Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

அ.மார்க்சின் அரசியல் நோக்கம், இலங்கை அரசின் அரசியல் நோக்கத்தில் இருந்து வேறுபட்டதா!?

  • PDF

பிரமுகராக இருப்பதையும், கொசிப்பதையும் இலக்கிய அரசியல் வாழ்க்கையாக கொண்டவர்களுக்கு இது அக்கறையற்றதாக இருக்காலம். தண்ணி அடிப்பதையே உயர்ந்தபட்ட அரசியல் ஒருங்கிணைவாக கொண்டு வாழ்பவர்களுக்கு, இதுவொரு அரசியல் விடையமே அல்ல. தங்கள் கூட்டாளிகள் பற்றி இப்படி கூறுவது, அதற்கு நாம் அரசியல் ரீதியாக வேட்டு வைப்பது கண்டு, அரசுக்கு எதிரான நடைமுறையை மறுக்கும் இவர்கள் "அரசு எதிர்ப்பு" வேசம் மட்டும் போட்டுக் காட்ட முடியும். இந்த வேசம் கூட தங்கள் சுய இருப்புக்கானதே ஒழிய, மக்களை அரசுக்கு எதிராக அணிதிரட்டுதைக் கோருவதுமல்ல, அதற்காக தாமைத் தாம் அணிதிரட்டுவதுக்குமல்ல. பிரமுகராக இருப்பதற்கான, கொசிப்பதற்கான அடையாள அரசியல். இந்த வகையில் அ.மார்க்ஸ் இவர்களின் பங்காளியாக இருக்கின்றார்.

அ.மார்க்சின் அரசியல் நோக்கம், இலங்கை அரசின் அரசியல் நோக்கத்தில் இருந்து வேறுபட்டதா!? இந்த கேள்வியில் இருந்து தொடங்குவது தான் இங்கு பொருத்தமானது. அ.மார்க்சின் இலங்கை விஜயம், இலங்கை பேரினவாத அரசியல் நோக்கத்தை பலப்படுத்துவதையே அடிப்படையாகக் கொண்டது. அது எப்படி என்பதை தெரிந்துகொள்ள முன்னர், அரசின் நோக்கம் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம். அரசு தமிழ் மக்களின் மத்தியில் எப்படியான அரசியலை செய்கின்றது? எதைச் செய்ய விரும்புகின்றது? இதை நாம் புரிந்து செயல்படுகின்றோமா? இந்த வகையில் இதை தெரிந்து கொள்ள முனைவோம்.

1.தமிழ் தேசியம் சார்ந்த சிந்தனையையும், தமிழ் மக்களின் அரசியல் ஒருங்கிணைவையும்,  இல்லாததாக்க அரசு முனைகின்றது. இந்த வகையில் அதை பிளக்க, உடைக்க, சிதைக்க, ஒடுக்க முனைகின்றது. இதை பல முனையில் செய்கின்ற அரசு, அரசியல்  தளத்தில் கோட்பாட்டுத் தளத்தில் தமிழ்தேசிய கோட்பாட்டையே சிதைக்க முனைகின்றது.

2.முள்ளிவாய்காலுக்கு பின்னான புதிய அரசியல் சூழலில், அரசியல் விழிபுர்ணர்வு பெற்று வரும் வர்க்க ரீதியான அணித்திரட்சியைத் தடுக்க அரசு முனைகின்றது. தமிழ்-சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைவு அரசியலையும், அதன் தத்துவ கோட்பாடுகளையும் உடைக்கவும் சிதைக்கவும் விரும்புகின்றது.

இதுதான் அரசின் செயற்பாடாக இருக்க, அ.மார்க்ஸின் தத்துவ செயற்பாடும் இதுதான். அ.மார்க்ஸின் தத்துவ செயற்பாடு இதற்கு எதிராக அல்ல. அரசு நிலம், குடியேற்றம், அதிகாரம்... என்று பலதளத்தில் இதைக் கையாளும் அதேநேரம், இதற்கு எதிரான அரசியல் தத்துவார்த்த தளத்தில் இதே நோக்கில் தான் செயல்படுகின்றது. இதை யாரும் மறுக்க முடியாது. இந்த வகையான நிகழ்ச்சி நிரல் தான், இலங்கை அரசின் இன்றைய கொள்கை மற்றும் நடைமுறையாகும். இதனால் தான் அ.மார்க்ஸ்சின் நிகழ்ச்சி நிரல் பொருந்தி வருகின்றது.

