பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன் -இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன்

**********


தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

*********


முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?


1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.


இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.


"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.

(இதே கூற்றை "அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?" என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)


அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்."(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்)


சாதாரணமான தொண்டனாக இருந்த காமராஜை, மனிதத்தன்மை உள்ள மனிதராக இவர் ஆக்கினாராம். என்னதோர் ஆணவப் பேச்சு பாருங்கள்.


அதே கூட்டத்தில் காமராஜரை, காமராஜன் என்றுதான் சொல்லியிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் காமராஜர். அவர் தலைமையை, முத்துராமலிங்கத் தேவர் மதிப்பிடும் தரம் எப்படி இருந்தது பாருங்கள்.


"இன்றைக்கு மாகாணக் கமிட்டியில் எவனெவனோ வந்து விட்டான்.இற்றைக்கு காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. தேர்தலுக்கு 'நாமினேஷன்' போடுகிறவன் கேட்கிறான். "திலகர், காந்தி மகன் தானே" என்று.இப்படிப்பட்ட அறிவாளிகள் வந்து விட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சபையில் காமராஜின் புண்ணியத்தால்."


கல்வியைப் பரவலாக்கிப் பணியாற்றிய காமராஜரினை, ராஜாஜியுடன், தேவர் ஒப்பிட்டதைப் பார்ப்போம். "அவர் மிதவாதியாக (ராஜாஜி) இருந்தாலும், காமராஜ் போல தற்குறி அல்ல. பழங்காலத்தில் எம்.ஏ. எல்.டி., பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர்கள் ஆண்டார்கள். இற்றைக்கி எம்.ஏ.,பி.ஏ. இல்லாது வெறும் எல்.டி.க்கள், அதாவது 'லெப்ட் தம்ப்' இடது கைப்பெருவிரல் பிரட்டுகிறவர்கள் ஸ்தானம் பெற்றிருக்கிற காலம்."


காமராஜ், வறுமையின் காரணமாய்ப் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை, என்பதனை நாடறியும். இதனால் என்ன குறைந்தது, அவரின் திறமைக்கு? தேவர், இதனைக் கூட கேவலமாகப் பேசித் தன் பெருந்தன்மையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார். (இதனைச் சொன்ன தேவரோ, எஸ்.எஸ்.எல்.சி.யே தாண்டவில்லை என்பது இன்னும் சிறப்பு).


குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து தமிழர்கள் கல்வியில் மண்ணள்ளிப்போட சூதறிஞர் ராஜாஜி முனைந்தபோது, காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து, குல்லுகப் பட்டர், பதவி விலகி, காமராஜர் முதல்வரானார். அச்சூழலை விவரிக்க வந்த தேவர் சொல்கிறார், காஞ்சி தேர்தல் பிரச்சாரத்தில் - "பிளாக் மார்க்கெட்காரர்களுக்கு புரோக்கராக நின்ற காமராஜர் பிரதம மந்திரியாகிறார்." (அப்போது, மாகாண முதல்வர்களை, பிரீமியர்-பிரதமர் என்று சொல்வது வழக்கம்)


காமராஜரை ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களிடம் தேவர் சொன்ன கருத்து "உங்களுக்கு அவர் பிரதமராகத் தோன்றலாம். எனக்கு அவருடைய பழைய மார்க்கெட் வேல்யூ தெரியும். ஒழுக்கத்தின் பெயரால், அறிவால்,தியாகத்தால் பதவிக்கு வருகிறவர்களைத்தான் நான் மதிக்க முடியும். சந்தர்ப்பத்தின் பெயரால் முன்னுக்கு வருகிறவர்களை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?".


சற்றே யோசித்துப் பார்ப்பின் தேவர் குறிப்பிட்ட மார்க்கெட் வேல்யூ என்பது, ஜாதிப் படிநிலைதான் என்பது தெள்ளெனப் புரியும்.


