Language Selection

பெரியார்

வருடா வருடம் கடவுள்களுக்கு (சாமிகளுக்கு) கலியாண உற்சவம் வருவது போல் வருடா வருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டு இருக்கின்றன.

 

நம் மக்களும் பெரும்பான்மையோர், கடவுளுக்கு உலகில் வேறு எங்காவது கலியாணம் செய்வாருண்டா?கடவுள்தானா கட்டும், கலியாணம் செய்துகொள்ளுமா? அதற்கு அவசிய மென்ன? என்கிற அறிவே சிறிதுமின்றி எப்படி கோயில்களில் ஆண்டுதோறும் சாமிகளுக்குக் கலியாண உற்சவம் செய்கிறார்களோ அதே போல் இந்த தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகின்றார்கள்.

 

இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும்,ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன்!!

உலகத்தரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை,வெகு சாதாரணமாக மதித்ததோடு,அவருடைய பல கருத்துக்களை சின்னாபின்னமாகும்படி மக்களிடம் விளக்கம் மேதாவியாக இருந்தார்.இந்துமதம் என்பதான ஆரிய-ஆத்திக மதக்கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும்,ஆபாசமாகவும்.அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாக பேசியும் எழுதியும் வந்தார்.உதாராணம் சொல்ல வேண்டும்மானால்,காந்தியாரையே ஒரு பத்தாம் பசிலி பிற்போக்கு வாதி என்றும் அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டு வந்த கீதையே முட்டாளின் உளறல்கள் என்றும் சொன்னதோடு,காந்தியாரின் கடவுளான இராமனை மகாக் கொடியவன் என்றும் இராமணக் காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி பல்லாயிரக்கணக்கான மக்களிடையில் இராமாயணத்தை சுட்டு எரித்தும்ச் சாம்பலாக்கினார்!

இந்துமதம் உள்ளவரையில் தீண்டாமையும் சாதிப் பிரிவும் அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார்! மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தழுவும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார்,இப்படியாக அநேக அரிய காரியங்களை செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவாதியும்,ஆராய்ச்சி நிருபுணரும்,சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேதகர் முடிவு எய்தியது இந்தியாவுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ,பகுத்தறிவு வளச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்.

அம்பேத்கரின் மறைவு எனும் செய்தி திடிரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து,அவரது மரணத்துக்குப் பின்னர் சில இரகசியங்கள் இருக்கலாம்மென்று கருதுகிறேன்.அதாவது காந்தியார் மரணத்திற்க்கு உண்டான காரணங்களும் அதற்க்கு ஆதாரமான பல சங்கதிகளும் ,டாக்டர் அம்பேதகர் மரணத்திற்க்கும் இருக்கக் கூடும் என்பதேஆகும்.

பெரியார் இப்படி குறிப்பிட்டது விடுதலை 8-12-1956 யில்

 

http://ambedkarr.wordpress.com/2008/10/02/அம்பேத்கர்-பார்வையில்-கா/





(தந்தை பெரியார் அவர்கள் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதும், ‘குடியரசு’ வார இதழில் எழுதிய தலையங்கம்)

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி அனுதாபங்காட்டாதார்கள் யாருமே இல்லை. அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காரியம் நடந்துவிட்டதற்காக திரு. காந்தியவர்களையும் அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம்.இவை ஒருபுறம் நடக்க இதே கூட்டத்தாரால் மற்றொருபுறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜப் பிரதிநிதி மதிரு. இர்வின் பிரபுவைப் பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு. காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கை தூக்கிலிடக்கூடாது என்கின்ற நிபந்தனை இல்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல், அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெறுகின்றன.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்கள் திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும்படி தேச மகா ஜனங்களுக்கும் கட்டளையிடுவது, திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு. காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரர்கள் அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்களும் நடைபெற்றன.ஆனால் இப்போது வெகு சீக்கிரத்தில் அதே மக்களால் ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்கின்ற கூச்சல்களும், திரு, காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக்கொடிகளும் அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டன. இவைகளையெல்லாம் பார்க்கும்போது, அரசியல் விஷயமாய்ப் பொது ஜனங்களுடைய அபிப்பிராயம் என்ன? கொள்கை என்ன? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருப்பதோடு அப்படி ஏதாவது ஒரு கொள்கை யாருக்காவது உண்டா என்று சந்தேகிக்க வேண்டியதாகவுமிருக்கிறது.

எது எப்படி இருந்தபோதிலும், திரு. காந்தியவர்களின் உப்பு சத்தியாக்கிரக கிளர்ச்சி ஆரம்பித்த காலத்திலேயே, இக்கிளர்ச்சி மக்களுக்கோ, தேசத்திற்கோ சிறிதும் பயன்படாது என்றும், பயன்படாமல் போவதோடல்லாமல் தேசத்தின் முற்போக்குக்கும், கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது என்றும் எவ்வளவோ தூரம் எடுத்துச் சொன்னோம். நாம் மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்களே இக்கிளர்ச்சி ஆரம்பிப்பதற்கு காரணமே, பகத்சிங் போன்றவர்கள் செய்யுங்காரியங்களை கெடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்று கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியுமிருக்கின்றார். போதாக்குறைக்கு அக்கம்பக்கத்து தேசத்தவர்களில் உண்மையான சமதர்மக் கொள்கையுடைய தேசத்தார்களும் ‘‘திரு. காந்தியவர்கள் ஏழைகளை வஞ்சித்து விட்டார், சமதர்மக் கொள்கைகளை ஒழிக்கவே தன்காரியங்களைச் செய்கின்றார், திரு. காந்தி ஒழியவேண்டும், காங்கிரஸ் அழிய வேண்டும்’’ என்று ஆகாயமுட்டக் கூப்பாடு போட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால் நமது தேசிய வீரர்கள், தேசபக்தர்கள் என்பவர்கள் ஒன்றையும் கவனியாமல், பலாபலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதுபோலவும், பந்தயங்கூறிக்கொண்டு பாறையில் முட்டிக்கொள்வது போலவும் தலை கிறுகிறுத்துக் கண் தெரியாமல் கூத்தாடினார்கள், அதன் பயனாய் சிறை சென்று வீரர்களை ‘‘வாகை மாலை சூடி’’ திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்து கொண்டார்கள். பிறகு இப்போது பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பார்த்துவிட்டு, ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்று கூப்பாடும் போடுகின்றார்கள். இதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

நிற்க, நம்மைப் பொருத்தவரை நாம் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பகத்சிங் அவர்கள் இந்த மாதிரி பொருப்பும் கவலையும் அற்ற மூட மக்களும், மட மக்களும் பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்கு கௌரவம் கிடை;ததால் போதுமென்கின்ற சுயநல மக்களும் உள்ள நாட்டில் உயிருடன் வெகுகாலம் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு வினாடிதோரும் வேதனைப் பட்டு இவர்களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அவர் தன் உயிரை விட்டு மறைய நேர்ந்தது, பகத்சிங்கிற்கு மெத்த ‘‘சாந்தி’’ என்றும், நன்மை யென்றுமே கருதுதுகின்றோம். அந்தப் பேற்றை நாம் அடைய முடியவில்லையே என்றுதான் கவலைப்படுகின்றோம்.

ஏனெனில் ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா? இல்லையா? என்பதுதான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல. ஆனாலும் காமறிந்து, இடமறிந்து கடமையைச் செலுத்த வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளுகின்றோமாயினும் பகத்சங் கொள்கைக்கு காலமும் இடமும், நடப்பும் விரோதமாயில்லை என்றே சொல்லுவோம். ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக்கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்துவிட்டதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்றமுடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம், அதுவேதான் உலகத்தின் சாந்தநிலைக் கொள்கையாகும். நிற்க, உண்மையிலேயே பகத்சிங் அவர்கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக்கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள்தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்து கொண்டு இருப்பாரேயானால் கண்டிப்பாக அவர் நடந்துகொண்டபடியேதான் நடந்து இருக்க வேண்டியதென்று நாம் சொல்லுவதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்ல முடியாது என்றும் சொல்லுவோம். ஆதலால் இப்போது நாம் அவரை ஒரு உண்மையான மனிதர் என்று சொல்லுவோம்.

இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் நாமறிந்தவரை திரு பகத்சிங்கிற்கு பொது உடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்ட வாக்கியம் காணப்படுகிறது. அதாவது:-‘‘பொதுஉடைமைக் கட்சி அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்துகொண்டுதானிருக்கும். எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்துவிடாது. அது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடந்துதான் தீரும்’’என்று குறிப்பிட்டிருக்கிறார். அன்றியும் அவர் கடவுள் விஷயத்திலோ எல்லாம் கடவுள் செயல் என்பதிலோ நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கையுடையவர் என்றும் கருதிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்துக்கொள்கையானது எந்த சட்டத்தின்படியும் குற்றமாக்கக்கூடியது அல்லவென்றும் ஆவதாயிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொல்லுவோம். ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டுவிடாது என்று உறுதிகொண்டிருக்கின்றோம். அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதாயிருந்தாலும் நாம் நம் மனப்பூர்வமாய் யாதொரு தனிமனிதனிடமாவது, தனி வகுப்புகளிடமாவது, தனி தேசத்தார்களிடமாவது துவேஷம் இல்லாமலும் எந்த தனி மனிதனுடைய திரேகத்திற்கும் துன்பமுண்டு பண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்படுத்திக்கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத்தன்மையுடன் இருந்துகொண்டு அக்கொள்கையை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம். ஆதலால் நாம் எதற்கும் கவலைப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கி இருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மை ஒழிய வேண்டும் என்பதிலும் அடங்கி இருக்கின்றது. தீண்டாமை ஒழிவதாயிருந்தால் எப்படி மேல்ஜாதி, கீழ்ஜாதி தத்துவம் அழிந்து தானாக வேண்டும், அதுபோலவேதான் ஏழ்மைத்தன்மை ஒழிவதாயிருந்தால் முதலாளித் தன்மை, கூலிக்காரத் தன்மை ஒழிந்துதானாக வேண்டும். ஆகவே இந்தத் தன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத்தன்மை பொதுஉடமைத் தன்மை என்பவைகளை ஒழிய வேறில்லை. இந்தக் கொள்கைகள்தான் திரு பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள் ஆதலால் இக்கொள்கைகளை நியாயமானவை யென்றும், அவசியமானவை என்றும் கருதுகின்ற ஒருவன் காங்கிரஸ் ஒழிக! காந்தீயம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே இல்லை. ஆனால் இந்தக் கொள்கைக்காரர்கள் காங்கிரசுக்கு ஜே, காந்திக்கு ஜே என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாயிருக்கின்றது.

திரு. காந்தியவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம். அந்த உண்மை இன்றுதான் மக்களில் சிலராவது கண்டுபிடித்து காந்தீயம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும் துணிவையும் அடைந்திருக்கின்றார்கள். இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியாகும். திரு பகத்சிங் தூக்கிலிடப்பட்டு உயிர்துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந்திருக்காது. அன்றியும் பகத்சிங்கை தூக்காமல் இருந்திருந்தால் காந்தீயத்திற்கும் இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்றுகூடச் சொல்லுவோம். சுபமாக, தானாகவே நோய்கொண்டு அவஸ்தைப் பட்டு செத்துச் சாம்பலாகி இருக்க வேண்டிய பகத்சிங்குக்கு இந்திய மக்களுக்கு ஏன் உலகமக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்கு பயன்படத்தக்கதாய் தனது உயிரைவிட நேர்ந்தது. சாதாரணத்தில் வேறு யாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி, பகத்சிங்கை மனமார, வாயாரா, கையார பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம் !! பாராட்டுகின்றோம் !!!

இதே சமயத்தில் ந்மது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடையவர்களாகப் பார்த்து மாகாணத்திற்கு 4 பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டுகின்றோம்.---

 

http://illakkia.blogspot.com/2008/03/blog-post_3788.html

உலகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில் தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில் தான் அதிகமான பெரிய ஆலயங்கள் (கோவில்கள்) இருக்கின்றன.இந்தப்படி அதிகமான பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டிருப்பவையெல்லாம் பெரியதும் அக்கால அரசாங்க அரசர்களாலேயே கட்டப்பட்டவையாகும். இதற்குக் காரணம் என்னவென்றால் அக்காலத்தில் இந்த ஆலயங்கள் மூலம் அரசாங்கத்திற்குப் பணம் (நிதி) வருவாய்க்கு வழி செய்து கொள்ளும் ஏற்பாடு இருந்திருக்கிறது என்பது தான். எதுபோலென்றால் சுமார் 40 – 50 ஆண்டுகளுக்கு முன் வரையில் அரசாங்க நிதி (வரி) வசூலுக்கு அரசாங்கமே மதுக்கடைகளை ஏற்பாடு செய்து, அதை வியாபாரம் போல் செய்து பணம் சம்பாதித்து வரி நிதியோடு சேர்த்து வந்தது போலவேயாகும். அதனாலேயே கோவில் கட்டுவது என்பதை அரசாங்கத்திற்கே உரிமையாக வைத்துக் கொள்ளப்பட்டிருந்ததுடன் "அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் கோயில் கட்டக்கூடாது" என்கிற நிபந்தனையும் இருந்து வந்திருக்கிறது. இதற்கு ஆதாரம் நம் தேசத்தில் சுதேச சமஸ்தானங்கள் இருக்கும் வரை அந்த அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் எந்த கோவிலையும் கட்டக்கூடாது என்ற நிபந்தனை இருந்து வந்திருப்பதேயாகும்.

சுமார் 2000 - ஆண்டுகளுக்கு முன் சாணக்கியர் என்ற ஒரு பார்ப்பனர் பொருளாதார நிபுணராக இருந்தார். அவர் உண்டாக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நீதி நூலில் இதைப்பற்றி விளக்கியுள்ளார். இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நூலானது மனுதர்ம சாஸ்திரம், யாக்ஞ் வல்கியர் ஸ்மிருதி ஆகிய நூல்களுக்கும் முந்தியதாகும் என்பது ஆராய்ச்சியாளரின் முடிவு. இதிலிருந்து மனு, யாக்ஞவல்கியர் முதலிய நீதி நூல்களின் ஆயுள் சுமார் 2000 - ஆண்டுகளுக்கு உட்பட்டதென்றே தெரிகிறது. இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் மத சம்பந்தமான ஸ்தாபனங்களை மேற்பார்வைச் செய்யும் அரசாங்க அதிகாரி நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் வரும்படிகளையும் கோவில்களுக்கு பக்தர்களிடமிருந்து பணமாக வசூலித்து அந்தப்படி வசூலிக்கப்படும் பணத்தையும் அரசாங்க வருவாய் நிதியுடன் சேர்க்க வேண்டும் என்ற விதிகள் இருந்திருக்கின்றன.