இந்த வகையில் அரசு தமிழ் மக்களுக்குள் உள்ள முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, பிளவுவாத அரசியலை அரசியல் தளத்தில் முன்னுக்கு கொண்டு வருகின்றது. பிரதேசம், மதம், சாதி, பால், இனம் …என்று பல கோணத்தில் அரசின் பிளவுவாதம் வெளிப்படையாக இயங்குகின்றது. தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடங்கி மக்களை பிளக்கும் உத்திகள் முதல் அரசியல் - இலக்கிய  பிரமுகர்களை முன்னிலைக்கு கொண்டு வருவது வரை, இந்த அரசியல் அடித்தளத்தில் தான் அரசு எதையும் தனக்குள் அனுமதிக்கின்றது. அரசியல் தளத்திலும், தத்துவார்த்த பின்புலத்திலும் தமிழ்மக்களை பிளக்க முனையும் அரசு, அதை எங்கு எப்படி யார் மூலம் செய்கின்றது? இதை இனம் காண்பது என்பதே இன்று முதன்மையான அரசியல் கூறாக மாறி இருக்கின்றது. அரசியல் மற்றும் தத்துவார்த்த சிதைவுகள் மூலம், அரசியல் தளத்தில் முள்ளிவாய்க்கால்களை

நடத்த முனைகின்றது. யுத்தத்தினை வெல்ல உதவிய இந்தியா போல், தத்துவார்த்த முனையில் அ.மார்க்ஸ்சின் உதவி மூலம் அதைச் செய்ய முனைகின்றது. இன்று இந்த அரசியல் பின்புலத்தில் தான், அரசியல் - இலக்கியம் சார்ந்த படைப்புகள், கருத்துக்கள், கோட்பாடுகள் வெளிவர மகிந்த அரசு அனுமதிக்கின்றது. இந்த அரசியல் பின்புலத்தில் தான் கூட்டங்களைக் கூட மண்ணில் நடத்த அனுமதிக்கின்றது. இந்த அரசியல் பின்புலத்தில் மக்களுக்கு புனர்வாழ்வு இலக்கியத்தையும், தத்துவத்தையும் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இங்கு புனர்வாழ்வு இலக்கியம், தத்துவம் என்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் போராடுவதை சிதைப்பதுதான்.

இந்த வகையில் அரசு சிங்கள – தமிழ் முரண்பாட்டை வளர்ப்பது போல், தமிழ் மக்களுக்குள் முரண்பாட்டையும் பிளவையும் திட்டமிட்டு உருவாக்கின்றது. தமிழ் மக்களை ஒடுக்க கூலிக் கும்பல்களையும் படையையும் வைத்திருப்பது போல், தமிழ் மக்களை பிளக்க கட்சிகளையும், தத்துவங்களையும் நாடுகின்றது. புலமை சார்ந்த புத்திஜீவிப் பிரமுகர்களை அடிப்படையாகக் கொண்டு அது இயங்குகின்றது. இதை அரசு செய்யவில்லை என்று யாரும் மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியாது. இதுதான் இன்றைய அரசியல் எதார்த்தம். இந்த வகையில் இதில் யார் ஈடுபடுகின்றனர்? அரசியலில் ஒரு கருணா, டக்கிளஸ், பிள்னைளயான், கே.பி போல் இலக்கியம் மற்றும் தத்துவத்துறையில் யார்? இங்கு வெளிப்படையாக இயங்கும் இவர்கள் போல், இதை மூடிமறைத்தபடி இயங்குவபர்கள் யார்? அவர்களின் இலக்கிய - தத்துவார்த்தம் எந்த வகையில், இன்று அதை வெளிப்படுத்துகின்றது?

இன்று அரசு வழங்கும் எல்லா விதமான "ஜனநாயக" மற்றும் "கருத்து" சுதந்திரங்களும், இதற்குள் தான் அடங்குகின்றன. போராடுபவர்கள், எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்கள், அரசை விமர்சிப்பவர்கள் அடித்து நொருக்கப்படுவதும், கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாட அரசியல் நிகழ்வுகளாக உள்ள அதே தளத்தில் இவையும் நடக்கின்றன. அதாவது கருணா, பிள்ளையான், கேபி போல் அரசியல்-இலக்கியவாதிகளின் சுதந்திரம் உள்ளது. இவர்களுக்கு கீழ் செயற்பட்டவர்கள், இவர்களிடம் அரசியல் இலக்கியம் கற்றவர்கள் எல்லாம் சிறையிலும், திறந்த வெளிச்சிறையிலும் கண்காணிக்கப்படும் நிலையில் புலி அரசியல்-இலக்கிய பிரமுகர்கள் இணைந்து அ.மாhக்ஸ் கும்பலுடன் கும்மி அடிக்கின்றனர்.