முதல்வராகும் முன் ஆசீர்வாதம் வாங்க வந்த காமராஜரிடம் இவர் சொல்கிறார் "நீ பிரதமர் ஆவதன் மூலம் காங்கிரஸ் கெடும். நீ மாகாணக் கமிட்டித் தலைவனாக (தலைவராக அல்ல-அழுத்தம் எம்முடையது) இருந்து கொண்டு யாரேனும் நல்லவரைப் பிரதமராக்கி, உன்னுடைய அதிகாரத்தைச் செலுத்து. உனக்கு வர வேண்டிய லாபம் வரும்".


அதே காஞ்சிக் கூட்டத்திலே, தேவர், காமராஜர் மீது ஓர் அபாண்டப் பழியைப் போட்டார். அது என்ன பழி? "பழைய காலத்தில் காங்கிரஸ் காரன் போட்டது கள்ள ஓட்டு. இப்போது காமராஜ், கள்ள நோட்டு அச்சடிக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்", " ஏற்கெனவே விருதுநகர் நாடார் ஒருவர் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டை அள்ளிக் கொண்டு,திருவெற்றியூருக்கு வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இப்பேர்ப்பட்ட யோக்யதை அற்ற காமராஜ் கும்பலைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லதல்ல".


காமராஜர், சாகும்போது அவர் வீட்டில் நூற்றிச் சொச்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பதை நாம் அறிவோம். நேர்மையாய், எளிமையாய் வாழ்ந்த அத்தலைவரினைத் தரம் தாழ்த்தி, இவ்வாறு பழி போட்டு, காஞ்சியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கள்ளநோட்டுப் பேர்வழி என்று புழுதிவாரித் தூற்றியவர், தேவர்.


கம்பம் தேர்தல் கூட்டத்திலே, 24 பிப்ரவரி, 1957ல் மீண்டும் அதே பழியைப் பின்வருமாறு சொல்கிறார்."இன்று கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் ஆட்சி இந்த நாட்டிலே நடைபெறுகிறது" "என் மீது கேஸ் போட்டால் இந்தக் கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் அயோக்கியத்தனத்தைச் சாட்சி மூலம் நிரூபிக்க ரிக்கார்டு இருக்கிறது".


இக்கூட்டத்திலே, காமராஜரின் படிப்பறிவை மறுபடியும் கொச்சைப்படுத்தி "எம்.ஏ. படித்தவர்கள் ஆண்ட நாட்டிலே எல்.டி. பதவிக்கு வந்து விட்டார்கள். இந்த அளவுக்கு மானம் கெட்டு வந்திருக்கிறது. இப்படி மானம் கெட்டு இருக்கிற காரணத்தினாலேயே இந்த நாட்டிலே காரியங்கள் மிகத் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கிறது."

(இதே காலகட்டத்தில் மதுரை தமுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தேவருக்கு, குறும்பாய் ஒருவர் துண்டுச்சீட்டில் "நாடார், நாட்டை ஆள்வார்" என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார். தேவரய்யா டென்ஷனாகி விட்டார் "நாடார், பனையை ஆள்வார், தென்னையை ஆள்வார், நாட்டை ஆளமுடியாது" என்று பச்சையாய் சாதிவெறி கக்கினாராம். தூத்துக்குடி அருகில் உள்ள குருக்குச்சாலையில் நடந்த தேர்தல் கூட்டத்தில், உரை முழுவதும் காமராஜரை 'சாணாப் பயலே' என்று திட்டியே பேசியிருக்கிறார்.)


இதே கம்பம் கூட்டத்திலே, காமராஜரைக் கொச்சைப்படுத்தி ஒரு சம்பவத்தை, தேவர் சொல்லி இருக்கிறார்.


"வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்களுக்கு, முனிசிபல் கவுன்சிலர்கள் வரவேற்புக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில், காமராஜூம் கலந்து கொண்டார். யார் இந்த நாட்டு முதல் மந்திரி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அறிவாலோ, பேசும் திறத்தாலோ, அல்லது நடையுடை பாவனையாலோ பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே ஒரு வெள்ளைக்காரன், "சென்னையின் முதல் மந்திரி யார்?" என்று கேட்டார். இந்த நாடார் சும்மா இருந்தால் செக்கரட்டரி சொல்லியிருப்பான் அல்லது தமிழிலே பேசியிருந்தால் தேச அவமானம் என்று நினைத்திருப்பான். தன் அறிவைக் காட்டத் தெரியாத ஒருவர், இந்த நாட்டு முதல் மந்திரியாக இருக்கிற இந்த அலங்கோலத்தினால் நாடு அவலட்சணமாகக் கேவல நிலை அடைந்தது. தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அன்று அவமானப்பட்டது."