அரசாங்கத்திற்குப் புதிய வருவாய்த் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வசூலிக்கப் பல திட்டங்கள் இருந்தன. ஒரு இரவில் பொது மக்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு கடவுளை அல்லது மேடையை ஏற்படுத்தி, அதைத் தானாகத் தோன்றியது என்று விளம்பரப்படுத்தி அதை வணங்கினால் பல கெடுதிகள், வியாதிகள் விலகுமென்று கூறி, திருவிழாக்கள் முதலியன நடத்தி, அதன் மூலம் பணம் சம்பாதித்து பொக்கிஷத்தில் சேர்க்க வேண்டியது. அரசாங்க ஒற்றர்களை விட்டு ஒரு மரத்தில் பிசாசு, முனி இருப்பதாகப்பொது மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி விட வேண்டும். பிறகு இதை விரட்டவும், திருப்தி செய்யவும், பெரிய சாந்தி விழா நடத்தி பெருந்தொகை வசூலித்து பொக்கிஷத்திற்குச் சேர்த்துவிட வேண்டும். அரசரது ஒற்றர்கள் சந்நியாசி மாதிரி வேடம் பூண்டு இந்தத் தந்திரத்தைச் செய்து பணத்தை வசூலிக்க வேண்டியது. இவற்றால் பிசாசு நகரத்தை விட்டுப் போய் விடுகிறது. பணம் அரசரது பொக்கிஷத்திற்குச் சேருகிறது. அந்தக் காலத்தில் அரசனுக்குப் பணம் தேடிக் கொடுக்கும் வேலை அதிகாரிகளுக்கும் கடுமையான வேலையாகவே இருந்திருக்க வேண்டும். மற்றும் பாம்பைக் காட்டி பணம் பறிக்கும் தந்திரம் இதைவிடவிசித்திரமானது. இது இன்றுங்கூட சிறிது மாற்றத்துடன் ஒரு கோவிலிலாவது இருந்து வருவதாகத் தெரிகிறது.

சாணக்கியர் காலத்தில் தீர்த்தம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்குமென்பதை எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.சாதாரணமாக எளிதில் இவ்விஷயங்ளை நம்பாத மக்களிடத்தில் தான் இந்தத் தீர்த்தம் உபயோகப்பட்டது. இதை அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மருந்தாக உபயோகித்தார்கள். ஆனால், இந்தத் தந்திரங்களையெல்லாம் அரசர்களுடைய காரியத்திற்காக உபயோகித்தார்களேயன்றி, இன்று நடப்பது போல் ஒரு சிலருடைய சுயநல வாழ்வுக்காகவன்று என்பதை ஞாபகத்திலிருத்திக் கொள்ள வேண்டும். தந்திரம் இரண்டும் ஒன்று தான்."பார்ப்பான் தன்னலத்தையும், ஆதாயத்தையும் கருதி கோவில்களில் ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்விதத் தந்திரத்தையும் உபயோகிப்பான்" என்று பிரஞ்சு பாதிரியாரான கற்றறிந்த "ஆபி டூபாய்" ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதியிருக்கிறார். மேலும், சாணக்கியர் கூறுவதாவது :

"அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் பால் வடித்தாலாவது அல்லது அகலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்திருந்தாலாவது அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது ஜனங்களிடம் காட்டி, பிரசித்தப்படுத்த வேண்டும். "அல்லது ஒரு கிணற்றில் அநேக தலைகளையுடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடமிருந்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம். "

"ஒரு பாம்பு விக்கிரகத்தில் துவாரமிட்டோ அல்லது கோவிலின் இருட்டு மூலையிலோ அல்லது ஏதாவது பொந்திலோ பசியால் வாடிக் கிடக்கும் பாம்பு ஒன்றை வைத்து ஜனங்களைப் பார்க்கச் சொல்லி பணம் வசூலிக்கலாம்."

"இம்மாதிரி தந்திரங்களை எளிதில் நம்பாத ஜனங்களுக்கு மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்தமென்றும், பிரசாதமென்றும் சொல்லி, குடிக்கும்படிச் செய்து அவர்கள் குடித்து மயங்கியவுடன் அதற்குக் கடவுள் கோபம் என்றும் என்றும் சொல்ல வேண்டியது. அல்லது தாழ்ந்த ஜாதியானொருவனைப் பாம்பு கடிக்கும்படிச் செய்து, இம்மாதிரி துர்சகுணம் நேரிடாது தடுக்கப் போவதாகப் பாசாங்கு செய்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்."

"தெய்வங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் காணிக்கைகள் அரசனது பொக்கிஷத்தைச் சேர வேண்டும். அரசனது செலவுக்காக அரசன் அரசன் வாழும் பொருட்டு பணம் வசூலிக்க ஒரே இரவில் தேவதைகளையும், பீடங்களையும், ஸ்தாபித்து திருவிழாக்கள் நடத்த வேண்டும். காணிக்கைகளைப் பெறுவதற்காக அடிக்கடி கடவுள்கள் தோன்றும்படிச் செய்ய வேண்டும்."

சாதாரணமாக மிக வெளிப்படையான தந்திரங்கள் தான் அதிகமாகப்பலனை அளிக்கிறது. கடவுள் தம்மூலம் பேசுவதாகப் பாசாங்கு செய்துபணம் திரட்டும் வழி முன்காலத்தில் தான் மற்ற நாட்டுப் புரோகிதர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆனால், இந்தியாவில் இன்றும் இவ்வழக்கம் ஓயவில்லை. இங்கு விக்கிரகங்களே பேசுகின்றன. இவற்றை வழிபடுகிறவர்கள் மிகக் கவனமாகக் கேட்டு பரவசமடைகிறார்கள். ஆனால் கல்விக்கிரகத்தின் உள்ளோ பக்கத்திலோ வஞ்சகன் ஒருவன் மறைந்திருந்து விக்கிரகத்தின் வாய் வழியாகப் பேசுகின்றான் என்பதை இவர்கள் அறிவதில்லை என்று "ஆபே டூபாய்" கூறுகின்றார்.

இவை போன்று இன்றளவும் கையாளப்பட்டு வருகிற பலவிதத் தந்திரங்களையும் அவர் விரிவாக விளக்குகிறார்.இனி நமது சாணக்கியரைக் கவனிப்போம். சாணக்கியர் காலத்தில் கோவில் வருவாயிலிருந்து ஒரு பைசாவாவது அரசானது பொக்கிஷத்தைச் சேரதவறி விட்டால் அந்த இடத்திலேயே கோவில் அதிகாரி ஏன் தூக்கிலிடப்பட்டிருப்பார் என்பதை நாம் மேற்சொன்னவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.அது மிகவும் நியாயமே. ஏனெனில் அக்காலத்தில் விக்கிரகங்களும், பீடங்களும் அரசனது வியாபாரத்திற்காக ஏற்பட்டவைகளாகும். பொது ஜனங்களின் பணத்தைச் செலவிட்டே விக்கிரகங்களையும், பீடங்களையும், மடங்களையும் உண்டு பண்ணி பரிபாலித்து அவற்றைப்பற்றி பெரிதாக விளம்பரப்படுத்தியும் வந்தார்கள். இக்காலத்தில் அரசாங்கத்தார் எவ்வாறு பெரும் பொருள் செலவிட்டு மேட்டூர் தேக்கத்தையும், சுக்கூர் அணைக்கட்டையும் கட்டி அவற்றினின்றும் லாபத்தை எதிர்பார்க்கின்றார்களோ அதேபோல முன்காலத்து அரசர்கள் கோவில்களையும், ஸ்தலங்களையும் உற்பத்தி செய்ததும் லாபத்தைக் கருதியேயாகும்.

இம்மாதிரி "மத ஸ்தாபனங்க" ளை ஏற்படுத்தி முற்கால மன்னர்களைச்சுற்றி விரோதிகள் எப்போழுதும் இருந்து வந்ததால் இடைவிடாது யுத்தங்கள் நேரிட்டுக் கொண்டேயிருந்தன. இதற்காக அவர்கள் பெருஞ்சேனைகளை வைத்திருந்தனர். யுத்தங்களுக்கும், சேனைகளுக்கும் வேண்டிய பணத்திற்காக ஏராளமான வருவாய் தேவைப்பட்டது. கோவில் வருவாயைக் கொண்டு பார்ப்பனருக்கு மட்டும் சோறு போடுவது என்றிருந்தால் அரசும் கோவிலும் அன்றே மறைந்திருக்கும். இக்கோவில்களையும், பீடங்களையும், கடவுள்களையும் படைத்த அக்காலத்து அரசாங்கத்தை நடத்தும் கஷ்டம் எவ்வளவு என்று தெரியும்.

உதாரணமாக பூணர மதுவிலக்கு ஏற்பட்டால் நாட்டில் உயர்தரக் கல்வியை நிறுத்த நேரிடுமென்று இன்று (இராஜாஜி முதலியவர்கள்) சொல்லுவது போல தங்களது ஷேமமும், கோவில் வருமானத்தில் தொங்கிக்கிடந்தன என்பதை அக்கால அரசர்கள் அறிந்திருந்தார்கள். ஆதலால் அவர்கள் மீது மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்கள். இவ்வுலக சுக துக்கங்களைக் குறித்து அவர்கள் நினைத்தார்களேயன்றி மோட்சலோகத்தைப்பற்றி நினைக்கவில்லை. இக்காலத்து சுதேச மன்னர்களில் பெரும்பாலோர் யாதொரு பொறுப்பும் கவலையுமெடுக்காது மோட்சலோகத்தைப்பற்றி நினைக்கிறார்கள். பார்ப்பானை திருப்தி செய்தால் மோட்சத்துக்குச் சீட்டு கிடைத்துவிடுமென நம்புகிறார்கள். அங்ஙனம் செய்துவிட்டு தங்கள் ராஜ்ஜியங்களைவிட்டு தற்கால மோட்ச பூமியான பாரிஸ் முதலிய மேல்நாடுகளுக்குச் சென்றுவிடுவதுமுண்டு.

சர்தார் கே.எம்.பணிக்கர் அவர்கள் "இந்திய சமஸ்தானங்களும், இந்திய அரசாங்கமும்" என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்:

"பல சிற்றரசர்கள் மிதமிஞ்சிய சுக போகங்களுடன் இழிவான வாழ்க்கை வாழ்வதற்குக் காரணம் அவர்கள் இராஜ்ஜிய பாரத்தில் நேராக பொறுப்பேற்று நடத்தாததேயாகும். முன் காலங்களில் குடிகளைத் துன்புறுத்தும் கொடுங்கோல் மன்னனையும், தனது சுகமொன்றையே கருதும் துர் நடத்தைக்காரரையும் சும்மா விட்டு வைத்திருக்கமாட்டார்கள். வெளியிலிருந்தேற்படும் படையெடுப்போ அன்றி உள்நாட்டுக் கலகமோ அவனது வாழ்க்கையை முடித்துவிடும். ஆனால் இக்காலத்தில் அப்படியல்ல. ஒரு அரசன் தான் பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு செய்துகொண்ட உடன்படிக்கையை மீறாதிருப்பது வரையும் நாகரீக ஆசாரங்களை வெளிப்படையாக புறக்கணியாதிருப்பதுவரையும், அவனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தார் ஆதரவிருக்கின்றது. அவன் தனது சுக போகங்களுக்காகத்தன் இஷ்டம் போல் பொக்கிஷத்தை உபயோகிக்கவம் குடிகளை கொள்ளையடிக்கவும் விட்டுவிடுகிறார்கள்."

சர்.தாமஸ் மன்ரோவின் அடியிற்கண்ட குறிப்புக்களையும் திரு.பணிக்கர் அவர்கள் எடுத்துக் கூறுகிறார்கள். இந்தியாவில் மோசமான ராஜ்ய பாரம் ஏற்படுமாயின் அரண்மனையில் புரட்சி உண்டு பண்ணியோ அல்லது உள்நாட்டுக் கலகத்தாலோ அதைச் சரி படுத்துவது தான் வழக்கம். ஆனால் உள்நாட்டு வெளிநாட்டு விரோதிகளினின்றும் மன்னனைக் காப்பாற்ற பிரிட்டிஷ் படைகளிருப்பதால் அவ்விதம் கொடுங்கோன்மையைப் பரிகரிக்கும் வழியெதுவுமில்லாமற் போய்விடுகின்றது. தனது பாதுகாப்புக்கு அன்னியர் உதவியிருக்கிறதென்ற நம்பிக்கையால் அவன் சோம்பேறியாய் விடுகின்றான். தனது குடிமக்களுடைய வெறுப்பு தன்னையொன்றுஞ் செய்ய முடியாவனாகவும், பேராசை பிடித்தவனாகவும் ஆகிவிடுகின்றான். கோவில்களிலிருந்து தனக்குப் பணம் வந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதொன்றையே அரசன் கவனிப்பான் என்பது இதுகாறும் எடுத்துக் காட்டியவற்றிலிருந்து விளங்கும். யார் கோயிலுக்குப் போய் வணங்கினார்கள் யார் மதுவருந்தினார்கள் என்பதைப்பற்றியெல்லாம் அவன் கவனித்ததில்லை. இவர்கள் சண்டாளராகவும், சூத்திரராகவும், வைசியராகவும், சத்திரியராகவும், பிராமணராகவும் இருக்கலாம். சண்டாளனாகவிருந்தாலும் அவன் எவ்வளவுகெவ்வளவு அதிகமாகப் பணம் கொடுக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அரசனும் திருப்தியடைந்திருப்பான். பணம் வரும் என்று தெரிந்தால் அரசன் தனது விக்கிரகங்களையும், பீடங்களையும், ஸர்ப்பங்களையும் கொண்டு சண்டாளருக்கு விசேஷ வேடிக்கைகளையும் காட்டியிருப்பான். ஒரு சண்டாளன் தனது கோவிலுக்குள் நுழையவோ விக்கிரகத்தையோ பாம்பையோ மரத்தையோ வணங்கவோ செய்யவொட்டாமல் ஓர் "வர்ணாசிரம தர்மி" தடுப்பது நிமித்தம் தனக்கு நியாயமாக வரவேண்டிய வருவாய் தடைபடுவதாகத் தனது காதுக்கு எட்டினால் இம்மாதிரி தடை செய்பவர்கள் பார்ப்பனராக இருந்த போதிலும் இவர்களை சமீபத்திலிருக்கும் மரத்தில் கட்டி தூக்கியிருப்பான்.

அக்காலத்தில் இந்துக் கோவில்கள் அரசனுடைய வருவாய்க்கு அவ்வளவு தூரம் மூலகாரணமாயிருந்தன. ஆகவே எக்காரணத்தைக் காட்டியேனும் இவன் சண்டாளன் இவன் தாழ்ந்த சாதி ஆகையால் கோவிலுக்குள் போகவோ வணங்கவோ கூடாதென்று யாரேனும் சொன்னால் அவன் அந்த இடத்திலேயே கொடிய குற்றஞ்செய்தவனாகக் கருதப்பட்டிப்பான். கோவில்கள், அரசாங்க ஸ்தாபனங்களாகவிருந்தன. ஏதேனும் ஒரு ஸ்தாபனம் "பொதுச் சொத்து" என்று சொல்லக்கூடியதாக இருந்திருந்தால் அது இந்தக் கோயில்களாகும். இப்போது உயர் சாதி இந்து வக்கீல்கள் கோயில்களைப் பொது ஸ்தாபனங்கள் என்று சொல்லும் போது ஒரு புது மாதிரியான விசேஷ அர்த்தத்துடன் சொல்லுகின்றார்கள். பிரதம திருஷ்டியில் நான்கு சாதியாருக்கும் தட்டுத் தடையின்றி இக்கோயில்களில் பிரவேசித்து வழிபட உரிமையுண்டு என்பது இவர்கள் கூற்றாகும்.

"வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரிய மதத்தில் விக்கிரக ஆதாரனையில்லை. இது பின்னர் தோன்றிய இழிவுபட்ட ஆராதனையாகும்" என்று காலஞ்சென்ற "மாக்ஸ்மூல்லர்" என்னும் உலகப் பிரசித்தி பெற்ற மேல்நாட்டு ஆசிரியர் கூறுகின்றார். வங்காள தேசத்து பிரபல வழக்கறிஞரான மிஸ்டர் ஜே.சி.கோஷ் தமதுதாகூர் சட்டப் பிரசங்கத்தில் அடியில் வருமாறு குறிப்பிடுகிறார்:

"மக்கள் யாகம் முதலியவற்றை நடத்திவந்த காலத்தில் கோயில்களையும், விக்கிரகங்களையும், ஸ்தாபிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பிராமணர்கள் மட்டுமே அக்கினியை வளர்க்கலாம். அதனால் அவர்களை அக்கினி ஹோத்திரிகள் என்றழைத்தார்கள். மற்ற சாதியாரும் உயர்ந்த போது அவர்கள் வழிபடத் தெய்வங்கள் வேண்டியதாயிற்று. பிராமணரது ஆதிக்கம் குறையவும் அக்கினி வணக்கம் தனது செல்வாக்கையிழந்தது. இதிலிருந்து விக்கிரக வணக்கம் ஆரம்பமாயிற்று. மற்றும் புத்த விக்கிரகங்களையும், ஸ்தாபித்து புத்த மதத்தினர் வழிபடவாரம்பித்தது. இந்துக் கோயில்களையும், விக்கிரகங்களையும் ஸ்தாபிப்பதற்கு வழிகோலியாயிற்று. விக்கிரகங்களையும், கோயில்களையும் ஏற்படுத்தியபோது அவற்றைப் பரிபாலிக்க சொத்துக்களை விட வேண்டியதும் அவசியமாயிற்று! எனவே நிலங்களை விட்டதுமன்றி பல பழைய கோவில்களில் மக்களை ஈர்க்க (அடிமைப் பெண்களையும்) தாசிகளையும் விட்டார்கள். இதிலிருந்து இந்தியாவில் எந்த நோக்கத்துடன் விக்கிரக ஆராதனை ஆரம்பிக்கப்பட்டது என்பது புலனாகும். இப்பொழுது ஒவ்வொரு கோயிலிலும் நடனசாலை இருப்பதாகவே கருதப்படுகிறது என்று மிஸ்டர் கோஷ் சொல்கிறார்.

பண்டைக் காலத்தில் இக்காலத்திலிருப்பது போலவே கோவில்கள் வேடிக்கை விநோத ஸ்தலங்களாகவே இருந்து வந்தன. இவ்வுத்தேசத்துடன் தான் அக்கால அரசர்களும் ஆலயங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். எனவே இந்நாட்டிலிருக்கும் பல கோயில்கள் வேசியர் விடுதிகளைவிடச் சிறந்தவையல்லவென்று காந்தியார் குறிப்பிட்டது சரித்திரப்படியும் மிகையாகாது. இந்நோக்கத்துடனேயே ஆலயங்களை ஸ்தாபித்தார்கள் என்பது சரித்திரப்பூர்வமான உண்மையாகும்.

 

(1970 – ஆம் ஆண்டில் வெளியான தந்தை பெரியார் அவர்களின் 92 –வது பிறந்தநாள் விழா மலரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)(பெரியார் களஞ்சியம் 2 –ஆம் தொகுதியில் இருந்து…. பக்கம் :275)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_20.html




தந்தை பெரியார் பிறந்த இல்லம்...



தந்தை பெரியாரின் பெற்றோர்...


தந்தை பெரியார் சிறுவனாக இருந்த போது...


தந்தை பெரியாரின் சகோதரனும் சகோதரியும்...

முதல் மனைவி நாகம்மையாருடன்...




25 - ஆம் வயதில் காசியில் துறவுக் கோலத்தில் தந்தை பெரியார்...




துறவுக் கோலத்தில் தந்தை பெரியார்...
செல்வச் செழிப்பில் தந்தை பெரியார் ...

வியாபாரியாக இருந்த போது தந்தை பெரியார்...

நடுத்தர வயதில் தந்தை பெரியார்...


இரண்டாம் மனைவி நாகம்மையாருடன்...

94 - ஆவது வயதில் தந்தை பெரியார்...

பெரியார் பல்வேறு சந்தர்ப்பங்களில் மதுவிலக்கை எதிர்த்தே வந்துள்ளார் என்பதைக் கீழ்க்கண்ட அவரது கூற்றுகள் விளக்கும். பொதுநீதி, பொது அறம், பொது ஒழுக்கம் என்னும் பெருங்கதையாடல்களிடிப்படையிலான பேரறங்களை அவர் எப்போதும் மறுத்தார்.

 

* மதுபானத்தால் பொருளாதாரக்கேடு ஏற்படுவதும், அறிவுக்கேடு ஏற்படுவதும் செயற்கையாலே ஒழிய இயற்கையால் அல்ல. (குடிஅரசு - 03.10.1937)

 

* பொதுவாக மது அருந்துவதையே குற்றமென்று சொல்லிவிடமுடியாது. கெடுதி உண்டாக்கும்படியானதும், பொருளாதாரத்திலும், அறிவிலும், கேடுவிளைவிக்கும்படியானதுமான மதுபானமே இன்று விலக்கப்பட வேண்டியதாகும். அதைத்தான் நாம் மதுவிலக்கு என்பதே ஒழிய மதுவையே யாரும் எப்போதும் அடியோடு வெறுத்ததுமில்லை. (குடிஅரசு - 03.10.1937)

 

* மதுவிலக்கு சர்க்காரின் மனதறிந்த ஒரு மோசடியாகவே இருந்துவருகிறது. இதனால் உழைப்பாளிமக்கள் உற்சாகம் குறைந்து சோம்பேறிகளாகவே ஆக்கப்படுவர். (விடுதலை - 29.11.1962)

 

* பொதுவாக மதுவிலக்கு என்பது இயற்கையோடு போராடும் முட்டாள்தனமான போராட்டமேயாகும். (விடுதலை - 09.11.1968)

 

* மது அருந்துபவர்கள் எல்லோரும் யோக்கியப்பொறுப்பற்றவர்கள் என்றும், மது அருந்தாதவர்கள் எல்லோரும் யோக்கியப்பொறுப்புடையவர்கள் என்றும் கருதிவிடக்கூடாது. (குடிஅரசு - 16.02.1969)

 

* தீபாவளிக்கு லீவு விடுவது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட இரண்டுபங்கு முட்டாள்தனம் மதுவிலக்கை எடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதுமாகும். (விடுதலை - 21.10.1969)

 

* மதுவிலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத்தன்மையில் சேர்ந்ததல்ல என்பதை எங்குவேண்டுமாலும் நிரூபிக்கத்தயார்.(விடுதலை - 17.03.1971)

 

* பத்து கள்ளுக்கடைகள் மூடப்படுவது ஒரு கோயிலைத்திறப்பதற்குச் சமம். கோயிலை மட்டும் வைத்துக்கொண்டு கள்ளுக்கடைகளை மூடவேண்டுமா? (விடுதலை - 20.06.1973)

 

('விடுதலை', 'குடிஅரசு'- முனைவர். 'மா.நன்னன்' அவர்கள் தொகுத்த 'பெரியார்கணினி' நூலினின்று எடுக்கப்பட்டவை)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_4488.html

  

 இந்த நாட்டில் நாட்டுப்பற்றோ, மனிதப்பற்றறோ உள்ள அரசாங்கமானாலும், பொதுத் தொண்டு செய்யும் ஸ்தாபனங்களானாலும், அல்லது தனிப்பட்ட சமூதாயப்பற்றுள்ள மக்களானாலும் அவர்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் நாட்டு மக்களை அறிவாளிகளாகச் செய்து அவர்களது ஆராய்ச்சித் தன்மையைப் பெருக்கவேண்டியதாகும்.

 

மக்களின் வாழ்க்கைத்தரத்துக்கு ஒரு வழி செய்து அவர்களுக்குக் கவலையோ, குறைபாடோ ஏற்படுவதற்கு இல்லாமல் பொருளாதார சமத்துவமும், சமூதாய சமத்துவமும், ஏற்படும்படிச் செய்ய வேண்டும்.இந்தத் தன்மைகள் உள்ள நாட்டைத் தான் நாடு என்றும் சுதந்திர பூமி என்றும் சொல்லலாம். இவை இல்லாத நாட்டையும் சமூதாயத்தையும் சிறைக்கூடம் என்றும், அடிமைச் சமூதாயம் என்றும் தான் சொல்ல வேண்டும். சாதாரணமாக அரசர்களால் ஆளப்படும் நாடுகளும், சமூதாயமும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

 

ஏனெனில் அரசனுக்கு ஆட்சி முறை மதமும் சாஸ்திரங்களுமே, தான் மக்களால் ஆளப்படும் நாடுகளுக்கு ஆட்சி முறை அறிவும் சுதந்திரமுமேயாகும். மதமும் சாத்திரங்களும் மனிதனின் அறிவையும், சுதந்திரத்தையும் ஒழிப்பதற் கென்றே, மக்களை மடையர்களாகவும், அடிமைகளாகவும்,ஆக்குவதற்கென்றறே ஏற்பட்ட - ஏற்படுத்தப்பட்ட சாதனங்களாகும். அவைகளும் மக்கள் காட்டுமிராண்டிகளாய் மிருகப் பிராயத்தில் இருந்த போது ஏற்படுத்தப்பட்டவைகளாகும். எப்படி என்றால், மக்களுக்குப் பயத்தைக் காட்டியே அதாவது பேய், பிசாசு, பூதம் என்பவைகளைச் சொல்லியே எப்படி மக்கள் பயமுறுத்தப்பட்டார்களோ அது போலவே தான் மதத்தையும், சாத்திரங்களையும் கூறி மக்களை பயமுறுத்தி வைத்து விட்டார்கள்.

 

மதத்திற்கும், சாத்திரங்களுக்கும் கடவுளுளை எஜமானனாக, மூலகர்த்தாவாக வைத்து உண்டாக்கினார்கள் என்றாலும் கடவுள் வேறு மதம் - சாத்திரம் வேறு என்று தான். சொல்ல வேண்டும். ஏனெனில் கடவுள் அறியாமையிலிருந்து தோன்றியாதாகும். மதமும், சாத்திரங்களும் அயோக்கியத்தத்திலிருந்து அதாவது மக்களை மடையர்களாக்கவும், பயமுறுத்தி அடிமைகளாக்கவும் வேண்டுமென்ற எண்ணத்தின் மீதே உண்டாக்கப்பட்டவைகளாகும்.

 

உலக அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட மேல் நாட்டுக் குறிப்பிடத் தகுந்த அறிஞர்களாலேயே இக்கருத்து வலிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது கடவுளைக் கற்பித்தவனை மன்னித்து விடலாம். ஏனெனில் அவன் மடையன், அறிவில்லாத காரணத்தால் கற்பிக்க வேண்டியவனானான். ஆனால் மதத்தையும், சாத்திரங்களையும் (ஆத்மா – மோட்சம் - நரகம்) கற்பித்தவன் அயோக்கியன்; இவனை மன்னிக்கவே முடியாது, இவன் மக்களை பயமுறுத்தி வைக்க வேண்டியே இவற்றைக் கற்பித்து இருக்கிறான் என்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

 

கடவுளைக் கற்பித்தவன் "உலக உற்பத்திக்கு, நடத்தைக்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும்; அந்த கர்த்தாதான் கடவுள்" என்று உத்தேசத்தின் மீது உறுதிப்பத்திச் சொல்லுகின்றான். அதாவது சந்தேகத்தின் பயனை (பெனிபிட் ஆஃப் டவுட்) (Benefit of Doubt) கடவுளுக்குக் கொடுக்கின்றான். ஆனால் மதமும் சாத்திரமும் அப்படி இல்லை. முழுப் பொய்யையே கற்பனை செய்து மக்களை ஏய்ப்பதற்கென்றே பயமூறுத்தி வைப்பதற்கென்றே பாகுபடுத்தி மதத்தையும், சாத்திரத்தையும் அமைத்திருக்கின்றான்.

 

இந்த அமைப்புக்கு (இதை அமைப்பு என்பதற்கு) ஆதாரம் என்னவென்றால் பல மாதங்கள், பல சாத்திரங்கள் இருப்பதும், அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக (நேர்மாறாக) இருப்பதுமேயாகும். மற்றும் இப்படிக் கற்பித்தவர்கள் என்பவர்கள் மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர்கள் என்பதும், இந்துமத சாத்திரங்கள் இயற்கை பிரத்தியட்ச விதிகளுக்கு மாறுபாடாக இருப்பதும் மற்றொரு ஆதாரமாகும். இதை நாம் ஏன் குறை கூறுகிறோம் என்றால், இவை அறிவை மாத்திரமல்லாமல் ஒழுக்கம், நேர்மை, அன்பு, அருள், ஒற்றுமை, சமநிலை முதலியவற்றைப் பாழ் செய்வதோடு, வளர்ச்சியையும் கெடுத்து, விஞ்ஞானத்தை மறைத்து அஞ்ஞானத்தை வளர்த்து வருகிறது. இதை உணர நாம் வெகுதூரம் போக வேண்டியதில்லை.

 

"நமது" மதத்தையும் சாத்திரங்ளையும் எடுத்துக் கொண்டாலே போதுமானதாகும். நம் (திராவிடர்) தமிழர்களாகிய மக்களுக்கு (கடவுள் உண்டா? இல்லையா? என்பது வேறு விஷயம்) ஆனால் மதமே இல்லை, இந்து நம் மதம் என்று கருதிக் கொண்டிருக்கிறோம். இதுவே ஒரு மாபெரும் "இமயமலை அளவு" முட்டாள்தனமாகும். இந்துமதம் என்றால் என்ன? அதற்குப் பொருள் என்ன? மதம் என்னும் சொல்லுக்கு கிருஸ்து மதம், இஸ்லாம் மதம் என்பதற்கு உள்ள இலட்சணப்படி, ஆதாரப்படி இலட்சணப்படி ஆதாரப்படி இலட்சிய ஆதாரம் சரித்திரம் ஏதாவது உண்டா? இந்து மத சாத்திரம் வேதம் என்பதாக இருக்கிறதா? இந்து மதத்தை பார்ப்பனர் வேத மதம் என்கிறார்கள்.