இலங்கையில் அரச ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ள இன்றைய நிலையில் அ.மாhக்ஸ் இலங்கை சென்று இருக்கின்றார். சரி எதற்காக? யாருடன் சேர்ந்து அரசியல் விபச்சாரம் செய்ய முனைகின்றார்? அவரின் நோக்கம் தான் என்ன?

அரசின் பாசிச சூழலை மாற்றி அமைப்பதா? அவரின் நோக்கம் அல்லது அதற்கு எதிராக போராடும் தத்துவத்தை பிளந்து சமூக உள்பிளவை ஆழமாக்குவதா? அவரின் நோக்கம். சொல்லுங்கள்.

அரசுக்கு எதிரான தத்துவ அரசியல் அடித்தளத்தை பிளப்பது தான் அ.மாhக்ஸின் இலங்கைப் பயணத்தின் நோக்கம். இந்தப் பிளவை ஆழமாக்குவது தான், அவரின் பொது அரசியல் கண்ணோட்டம். இதுதான் அவரின் கடந்தகால அரசியல். இந்த வகையில் இதை இனம் கண்டுதான், அவரை புதுக்குடியிருப்பு வரை சென்று வர அரசு அனுமதித்திருக்கின்றது. தேசியத்தை "கற்பிதம்" என்றவர், "தலித்தியம்" என்ற பிளவுவாத சாதிக் கோட்பாட்டை முன்தள்ளியவர், "பின்நவீனத்துவம்" "கட்டுடைப்பு"… என்று மார்க்சியத்துக்கு எதிராக கோட்பாட்டை முன்வைத்தவர் அல்லவா இவர். இவருக்கு வேறு அரசியல் முகம் கிடையாது. இந்தியாவைக் கடந்து புலியல்லாத புலம்பெயர் அரசியல் ஒருங்கிணைவு எற்படாத வண்ணம், தத்துவத்தை சிதைத்தவர் இந்த அ.மார்கஸ். இதை அரசு இனம் கண்டு இருக்கின்றது, அரசின் எடுபிடிகள் இனம் கண்டு இருக்கின்றனர். இந்தவகையில் அரசின் பிளவுவாத அரசியலுக்கு எற்புடைய இந்த நபரை இலங்கையில் மேடையேற்ற அரசு  அனுமதித்து இருக்கின்றது.

அ.மார்க்ஸ் அறிவு சார்ந்த தன் புலமை மூலம், மக்களை பிளத்தலும், சமூக ஒன்றிணைவை தடுத்தலும் தான், அவரின் தத்துவக் கோட்பாடுகள். இதுதான் அவரின் தத்துவார்த்த அரசியல் பின்புலம். இதை மூடிமறைக்கவே, அங்குள்ள எதிர் சூழல் பற்றி தங்கள் புலமை மூலம் கீழ் மூச்சு - மேல் மூச்சு வாங்க அறிக்கையையும் விடுவார்கள். இது அவர்களுக்கு கைவந்த உத்தி. ஏகாதிபத்திய தன்னார்வ குழுக்களின் புலமை சார்ந்த எதிர்ப்பு அறிக்கைகள் போல், இவர்கள் அதையே செய்கின்றனர். இதுவே இன்று மூடிமறைத்த அரசியல் மோசடியாக எங்கும் இயங்குகின்றது. பாராளுமன்ற காங்கிரஸ் முதல் போலி கம்யுனிஸ்டுகள் வரை, இலங்கை அரசின் நோக்கத்துக்கு உதவியபடி அங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி எப்படியெல்லாம் அறிக்கை வெளியிட முடிகின்றதோ, அதைதான் அ.மார்க்ஸ் செய்வார், செய்கின்றார். அரசியல்- இலக்கிய பிழைப்புவாதிகள், இதைக்காட்டி என்ன சமூக அக்கறை என்று குழைப்பார்கள். அண்மையில் இந்திய பராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசுக்கு உதவிய படி, தமிழ் மக்களின் அவல நிலைபற்றி எப்படி அறிக்கை வெளியிட்டார்களோ அதே போன்று அ.மார்க்ஸ் இலங்கை அரசுக்கு உதவியபடி செய்வார். இதுதான் அவரின் நடைமுறை.

