Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

அமெரிக்காவின் மருத்துவமும் - கொரோனாவும்

  • PDF

அமெரிக்காவின் (முதலாளித்துவத்தின்) மருத்துவக் கொள்கையென்ன? "நோய் என்பது மனிதன் தனக்குத் தானே - தன் நடத்தைகள் மூலம் தேடிக் கொள்ளுவதே. இதற்கு அரசு – சமூகம் எந்தவகையிலும் பொறுப்பேற்க முடியாது" மருத்துவம் தேவையென்றால், பணத்தைக் கொடுத்து வாங்கு - மருத்துவ காப்;புறுதியை செய்து கொள். இதுவே அமெரிக்க அரசினதும் - ஆளும் வர்க்கங்களினதும் கொள்கையாகும். மருத்துவத்தில் அரசு தலையிட முடியாது. அதாவது மக்களின் உழைப்பிலிருந்து கிடைக்கும் வரியை - மருத்துவத்திற்கு செலவிட முடியாது.

இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட கொள்கையல்ல, அமெரிக்க அரசின் பொதுக் கொள்கை. ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் சிந்தனைமுறை. உலக முதலாளித்துவத்தின் பொது வழிமுறையுமாகும்.

இன்று அமரிக்காவில் நோயை எதிர்கொள்ளுவதும் - மருத்துவத்தைப் பெறுவதும் என்பது, தனிப்பட்ட அந்த நபரின் பொறுப்பாக இருக்கின்றது. அரசு அதற்கு உதவுவதில்லை. நோயாளி பணத்தைக் கொடுத்தால் மட்டுமே, நோயை எதிர்கொள்ளமுடியும். பணமில்லாதவன் நோயுடன் வாழ்வதும், செத்துப் போவதும் .. அவரவர் தேர்வாகவும், அதில் அரசு தலையிடுவதில்லை. இதற்கு அமைவாக சமூகம் இதற்கு பொறுப்பல்ல என்ற முதலாளித்துவச் சிந்தனை முறையில், சமூகத்தை சுயநலமாக சிந்திக்கவும் - செயற்படவும் வைத்திருக்கின்றது.

 

சமூகமாக மனிதன் வாழ்தல் என்பது தனியுடமை சமூகத்தில் இருக்க முடியாது. இதுதான் முதலாளித்துவ சிந்தனைமுறை. அதாவது பொருளை முதன்மையாகக் கொண்ட உலகத்தில் இயற்கை எப்படி இருக்க முடியாதோ, அதுபோல் சமூகம் என்பது தனியுடமைச் சமூகத்தில் இருக்க முடியாது. இயற்கை, சமூகம் தொடங்கி மனிதம், அறம் வரை அனைத்தும், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகவே - முதலாளித்துவம் கருதுகின்றது.

இங்கு அரசு என்பது சொத்துடமைச் சமூக அமைப்பைப் பாதுக்காகும் உறுப்பாக இருக்க முடியுமே ஒழிய, அதற்கு முரணாக செல்வத்தை பகிர்ந்தளிக்கும் உறுப்பாக இருக்க முடியாது என்கின்றது முதலாளித்துவம். கல்வி, மருத்துவம், உணவு, நீர், இருப்பிடம் .. என எதுவும், மக்களின் அடிப்படை மனித உரிமையில்லை, மாறாக இவை அனைத்துமே சந்தைக்குரிய முதலாளித்துவப் பொருள். முதலாளித்துவத்தில் மனிதவுரிமை என்பது செல்வந்தர்களின் செல்வக் குவிப்பிற்கு தடையான எதுவும் மனிதவுரிமையல்ல, மாறாக செல்வக் குவிப்பிற்கு உதவுவது மட்டும் தான் மனிதவுரிமை.

இந்த அடிப்படையில் தேர்தல் மூலம் வாக்கு போட்டு தேர்ந்தெடுக்கப்படும் அமெரிக்க ஜனநாயகவாதிகளின் மருத்துவக் கொள்கை என்பது, பணத்திற்கு விற்கும் - வாங்கும் பொருள். அமெரிக்காவில் இது வெளிப்படையாக வெளிப்பட்டாலும் - உலகெங்குமான உலக முதலாளித்துவத்தின் பொதுக் கொள்கையும், நடைமுறையும் இதை நோக்கித்தான் பயணிக்கின்றது.

