Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

லலிதா அன்று ஈழ அகதி, இன்று டென்மார்க்கில் - பிறாண்டா அம்மன்

  • PDF

இவர் 9 வயது சிறுமியாக இருந்தபோது அபிராமி அம்மனால் ஆட்கொள்ளப்பட்டார். மனித உருவில் அவதரித்த அபிராமி அம்பாள் தான் மாதாஜி அபிராமி உபாசகி என்பதில் ஐயமேதுமில்லை. இப்படி இவர் வளர்ந்து வருகையில் ஒன்பதாவது வயதில் இந்த மாதாஜி அவர்களுக்கு கனவில் அபிராமி அம்மன் தோன்றி 'நான் உன்னிடம் வருவேன்' என்றும் 'என்னை ஆதரிக்க வேண்டும்' என்றும் கூறினார். பின்பு திருமண காலத்தில் இவருக்கேற்ற ஒரு வாழ்க்கைத் துணையை அபிராமி அம்மாள் தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார். இவர்களுக்கு பாலமுருகன் போல ஒரு ஆண் குழந்தையையும் அந்த அபிராமி அம்மாள் கொடுத்தார். அம்மா டென்மார்க் நாட்டில் (1994) இருக்கும் போது, அபிராமி அம்மன் அம்மாவின் கனவில் வந்து தன்னை நீ ஆதரிக்கவேண்டும் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டார்.

ஆகா, மற்ற ஆசாமிகளெல்லாம் தாங்கள் கடவுளின் அவதாரம் என்றும், ஆண்டவன் சொல்கிறான் ஆசாமிகள் புடுங்குகிறோம் என்றும் சொல்வார்கள். ஆனால் டென்மார்க் வளநாட்டிலே பிறாண்டா என்னும் திருப்பதியிலே திருவருள் பாலிக்கும் லலிதாம்பிகை என்னும் அபிராமி அம்மனின் அவதாரம் சொல்கிறது.., அம்மனே தன்னை ஆதரிக்க வேண்டும் என்று இவரை கேட்டுக் கொண்டாளாம். இதை நான் சொல்லவில்லை, லலிதாம்பிகை அம்மனின் இணையத்தளம் தான் சொல்கிறது. (WWW.Abiramiamman.dk). அப்ப இவ அம்மனிற்கெல்லாம் அம்மன். ஆனா.., இங்க தான் கொஞ்சம் இடிக்குது. ஏனென்றால் ஒன்பது வயதிலேயே அபிராமி அம்மனால் ஆட்கொள்ளப்பட்ட அருள்மிகு லலிதாம்பிகை அம்மன், இலங்கையின் இனப்பிரச்சினை காரணமாக அகதியாகி டென்மார்க் வளநாட்டிற்கு தப்பி வந்திருக்கிறார். அம்மாவையே அகதியாக ஓட வைத்திருக்கிறார்கள் சிங்கள இனவெறியர்கள். அப்ப அம்மாவின் சக்தி பெரிதா, சிங்கள இனவெறியர்கள் பெரிதா? நல்லகாலம் இதை தமிழின விடுதலைத் துரோகிகள் பட்டத்தை வாரி வழங்கும் வாரியத்தினர் கவனிக்கவில்லைப்போல. கவனித்திருந்தால் சிங்களவர்களிற்கு பயந்து ஓடி, சிங்களவர்களை பெரியவர்கள் ஆக்கிய துரோகி அம்மன் என்ற பட்டம் கிடைத்திருக்கும்.



தேசிக்காய்: (அதன் மகிமை): பச்சைத் தேசிக்காய் ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மையாரின் திருக்கரத்தால் வாங்குங்கள். அம்பாளின் தேசிக்காய் உங்கள் பிணி, பீடைகளை நீக்கும். உங்கள் உடலில் எங்கெங்கு நோய் வலிகள் வருத்தங்கள் இருக்கின்றதோ.., அந்த இடங்களில் வைத்து மெதுவாக பிடித்து உருட்டும்போது.., சுகமடையும். எங்கு செல்வதானாலும், ஏதாவது நல்ல காரியங்களைச் செய்யப் போவதானாலும் அம்பாளின் தேசிக்காயுடன் போங்கள். எதுவித தடங்கலும் இல்லாது தீயசக்திகளில் இருந்து உங்களை காப்பாற்றி நல்வழியில் கொண்டு செல்லும். அத்துடன் தெய்வத்தாயின் தேசிக்காயை வீட்டுவாசலில் உள்ப் பக்கமாக மேலே வலது பக்கத்தில் கட்டவும். கட்டினால் உங்கள் வீட்டிற்கும் வீட்டில் இருப்போருக்கும் காவலாக இருக்கும்.


எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்து, நீண்ட கடும் உழைப்பின் பின் அலெக்ஸான்டர் பிளேமிங் பென்சிலினைக் கண்டு பிடித்தார். மேரி கியூரி அம்மையார் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். இதையெல்லாம் பெரிய சாதனை என்று சொல்பவர்கள், லலிதாம்பிகை அம்மன் ஒரு பச்சைத் தேசிக்காயை வைத்து உருட்டி தீராத நோயை எல்லாம் தீர்த்து வைப்பதைப் பற்றி மூச்சு விடாமல் இருக்கிறார்கள். மருத்துவமனைகளை எல்லாம் இடித்துத் தள்ளுங்கள். அந்த இடங்களை உழுது பண்படுத்தி எலுமிச்சைமரங்களை நடுங்கள். லலிதாம்பிகை அம்மன் உங்கள் உடம்பில் காயை உருட்டியே உலகத்து நோய்கள் எல்லாம் தீர்த்து வைப்பா.


டென்மார்க்கில் ஒரு தேசிக்காய் மூன்று குரோனர் என்றால், அம்மாவின் ஆலயத்தில் முப்பது குரோனர்கள். ஆனால் தீராத நோய் எல்லாம் தீரும் போது மூன்று குரோனர் தேசிக்காயிற்கு முப்பது குரோனர் அறவிடுவது அநியாயம் என்று யார் தான் சொல்வார்கள். அதிலும் லலிதா ஒன்றையும் வீணாக்குவதில்லை. அவ ஒரு மறுசுழற்சிவாதி. முப்பது குரோனர் கொடுத்து ஒரு தேசிக்காயை அம்மாவின் ஆலயத்தில் உள்ள கடையில் வாங்கினால், அது உருட்டல் முடிய மறுபடியும் கடைக்கு வந்து விடும்.


காலகாலத்திற்கும் நிலைத்து நின்று மக்களிற்கு தீராத நோய்களை தீர்த்து வைக்கக் கூடிய இந்த அரிய மருத்துவக் கண்டுபிடிப்பை லலிதாம்பிகை அம்மன் இணையத்தளத்தில் மட்டுமே பொறித்து வைச்சிருக்கிறா. யாராவது பக்தகோடிகள் இதை கல்வெட்டிலே செதுக்கி வைத்தால் இனிவரும் தலைமுறைகளும் பெரும்பயன் பெறும்.


'அத்துடன் தெய்வத்தாயின் தேசிக்காயை வீட்டுவாசலில் உள்ப் பக்கமாக மேலே வலது பக்கத்தில் கட்டவும். உங்கள் வீட்டிற்கும் வீட்டில் இருப்போருக்கும் காவலாக இருக்கும்'. இப்படி தனது ஏழாலை வீட்டிற்கும் தேசிக்காய் கட்டியிருந்தால் லலிதா அகதியாக வந்திருக்கத் தேவையில்லை. சுன்னாகம் சந்தைக்கு வாற அத்தனை தேசிக்காயையும் வாங்கி எல்லா வீட்டிலேயும் கட்டியிருந்தால் இராணுவத்திடம் இருந்து தமிழர்கள் தப்பியிருக்கலாம். புலிகள் உலகம் முழுக்க ஆயுதங்கள் வாங்காமல் தேசிக்காயை வாங்கியிருக்கலாம்.


லலிதா அம்மன் அண்மையில் இலங்கை சென்று வந்தார். இயக்குனர் நாகராஜன் - சிவாஜியின் கூட்டணியில் கந்தன் கருண, திருவிளையாடல் போன்ற புராணக் குப்பைகளில் சிவாஜி சிவபெருமான், ஜெயலலிதா அம்மன் எல்லாம் ஒரு இடத்திலே இருந்து இன்னொரு இடத்திற்கு காற்றிலே பறந்து போவது போல அம்மணிக்கெல்லாம் அம்மணியான லலிதா காற்றிலே பறந்து போகவில்லை. அட்லீஸ்ட் புஸ்பக விமானத்திலே கூட போகவில்லை. டென்மார்க் பாஸ்போர்ட்டைக் காட்டி காசுகொடுத்து சிறிலங்கன் எயார்லைன்ஸில் தான் போய் வந்தா.