அதாவது அ.மார்க்ஸ் தமிழ் மக்களுக்குள்ளான முரண்பாடுகளை கூர்மையாக்கும், தத்துவங்களை விதைத்தபடி, தமிழ் மக்கள் படுகின்ற துன்பங்கள் பற்றிய புலமை வாய்ந்த அறிக்கையை வெளியிடுவார். இதுதான் அவரின் இரு எதிர் முனை முகங்கள். இதைக்காட்டி கொண்டு குலைக்க ஒரு கூட்டம், நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு இவர் பின்னால் அலைகின்றது.

இங்கு தமிழ் மக்களை பிளக்கும் மகிந்த சிந்தனையும், அ.மார்க்சின் தத்துவ சிந்தனைகளும் ஒன்றுதான். இவை நேர் எதிரானவை அல்ல. தமிழ் மக்களுக்குள்ளனான சமூகப் பிளவை தத்துவார்த்த ரீதியாக ஆழமாக்குவதும், மக்களை ஒன்றிணைக்க கோரும் கோட்பாட்டை தத்துவார்த்த ரீதியாக சிதைப்பதும் தான் மார்க்சின் அரசியல். இதுதான் அரசின் அரசியலும் கூட.

இங்கு அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஒன்றிணைந்த ஒடுக்குமுறைக்கு எதிரான கோட்பாட்டுக்கும்  நடைமுறைக்கும் பதில், இவர்களின் பிளவுவாத அரசியல் தனித் தனி ஒடுக்குமுறைகளின் அணிதிரட்சியையும் அதன் ஒன்றிணைவையும் முன்வைக்கும் என்பார்கள். இந்த போலியான "முற்போக்கு" வேசத்தால் குறைந்தபட்சம் தங்களின்  பிளவுவாத அரசியலை நியாயப்படுத்த முனைகின்றவர்களாக தம்மை வெளிப்படுத்துகின்றனர். இது இலங்கையில் அம்மணமாகி இருக்கின்றது. சிங்கள - தமிழ் - முஸ்லீம் இன பிளவுவாத தனி அடையாள அரசியல் எப்படியோ, அப்படித் தான் தலித், பிரதேசவாத, ….என்ற பிளவுவாத அரசியலும்.

தமிழ் மக்களுக்குள்ளான சமூகப் பிளவையும், இலங்கை மக்களுக்குள்ளான சமூக பிளவையும் இல்லாததாக்க கூடிய அரசியலை அ.மார்க்ஸ் தன் தத்துவமாக கொண்டவர் அல்ல. ஆளும் வர்க்கங்களின் தேவைக்கு ஏற்ப பிளவுவாத அரசியலை, தத்துவார்த்த சிதைவை முன்வைப்பவர். 1994 ஆண்டு "தேசியம் கற்பிதம்" என்று அ.மார்க்ஸ் - ரவிக்குமார் எழுதிய போது, இந்தியாவில் தேசிய பிரச்சினை முதன்மை முரண்பாடாக அங்கு இருந்ததில்லை. இந்த நூல் இலங்கை தமிழரை மையப்படுத்தி, அதிலும் புலம்பெயர் இடதுசாரிய அணிதிரள்வை தடுக்கும், இந்தியா அரசின் நோக்குடன் முன்வைக்கப்பட்ட தத்துவம்.

இலங்கை தேசிய முரண்பாட்டை அடுத்து, அதில் தலையிட்ட இந்தியா அதை ஆதாரிப்பதாக காட்டி அதை சிதைத்தது. இதன் மூலம் இடதுசாரிய கூறுகளை ஒடுக்க வழிகாட்டியது இந்தியா. இந்த படுகொலைகளில் இருந்து தப்பி கொழும்பு–புலம்பெயர் தேசத்தில் ஒருங்கிணைய முனைந்த இடதுசாரிய கூறுகள் பல பத்து சஞ்சிகைகளைக் கொண்டு வந்தனர். தேசியம் சார்ந்த இந்த இடதுசாரிய சிந்தனை ஒருங்கிணைவைத் தடுக்க, அ.மார்க்ஸ் "தேசியம் கற்பிதம்" என்ற நூலைக் கொண்டு வந்திருந்தார். இதன் பின்னர் இந்த அடிப்படையில் தத்துவார்த்த சிதைவையும், பிளவையும், விதைக்கும் பல தத்துவார்த்த நூல்கள் வெளி வந்திருந்தன.