 

மருத்துவம் என்பது செல்வந்தர்கள் செல்வத்தை குவிக்கவும் - மக்களைச் சுரண்டி இலாபம் பெறக்கூடிய முதலாளித்துவச் சந்தைப் பொருள். பணமுள்ளவன் மருத்துவத்தை பெறுவதன் மூலம், மருத்துவத்தை நுகர முடியும். இங்கு பணமில்லாதவன் இந்த உலகில் உயிர் வாழ அருகதையற்றவன். இதுதான் முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் சுதந்;திரத்தின் பொருள். இதுதான் அமெரிக்காவின் இன்றைய பொது எதார்த்தம். இந்த எதார்த்தமென்பது அமெரிக்காவில் நடைமுறையில் இருப்பதுடன் - பலர் நோயுடன் வாழ்வதும் மரணிப்பதும் இயல்பானதாக மாறி இருக்கின்றது. பட்டினி மரணங்கள் எப்படி இயல்பான இயற்கையான ஒன்றாகவும் – அது தவிர்க்கமுடியாத இயற்கை மரணமாக கருதுமளவுக்கு மனித சிந்தனை புரையோடி இருக்கின்றதோ அதுபோல், பணமின்றி மருத்துவ மரணங்களை இயற்கையானதாக முதலாளித்துவம் மாற்றிவிட்டது. இதுவே பொது வாழ்வியலாக – சமூக பொருளாதார தனிமனித உளவியல் கூறாக மாறி இருக்கின்றது.

உண்மையில் தனிமனித சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் பொருளாதார உள்ளடக்கமும் - சட்டவிதியும் இதுதான். முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியும், அது உள்ளடக்கியுள்ள  சட்டவிதியும் இப்படித் தான், தன்னைத்தானே இந்த உலகில் வாழ தகுதியுள்ளதாக பிரகடனம் செய்கின்றது.

தனிமனித உரிமையாக முன்னிறுத்தும் ஜனநாயகமும், சுதந்திரமும் சிந்தனையில் இருக்க முடியும். நடைமுறை வாழ்வில் பணமின்றிய சமூக பொருளாதார அமைப்பில், சுதந்திரம் - ஜனநாயகம் என்பது எதுவுமற்றது. அடிப்படையில் கற்பனை. அரசியல்ரீதியாக வர்க்;கத்தன்மை கொண்டதாகவே இயங்குகின்றது.
இந்த வகையில் மருத்துவம் என்பது மனிதனின் அடிப்படை உரிமையல்ல, பணமுள்ளவன் பணம் கொடுத்து வாங்கும் பொருள். இதுதான் அமெரிக்க அரசின் கொள்கை. அடிப்படையில் இதுதான் முதலாளித்துவக் கொள்கையாகும்.

அமெரிக்கா அல்லாத முதலாளித்துவ நாடுகளும், அமெரிக்க முதலாளித்துவம் நோக்கியே பயணிக்கின்றது. ஆனால் அமெரிக்கா போல் முதலாளித்துவ தனிமனித கோட்பாட்டு வழிகளில் - நடைமுறையில் பயணிக்க முடிவதில்லை. இதற்கு வரலாற்றுரீதியான வர்க்கப் போராட்டங்களே காரணமாக இருக்கின்றது.

1917 சோவியத் புரட்சி என்பது - உலக தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க திரட்சியாக மாறியது. பொருளாதாரவாத தொழிற்சங்கவாத போராட்டங்களுக்குப் பதில் - வர்க்கப் போராட்டங்களுக்கு வழிகாட்டியது. முதலாளிகளுக்கு எதிராக தன்னை வர்க்கரீதியாக அணிதிரட்டிக் கொண்டு பொருளாதார போராட்டங்களையும், வர்க்கப் (அரசியல்) போராட்டங்களையும் முன்னெடுக்கத் தொடங்கிய போது, 1929 - 1930 உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் உருவானது.