 

பார்ப்பனர் தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அதனால் அதை ஆரிய மதம் என்றும் சொல்லிக் கொள்கின்றார்கள். அதனால் அதை ஆரியமதம் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். ஆங்கில அகராதிகளில் இந்து மதம் என்றால் பிராமணர் மதம் என்றும் கிருஸ்துவர் மகமதியர் அல்லாதாருடைய மதம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விரிக்கில் பெருகும். ஆகவே சுருக்கிக் கொள்கின்றேன்.

 

இந்து மதத்திற்கு ஆதாரம் வேதம், சாத்திரம், புராண, இதிகாசமே! இந்த மதத்தின்படி நாம் கீழான பிறவி, 4 -ஆவது 5- ஆவது ஜாதியினராவோம்! அதனால் மேற்கண்ட மத ஆதாரங்களைப் படிக்கத் தகுதி அற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். வேத, சாத்திர, புராண, இதிகாச ஆதாரங்கள் பெரிதும் நம் மக்களை இதிலே மயக்கி, அயோக்கியராக்கிப் பல வழிகளிலும் அவமானப்படுத்தியுள்ளன. ஆகவே தான் கடவுள் நம்பிக்கை, மதம், சாத்திரம், புராணம், இதிகாசம் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று கூறுகின்றோம்.

 

(14-10-1970 "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்."பெரியார் களஞ்சியம்" - தொகுதி:2 …. பக்கம்: 34)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_1322.html

 

 

 காங்கிரசாரை நான் கேட்கிறேன்! அந்நியனாகிய வெள்ளையனுக்கு நாம் அடிமையாக இருக்க வேண்டும் என்றா அல்லது அவன் போக வேண்டாமென்றா நான் சொல்லுகின்றேன்? தேர்தலுக்குக் கூட நாங்கள் நிற்கவில்லையே! எங்களுக்கு வேண்டியதெல்லாம் நமக்கு இருக்கும் சூத்திரப் பட்டம் ஒழியவேண்டும். நமது நாட்டை வேறு எந்த நாட்டானும், ஆரியனும் சுரண்டக்கூடாது. நாடிமுத்துவோ, வடபாதி மங்கலம் மைனரோ, காமராஜரோ மற்றும் எந்தத் திராவிடரோ சூத்திரர்களாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.

 

காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களே, ஏன் எங்களுக்கு இடையூறு செய்கின்றீர்கள்? வெள்ளையன் எங்களுக்கு வேண்டாம், அவன் எதற்கும் எங்களுக்குத் தெவையில்லை. நாட்டை ஆண்டுவந்த நாங்கள், வெள்ளையன் வந்தபிறகு, பியூனாக, பட்லராக, கான்ஸ்டேபிளாக இருக்கின்றோம். ஆனால் பிச்சை எடுத்தக் கூட்டத்தார், இன்று ஹைபோர்ட் ஜட்ஜாக, அட்வகேட் ஜனரலாக, மந்திரியாக, சங்கராச்சாரியாக, பகவான்களாக இருக்கின்றனர். பார்ப்பனர்கள் ஜட்ஜ் முதலிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு வெள்ளையன் இருப்பதால் நஷ்டமொன்றுமில்லை. எங்களுக்குத்தான் முதலில் வெள்ளையன் வெளியே போகவேண்டுமென்ற கவலை, ஏனனில் வெள்ளையனுக்கும் ஆரியனுக்கும் நாங்கள் தான் அடிமைகளாக இருக்கின்றோம்.

 

காங்கிரஸ் தோழர்களே! எங்களைச் சந்தேகிக்க வேண்டாம் வெள்ளையன் வெளியேறினால், பார்ப்பானுடைய உயர்வுக்கும், நமது தாழ்மைக்கும் அறிகுறியாகிய உச்சிக்குடுமி பூணூல் ஆகியவைகளைக் காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களாகிய நீங்கள் தான் கத்திரிக்கப்போகின்றீர்களென்பது ஆரியனுக்கும் தெரியும் ஏன்! அது பாடுபடாத கூட்டம். கடுகளவாவது நாங்கள் உங்கள் விரோதிகளல்ல’அணுக்குண்டு காலத்தில், இந்த அதிசய காலத்தில் நீங்கள் இதை உணரவில்லையென்றால் பின்பு எப்பொழுது நீங்கள் உணரப்போகின்றீர்கள். எச்சில் காப்பிக் கடைகளில் திராவிடன் நுழையக்கூடாது என்று இந்தக்காலத்திலா சொல்லுவது?

 

நாம் பாடுபடுகின்றோம். மண்வெட்டி எடுத்தப் பூமியைத் திருத்தி உழுது, பயிரிட்டுப் பாடுபடுகிறோம். அப்படியிருக்க ஏன் நமக்கு இந்த இழிவு? யாரை நாம் வஞ்சித்தோம்? இந்த மானமற்றத் தன்மை போவதாக நாம் பாடுபட்டால், நாம் துரோகிகளா? அகிம்சையே தங்கள் அடிப்படைக் கொள்கை என்று பெருமை பேசிய காங்கிரஸ் பதவி ஏற்புக்குப் பிறகு எங்கள் மாநாட்டுப் பந்தல்கள் நெருப்புக்கிரையாக்கப்பட்டன. கண்போனது, கால்வெட்டப்பட்டது. ஆகிம்சா மூர்த்திகளாகிய காங்கிரஸ்காரர்களே! இந்தக் கொடுமைகளை நீங்கள் செய்யலாமா? இது நேர்மையா? சிந்தித்துப் பார்த்து நீங்களே தீர்ப்பளியுங்கள்.

 

காங்கிரஸ்காரர்களை விட நாங்கள் பின் வாங்கியவர்களா? நாங்களும் அப்படியே செய்தால் நாடு என்ன கதியாகும்? திராவிடர்களுக்குத்தானே கஷ்டம் ஏற்படும்.

 

கம்யூனிஸ்ட் தோழர்களே! எங்களிடத்தில் உங்களுக்கு ஏன் சந்தேகம்? கம்யூனிஸ்ட், காங்கிரஸ்காரர்களால் எங்களுக்கு எவ்வளவு தொந்தரவு, வெள்ளையன் வாழ வெண்டுமென்றா நாங்கள் சொல்லுகின்றோம்? சுயராஜ்யம் வந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் காங்கிரசார் சுயராஜ்ய காலத்தில் இப்படிச் செய்தால் இதை மக்கள் எப்படிச் சகிப்பார்கள்? காந்தியார்கூட சொல்லிவிட்டாரே ‘வெள்ளையன் மேல் சந்தேகம் வேண்டாம், அவன் நல்லவனாகிவிட்டான்” என்று! இது தானா சுயராஜ்யம்?

 

கம்யூனிஸ்ட் கட்சியார், மில்லிலும், எஞ்சினிலும் வேலை செய்யும் தொழிலாளர்களையே தொழிலாளர்களாகக் கருதுகின்றார்கள். சரீரத்தினால் பாடுபடும், சூத்திரப்பட்டம் தாங்கிய நாலுகோடி மக்களும் தொழிலாளர்களல்லவா? சூத்திரனைக், கூலி இல்லாமல் பார்ப்பனன் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகின்றதே, இது கடவுளின் கட்டளையாம். திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன் சங்கம் என்றுதானே கருத்து? இதற்குத்தானே, இப்படிச் சொல்ல வெட்கப்பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார் சங்கம் என்றும் சொன்னோம்? ஏன் இந்த இழிவான பெயர்கள் நமக்கு? பார்ப்பனன் வேண்டுமென்றால் தங்கள் சங்கத்தைச் சூததிரனல்லாதான் சங்கம் என பெயர் வைத்துக் கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மை பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக் கொள்ளவேண்டும்? நமக்குச் சொந்தப் பெயரில்லையா?

 

நாம் திராவிடர்கள் அல்லவா? பிராமணன் உயர்வானவனென்று யக்ஞவல்யர், நாரதர், பராசரர் சொன்னது இன்று இந்து சட்டமாகக் காட்சியளிக்கின்றதே. சட்டத்திலே, சாஸ்திரத்திலே, நடத்தையிலே, பிறவியிலே நாம் சூத்திரராயிற்றே. “கடவுளாலே கொடுக்கப்பட்டது” என்று சொல்லப்படும் இந்தச் சூத்திரப் பட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களாகிய திராவிடர்களல்லவா? நாம் எப்பொழுது இந்தச் சூத்திரப்பட்டத்தை ஒழிப்பது?

 

கம்யூனிஸ்ட் தோழர்களே! சூதுகள், தந்திரங்கள் ஒழியவேண்டும். நயவஞ்சகமாக இவ்வளவுநாள் நடந்த இந்த ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியா? இது பிரிட்டிஷ் நாட்டுஆட்சி அல்ல. இந்த பேதங்கள் அங்கேயில்லை. பார்ப்பனர் நூற்றுக்கு நூறு வாழ வசதி செய்து கொடுத்தது இந்த ஆட்சி. சூத்திரன் படித்தால் ராஜாவுக்குக் கேடு, பட்டத்துக்குக்கேடு என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்வதுபடி நடந்தது இந்த ஆட்சி. பிராமணன் உடலால் உழைக்கக்கூடாது என்பதற்காகத்தான் அவனுக்கு ஜட்ஜ் (நீதிபதி) முதலிய உயர்ந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளையன் பார்ப்பானுக்கு உடந்தையாக இருக்கின்றான். இது வெள்ளை ஆரியனுக்கும், மஞ்சள் ஆரியனுக்கும் உள்ள ஒப்பந்தம்தான். இனி ஏற்படப்போவது கூட அந்த ஒப்பந்தம்தான் மற்றப் பேர்களெல்லாம் தந்திரம். இதை இரண்டுவருடத்துக்கு முன்பே நான் சொல்லி விட்டேன்.

 

அம்பேக்கரும், ஜின்னாவும் இப்போழுது சொல்லுகிறார்கள், இன்றைய சமுதாய அமைப்பைக் காப்பாற்றுவதுதான் சுயராஜ்யம். இதற்கு ஒரு உதாரணம், திருவையாற்றிலே, சாப்பாட்டில் பேதம் கூடாது என்று சொன்ன காலத்திலே, மகாகனம் சாஸ்திரியார்.பி.எஸ். சிவசாமி ஜயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் முதலியோர் “நாம் செய்து கொண்ட உடன்படிகை மீறுகின்றாயே” என வெள்ளையனைக் கேட்டார்கள். இதைத்தான் நாம் உடைக்க வேண்டும். வெளளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விடுகிறேன் என்று சொல்லுவது, மற்ற வல்லரசுகளிடம் அவன் செய்து கொண்ட ஒப்பந்தம், சண்டை நீங்கியவுடன் அவரவர்கள் நாட்டை அவரவர்களிடம் விட்டுவிட வேண்டும் என்று நிபந்தனை செய்து கொண்டார்கள். அந்தப்படி அமெரிக்கன், பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டுவிட்டான். அதைப்போலவே பிரஞ்சுக்காரனும் வியட்நாம் நாட்டை விட்டுவிட்டான். ஆனால் நமது நாட்டை நம்மிடம் விடாமல் வெள்ளையன் தந்திரம் செய்கின்றான்.

 

காங்கிரஸ் அவனை வெளியே விடாமல் தடுத்து நிற்கின்றது. காங்கிரஸ் ஏன் அவனிடம் பேரம் பேசுகின்றது? நாட்டை ஆள நமக்குத் தகுதி இல்லையா? நாட்டில் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக, ஒற்றுமைக்கு விரோதமாக எவன் ஜாதிப்பட்டம் வைத்திருக்கின்றானோ, எவன் பெயருக்குப் பின்னால் ஜாதியைக் குறிப்பிடும் வால் வைத்திருக்கின்றானோ, அவனுக்கு 6-மாத தண்டனை விதிக்கட்டுமே பெருவாரியான ஜாதிமத பாகுபாடுள்ள நாட்டிலே ஒரே கொள்கையையுடைய ஒரு இனம், அதுவும் நூற்றுக்கு, 60 - க்கு மேல் மெஜாரிட்டியாகவுள்ள இடத்தைத் தங்களுக்கென முஸ்லீம்கள் தனியே பிரித்து கொள்ளுகிறதென்றால், இதில் என்ன தவறு? இது என்ன முட்டுக்கட்டை- நாடு என்ன பிளந்துபோகும்? நாடு என்ன வெடித்துப்போகும்?

 

இதற்கு எதிர்ப்பு இருக்கின்றது என்றால் இது வெள்ளையனும், ‘ஆரியனும் உண்டாக்குகிற கலகம். இங்கு இருக்கின்ற பிணக்கு, ஆபாசம் வெள்ளையனுக்குத் தெரியாதா? பார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன் என்று ஒரு ஜாதியும் இருப்பதும், ஹோட்டலுக்குள் ஒரு ஜாதிக்காரன் போகக்கூடாது என்பதையும் பார்த்து வெள்ளைக்காரன் சிரிக்கமாட்டானா?

 

(கும்பகோணத்தில் 18-08-1946 – ஆம் தேதி 'காங்கேயன் பார்க்கில்" தந்தை பெரியார் ஈ.வெ.ரா. உரை - ‘குடிஅரசு’ தலையங்கம் 09-10-1946)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_7303.html

அன்பு, ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர வேறு ஒரு பொருளைக் கொண்டதென்ற சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மைஆண், பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசகம் எழுதப்படுவதாகும். ஏனெனில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி, அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல் திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும்.ஆனால்....

காதல் என்றால் என்ன?அதற்குள்ள சக்தி என்ன?அது எப்படி உண்டாகின்றது?அது எது வரையில் இருக்கின்றது?அது எந்த எந்த சமயதில் உண்டாவது?அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது?அப்படி மறைந்து போய் விடுவதற்குக் காரணம் என்ன?என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும், பொருளற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.

ஆனால் அந்தப்படி யோசிப்பதற்கு முன்னே இந்தக் காதல் என்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழக்கில் அது எப்படிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள் “காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல, அன்பு -நேசம் -ஆசை -காமம் என்பவை வேறு, காதல் வேறு, நட்பு வேறு என்றும் அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுத்துவதாகும்.

அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமே இல்லை என்றும், அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும். அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும், பிறகு வேறு ஒருவரிடமும் அந்தக் காதல் ஏற்படாது. அந்தப்படி மீறி அந்தப் பெண்ணுக்கோ, ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரிடமும் காமமோ, விரகமோ, மோகமோ என்றெல்லாம் ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது.

மேலும் இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும் ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது. ஆனால் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபோகமும் மக்களின் அனுபவ ஞானமும் இல்லாதவர்கள் என்றோ அல்லது இயற்கையையும், உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றே தான் கருத வேண்டி இருக்கின்றது.

அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்கின்றோம்.

இன்னும் திறந்து வெளிப்படையாய்த் தைரியமாய் மனித இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும், அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்வது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் தான் சொல்ல வேண்டும்.

இவ்வளவு பெருமையையும் அணியையும் அலங்காரத்தையும் கொடுத்துப் பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி அது என்ன? அது எப்படி உண்டாகிறது? என்பதை யோசித்துப் பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா? என்பது ஒரு புறமிருந்தாலும் தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறு பொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதன் வேறுவிதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.

