கடற்கரையோரம்
குடியரசு தின அணிவகுப்புக்காக நின்றிருந்த
பீரங்கியைப் பார்த்துவிட்டு
பேரன் கேட்டான்;
இது எதுக்கு தாத்தா?
எதிரிங்களைச் சுட.
எதிரிங்கன்னா?
பாகிஸ்தான் மாதிரி
நம்மளோட சண்டைக்கு வந்து
நாட்டை புடிக்கப் பார்க்குறவங்கதான்.
நாட்டை புடிச்சு
என்ன பண்ணுவாங்க?
பேரனின் கேள்விகள் விரிவடைய
ஊன்றிக் கொள்ள
வார்த்தைகளைத் தேடினார் தாத்தா.
என்ன பண்ணுவாங்கன்னா…
அதாவது.. நம்ம ஊரை புடிச்சிகிட்டு
நம்பளையே அடிமையாக்கி
ஊம்… சொன்னதை செய்யுன்னு மிரட்டுவாங்க..
பயமுறுத்திய தனது பாவனைகளைப் பார்த்து
பேரனின் கேள்விகள் முடிந்துவிடும்
என எதிர்பார்த்தார் தாத்தா.
ஆராய்ச்சிப் பார்வையுடன்
அடுத்து கேட்டான் பேரன்,
அப்படீன்னா…
”எங்கிருந்தோ வந்து
நம்ம ஊரையே வளைச்சுகிட்டு
ஒழுங்கா வேலையை செய்! இல்லன்னா தூக்கிடுவேன்னு!
நோக்கியா நம்பளையே அடிமையாட்டம்
மிரட்டுறான்னு மாமா சொன்னாரே…
நோக்கியா யாரு தாத்தா…
பீரங்கி அவனையெல்லாம் சுடாதா?
பேரன் கேட்டதும்
பீரங்கியால் சுட்டது போல்
என்ன செய்வதென்று புரியாமல்
தடுமாறிப் போனார் தாத்தா.
தடுமாறுவது தாத்தா மட்டுமா?
http://www.tamilcircle.net/administrator/index.php?option=com_content