Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் CHOGM ஏலத்தில் விற்கப்படும் கல்வி

CHOGM ஏலத்தில் விற்கப்படும் கல்வி

  • PDF

CHOGM அல்லது பொதுநலவாய அரசத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடக்கவிருக்கின்றது. இதற்காக முழு நாடும் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த மாநாடு முடிந்த பின்னர் நாட்டு மக்கள் அனைவரினதும் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று அரசாங்கம் கூறுகின்றது. அது உண்மைதானா? பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? அல்லது இருமடங்காகுமா? இது குறித்து நாங்கள் ஆழமாகாச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவையெல்லாம் ஒரு மாயாஜாலம் என்றுதான் நாங்கள் நினைக்கின்றோம். எதுவுமே நடக்கப்போவதில்லை. இறுதியாக நடக்கப்போவது என்னவென்றால், இந்த மாநாட்டிற்காக திறைசேரியிலுள்ள பணம் தாராளமாகச் செலவு செய்யப்பட்டு திறைசேரி திவாலாகி விடுவதுதான். அதன் பிறகு காலியாகும் திறைசேரியை நிரப்பபுவதற்காக வரிக்குமேல் வரி விதிக்க வேண்டும். சமூக நலன்களுக்கான அரச ஒதுக்கீட்டு தொகையின் கடைசிச் சொச்சமும் வெட்டப்பட்டுவிடும். மாநாடு முடிந்த கையோடு வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்டவிருக்கின்றது. இது விழாக் கொண்டாட்டத்தின் பின்னர் நடக்கும் ஒரு ஏலமிடுதல் மாத்திரமே. அதன் பிறகு அனைத்துச் சுமைகளும் மக்கள் தலையில் வந்து விழும். எல்லாச் செலவுகளுக்கும் ஈடு கட்ட வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படும்.


அபிவிருத்தி மாயை


அதிவேகப்பாதைகள் திறக்கப்படுகின்றன. பாதைகளுக்கு காப்பட் இடப்படுகின்றன. பாதையோரங்களில் பூங்கன்றுகள் நடப்படுகின்றன. நடப்பட்ட ஓரிரு நாட்களிலேயே அவை பூக்கவும் செய்கின்றன. கப்பல் வராத துறைமுகங்கள், விமானம் தரையிறங்காத விமான நிலையங்கள் கட்டப்படுகின்றன. இதோ! நாடு அபிவிருத்தியடைகிறது என்று கூறுகின்றார்கள். சிந்திக்கத் தெரியாத சமூகத்தில் மாத்திரமே இவற்றை அபிவிருத்தி என்று கூறி ஏமாற்ற முடியும். இல்லையென்றால் இவற்றை அடிப்படை வசதிகளை விரிவாக்குதல் என்ற வகையிலேயே அல்லது அபிவிருத்தி என்று ஏமாற்றுவதற்கு எவருக்கும் மூளையில் பிரச்சனை கிடையாது. பொருளாதார வளர்ச்சியோடு ஏற்படக்கூடிய மனிதர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதைத்தான் அபிவிருத்தி என்கின்றோம். கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளின் வளர்ச்சியும் இதில் அடங்கும். ஆனால் இந்த மனிதர்களின் வாழ்க்கை நிலையை அளவிடும் சுட்டி நாளுக்கு நாள் சரிந்துக் கொண்டிருருக்கின்றதே. அது எந்த வகையான அபிவிருத்தி? சம்பளம் உயரவில்லை. வருமானம் ஒரே இடத்தில் தேங்கி கிடக்கின்றது. வாழ்க்கைச் செலவு விண்ணை முட்டுகிறது. உயிர்மூச்சு வாங்கும் வரை உழைக்க வேண்டும். சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுவதைத் தவிர வேறு முன்னேற்றம் கிடையாது.