(இதே சம்பவத்தை இன்னும் விரிவாக்கி "அந்தக் கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல், அவருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அறியாமையை எடுத்துக் காட்டுமளவில் "I is the Chief" என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆள் முதன்மந்திரியாக இருக்கிறான் (இருக்கிறார் அல்ல- அழுத்தம் எமது) என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்" என சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)


ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதை இது. காமராசர், சுய சாதி வெறியுடன் ஆட்சி செய்கிறார் என்று, இந்த சாதி ஒழிப்புப் போராளி, அதே சங்கரன் கோவில் கூட்டத்திலே சொல்கிறார் "சர்க்கார் உத்தியோகங்களை அவருடைய ஆட்களுக்கே கொடுத்து வருகிறார். பிளாக் மார்க்கெட்டு வியாபாரத்தையும் அவருடைய ஆட்களே செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறார் இந்த காமராஜர். தமிழ்நாட்டின் நிர்வாகத் தரம் குறைந்து போய் விட்டது."


மார்ச் 1, 1957 இல் சிறீ வில்லிபுத்தூர் தேர்தல் கூட்டத்திலே, மக்களுக்கு தேவரய்யா நாகரீகமாக ஒரு அழைப்பு விடுக்கிறார் - "அரசியல் சரித்திரத்திலே இப்படி மானம் கெட்டவன் பிரதம மந்திரியாக இருந்தது கிடையாது. விருது நகர் வியாபாரி சமாச்சாரம் தெரிஞ்ச ரகசியமில்லே. இதை மறைக்கலாமா? இற்றைக்கு அரசியலையும் அப்படி கெடுக்கப் பார்க்கிற. பத்து வருஷமா இப்படித்தானே அரசியலிலே காலம் தள்ளினே. இனிமேலும் நடக்க விடுவோமா? எவ்வளவு சீக்கிரம் இந்த நாடார் பதவியை விட்டுப் போறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது."


இம்மானுவேல் சேகரன் கொலைச் சதி வழக்கில் இருந்தில் தப்பிய தேவர், 1962 இல் மதுரையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கூட, முதல்வர் காமராஜருக்கு ஆதியிலே சோறு போட்டது நானாக்கும் என்கிற ரேஞ்சுக்கு அல்பத்தனத்தைக் காட்டி இருக்கிறார் "நம்மால் உணவு கொடுத்து, உடை கொடுத்து, உறைவிடங் கொடுத்து வளர்க்கப்பட்ட புண்ணியவான்களாலேயே கொலைக் குற்றம் சாட்டப்பட்டேன்" என்றார்.


காமராஜரின் மதிய உணவுத் திட்டம், பல தரப்பு ஏழைக் குழந்தைகளையும் கல்விச்சாலை நோக்கி வர ஊக்கப்படுத்தியது என்பதை முந்தைய இரண்டு, மூன்று தலைமுறை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1962லே அந்த மதிய உணவுத் திட்டத்தை தேவர் மதிப்பிடும் லட்சணம் இதுதான் "மதிய உணவுத் திட்டம் என்பதன் பெயரால், பிள்ளைகளின் படிப்பு பாழாக்கப்படுகிறது. உபாத்தியாயர்கள் மதிய உணவுத் திட்டத்திற்கு அரிசிப் பிச்சை எடுக்கப் போக நேர்வதால், பிள்ளைகள் படிப்பு நாசமாகி தேசத்தின் எதிர்காலம் அறிவுச் சூன்யத்துக்குத் தயாராகிறது."

******************
இமானுவெல் படுகொலையும், சாதி வெறியும்:


1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.


இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தலித்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தலித்களின் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.


"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.


அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.


அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தலித் மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தலித்களின் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.


இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."

(தலித்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தலித்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தலித்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)


இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.


நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.


கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.

 

உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:

"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."


கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:

"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."


"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."


முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு: "On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".


கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.


"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."


திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத ஹரிஜனங்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.


திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது 'முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.


முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு அரிஜன். அரிஜன வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.


முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.

**********************
கேப்பை, நெய், கேனைப்பயல்கள் மற்றும் தேவர்:


இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, 'அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்' என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது. அதனை ஊதி ஊதிப் பெருக்கி விட்டவர்களில் தேவரும் ஒருவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.


அவருடைய பேச்சுக்கள் பல இடங்களில், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் எனும் அதீத நம்பிக்கையால் வெளிப்பட்டிருக்கும்.


உதாரணமாக ஒரு கூட்டத்தில் தேவர் "வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்" என்று பேசியதையும்,


"இதோ 50 லட்சம் பேர் கொண்ட படையுடன் நேதாஜி வருகிறார்" என்றும், "திபெத்தில் நேதாஜி நுழைந்து விட்டார்" என்றும்,
"நேபாளில் சுதந்திர சேனை", "சிங்கியங்கில் நேதாஜி" என்றெல்லாம் அளந்து வந்ததையும் என்.ஆர்.தியாக ராஜன் எனும் எம் எல் ஏ சட்டசபையில் பேசி இருக்கிறார்.


"மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்", "மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)" என்றும் மேடையில் முழங்கிய தேவரின் பல சவடால்கள் விநோதமாய் இருக்கும்.


"மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்" என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னதுதான் விசேசம்.


இம்மாபெரும் தலைவர், பல முறை மக்களால் பயம் கலந்த பக்தியுடன் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்யப்படுவதை எதிர்த்தவாறுதான் இருந்து வந்துள்ளார்.


காமராஜரின் காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் பள்ளிக்கூடங்கள் பெருகியபோது "பள்ளிக்கூடம் எல்லாம் வந்தா எல்லா சாதிப்பயலுகளும் படித்து விட்டு, டவுனுக்குப் போயி இங்கிலீஷ் படித்து விட்டு, நம் ஜாதி ஆட்களுக்கு மரியாதை தராமல் இருப்பார்கள்" என யூகித்து, பள்ளிகள் வருவதை எதிர்த்து வந்தார்.


சட்ட மன்ற உறுப்பினர் சிதம்பர பாரதியின் சட்டமன்ற உரை "அங்கே ரோடு வசதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யலாம் என்று கூறினால், "இல்லை. ரோடு வேண்டாம். ரோடு வந்தால் ரொம்ப ஆபத்து. நாங்கள் ஏதாவது கோபத்தில் சண்டையிட்டு அடித்துக் கொள்வோம். உடனே போலீசில் புகார் கொடுக்க மாட்டோ ம். பிறகு 4,5 நாட்கள் ஆனவுடன், நாங்களே பஞ்சாயத்து பண்ணிக் கொள்வோம். ஆகவே ரோடு வந்தால் ரொம்ப ஆபத்தாகிவிடும்" என்று தேவரின் ஆதரவாளர்கள் சொல்லியதிலிருந்தே, அவர் தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணியின் யோக்யதை தெரிந்திருக்கும்.

*****************
இந்துத்துவத்திற்க்கு விளக்கு பிடித்த கதை:


தேவரின் பல கருத்துக்கள், இந்து மதவெறிக் கட்சியினரின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன.
"அரசியலுக்கு வரும்போது 'அரசியல் வேறு மதம் வேறு. இரண்டையும் சேர்த்துக் குழப்புகிறார்கள்' என்ற பேச்சு நடைபெறுகிறது. அரசியல் இல்லாமல் மதமில்லை. மதமில்லாமல் அரசியல் இல்லை. மதம் இல்லாத தேசம், வேரில்லாத மரம் போல. எந்தக் காற்றிலும் விழுந்து விடும்" என்றும் "இங்கே மதமும், அரசியலும் சேரக் கூடாதென்று சொல்லி இங்கிலீஷை காலேஜில் சொல்லிக் கொடுத்துக் கெடுத்தான்" என்றும் 1957 காஞ்சிபுரம் கூட்டத்தில் கூறி இருக்கிறார்.


