிய தேவை ஏற்பட வில்லை. ஒவ்வொரு குரங்குக் குழுவும், தாம் வசிக்கும் இடத்தின் தேவைக்கு ஏற்ப தங்களது மொழிப் பேச்சை மாற்றிக்கொண்டன. இந்தத் தொனி வித்தியாசம் மரபணுக்களால் ஏற்படவில்லை என்கிறார் பேராசிரியர் மஸாட்டாகா.

இந்தக் குரங்குக்குரல் ஆராய்ச்சி மனிதர்களின் மொழி எவ்வாறு உருவானது என்ற ஆராய்ச்சிக்கு உதவக்கூடும் என்று நம்பப்படுகிறது.

 

http://tamil.cri.cn/1/2006/03/27/ This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it