அவர்களது இலாபம் நாட்டின் பரிதாபம்


பணமுதலைகளின் இலாபத்திற்காக குடிக்கும் தண்ணீரீல் கூட நச்சைக் கலந்த நாடு. அந்த தண்ணீரைக் குடித்து சிறுநீரக நோய் தாக்கி நாள்தோறும் மனிதர்கள் மரணிக்கும் நாடு. நோய் நொடியால் பாதிக்கப்பட்டால் மருந்து வாங்குவதற்காக பஸ்ஸில் ஏறி பிச்சை எடுக்கும் நாடு. சிறுவர்கள் வழிப்போக்கில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நாடு. இவற்றிற்கான காரண அநியாயக்காரர்கள் ஆட்சி செய்யும் நாடு. விலங்குகளைப் போன்று நடுப்பாதையில் மனிதர்களை கொன்று போடும் நாடு. நாள்தோறும் பாடசாலைகளை மூடும் நாடு. பாடசாலைக்கு செல்வதற்காக சிறுவர்கள் திருட்டில் ஈடுபடும் நாடு. உயர் தரப் பரீட்சையில் 3”A” க்கள் எடுத்தாலும் பல்கலைக்கழகம் கிடைக்காத நாடு. படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நாடு. உடலை விற்றுப் பிழைக்கும் நாடு. இந்த நாட்டைப்பார்த்து அபிவிருத்தியடையும் நாடு என்று சொல்ல நாங்கள் என்ன எருமைகளா?


இந்த களியாட்டங்களால் எங்களுக்கு என்ன கிடைக்கும்? இந்த பென்னம் பெரிய தேசாபிமான அரசாங்கம் காலனித்துவ வரலாற்றையும் அடிமைத்தனத்தையுமல்லவா பெருமையோடு நினைவு கூறப்படுகிறது. சிங்களத்தில் வெள்ளையனைத்திட்டி வேஷம் போடும் போலி தேசாபிமானிகள் இன்று என்ன செய்கிறார்கள்? மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செலவளித்து பட்டுக்கம்பளம் விரித்து யாரை வரவேற்கப் போகிறார்கள். அவர்கள் திட்டம் அதே வெள்ளையனைத் தானே? கல்விக்கும் சுகாதாரத்திற்கும் செலவிட வேண்டிய பணத்தை இங்கே விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டின் பின்னர் நாடு மேலும் கடனில் மூழ்கும் அந்த சுமையும் எங்கள் மீது விழுவதைத் தவிர வேறொன்றும் கிடைக்கப்போவதில்லை. இந்த இரட்டை நிலையை நாங்கள் அறிந்து கொள்ளவேண்டும். இவர்கள் எல்லோரும் செய்வது பொய். கடைசியில் வதைபடுவது நாங்கள் என்பதுதான் மெய்.


இவ்வாறாக பாடசாலைகளை மூடி, பல்கலைக்கழகங்களை மூடி, முழு நாட்டினதும் வேலைகளை நிறுத்திவிட்டு மாநாடு நடத்திய நாட்டைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? இன்று அனைத்து பல்கலைக்கழங்களும் மூடப்பட்டுள்ளன. அது ஏன்? திறந்து வைத்தால் ஆர்ப்பட்டங்கள் வரும் அப்படி நடந்தால் கல்வியை விற்கும் வேலை குழும்பிவிடும். நாட்டின் நிர்வாணம் உலகுக்குத் தெரிந்துவிடும் என்ற பயத்தில் தான். இங்குவரும் இளவரசர் சாள்ஸ் எங்களுக்கு ஒரு பரிசையும் கொண்டு வருகிறார். அதுதான் கல்வி வர்த்தக வலையம். இவற்றினால் எதிர்காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு கல்வி விற்கப்படும். இந்த வலையங்கள் உங்களுடைய பிள்ளை கள் படிப்தற்கானதா? 65 லட்சம் 70 லட்சம் கொடுத்து உங்கள் குழந்தைக்கு பட்டத்தை வாங்கிக் கொடுக்க உங்களால் முடியுமா?