அன்றியும் அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத் தவிர வடமொழி மூலத்தை அனுசரித்துக் காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள் தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றப்படித் தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண்பெண் சேர்க்கைக்கூட்டு முதலியவை சம்மந்தமான விஷயங்களும் அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை.

இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்களையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகிறதே தவிர காதலுக்கென்று வேறு பொருளில்லை. ஆதலால் இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டு பிடித்தார்களென்பதும் நமக்கு விளங்கவில்லை.நிற்க, இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில் எந்த ஆதாரத்தின் மீது என்பவைகளைக் கவனித்தால், பெண் ஆணையோ ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்ப்பதாலும் அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும் உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்க கேட்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.

இந்தப்படியும் கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில் கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு வேண்டும் என்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கிறானோ அதுபோல் தான் இந்தக் காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர வேற எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப்படவில்லை.

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தைத் திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது. அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப் பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும் போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம் அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்.

உதாரணமாக ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு யார் என்று இவர்களில் ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமாரத்தி என்று சொல்லுகின்றாள். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி.

இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது? நிற்க, அவன் தன்னைச் சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்துத் தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லிவிட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறுஜென்மத்தாலும்” இவனை விட்டுப் பிரியக்கூடாது என்று கருதி விடுகிறாள். நான்கு நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும் சேவகன் மகன் என்றும் அறிந்தாள் என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா?அல்லது இருந்தாக வேண்டுமா? என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும் மறுக்கும் தன்மையும் விளங்கும்.

இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது.

இது போலவே இன்னமும் தான் முதலில் நினைத்ததற்கு அல்லது தனது நன்மைக்கும் திருப்திக்கும் இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க்காத கெட்ட காரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன்படுமா? அதை எவ்வளவு தான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் உண்மைக்காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது. நிற்க, உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகியபின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக் கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலயே ஏற்படும் காதல் நல்லதா?அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்தகாதல் நல்லதா? என்பவைகளைக் கவனிக்கும் போது சரீர மாறுபாடாலும் பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாற முடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய்க் கருத நேர்ந்தால் அது பொய்யாகவோ மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்குச் சந்தேகப்படும்படி விட்டால் அப்போது கூடக் காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக் காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கி விடக்கூடிய காதல் குற்றமான காதலா? என்பதற்கு என்ன மறுமொழி பகர முடியும்?

காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லஷியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சக் காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லஷியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியிலும் துன்பத்திலும் அழுந்த வேண்டியதுதானா? என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்.

ஒரு ஜதைக் காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்னடுமா? விரோதமில்லையானால் ஓருவர் ஞானியாகி துறவியாகிவிட்டால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக் விரோதமாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்காமல் போகாது.

பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.அது போலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும் வெறுப்புக் கொள்வதும் பிரிவதும் இயற்கையேயாகும். பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்து விடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டு விடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையேயல்லவா?

உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஓரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களையெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்தத் தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனிடமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம்.

ஆகவே இந்தத் தாசி கொண்டது காதலா? அல்லது வாழ்க்கைக்கு ஒரு செளகரியமான வழியா? இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக் கொண்டே வந்தால் இது ஒத்த காதல் ஆகிவிடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளை விடச் சிறிது கூடச் சிறந்தது அல்லவென்பது விளங்கிவிடும். அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண் பெண்களுக்குள் புகுத்திவிட்டதால் ஆண் பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்மென்று கருதி எப்படிப் பக்திவான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால் அநேகர் தங்களைப் பக்திவான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதிப் பூச்சுப் போடுவதும் பட்டை நாமம் போடுவதும் சதா கோவிலுக்குப்போவதும் பாட்டுக்கள் பாடி அழுவதும் வாயில் "சிவ, சிவ" என்று சொல்லிக் கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்திமான்களாகக் காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் துங்குவது போல் வேஷம் போட்டுக் கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக ‘தூங்கினால் கால் ஆடுமே’ என்று சொன்னால்அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்க வேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படிப் பெண்கள் இப்படி இப்படி இருப்பது தான் கற்பு என்றால் பெண்கள் அது போலவெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லிவிட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்து விட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்….

ஆகவே ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும் அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அ..றிணைப் பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையிலிருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில்இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும், நடவடிக்கையும், யோக்கியதையும், மனப்பான்மையும், தேவையும், ஆசையும் மாறக் கூடியதென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாற வேண்டியது தான் என்றும், மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம்.

ஆகவே, இதிலிருந்து நாம் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும், இன்பமும் இல்லாமல்அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை எழுதுகின்றோம்.இதுவும் ஏன் எழுதவேண்டியதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் ‘இது காதலல்ல’, ‘அது காதலுக்கு விரோதம்’, ‘அது காம இச்சை’, ‘இது மிருக இச்சை’, ‘இது விபச்சாரம்’ என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒரு விதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப்பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்றுப் பார்த்துவிடலாம் என்றே இதைப் பற்றி எழுதலானோம்.

(18.01.1931′குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதிய தலையங்கம்)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_23.html

 

என்னுடைய 76-வது பிறந்தநாளாகிய இன்று ஒரு அறிக்கை விடவேண்டும் என்று என் தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதை அனுசரித்து இன்றைக்கு முக்கியமான பிரச்சனை என்றும், இனி நாம் அதிகமாக கவலை செலுத்த வேண்டிய பிரச்சனை என்றும் கருதுகிற ஒரு விசயத்தைப்பற்றி பொதுமக்களுக்கு எனது வேண்டுகோளாக தெரிவிக்கலாம் என்று கருதுகிறேன்.

 

தோழர்களே! தமிழ் நாட்டை வடநாடு பொருளாதாரத் துறையில் பெருங்கொள்ளை அடிப்பதோடு தமிழ்நாட்டை பொருளாதாரத் துறையிலும், தொழில்துறையிலும் தலையெடுக்க ஒட்டாமல் மட்டந்தட்டிக்கொண்டு வருகிறது. இந்த ஒரு முக்கியமான காரியத்துக்காகவே வடநாட்டான் அரசியலிலும், தமிழ்நாட்டை தனக்கு அடிமைப்படுத்தி தனது காலடியில் வைத்திருக்கிறான். இதற்கு அனுகூலமாக இந்நாட்டு பார்ப்பனர்கள் தங்களுக்கு இனி இந்நாட்டில் ஆதிக்கம்பெறவோ, இதுவரையிலும் வாழ்ந்தது போன்ற ஆதிக்க வாழ்வு வாழ முடியாது என்று கருதி வடநாட்டானுக்கு அவனது அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கு தமிழ்நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கு உடந்தையாகவும், உள் ஆளாகவும் இருந்து வருகிறார்கள்.

 

இந்த காரணங்களுக்காகவே வடநாட்டான் ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாட்டை விலக்கி சுதந்திரத் தமிழ்நாடாக ஆக்க வேண்டும் என்றும், நாட்டைக் காட்டிக்கொடுத்து பிழைக்கும் சமுதாயமாகிய பார்ப்பனச் சமுதாயத்தை தமிழ்நாட்டிலிருந்தே வெளியாக்கிவிட வேண்டுமென்றும நான் உறுதியாகக்கருதி என்னாலான முயற்சிகளை திராவிடர்கழகத்தின் மூலம் தொண்டாற்றி வருகிறேன். இது ஒருபுறமிருக்க இந்த சந்தர்பத்தையும், நடப்புக்களையும் ஆதரவாகக் கொண்டு உள்நாட்டிலேயே சில கொள்ளைக்கூட்டங்கள் தோன்றி வசதிபட்ட அளவுக்குக்கூட தமிழனை தலையெடுக்கவொட்டாமல் செய்து வருகின்றன. இங்கு சற்று விவரமாக சொல்ல வேண்டியிருக்கிறது.

 

இந்த நாட்டு அரசியலில் வெள்ளையன் இருந்த காலம் முதற்கொண்டே பார்ப்பனர்கள் ஏகபோகம் ஆதிக்கம் பெற்று தமிழர்களுக்கு சிறிதும் நல்வாய்பில்லாமல் தமிழர்கள் அழுத்தப்பட்டு வந்திருப்பதைக் கண்டிக்கும் முறையில் இந்நாட்டு தமிழ் மக்களால் நான் அறிய 1890-ஆம் ஆண்டிலிருந்தே பெருங்கிளர்ச்சி செய்யப்பட்டு வந்திருக்கிறது.

 

உதாரணமாக 1892-லும், 1893-லும் சென்னை மாகானத்தில் கவர்னராயிருந்த லார்டு வென்லக் துரை அவர்களுக்கு இந்நாட்டு தமிழ் (திராவிட) பெருங்குடி மக்களின் பெயரால் கவர்னருக்கு பகிரங்கக்கடிதம் என்பதாக குறிப்பிட்டு இரண்டு கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளின் நகல் என் கைவசம் இருக்கின்றன. அக்கடிதங்களில் சமுதாயத்துறையிலும், அரசியல் துறையிலும் பார்ப்பனர் ஆதிக்கத்தையும், கொடுமையையும் ஆதாரப்பூர்வமாக புள்ளிவிவரங்களோடு எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. மற்றும் அக்கடிதத்தில் அவற்றை அனுசரித்து மெயில் முதலிய பத்திரிக்கைகளின் கருத்துக்களையும் டாக்டர் மில்லர் போன்ற பெரியோர்களின் கருத்துக்களையும் எடுத்துப் போட்டு காட்டப்பட்டிருக்கின்றன.

 

இதை எதற்காக குறிப்பிட்டேன் என்றால் பார்ப்பன ஆதிக்கமும், கொடுமையும் பற்றி சொல்வது ஜஸ்டிஸ்கட்சி ஏற்பட்ட பிறகோ, அல்லது சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகோ அல்லவென்றும், 1890-லேயே நம்மவர்கள் உணர்ந்து முறையிட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்தக்காட்டுவதற்காகவே. நிற்க, இத்தொல்லைகள் அல்லாமல் தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலே மற்றொரு தொல்லை வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது. அது என்னவென்றால் உத்தியோகத்துறையில் - தமிழன்- பார்ப்பனரல்லாதான- என்கிற பெயரால் தனக்குறிய பங்கை வலியுறுத்த ஆரம்பித்த பிறகு பார்ப்பனர் அதை எதிர்த்து ஒடுக்கும் வகையில் தங்களால் ஆனவற்றையெல்லாம் செய்து ஒடுக்கிபின் மீதி- அதாவது பார்ப்பனரல்லாதவருக்கு ஏதாவது சலுகைகாட்டி பதவி கொடுத்துத்தான் தீரவேண்டும் என்ற நிலைமை நிர்பந்தம் ஏற்பட்ட சந்தர்பத்தில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக்கொண்டு சில பதவிகளை வெள்ளையனுக்கு கொடுப்பதும், அவனுக்கு கொடுப்பது மக்களுக்கு இஷ்டமில்லை என்றால் வெளி மாகாணக்காரர்களுக்கு கொடுப்பதும், அவர்களுக்கு கொடுப்பதும் சாத்தியப்படாத சந்தர்பங்களில் கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஆகியவர்களுக்கு கொடுப்பதும், அது சாத்தியப்படாத சந்தர்ப்பங்களில் ஆந்திரர், மலையாளி, கருநாடகர் ஆகியவர்களுக்கு கொடுப்பதுமாய் சூழ்ச்சி செய்து தமிழர்களுக்கு எவ்வளவு கொடுமையும், குறைபாடும் செய்யவேண்டுமோ அந்த அளவுக்கு செய்து வந்தார்கள்.

 

வெள்ளையன் அரசாங்கமும் இவர்களுக்கு ஆதரவு கொடுத்தே வந்திருக்கிறது. இப்போது வெள்ளையன் ஆட்சி ஒழிந்துவிட்டது. இந்தியன் ஆட்சி என்று ஏற்பட்டுவிட்டது. அதோடு நாடும் பல விதத்திலும் வடநாடு- தென்னாடு என்று பிரிந்துவிட்டது. அது மாத்திரம் அல்லாமல் மொழிவாநாடு என்னும் பேரால் ஆந்திர நாடும் தமிழ்நாட்டை விட்டுப் பிரிந்துவிட்டது. இதனால் ஆந்திரர்கள் தொல்லை அரசியலிலும், உத்தியோகங்களிலும் ஒரு அளவிற்கு ஒழிந்து விட்டது என்றாலும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள், கர்நாடகர்கள் என்பவர்களது தொல்லை அரசியல் ஆதிக்கத்திலும் உத்தியோகத்திலும் ஒழிந்தபாடில்லை.

 

இதை ஏன் சொல்கிறேனென்றால், தமிழ்நாடு மொத்த ஜனசங்கையில் பார்ப்பனர் 100- க்கு இரண்டேமுக்காலும், கிறிஸ்தவர் 100 - க்கு 4-ம், முஸ்லிம்கள் சுமார் 100 - க்கு 5-ம், மலையாளிகள் சுமார் 100- க்கு 8-ம், கர்நாடகர்கள் 100 - க்குக் 5-ம் (இவைகள் உத்தேசமான புள்ளிகள்) இவ்வளவு பேரும் சேர்ந்து, ஜனசங்கியையில் தமிழ்நாட்டார் -தமிழர் அல்லாதவர்கள்,100 -க்கு 25-பேர்களுக்கு உட்பட்டவர்களாகவே இருந்தாலும் இந்த கூட்டத்தினர் ஒவ்வொருவரும் நீதி நிர்வாக தலைமை உத்தியோகங்களில் சுமார் 100 - க்கு 60 - பேர்களாகவும், முக்கியமான உயர்ந்த உத்தியோகங்களில் 100 - க்கு 75-பேர்களாகவும் இருக்கிறார்கள்.

 

இதை ஏன் பிரித்துக் குறிப்பிட்டுக்காட்டுகிறேன் என்றால் தமிழ்நாட்டிலே தமிழர்களைத் தவிர, அதாவது மேற்படி கூட்டத்தினர் தவிர்த்த தமிழர்களைப் பற்றியாவது, தமிழர்களின் பழக்கவழக்க, கலாச்சார குறைபாடுகளைப் பற்றியாவது, சமுதாயத்துறையில் அவர்களுக்குள்ள இழிவைப் பற்றியாவது, அரசியல், கல்வி, பொருளாதாரத் துறையிலாவது, மேலேகாட்டிய இந்தக்கூட்டத்தாருக்கு சிறிதும் கவலையில்லை என்பதோடு, பெரிதும் மாறுபட்டவர்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.தமிழர்கள் சமுதாயத் துறையில் கீழான சாதியராக - சூத்திரர்களாக இருப்பதைப்பற்றி இவர்கள் யாருக்கும் கவலையில்லை. எப்படியாவது தங்களுக்கு தங்கள் விகிதத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையளவு பதவிகள் கிடைப்பதனால் தமிழன் கதி எக்கேடு கெட்டாலும் இவர்கள் இலட்சியம் செய்பவர்கள் அல்லர்.