முதலாளித்துவம் தனது நெருக்கடியில் இருந்து விடுபட nஐர்மனி பாசிசத்தை தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் உலகச் சந்தையை பிடிக்கும் யுத்தமாக மாற்றியது. இந்த சந்தைப் போட்டிக்கு தடையாக இருந்த பிற ஏகாதிபத்தியங்கள், அதை கம்யூனிசத்துக்கு எதிரான யுத்தமாக மாற்றி - சந்தையை பங்கிட முனைந்தது.

இதன் மூலம் தங்கள் நாட்டு தொழிலாளி வர்க்கத்தை ஓடுக்கவும் முனைந்தது. ஆனால் முதலாளித்துவ நாடுகளின் உள்ளான அக நெருக்கடியில் உருவான பொருளாதார நெருக்கடி, அவர்களுக்கு இடையிலான நாடு பிடிக்கும் - இரண்டாம் உலக யுத்தமாக மாறியது. இதுவே இறுதியில் கம்யூனிச சோவியத் நாட்டை பிடிக்கும் யுத்தமாக பரிணமித்தது.

உலக கம்யூனிச இயக்கத்தின் கூட்டான போராட்டம் பாசிசத்தை தோற்கடித்ததுடன் - புதிய  கம்யூனிச நாடுகளையும் - காலனியில் இருந்து விடுதலை பெற்ற புதிய தேசங்களையும் உருவாக்கின. வர்க்கரீதியாக பிரிந்துவிட்ட உலகச் சூழல் மற்றும் உள்நாட்டு போராட்டங்களில் இருந்து தப்பிப் பிழைக்க, முதலாளிகள் கம்யூனிச நாடுகளில் நடைமுறையில் இருந்த சமூக நலத்திட்டங்களையும் – மனித உரிமைகளையும் முதலாளித்துவ நாடுகளில் அமுல்படுத்தினர்.

இப்படி தான் சமூகநலத் திட்டங்கள் முதலாளித்துவ நாடுகளில் உருவானது. இந்த அடிப்படையில் பொருளாதார தேசியவாதமும், அரசுடமை கொள்கைகளும் முன்வைக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி, மருத்துவம் என்பது அரசின் கொள்கையாக மாறியது. 1917, 1945க்கு பிந்தைய முதலாளித்துவமானது, மருத்துவத்தை அரசின் கடமையாக மாற்றியது. மருத்துவம் மனிதனின் அடிப்படை உரிமையாகியது.

இப்படி உருவாக்கிய மருத்துவமானது 1980 களில் கம்யூனிச நாடுகளில் ஏற்பட்ட முதலாளித்துவ மீட்சியும், நவதாராளவாதமும் ஏற்பட்டு, அரசு மருத்துவக் கொள்கையையும் படிப்படியாக இல்லாதாக்கும் கொள்கையாக மாறியது. இதற்கு அமைவாக அரசின் இடத்தில் தனியார் காப்புறுதித் திட்டங்கள் புகுத்தப்பட்டது. காப்புறுதிப் பணத்தை கூலியில் (சம்பளத்தில்) இருந்து பெறும் கட்டாயச் சட்டங்கள் மூலம், மருத்துவக் காப்பீடுகள் புகுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு தன் பணியில் இருந்து தானாக விலகிவிடுகின்றது. இதுதான் இன்று உலகெங்கும் நடப்பது. இதுதான் இன்றைய உலகமயமாதல் முன்வைக்கும் முதலாளித்துவ மருத்துவக் கொள்கை. இன்று இவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், காப்புறுதி இல்லாதவர்களை கைவிடுவது அல்லது அரைகுறையுமான அரசு மருத்துவத்தில் சாகடிப்பதன் மூலம், அரசு படிப்படியாக விலகி வருகின்றது. உலகில் எந்த நாடும் இதற்கு விதிவிலக்கல்ல.