விற்கப்படும் கல்வி


உங்கள் பிள்ளை செல்லும் பாடசாலைக்கு. பல்கலைக்கழகத்திற்கு கொடுக்க இந்த அரசாங்கத்திடம் பணம் இல்லையாம். ஆனால், இந்த முதலீட்டு வலைங்களில் கடைகளைத் திறக்கும் கோடீஸ்வரர்களுக்கு மில்லியன் கணக்கில் கொடுக்க பணம் உள்ளதாம். அது மட்டுமா இலவசமாக காணிகள் கூட வழங்கப்படுகின்றன. இந்த அரசாங்கம் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறதல்லவா. இவற்றால் உங்களுக்கு கிடைக்கக் கூடிய பிரதிபலன் என்ன? கடைசியாக அரசாங்க பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்படும். தனியார் பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும். அது மாத்திரமல்ல அரசாங்கத்தினது என்று எஞ்சுபவைகளுக்கும் கோடிக்கணக்கில் செலுத்த நேரிடும். இதன் கடைசிப் பிரதிபலன்தான் இந்நாட்டின் பெற்றோர்கள் என்ற வகையில் நீங்கள் கல்விக்காக கோடிக்கணக்கில் செலவளிக்க வேண்டும். முடியாவிட்டால் கல்வியைப்பற்றி நினைப்பதையே கைவிட்டுவிட வேண்டும்.


அப்படி நடக்கக் கூடாதென்று நாங்கள் நினைக்கிறோம். கல்வி கற்க வேண்டிய உரிமையை எல்லோரும் பெற்றுக்கொள்ள வேண்டும். எங்களுக்கு மாத்திரமல்ல இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வோரு குழந்தைக்கும் தான் விரும்பும் தூரத்திற்கு கல்வியை கற்கும் உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை பெறுவதற்காகவே நாங்கள் இன்று வீதியில் இறங்கியிருக்கிறோம். ஆனால், நாங்கள் தனித்தனியாக போராடி அந்த உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியாது. பெற்றோர்களும் பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் ஊமைகளாக இருக்கும் வரை ஆட்சியாளர்கள் இந்த அழிவை தொடர்ந்தும் செய்து கொண்டு தான் இருப்பார்கள். சமூகம் என்ற வகையில், நாடு என்ற வகையில் நாங்கள் இந்த ஆபத்தை அறிந்து அதனை எதிர்ப்பதில் முன்னிலை வகிக்க வேண்டும்.


பணமுதலைகளின் இலாபத்திற்காக அனைத்தையும் கொள்ளையடிக்கும் இந்த சமூகத்திற்கு எதிராக சமூக நன்மையை கருத்தில் கொண்ட சமூகத்திற்காக போராடவேண்டும். அப்படியில்லாவிட்டால், இந்தநாட்டின் பொரும்பாலான மக்களுக்கு தமது அறிவுக்கண்களைத் திறந்து கொள்வதற்கான உரிமை மாத்திரமல்ல, மூச்சுவிடும் உரிமையையும் கூட மறுக்கப்பட்டுவிடும். தூள், மாபியா, விபச்சாரம் போன்ற முதலாளிகளினது வியாபாரங்களின் பலிக்கடாக்களாக, எதுவித மனிதசாரமும் அற்ற வெறும் தூசுகளாக இந்த நாட்டு பிள்ளைகள் ஆளாக்கப்படுவர். அதற்கு இடமளிப்பதா? இல்லையாயின் இலவசக்கல்வியையும், கல்வியில் சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ள போராடுவதா? என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும். போராடுவதைத் தவிர மாற்றீடொன்று கிடையாது. நீங்கள் எடுக்கும் முடிவில்தான் எதிர்காலத்தை சுவர்க்கபுரியாக்குவதா, நரகமாக்குவதா என்பது தீர்மானிக்கப்படும்.


அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவை
8/11/2013

Last Updated on Monday, 11 November 2013 15:42