 

அவரவர்கள் தங்கள் தங்கள் சமூகத்துக்கு எப்படி நடந்து பயன்பெறுவது என்பதையே பெரும்பாலும் இலட்சியமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். அப்படியே இருந்தும் வந்திருக்கிறார்கள். அதனால்தான் எந்த விதத்திலும் தங்களைவிட தனிப்பட்ட யோக்கிதை இவர்களுக்கு இல்லாமலிருந்தும் தமிழர்களைவிட இவர்கள் 3 - பங்கு ஆதிக்கத்தில் பதவியில் இருந்துவருகிறார்கள். இதில் குறிப்பாகக் கூற வேண்டுமேயானால் மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக்கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும், ஆரிய வர்ணச்சிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், ஆனதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளை பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்கின்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டு பார்ப்பனரல்லாதார் என்கிற கணக்கில் ஏராளமான மலையாளிகளுக்கு கொடுப்பதையே - அவர்கள் தாராளமாகவந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் - அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனரில்லாத பெரும் பதவிகளிலும் மலையாளிகளே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முதலில் ஒரு சில உதாரணங்களைக் கூறுகிறேன்.

 

சென்னை அரசாங்க நிர்வாகத்தின் தலைமைப் பீடாதிபதியான, சீப்செக்ரட்டரி: திரு.ராமுண்ணிமேனன், சீப் எஞ்சினியர்: திரு. கே. நம்பியார், சூப்பரின்டெண்டிங் எஞ்சினியர்கள்: 1. திரு.நாயக், 2. திரு.காமத், வைத்திய இலாக்கா: எழும்பூர் பிள்ளைப்பேறு ஆஸ்பத்தரி சூப்பரின்டெண்ட்டு: திரு. ஆர்.கே.கே.தம்பான: அசிஸ்டெண்ட் சூப்பிரின்டெண்ட்: திரு. கிருஷ்ண மேனன்: ஸ்டான்லி ஆஸ்பத்திரி சூப்பரின்டெண்ட், திரு.கே.என்.பிஷரொட்டி: பெண்கள் ஆஸ்பத்திரி, திருவல்லிக்கேணி, சூப்பரின் டெண்ட்: திருமதி. பாருகுட்டிராமன்.கல்வி இலாக்கா:- பிரஸிடென்சி கல்லூரிபிரின்ஸ்பால்: திரு. பாலகிருஷ்ணநாயர், குவீன்மேரீஸ் கல்லூரி:திருமதி.லேடிவெலிங்டன்: திருமதி.வர்கிஸ். சட்டக்கல்லூரி டைரெக்கடர்: திரு.குன்னிராமன். இவை - ஒருசில நிர்வாக அடிப்படைப்பதவிகளிலுள்ள மலையாளிகளை உதாரணத்துக்கு எடுத்துக் காட்டப்பட்டன.இனி மாவட்ட (ஜில்லா) தலைமைப் பதவிகளிலுள்ள மலையாளிகள் எண்ணிக்கையைக் காட்டுவதற்கு போலிஸ் இலாக்கா ஒன்றை மாத்திரம் உதாரணமாக எடுத்துக்காட்டுகிறேன்.

 

இவைகளிலிருந்து மற்ற இலாக்காக்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இதில் 13-ஜில்லாக்களோடு சென்னையைச் சேர்த்தால் 14-ஆகும். இவற்றில், சென்னையில் கமிஷனர்: திரு.பார்த்தசாரதி அய்யங்கார் என்ற ஒரு பார்ப்பனர் இருப்பது மாத்திரமல்லாமல் அடுத்த பதவியான டிப்டி கமிஷனர் என்பதில் மூன்றிலும் மூன்று மலையாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் முறையே..

 

1. திரு. அடிகை (லா அண்டு ஆர்டர்), 2. திரு.தாமோதரன் (கிரைம்),3. திரு.சுகுமாரன் (டிராபிக்). ஆய்ஜிக்கு அசிஸ்டெண்ட்: திரு.வி.பி.நாயர். அசிஸ்டெண்ட் கமிஷனர்கள்: 1. திரு.செதுமாதவமேனன்(லா அண்டு ஆர்டர்), 2. திரு. சேதுமாதவநாயர்: (புரொகிபிஷன்).இனி ஜில்லாக்களில் போலிஸ் சூப்பரின்டெண்ட்டுகள்: திருச்சி: திரு. விஸ்வநாத அய்யர்: மதுரை(வ)திரு. ஏ.சி.நம்மியார்: திருநெல்வேலி:திரு. மாப்ளா அப்துல்லா. வடஆர்க்காடு திரு. ஷெனாய், சேலம்: திரு.பாலக்கிருஷ்ணமேனன், நீலகிரி: மாப்ளாரூக்கி இவைதவிர மற்ற ஜில்லாக்களிலும் அய்யர், அய்யங்கார்கள்.

 

அதாவது மதுரை(தெ)திரு.கிருஷ்ணசாமி அய்யர்: இராமநாதபுரம்: திரு. நரசிம்ம அய்யங்கார், மலபார்: திரு. இராமானுஜ அய்யங்கார், தென்கன்னடம்: திரு. முத்துசாமி அய்யர். மீதியுள்ள ஜில்லாக்களில் இரண்டில் ஆங்கிலோ கிறிஸ்த்தவர்களும், ஒரே ஒரு ஜில்லாவில், தென்னாற்காட்டுக்கு மட்டும் திரு. பாலக்கிருஷ்ண உடையார் என்ற தமிழரும் இருந்து வருகிறார்கள். இவர் பதவியும் ஆட்டத்தில் இருக்கிறது.இவை தவிர அரசாங்க போலீஸ் இலாக்கா (போர்ட்போலியோ) நிர்வாகத் தலைமையில், செரட்டரி: திரு. ஆர்.ஏ. கோபால்சாமி அய்யங்கார்: டிப்டி செக்ரட்டரி:டி.ஏ. சுப்புசாமி அய்யர் ஆகிய இரண்டு பார்ப்பனர் இருப்பதுபோக மற்றும் இரண்டு டிப்டி செக்ரட்டிரிகள்: 1.திரு.ஒய்.சிவராம மேனன்,2. திரு.சி.ஆர்.பணிக்கர். மற்றும் பப்ளிக் (பொலிடிகல்) என்று கூறப்படும் இரகசிய நிர்வாகத் தலைமையில் செக்ரட்டரி: திரு.டி.என். இலட்சுமிநாராயண அய்யர்: அண்டர்செக்ரட்டரி: திரு. ஆர். பாலசுப்பரமணி அய்யர். அரசாங்கத் தலைமை ஸ்தாபனங்கள் இந்தப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.

 

இவை உதாரணங்களாக எடுத்துக்காட்டப்பட்ட ஒரு சிலவேயாகும்.மற்ற இலாக்காக்களிலும் 100- க்கு 90- பேர்களான தமிழர்களைத் தவிர மற்ற சமுதாயக்காரர்களே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.இந்த நிலைமை இதற்கு முன்பே இருந்து வந்தாலும் இவ்வளவு மோசகரமான நிலைமை, அதாவது செக்ரிட்டேரியட், போலிஸ்- முதலியவற்றில் இவ்வளவு மோசகரமான நிலைமை - திரு. ஆச்சாரியார் அவர்கள் காலத்தில் ஏற்பட்டதாகவே தெரிகிறது. இங்கே பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்-தமிழனுக்கு ஆட்சியில் இடமெங்கே? தமிழன் வாழ்வில் ஆட்சியின் உதவி தேடுவதற்கு வழி எங்கே? தமிழனை பழிவாங்கும் தன்மையிலே இந்த நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைத்தவிர வேறு காரணம் ஒன்றும் காணோம். ஆகையால், ஒவ்வொரு இனத்தாரும், ஒவ்வொரு ஜில்லாக்காரர்களும் பிரிந்து மொழிவாரி மாகாண நாடு பெறும் வரையில் பதவிகள் ஜில்லா விகிதமாவது அந்தந்த ஜில்லா அடையும்படி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

 

சமீபகாலத்தில் திருவாங்கூர் - கொச்சி இராஜ்ஜியத்தில் தமிழர் உரிமை கேட்டதற்காக, தமிழர்களை அந்தநாட்டு மலையாளிகள் நடத்திய விதத்தைப் பார்த்தால், குறைந்தளவு நாம் நமது உரிமைக்காவது பாடுபடக்கூடாதா என்று தோன்றுகிறது. இந்த உணர்ச்சியின் பெயரால்தான் இந்த எண்ணங்கள் நமக்குத்தோன்றுகின்றன. ஆகவே தமிழர் இவற்றைப்பற்றி நல்ல வண்ணம் யோசித்து, கட்டுப்பாடான கிளர்ச்சி செய்வதன் மூலம் பரிகாரம் பெறவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதுவே என்னுடைய பிறந்தநாள் விழா வேண்டுகோள்.

 

(தந்தை பெரியார் விடுதலை அறிக்கை 17.09.1954)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_596.html

மூவாயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கும் "தமிழ்த்தாய்"

உங்களைப் படித்தவராக ஆக்கினாளா?

(12.08.1971 : பெரியார்)

நம் நாட்டைப் பொறுத்தவரை மனிதன் பகுத்தறிவு இருக்கும் மனிதனாக வேண்டும் என்று பாடுபடுகின்றேன். மனிதன் மனிதனாக இல்லை. மனிதனை மனிதனாக்க இதுவரை இந்தியாவில் எவனுமே தோன்றவில்லை. அப்படிப் பாடுபட வந்தவனை எல்லாம் மக்கள் தடுத்தார்கள். பகுத்தறிவுள்ள மனித சமுதாயத்தில் ஒருவன் பறையன், ஒருவன் கவுண்டன், ஒருவன் செட்டி, ஒருவன் தென்னை மரம் உயரமுள்ள உயர்ந்த சாதி, இன்னொருவன் சாக்கடையைப் போல மிகக்-கீழான இழிசாதிக்காரன் என்கின்ற பேதங்கள் இருக்கின்றன.இவர்கள் இந்த இழிவில் இருந்து தலை தூக்காவண்ணம் அதன் மேல் சாஸ்திரங்கள் என்னும் கருங்கல்லையும் போட்டு அழுத்தி வைத்து இருக்கின்றார்கள். இவற்றிலிருந்து மனித சமுதாயம் தலைதூக்க வேண்டும் என்று எவனும் பாடுபட முன்வரவில்லை ஆனதால், இரு கால்களுடைய மனிதர்களாக இருந்து நாம் மிருகங்களாக இருந்து வருகின்றோம்.

 

இலக்கியம் என்றால் "அறிவு" என்று தான் பொருள். ஆனால், நம் இலக்கியங்கள் அதற்கு மாறானதாகும். இங்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒன்று பாடினார்கள். எந்தக் காரியத்தை எடுத்தாலும் ஏன் எதற்கு என்று சிந்திக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள். என்ன தமிழ்த்தாய் வாழ்த்து? தமிழ்த்தாய் இந்நாட்டில் நமக்குத் தெரிய 3,000 ஆண்டுகளுக்கு மேலிருக்கிறாள். அவள் இவ்வளவு நாளாக இருந்து உங்களுக்குச் செய்தது என்ன? ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமல் “அ” வருமா என்று கேட்கிறேன்?

 

திராவிட இயக்கம் தோன்றுகிற வரை தமிழ்த்தாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்தும், நீங்கள் 100 - க்கு 5 - பேர் தான் படித்திருந்தீர்கள். தமிழ்த்தாயால் உங்களைப் படித்தவர்களாக்க முடியவில்லையே! திராவிட இயக்கம் தோன்றிய பின் தானே இந்நாட்டில் கல்வி வளர்ச்சியடைந்தது?அறிவோடு நீங்கள் நன்றி காட்ட வேண்டுமானால் உங்களுக்குக் கல்வி கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

 

நம் மதம் சொல்வது என்ன என்றால், கீழ்ச்சாதிக்காரன் (சூத்திரன்) படிக்கக் கூடாது என்று சொல்கிறது. யார் இந்து என்று தங்களை ஒப்புக் கொள்கின்றார்களோ அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் தானே! தாய்மார்கள் அத்தனை பேரும் வைப்பாட்டிகள் (சூத்திரச்சிகள்) தானே? இந்த நிலையைப் போக்கத் தமிழ்த்தாய் செய்தது என்ன? இங்கு எதிரிலிருக்கிற மாணவர்களில் பலர் நெற்றியில் சாம்பலடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இங்குள்ள ஆசிரியர்கள் தான். அவர்கள் அறிவற்றவர்கள் என்பதையே இது காட்டுகின்றது. ஆசிரியர்கள் அறிவாளிகளாக இருந்தால் மாணவர்களைச் சாம்பலடித்துக் கொள்ளச் சொல்லமாட்டார்கள். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கட்டுப்பாட்டை- அன்பை- அறிவைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

 

நம் நாடு முன்னேற்றமடையாததற்குக் காரணம் மாணவர்களுக்கு அறிவைச் சொல்லிக் கொடுப்பதற்கு ஆளில்லாததே ஆகும். இங்குள்ள ஆசிரியர்கள் மடமையை முட்டாள்தனத்தை வளர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்படுவது கிடையாது. அரசியல் கட்சிகளில் சேர்ந்து கிளர்ச்சிகளில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். எதற்காக மாணவர்கள் அரசியல் கட்சியில் ஈடுபட வேண்டும்? மேல் நாடுகளில் மாணவர்கள் ஆசிரியருக்கு மிகவும் கட்டுப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் ஏதாவது சிறு தவறு செய்தால் அதனை ஆசிரியர்களிடம் தான் போய்ச் சொல்வார்கள். இங்கு மாணவரை ஆசிரியர் கண்டித்தால் உடனே மாணவனின் பெற்றோர் ஆசிரியரைக் கண்டிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அந்த நிலை மாற வேண்டும். நீங்கள் கல்வியை வளரச் செய்த இந்த அரசாங்கத்திற்கு நன்றி செலுத்த வேண்டும், நீங்கள் எல்லாம் படிக்கிற இப்பள்ளி நிறுவனருக்கு, நிர்வாகிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும். அது தான் அறிவோடு செய்ய வேண்டியதாகும்.

 

நம் இலக்கியங்கள் என்பவற்றில் ஒன்று கூட மனித அறிவை வளர்க்கக் கூடியதாக, மனித சமுதாயத்தை வளர்ச்சியடையச் செய்யக் கூடியதாக இல்லை என்பதோடு, மக்களின் மூடநம்பிக்கையை, முட்டாள்தனத்தை வளர்க்கக் கூடியதாக இருக்கின்றன. இன்றைக்கு உலகில் காட்டுமிராண்டிகளாக, அறிவற்றவர்களாக, இழிமக்களாக இருப்பவர்கள் நாம் தான் ஆவோம். முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும்.