அமெரிக்காவில் இந்த முறை மூலம் அரசு தன் பொறுப்பில் இருந்து முற்றாக விலகிவிட்டதன் மூலம், காப்புறுதியற்ற மக்கள் மருத்துவமின்றி மரணிக்க விடப்படுகின்றனர். வேறு நாடுகளில் இது மெதுவாக நடந்து வருகின்றது. கொரோனோ வைரஸ் தொற்றை அடுத்த முடக்கத்தினால், அமெரிக்காவில் மூன்று கோடி மக்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர்.  இதன் மூலம் புதிதாக மூன்று கோடி மக்கள் மருத்துவ காப்பீட்டை இழந்துள்ளனர். கொரோனா மருத்துவம் பெற்று வெளியேறும் ஒவ்வொருவரிடமும் பணத்தைக் செலுத்துமாறு கோரப்படுகின்றது.

ஏற்கனவே 2019 இல் மொத்த அமெரிக்காவில் 11 சதவீதமானவர்களுக்கு மருத்துவக் காப்புறுதி கிடையாது. அதாவது 3.55 கோடி (35.5 மில்லியன்) மக்களுக்கு முற்றாக காப்புறுதி கிடையாது. இதை விட முழுமையாக மருத்துவ காப்பீடு பெற்றவர்களை விட அரையும் குறையுமான மருத்துவக் காப்பீடு பெற்றவர்களே அதிகம். மருத்துவ காப்பீடு பெறாதவர்கள் கொரோனா நோய் தொற்றில் மரணிக்கும் வீதம் 40 சதவீதத்தால் அதிகமாகும். கொரோனாவுக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, பலருக்கு தமக்குள் பல நோய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் பெரும்பான்மையான மக்கள் முழுமையான காப்பீடு இல்லாததால், நோய் இருந்தாலும் மருத்துவமனை செல்வதில்லை. இதுவே முதலாளித்துவம் முன்வைக்கும் நவீன மருத்துவ கொள்கையின் வெட்டுமுகம்.

இப்படிப்பட்ட அமெரிக்காவில் வறுமையில் வாழ்பவர்கள் 3.81 கோடி (38.1 மில்லியன்) பேர். அதாவது 11.8 சதவீதமாகும். இதில் 1.18 கோடி (11.8 மில்லியன்) சிறுவர்கள் அடங்குவர். இது அமெரிக்கச் சிறுவர்களில் ஆறில் ஒருவர். இதில் 50 சதவீதமானவர்கள் நிறவாத இனவாத ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உள்ளான, கறுப்பின மற்றும் செவ்விந்தியக் குழந்தைகள். அமெரிக்காவில் கல்வி கூட பணமுள்ளவனுக்கு தான். பெண்; குழந்தைகள் தங்கள் பட்டப்படிப்புக்கான பணத்தைச் செலுத்த, தங்கள் உடலை பணமுள்ளவனின் பாலியல் நுகர்வுக்காக விற்குமளவுக்கு முதலாளித்துவம் புளுத்துக் கிடக்கின்றது. இந்த அமெரிக்கா தான், பணமுள்ளவனின் சொர்க்கமாக முதலாளித்துவத்தால் காட்டப்படுகின்றது.

இப்படிப்பட்ட இந்த முதலாளித்துவ அமெரிக்க மருத்துவமே, உலகில் அதிக செலவு கொண்டது. உதாரணமாக கனடாவில் மருந்தின் விலையை விட அமெரிக்காவில் குறைந்தது நான்கு மடங்கு அதிகமாகும். காப்புறுதி நிறுவனங்கள், மருந்துக் கம்பனிகள், மருத்துவ மனைகள் கூட்டாகவும் -  தனியாகவும், நோயாளியை கொள்கையடிக்கும் சுதந்திரத்தை மருத்துவ கொள்கை வழங்குகின்றது. அமெரிக்காவில் மருத்துவம் பெறுவது என்பது குறைந்தபட்சம் இலட்சாதிபதியாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

இயற்கை முதல் மனிதவுழைப்பு வரையான அனைத்தையும் தனிமனிதனின் உடமையாகவும் – அதையே மனித உரிமையாகவும் முதலாளித்துவம் வரையறுக்கின்றது. இதைத்தான் முதலாளித்துவ சுதந்திரமும், ஜனநாயகமும் வரையறுக்கின்றது. தேர்தலில் வாக்கு போடும் ஜனநாயகம் இதைத்தான் உருவாக்குகின்றது.

Last Updated on Monday, 25 May 2020 11:52