"சுதந்திரம் வாங்கிய பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட நிலைமை என்ன? பாகிஸ்தானிலே மாட்டிக் கொண்ட 1 1/2 கோடி மக்களின் கதி என்ன ஆயிற்று? அவர்கள் நடுச்சந்தியிலே நிறுத்தப்பட்டார்களே? சொத்தை இழந்து, வாழ்க்கை நிலைமை இழந்து, மனைவி மக்களை இழந்து அலறித் துடித்தார்களே? அதற்காக இங்கே இருக்கும் முஸ்லீம்களைப் பாகிஸ்தான் ஓடு என்று ஆச்சாரியார் கோஷ்டி (சூதறிஞர் ராஜாஜி-அழுத்தம் எமது)யால் விரட்ட முடிந்ததா? அல்லது அவர்களைத்தான் நீங்கள் "பாகிஸ்தான் பிரஜை போ" என்று சொல்ல முடிந்ததா?" என்று பால் தாக்கரே, அத்வானி போன்ற பாசிஸ்ட்கள் போன்று தேவர், சட்டசபையில் 1952 ஜூலை 3 ல் பேசி இருக்கிறார்.


கோல்வால்கர், இந்து மகாசபைத்தலைவர் மதுரைக்கு வந்தபோது அவருக்கு பணமுடிப்புக் கொடுத்து சிறப்பு செய்ய ஏற்பாட்டை செய்தவர், முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அதற்காக அவர் சொன்ன காரணம்-"ஹிந்து மதத்தின் விரோதி மகாத்மா காந்தி. ஆதலால் தான் நான் கோல்வால்கர் அவர்களுக்குப் பண முடிப்புக் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைந்தேன்."


காங்கிரசு உறுப்பினர் சுவாமி சகஜானந்தாவின் பேச்சில் வீராம்பல் ஊரில் நடந்த இரட்டைக் கொலைக்கான (கொல்லப்பட்டவர்கள் தலித்கள்) வேறொரு காரணம் வெளிப்பட்டது."வீராம்பலில் எப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன? அங்கே இரண்டு ஹரிஜனப் பையன்கள், தாங்கள் முஸ்லீம் மதத்தில் சேர வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவர்களுடைய பிரசிடெண்டையும் செக்ரெட்டரியையும் கொலை செய்து விட்டார்கள்".

****************
சட்டசபை உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் (1957-62ல் உறுப்பினர்) முதுகுளத்தூர் பிராந்தியத்தில் பயணம் செய்தபோது, மறவர் குலப் பெண்கள், அவரிடம் கேட்ட கேள்வி "ஹரிஜனங்கள் முக்குலத்தாரைப் பெண் கேட்க வந்தார்களாமே? பெண் கேட்க வருவதற்கு அத்தனை துணிச்சலா?" என்பதாய் இருந்தது. இது அப்போதைய கலவரத்தில் பொது மக்களிடையே பரப்பப்பட்ட வதந்திகளில் முக்கியமான ஒன்று. அச்சம்பவத்திற்கு இது வரை ஆதாரம் ஏதும் கிடைக்காதபோதும், ஜாதி இந்து மக்கள் அவ்வதந்தியை இன்னமும் எளிதில் நம்பி உணர்ச்சி வசப்பட்டு, சாதிக் கலவரத்திற்கு தயாராகி விடுகின்றனர்.