 

ஆசிரியர்கள் மூடநம்பிக்கைக்காரர்களாக இருப்பதாலேயே அவர்களிடம் படிக்கிற மாணவர்கள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆகின்றனர். ஆசிரியர்களைத் தேர்நதெடுப்பதில் முதன்மையாகப் பார்க்க வேண்டியது அவர்கள் பகுத்தறிவுவாதியா என்பது தான். நமது இலக்கியங்கள் அத்தனையும் குப்பைகளேயாகும். அந்த காலத்திற்கு அவை உயர்ந்தவையாக இருந்திருக்கலாமே ஒழிய, இன்றைக்குள்ள அறிவிற்கு அவை ஏற்புடையன அல்ல.

 

இலக்கியங்கள் என்றால், அவை எதிர்காலத்தைப் பற்றிய வளர்ச்சியினைக் குறிப்பிடக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இலக்கியங்கள் ஏதும் நம்மிடம் இல்லை. மாணவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும்.மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியினைச் செய்ய வேண்டும். எந்தக் காரியத்தை முன்னிட்டும் பிறருக்குத் தொந்தரவு செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும். மற்றவன் உனக்கு எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ அதனை நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். மனித சமுதாயத்திற்கு நன்மையாக இருக்கிற ஆட்சியினை ஆதரிக்க வேண்டியது கடமையாகும்.

 

(12.08.1971 அன்று பெரியார்)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_25.html

 

வகுப்புவாதம் எல்லா வகுப்புக்கும் சம சந்தர்ப்பமும், சம சுதந்திரமும் வேண்டும் என்கின்றது. சமூகவாதம் தங்கள் சமூகம் மாத்திரம் எப்போதும் உயர்வாகவே இருக்க வேண்டும் என்கின்றது. நமது குடிஅரசு தோன்றியபின் இதன் இரகசியங்கள் வெளியாகி, இவைகள் எல்லாம் மறைந்து, இப்போது வகுப்புவாதிகளை ஒழிப்பது என்பது தவிர, வேறு எவ்விதக் கொள்கையும் திட்டமும் இல்லாமல் போய்விட்டது. வகுப்புவாதிகள் யார், அல்லாதவர்கள் யார் என்று பார்த்தாலோ அது இவைகளை எல்லாம்விட மிக யோக்கியமானதாக இருக்கும். அதாவது, வகுப்பு வித்தியாசம், சாதி உயர்வு-தாழ்வு, ஒரு வகுப்புக்கு ஒரு நீதி ஆகியவைகள் அடியோடு கூடாது என்றும், எல்லா வகுப்புக்கும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் இருக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவர்கள் தாம் இக்கூட்டத்தாருக்கு வகுப்புவாதிகளாகத் தென்படுகின்றார்கள்.


உயர்ந்த வகுப்பு என்பதாக ஒன்று உயர்ந்திருக்க வேண்டும், தாழ்ந்த வகுப்பு என்பதாக ஒன்று தாழ்ந்திருக்க வேண்டும்; பார்ப்பனர்கள் உயர்ந்த வகுப்பு, மற்றவர்கள் அவர்களைவிடத் தாழ்ந்த வகுப்பு; சூத்திரர், பஞ்சமர் என்கின்ற வித்தியாசம் இருக்க வேண்டும்; இந்த வித்தியாசங்களை ஒழிக்க யாரும் முயற்சிக்கக்கூடாது; எவ்விதச் சட்டமும் செய்யக் கூடாது - என்பவர்கள் இவர்களுக்கு வகுப்புவாதிகள் அல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால், அவர்கள் கொள்கைப்படி பார்ப்பனர்களும் அவர்களை நத்திப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களும், அவர்களது கூலிகளும் தவிர மற்றவர்கள் எல்லோரும், அதாவது பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் வகுப்புவாதிகள் ஆவார்கள். எப்படியென்றால், நாமும் இதைத்தான் சொல்லுகின்றோம். அதாவது, சர்க்காரையும், தேசத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். சமூகவாதிகளை முதலில் அழிக்க வேண்டும் என்பதேயாகும்.


இந்தத் தேசம் பாழாய்ப் போவதற்கும் இந்த சர்க்கார் இங்கு இவ்வளவு அநீதியான ஆட்சி புரிவதற்கும், சமத்துவக் கொள்கை பரவாதிருப்பதற்கும் எந்தச் சமூகத்தார் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து எதிரிகளாய் இருக்கின்றார்களோ அந்தச் சமூகத்தார் முதலில் அழிக்கப்பட வேண்டுமென்பதாகும்.


(குடிஅரசு, தலையங்கம் - 19.05.1929)


வகுப்புவாரி உரிமை வேண்டாதவன் தன் வகுப்பை உணர முடியாதவனோ, தன் வகுப்பைப் பற்றி சந்தேகப்படத் தக்கவனோ ஆவான். ஒரு வகுப்பான், தன் வகுப்புரிமை கேட்பது தேசத் துரோகம் என்று சொல்லப்படுமானால், அப்படிச் சொல்லுகிறவன் ஒரு தேசத்தையும் சேர்ந்திராத நாடோடி, லம்பாடி வகுப்பைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க முடியும். நம்மவர்களுக்கு உண்மையான வகுப்புணர்ச்சி இல்லாததாலேயே, நாம் நாடற்ற நாடோடிகளால் அடக்கி ஆளப்பட்டு வருகிறோம்.


இங்கிலீஷ்காரன் இன்று, அவன் நாட்டின்மீது இத்தனை ஆயிரக்கணக்கான ஆகாயக் கப்பல்கள் பறந்து, பதினாயிரக்கணக்கான வெடிகுண்டுகள் வீழ்ந்து, குழந்தைகளும், குட்டிகளும் மாடங்களும் மாளிகைகளும் நாசமானாலும் கூட, ஓர் உயிர் உள்ள வரை போராடியே தீருவேன் என்று சொல்லுவதன் கருத்து, அவன் வகுப்பு உணர்ச்சியின் - வகுப்புவாதத் தன்மையின் உச்சநிலையேயாகும்.


நம் நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்களுக்கு வகுப்பு உணர்ச்சியோ, நாட்டு உணர்ச்சியோ ஏற்படுவதற்கு நியாயமில்லை. ஆகவேதான், ஏன் சண்டை போடவேண்டும்? விட்டுவிட்டுப் போகலாமே என்கின்ற ஞானமும், யார் ஜெயித்தால் தான் என்ன? என்கின்ற ஞானமும் உதயமாகின்றன. அப்படிப்பட்ட ஆட்களுக்கு ஆதிக்கம் வந்ததாலேயே நம் நாட்டிற்கு இப்படி அடிக்கடி படையெடுப்புகளும், ஆபத்துகளும் நேருவது மாத்திரமல்லாமல், இந்நாட்டு மக்களாகிய நாம் நாடோடிகளால், சூத்திரர்களாகக் கருதப்படுகிறோம்.


மூன்று தலைமுறையோ அல்லது ஒரு நூற்றாண்டோ ஒரே ஊரில் இருந்ததாக ஏதாவது ஓர் ஆரியக் குடும்பத்தை நீங்கள் காட்ட முடியுமா? பிழைப்பு கிடைத்த இடத்தில் வாழ்க்கையும், சவுகரியம் கிடைத்த இடத்தில் ஓய்வும் என்பதில்லாமல் - ஊர் பாத்தியமோ, குலமுறை பாத்தியமோ சொல்லிக் கொள்ள அவர்களுக்கு வசதி உண்டா? அப்படிப்பட்டவர்கள் - நம்மை, நாம் நமது வகுப்புரிமை கேட்பதால் வகுப்புவாதி என்றும் - தேசத் துரோகி என்றும் - உத்தியோக வேடடைக்காரர்கள் என்றும் சொல்வார்களானால், அது நமது கோழைத்தன்மையும், வாழ்க்கையின் மானமற்ற ஈனத்தன்மையின் பயனுமே ஆகும். நாம் உத்தியோக வேட்டைக்காரர்களாம்! ஆம் என்றே வைத்துக் கொள்வோம். நாம் உத்தியோக வேட்டை ஆடுவதில் தப்பு என்னவென்று கேட்கிறேன்?


திராவிட நாட்டில் ஒரு பார்ப்பானோ - ஓர் ஆரியனோ உத்தியோக வேட்டையாடுவதும், ஒரு திராவிடன் உத்தியோக வேட்டையாடுவதும் என்றால் யாருக்கு உத்தியோக வேட்டை ஆட உரிமை இருக்கிறது என்று கேட்கிறேன். உத்தியோக வேட்டையாடாத வகுப்பானுக்கு அவன் நாட்டினிடமும், அவன் வகுப்பினிடமும் பொறுப்பில்லை என்பதோடு, அவனை வகுப்புத் துரோகி என்று கூடச் சொல்லத் துணிவேன். ஒவ்வொரு வகுப்புக்கும் அவனது வகுப்பு எண்ணிக்கை அளவுக்கு உத்தியோகம் கொடுக்க ஆட்சேபித்தால் - ஆட்சேபிக்கப்பட்ட வகுப்பை இழிவுபடுத்தியதாகவும், கோழைத்தனமுள்ள, மானமற்ற, யோக்கியதையற்ற வகுப்பாகக் கருதியதாகவும் அர்த்தமாகும்.


எந்த வகுப்பான் தன்னுடைய வகுப்பு எண்ணிக்கை அளவுக்குத் தனது நாட்டில் உத்தியோக வேட்டையாடிப் பெறவில்லையோ, அந்த வகுப்பான் மானமற்ற கோழை வகுப்பானே ஆவான். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன்? உத்தியோகம் யார் அப்பன் வீட்டுச் சொத்து? உத்தியோகத்துக்குத் தரப்படும் சம்பளம் யார் தாய்-தந்தையார் பாடுபட்ட சொத்து? உத்தியோகம் யாருக்காக, எந்த வகுப்புக்காக நிர்வாகம் செய்யப்படுவது என்பதை ஒரு நாட்டானோ, வகுப்பானோ தெரிந்து கொள்வானேயானால் - மற்ற நாட்டானோ, மற்ற வர்த்தகத்தானோ, மற்ற வகுப்பானோ நம் நாட்டில் வந்து உத்தியோகம் பார்ப்பதைப் பிராணனை விட்டாவது தடுக்க மாட்டானா என்று கேட்கிறேன்.

 

 

(சென்னையில், 08.09.1940 இல் தந்தை பெரியார் சொற்பொழிவு - விடுதலை, 29.08.1950)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_1745.html

சாதியை ஒழிக்க நீங்கள் வழி சொல்லுங்கள்?

 

1. எந்த இந்துக் கோயிலுக்கும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட, கீழ்சாதி மக்கள் யாரும் போகக்கூடாது.


2. இந்து மதக் கடவுள்களைக் கும்பிடக்கூடாது.


3. இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது.


4. நெற்றியில் எந்தவிதமான குறிகளையும் சின்னங்களையும் அணியக்கூடாது. 5. உச்சிக் குடுமியை ‘சோட்டி' யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது.


6. வைதீகச் சடங்குகள் எதையும் செய்யக்கூடாது.


7. எந்தவிதமான சடங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கும் பார்ப்பானை அழைக்கவே கூடாது.


8. இந்துக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக் கூடாது.


9. பார்ப்பனர்களால் நடத்தப்படும் உணவுச் சாலை, சிற்றுண்டிச் சாலைகளுக்குப் போகக் கூடாது.

 

‘குடியரசுக் கட்சி'யாகிய எங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை செய்வீர்களா?

எந்த வகையான உதவியை நீங்கள் சாதி ஒழிப்பிற்காக வேண்டுகிறீர்களோ, எங்களால் முடிந்த அளவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், உங்கள் கட்சித் தலைவர்கள் எனப்படுபவர்களுக்கு, சட்டசபையையும், ‘பார்லிமென்ட்'டையும் கைப்பற்றுவது எப்படி என்பதுதான் குறிக்கோள். ஆகவே, அதற்கெதிராக இருக்கின்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை.
நாம் இப்படிப் பார்ப்பானையும், இந்து மதத்தையும் புறக்கணிக்கும்படி பிரச்சாரம் செய்தால், வெற்றிகாண முடியும் என்று நம்புகிறீர்களா?


ஆகா! தாராளமாக எனக்கு அதில் நம்பிக்கையுண்டு. 10 வருட காலத்திற்குள் கட்டுப்பாடான இடைவிடாதப் பிரச்சாரத்தின் மூலம் நாம் அந்த நிலையை அடைவோம் என்ற நம்பிக்கை உண்டு; அந்த உணர்ச்சியை மக்களிடையே அடைய வைக்க முடியும்.

 

சாதியை ஒழிக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே, அரசியல் கட்சியாக இருந்தால் தானே இந்த அரசியல் பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

 

நல்ல கேள்வி. முதலாவது அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும், உடனே அவனது நாணயம், ஒழுக்கம் கெட்டுப்போய் விடுகின்றன. அவன் புரட்டு, பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபாசாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி, அப்படித்தான் ஆகிவிடுவோம்; அது அப்படி ஆக்கிவிடும்.

 

இரண்டாவது, இன்றைய அரசியல் சட்டப்படி நடைபெறும் ஒன்று. அரசியல் சட்டத்தில் மாற்ற முடியாத வகையில் சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. யார் போனாலும் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்படி நடக்க வேண்டியவர்களே தவிர, அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. சிலர் சொல்லுவார்கள், ‘ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் கூட அங்கு போனால் இதை எடுத்துச் சொல்லலாம்' என்று. அதற்கு அங்கு போக வேண்டும் என்பது அவசியமில்லையே! பொதுக்கூட்டம் போட்டு எடுத்துச் சொன்னாலே அது அரசாங்கத்திற்குச் செல்கிறது!

 

நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றலாமே! கைப்பற்ற முடியாதா?

 

அது முதுகில் மூன்றாவது கை முளைத்து அதனால் சொரிந்து கொள்ளலாம் என்பது.

 

எப்படியும் நாம் இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றித்தானே ஆக வேண்டும்?

அதற்காகத்தான் நாங்கள் சொல்லுகிறோம்: ‘சாதியை ஒழிக்க விரும்பாத சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் உனது அரசாங்கத்தோடு இருக்கவில்லை; தனியே பிரிந்து செல்கிறோம். எங்கள் நாட்டிற்குச் சுதந்திரம் வந்தால், நாங்கள் சாதியை உடனே ஒழித்துவிட முடியும். உனது ஆட்சி அதற்கு இடம் கொடுக்காததால் விலகிவிடுகிறோம்' என்று. அதற்காகத்தான், ‘சுதந்திரத் தமிழ் நாடு' கிளர்ச்சி இருக்கிறது. அது ஒரு நாட்டைக் கொளுத்தும் பிரச்சினையல்ல; நமக்கு வேண்டாத ஆட்சியை வெறுக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல நீங்களும், உங்களுடைய ஆட்சி வேண்டாம் என்று பிரிந்து சென்று விடலாமே! நீங்களும் இந்தக் கொடுமையான பார்ப்பன சாதி நாயகமான அரசாங்கத்தினின்றும் பிரிந்து விடலாம். அதற்குத்தான் பட எரிப்புப் போராட்டம் நடத்தப் போகிறோம்.

 

நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள்?

நாம் இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் ‘வட்டச் சிவப்பு' இருப்பது அந்த இழிவிலிருந்து நாம் நாளாவட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது.