லலிதா புராணம், இப்பவே கண்ணைக்கட்டுது. ஆனா அம்மனுக்கெல்லாம் அம்மனான அவ லேசிலே விடுவதாயில்லை. கீழ்வரும் அதிசயங்களையும் இலவச இணைப்பாக தந்திருக்கிறா.


1.ஒரு நாள் திடீரென அம்மா நாக தெய்வத்தைப் போல நிலத்தில் விழுந்து உருண்டு வளைத்து தன் உடம்பை வருத்தினார். அங்குள்ள மக்கள் எல்லோரும் பயபக்தியுடன் அம்மாவின் அருகே நின்று அரோகரா சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அம்மாவின் வாயிலிருந்து உதிரம் கொட்ட இரண்டு மாணிக்கக் கற்களை அம்மா உமிழ்ந்து எடுத்தார்.


2.பங்குனி உத்தரத் திருநாளில் வேப்பம் பீடம் ஒன்றை வைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. அத்துடன் நாக பாம்பொன்றில் மாணிக்கக் கற்களை பதித்து மூலஸ்தானத்தின் வலப்பக்கத்தில் அமர்த்தி அபிஷேகங்கள் நடத்தினார் ஆன்மீகத் தாய் அபிராமி அம்மா.
3.தீர்த்தத் திருவிழா நடைபெற்றது. அப்போது முருகப் பெருமானுடைய வலதுபுற கண் திறந்து மக்களுக்கு அருள் பாலித்தது.(www.Denmarktamil.com-29.07.2013)


4.மாதாஜி ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மையார் 1998 ஆண்டு முதல் 2006 வரை ஒவ்வோர் மார்கழி மாத 31ம் திகதியில் தனது பூர்வ ஜென்மத் தொடர்புகளைக் களைந்து பார்வதி, காளி, துர்க்கை, கருமாரி, கண்ணகை, நாகம்பாள், முத்துமாரி, மீனாட்சி, விஷாலாட்சி போன்ற அவதாரங்களை எடுத்து பக்தர்களின் பாவங்கள், கருமவினைகள், பிணிகள், நோய்கள், துன்பங்கள் போன்றவைகளைக் களைந்து அருள்பாலித்துக் கொண்டு இருக்கின்றார்.


லலிதாம்பிகையின் இணையத்தளத்தில் ஆன்மீகக் கட்டுரைகள், சேவை என்ற பகுதிகளிற்கு செல்வீர்களானால் விரைவில் என்று வெறுமையாக இருக்கும். தொடர்புகளிற்கு என்ற பகுதியிற்குச் சென்றால் வங்கிக் கணக்கு விபரம் விலாவாரியாகத் தரப்பட்டிருக்கும். இவ்வளவு சக்தி உள்ள ஒவ்வொரு மார்கழி மாதமும் ஒவ்வொரு அவதாரம் எடுக்கும் அம்மனிற்கு வங்கிக் கணக்கு ஏன் எதற்கென்று அம்மாவின் பக்தகோடிகள் யாராவது விளக்கம் சொல்வார்களா?


தொடர்புகளுக்கு: Sree Abirami Amman Tempke, Norre Askaebevej 24, DK-7330 pande


டென்மார்க்: Phone: 0045 97180192, Mobile: 0045 40413431, Fax: 0045 97184192


சுவிஸ்: Phone: 0041 313310463


வங்கி: Nordea Bank, S . W . I .F . T . N D E A D K K K, DK No.: 2420 0008 0161 4361, Account No.: 9559 080 1614 361


இவர்கள் சொல்வது போல் கடவுள்கள்,அவதாரங்கள் என்று ஒன்று இருக்குமாயின் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் ஒரே அம்மன் லலிதா அம்மனாகத்தான் இருக்கும்.

Last Updated on Wednesday, 25 September 2013 14:53