அப்படி என்ன வதந்தி அது?
தேவரும், இம்மானுவேல் சேகரும், சமாதானக் கூட்டத்திற்கு வந்தபோது, இம்மானுவே, தேவர் முன்னால் சிகெரெட் பிடித்தபிடி, கால்மேல் கால் போட்டபடி சரி சமமாய் அமர்ந்தாராம். உடனே தேவரய்யாவுக்கு ஜிவ்வென்று கோபம் ஏறி "..க்காளி.. இவனுக எல்லாம் நம்ம கூட சரி சமமா வந்திட்டானுங்க.." என்றாராம். இது இம்மானுவேல் காதில் விழுந்ததும், அவரது ஆதரவாளர்களுடன் பழம்,பூவுடன் சென்று தலித் பையன் ஒருவருக்கு, தேவர் வீட்டுப் பெண்ணைக் கேட்டனராம். காரணம், தேவரே, இம்மானுவேலிடம், மைத்துனனிடம் பேசிடக்கூடிய வசைச்சொல்லான '..க்காளி' என்பதனைப் பேசினாரே என்பதாம்.


கலவரத்தில் எண்ணெய் வார்க்க இந்த வதந்தி பயன்பட்டது.


இதே வதந்தி, சிற்சில மாறுபாடுகளுடன், 1989ல் போடி நாயக்கனூர் பகுதியில் ஜான் பாண்டியனை மையமாக வைத்துப் பரப்பப்பட்டு, கலவரத்தை விசிறி விட்டது.

****************

 

சமீப காலகட்டங்களில் தேர்தல் கமிஷன் பல கெடுபிடிகளைப் போட்டு, பிரச்சாரத்தை இரவு பத்து மணியுடன் நிறுத்திடச் சொல்லியதும், சில கட்சி வேட்பாளர்கள், பத்து மணிக்கு மேல் பேசுவதை நிறுத்தி விட்டு வெறுமனே கைகளைக் கூப்பி வணங்குவதுடன் சென்று விடுகின்றனர். இதெல்லாம் ஏதோ புதுமை என்று எண்ணி இருக்கையில், 1952 தேர்தலுக்கு முன்பிருந்தே தேவர் இவ்வாறுதான் செய்திருக்கிறார். ஆனால் தேவரைப் பேச விடாமல் தடுத்தது தேர்தல் கமிஷன் அல்ல. அரசாங்கம். இவர் வாய் திறந்து பேசினாலே சாதி மோதல்தான் உருவானது. எனவே அரசு இவருக்கு வாய்ப்பூட்டு போட்டது.
ஆனால் தேவர், 1957 முதுகுளத்தூர் கலவரத்தின்போதும், 'மவுனமாகக் கைகூப்பும் முறையை' கலவரத்தை தூண்டிவிட பயன்படுத்தினார். அறிக்கை ஏதின்றி வெறுமனே தேவரின் கைகூப்பிய முழுப்படம் ஒன்றை 'தினமணி' என்றெல்லாம் விளம்பரமாய்ப் பிரசுரித்ததோ, அன்றெல்லாம், கலவரம் உக்கிரம் பெற்றுள்ளது.


இங்கு எண்ணற்ற ஆதாரங்களை தேவரின் சாதி வெறிப்போக்கிற்கான சான்றாகக் காட்டினாலும் தேவர் அபிமானிகள், 'தேவர் தனக்கு சொந்தமாய் இருந்த எக்கச்சக்கமான ஏக்கர் நிலங்களை தலித்களுக்கு எழுதிக் கொடுத்தவர்' என்று சொல்வது வழக்கமே. அவ்வாறு தேவர் நிலம் தந்தமைக்கு இருந்த உள்நோக்கத்தை அன்றைய அமைச்சர்கள் பக்தவச்சலமும், சி.சுப்பிரமணியமும் சட்டசபையில் போட்டு உடைத்துள்ளனர் 'தனக்கு விசுவாசமாய் வாலாட்டும் ஓர் அடியாள் படையை தேவர் இவ்வாறுதான் உருவாக்கினார்' என்று.


*************************
ஆதார நூல்கள்

1) தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி
2) பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும் - தொகுப்பு கே.ஜீவபாரதி
3) பசும்பொன் தேவரின் கட்டுரைகள் - தொகுப்பு கே.ஜீவபாரதி
4) சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி
5) பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்- தொகுப்பு கே.ஜீவபாரதி
6) சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு - தொகுப்பு கே.ஜீவபாரதி

http://vinavu.wordpress.com/2008/10/31/pasumponil/

Last Updated on Saturday, 01 November 2008 06:57