(கான்பூர் குடியரசுக் கட்சி ஊழியர்களிடையே தந்தை பெரியார் 09.02.1959 அன்று நிகழ்த்திய உரையாடல்)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_9318.html

 

 

பொதுவாக இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம். ஒன்று, சட்ட வரம்புக்குட்பட்ட முறையில் போராடுவது. மற்றொன்று, சட்டத்தைப் பற்றி லட்சியம் செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது. என்னுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் சட்ட வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். நம்முடைய கீழ் சாதித் தன்மை நீங்க வேண்டுமானால், நீங்கள் அவசியம் பின்வரும் முறைகளையாவது பின்பற்ற வேண்டும் :

தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயமாகும். மண்டல் குழுப் பரிந்துரையில்கூட தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தனியார்களுக்கு உரிமை உடையன என்றாலும், நிலம், நீர், மின்சாரம், கடன் உதவி இன்னோரன்ன வகைகளில் அரசின் உதவிகளைப் பெற்றுதான் அவை செயல்படுகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கைப்படி தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் தனியார் கைக்குப் போய்க் கொண்டிருக்கும் போது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டினை கறாராக அமல்படுத்த தனியார் நிறுவனங்கள் கடமைப்பட்டே இருக்கின்றன. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்சத் திட்டத்திலும், தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள்கூட இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் துறை நிர்வாகிகள் நாங்களாகப் பார்த்து இட ஒதுக்கீடு அளிப்போம் என்றும், அதற்காகத் தனி சட்டம் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்தத் தர்மகர்த்தா முறை என்பது, அவர்களாக மனமிரங்கி பிச்சை போடும் ஒரு முறையாகும். இந்த நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப் பட்டவர்களும், சிறுபான்மையினரும், பெரும்பான்மையினர் ஆவார்கள். இவர்கள் காலங்காலமாக கல்வி, வேலை வாய்ப்புகளில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக அமலுக்கு வந்த பிறகே தான் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஓரளவு முன்னேற்றத் திசையில் அடியெடுத்து வைத்துள்ளனர். இதிலும் மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டில் அக்கறை காட்டும் அளவுக்கு மத்திய அரசு கவலை எடுத்துக்கொள்வதில்லை. இந்தச் சூழ்நிலையில் தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது சட்டப்படியாக உறுதிபடுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தனியார் துறைகளில் மேலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர் என்பது போன்ற பதவிகளில் பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆதிபத்தியம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நிறுவனங்களில் வேலைக்கு ஆள்களைத் தெரிவு செய்யும் போது எந்தக் கண்ணோட்டத்தில் அவர்கள் நடந்துகொள்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே!

சட்டப்படியாக அறுதியிடவில்லையென்றால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு என்பது அறவே புறக்கணிக்கப்பட்டுவிடும். அந்த நிலை சமூகத்தில் அமைதியற்ற ஒரு நிலையைத் தோற்றுவிக்காதா என்பதை தனியார் துறை நிருவாகிகளும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இந்தியாவுக்குள் தொழிலகங்களை நடத்தும் முதலாளிகள், இந்தியாவுக்குள் ஒரு நீதி, வெளிநாடுகளில் ஒரு நீதி என்கிற மனுதர்ம மனப்பான்மை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்திய முதலாளிகள் வெளிநாடுகளில் தொழில்களை தொடங்கும் போது, அந்நாட்டு மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கின்றனர். அதே முதலாளிகள் இந்தியா என்று வருகிறபோது தட்டிக் கழிக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.எனவே, இந்திய முதலாளிகள் அல்லது இந்தியாவில் தொழில் நடத்தும் வெளிநாட்டு முதலாளிகள் தர்மகர்த்தா முறையில் (மனம் இரங்கிப் பிச்சைப் போடுவது) வழங்குவதாகக் கூறும் இட ஒதுக்கீடு என்னும் கானல் நீரைக் கண்டு மயங்கக் கூடாது.

அரசுத் துறை, பொதுத் துறை, கூட்டுறவுத் துறை, தனியார் துறைகள் அத்தனையிலும் இட ஒதுக்கீடு கண்டிப்பாக, சட்ட ரீதியாக அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதிலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல் அவரவர்களுக்குரிய விகிதாசாரத்தில் வாய்ப்புக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.தந்தை பெரியார் அறிவுரை:

ஏற்றத் தாழ்வை விரும்புவோர் "உயர்வு தாழ்வுகளைச் சரிப் படுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சியை அடக்குகிறவர்கள், தடுக்கிறவர்கள் கண்டிப்பாய் உயர்வு, தாழ்வுத் தன்மையால் மேன்மையான நற்பலன் அனுபவிக்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது பறையன் இருக்கவேண்டுமென்று பார்ப்பான்தான் சொல்வான்.

(பெரியார் 85 -ஆவது பிறந்த நாள் மலர், பக்கம் : 92)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_4103.html

 

"மதமென்பது என்னவென்பதையும்,


அதன் அவசியத்தையும்


அறிந்திருப்போர் வெகுசிலர்.


அது என்னவென்றே அறியாது


பழைமை என்பதனாலும்,


முன்னோர்களுடையது என்பதனாலும்,


பழக்கவழக்கம் என்பதனாலும்,


கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டு


இருப்பவர்கள் பெரும்பாலோர்.

(தந்தை பெரியார் -"குடிஅரசு", 15.04.1928)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_1289.html









இறுதி மூச்சு அடங்கும் வரை உழைத்த இனப்பகலவனின் உடல்...





தந்தை பெரியாருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த தலைவர்கள் (இடமிருந்து வலமாக) கே.ஏ.மதியழகன், நெடுஞ்செழியன், கலைஞர், காமராசர், ஈ.வே.கி.சம்பத், எம்.ஜி.ஆர், பா.உ.சண்முகம், அன்பழகன் மற்றும் பலர்.....





ராஜாஜி மண்டபத்தில் இருந்து அரசு மரியாதையுடன் ஊர்வலம் புறப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த 24-12-1973 அன்று பிற்பகல் 3.10 - மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு செல்லும் காட்சி.



உலக உயிர்களில்

அறிவு நிரம்பப் பெற்ற உயிர்

பகுத்தறிவுள்ள உயிர் மனிதன்தான்.

அவன் தன் அறிவைப்பயன்படுத்தினால்

மிகச் சிறந்த காரியங்களை

எல்லாம் சாதிக்க முடியும்.

(தந்தை பெரியார் - "விடுதலை" - 16.12.1969)



அறிவாளிக்கு, இயற்கையை
உணர்ந்தவனுக்குத் துன்பமே வராது.
உடல் நலத்துக்கு ஊசி
போட்டுக் கொள்வதில் வலி இருக்கிறது.
அதற்காக மனிதன் துன்பப்படுவதில்லை.
வலி இருந்தாலும் அதைப்
பொருத்துக் கொண்டால் தான்
சுகம் ஏற்படும் என்று கருதிப்
பொறுத்துக் கொள்ளுகிறானே,
அதுதான் அறிவின்தன்மை.

(விடுதலை - 13.09.1968)

இந்து மதம் என்பதும், தீண்டாமை என்பதும் ஒரே பொருளை உடையதாகுமே தவிர இரண்டும் வேறு வேறு அல்ல என்பதை நம் மக்கள் உணர வேண்டுகிறேன். தீண்டாமை என்பதே ஜாதி காரணமாய் ஏற்பட்டதே தவிர அதற்கு வேறு காரணமோ, ஆதாரமோ இல்லை. தீண்டாமை என்பதே ஒரு ஜாதியானை மற்றொரு ஜாதியான் (மனிதனுக்கு மனிதன்) தொடக்கூடாது என்பதற்குத் தான் நாம் பயன்படுத்துகின்றோமே ஒழிய, மற்றெதற்கு பிரஸ்தாபத் தீண்டாமையைப் பயன்படுத்துகிறோம்? அதுவும் அப்படிப் பயன்படுத்துவதும் இந்துக்கள் என்னும் இந்து மதத்தாருக்குள் இருந்து தான் வருகிறதே ஒழிய யாருக்குள் இருந்து வருகிறது?

 

ஆகவே தீண்டாமை இந்துமதத்தின் காரணமாக இந்துக்கள் என்பவர்களுக்குள் மாத்திரம் ஜாதி காரணமாக மேல் ஜாதி என்பவர்களுக்கும், கீழ் சாதி என்பவர்களுக்கும் மாத்திரம் ஜாதி காரணமாக இருந்து வரும் காரியமே தவிர தீண்டாமை மதத்திற்கும், ஜாதிக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை மக்கள் நல்லவண்ணம் சிந்தித்துப்பார்த்தால் விளங்காமல் போகாது. ஆகவே ஜாதியை வைத்துக் கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும், இந்துமதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டும் என்பதும் மாபெரும் முட்டாள்தனமாகுமே தவிர சிறிதும் அறிவுடைமை ஆகாது என்பது என் கருத்து.

 

நம் வாழ்வில் ஜாதியும், மதமும் இன்று பார்ப்பானிடமும், கோவிலினிடமும், கடவுளினிடமும் தான் இருந்து வருவதை நல்லவண்ணம் உணருகிறோம். அதாவது கடவுளால் தான் நாம் இந்துவாகிறோம். பார்ப்பானால் தான் சூத்திரனாகிறோம். நாம் ஒரு இந்து என்றால் நமக்கு நாம் கண்ணால் கூடப் பார்க்க முடியாத, காதால் கூடக் கேட்க முடியாத, 'வேதம்', 'சாஸ்திரம்' ஆகியவற்றையும் நம்மை இழிமகனாக்கும்.

 

தருமங்களையும், பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மனைவிகளாகிய சரஸ்வதி, இலட்சுமி, பார்வதிகளையும், மகன்களும் அவதாரங்களுமாகிய கந்தன், கணபதி, இராமன், கிருஷ்ணன்களையும், தேவர்களாகிய இந்திரன் முதலியவர்களையும், இவர்களது நடத்தைகளையும் இவற்றைக் குறிக்கும் புராணங்கள், இதிகாசங்கள், நெற்றிக்குறிகள் முதலியவற்றையும் நம்பியாக வேண்டும். இவ்வளவு தானா? மற்றும் பாகவதம், விஷ்ணுபுராணம், பக்த விஜயம், பெரியபுராணம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் கதைகளையும் நம்பியாக வேண்டும்.

 

பிறகு மாரி, காளிகளையும் எல்லா கோயில், குளம், தீர்த்தங்களையும் நம்பியாக வேண்டியதோடு, மற்றும் ஜோசியம், ஜாதகம், கைரேகை, சாமத்திரிகாஷணம் நாள், காலம், நேரம், முகூர்த்தம், சகுனம், பல்லி விழுதல், பல்லி சொல்லுதல், பேய், பூதம், மந்திரம், சாந்தி கழித்தல், சூரியன் கதை, சந்திரன் கதை, கிரகணகதை முதலியவற்றையும் நம்ப வேண்டும். இவற்றில் எதை நம்பாவிட்டாலும் இந்துவாக மாட்டோமா?

 

இந்த நிலையில் உள்ள இந்துவும், சூத்திரனுமாகிய நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொன்னால் அதில் புத்தியோ, சாத்திய அறிவோ இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆகவே மானமுள்ள அருமைத் தமிழ் மக்களே! நமக்கு உண்மையில் தீண்டாமை என்னும் ஜாதிக் கேடும் - இழிவும் நீங்க வேண்டுமானால் இந்து மதத்தைவிட்டு நீங்கியாக வேண்டும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதோடு அதற்கு ஆதாரமும் இல்லை. இந்து மதம் இந்துச் சட்டம் (இந்துலா) இந்து ஆட்சி (காங்கிரஸ் ஆட்சி) என்பவை எல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சி ஆகுமே அல்லாமல் தமிழ்நாட்டில் தமிழனுக்கு என்று – சூத்திரன் தீண்டப்படாதவன் என்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது. மாற்றமடையவும் முடியாது.

 

ஆகவே தமிழன் தனக்கு இந்துமதம் வேண்டுமா? சூத்திரப்பட்டமும், தீண்டாமையும் ஒழிய வேண்டுமா? என்பதைப் பற்றி அறிவோடு மானத்தோடு நல்லவண்ணம் சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மானம் பெறுவதும், ஈனஜாதித்தனம் ஒழிவதும் அவசியம் என்றுபட்டால்:

 

முதலாவதாக நெற்றிக்குறியை ஒழித்துத் தள்ளுங்கள். இரண்டாவதாக கோவிலுக்குப் போவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மூன்றாவதாக எந்தவித இந்துமதப் பண்டிகையையும் கொண்டாடாதீர்கள். பார்ப்பானைப் "பிராமணன்" என்று சொல்லாதீர்கள். பிறகு மற்றதைப் பார்ப்போம்.

 

(12-05-1969 'விடுதலை'யில் தந்தை பெரியார் தலையங்கம். பெரியார் களஞ்சியம். ஜாதி- தீண்டாமை பாகம்:12 என்ற நூலில் இருந்து…. பக்கம்:250)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_29.html

சிலர் கோயிலுக்கு வந்தால் கோயிலும், சாமியும் தீட்டுப்பட்டுப் போவானேன்? சிலர் சாமியைத் தொட்டால் சாமி இறந்து போவானேன்? ஒரே பெயரும், உருவமும் உள்ள சாமிக்கு ஊருக்கு ஒருவிதமாய்ச் சக்திகள் ஏற்பட்டிருப்பானேன்? காசி, பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. அங்குக் கோயிலுக்கு போகிறவர்கள் எல்லாம் தங்களே நேரில் சாமியைத் தொட்டு தலையில் தண்ணீர் விட்டு மலர் போட்டுக் கும்பிடுகிறார்கள். அதே பெயருள்ள சாமி நமது தமிழ்நாட்டில் மட்டும் நாம் தொட்டால் செத்துப் போய்விடுகிறதா ஏன்? இப்படி சாமிகளின் சக்தியும், உயிரும் கோயில்களின் யோக்கியதையும் ஊருக்கு ஒருவிதமாய் இருப்பானேன்?

எவன் ஒருவன் கடன் வாங்காமல் வரவுக்கேற்ற முறையில் செலவு செய்து வருகிறானே அவன் தான் பிரபு ஆவான். நல்ல குடும்பம் எனப்படுவது வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்யாமல் இருப்பதாகும். தமது வாழ்க்கைக்குச் செலவை வரவுக்கு உள்பட்டே அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட குடும்பந்தான் கண்ணியமான குடும்பம். சாதி ஒழிப்புக்கு இன்றைய அரசியல் சட்டம் இடந்தரவில்லை. அதை, அடிப்படை உரிமைக்கு விரோதம் என்கிறது. அதேபோல் தான் வகுப்புவாரி விகிதப்பேச்சும் "பேசாதே! அது வகுப்புத் துவேசம்" என்கிறது. சாதி இருப்பது தவறல்லவாம். சாதிப்படி உரிமை கேட்டால் மட்டும் தவறு என்றால் இதைவிடப் பித்தலாட்டம் வேறு இருக்க முடியுமா?

(தந்தை பெரியார்)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_6671.html