புலத்தில் புலிக்கு எதிரானதும், அரசுக்கும்-இந்தியாவுக்கும் எதிரானதும் ஆன அணிகளின் அரசியல் ஒருங்கிணைவை இது தடுத்து நிறுத்துவதில் வெற்றிபெற்றது. புலிகள் முள்ளிவாய்க்காலில் அழிந்த போது, தமிழ் மக்களிடம் மாற்று அரசியல்  எதுவும் இருக்கவில்லை. இது எற்பாடாத வண்ணமான அரசியலையே அ.மார்கஸ் தன் பங்கு செய்து வந்தார். அவரின் இந்த புலம்பெயர் செல்வாக்கு எப்படிபட்டது என்பதை புரிந்து கொள்ள, "மார்க்சியம்" பேசும் நாவலனின் நடத்தை உதவும். அவர் மீண்டும் தீடிர் அரசியலுக்கு வந்த போது, தான் எழுதிய நூலை அ.மார்க்சின் முன்னுரையுடன் தான் கொண்டு வந்திருந்தார். அந்தளவுக்கு புலத்தில் தீடிர் அரசியல் வருகைக்கு அ.மார்க்ஸின் உதவியும் அறிமுகமும் நாவலனுக்கு தேவைப்பட்டது.

இன்று அரசியல் விழிப்புணர்வு இலங்கை மண்ணில் கூர்மை அடைந்து இருக்கின்றது. இந்த வகையில் அதை சிதைக்க, அ.மார்க்ஸ் தேர்ந்தெடுத்து களமிறக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசின் புனர்வாழ்வு பெறதா கருணா, பிள்ளையான், கேபி.. போன்று, அரசின் தயவில் புனர்வாழ்வு பெறாத அரசியல் இலக்கிய புலிப் பிரமுகர்களின முனைப்புடன் அ.மார்க்ஸ் களமிறங்கி உள்ளார். புனர்வாழ்வு பெற்று அரசுக்கு எற்ற புனர்வாழ்வு இலக்கியம் செய்வர்கள் புடை சூழ, பிரமுகர்களின் பின்புலத்தில் அ.மார்க்ஸ் தத்துவ கோட்பாடு சிதைவை இலங்கையில் விதைக்கும் பணியில் இறங்கியுள்ளார். அரசின் இந்த நோக்கத்தை பூர்த்தி செய்யும் அரசியல் பணியை தான், அ.மார்க்ஸ் தொடங்கியுள்ளார். அரசின் புனர்வாழ்வுக்கே செல்லாத புலி இலக்கிய – அரசியல் பிரமுகர்களும், அரசின் புனர்வாழ்வு பெற்ற கூட்டமும் முன்னின்று இதை வழிகாட்டுகின்றது. இதற்கு புலத்தில் உள்ள அரசியல் - இலக்கிய பிரமுகர்களும்  சேர்ந்து, அரசின் இந்த வேலைத் திட்டத்துக்கு ஏற்ப பாலம் போட்டுக் கொடுக்கின்றனர். பிளவுவாத கோட்பாடுகளையும், ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைவை தடுக்கின்ற கோட்பாடுகளையும் இனம் கண்பது அவசியம். நடைமுறையில் போராடுவதை மறுக்கின்ற, மக்களை அமைப்பாக்குவதை மறுக்கின்ற, இலக்கிய-அரசியல் பிரமுகர்களை நாம் இனம் காணவேண்டும். இந்தவகையில் இந்த நோக்கில் அ.மார்க்ஸின் அரசியல் பின்னணியையும், புலத்தில் இருந்து மண் வரை மூடிமறைத்து அரசின் திட்டத்திற்கேற்ப முன்னெடுக்கப்படுகின்ற  இலக்கிய – அரசியலையும் நாம்  இனம் காணவேண்டும். இந்த அபாயகரமான இந்த எதிர்புரட்சி அரசியலை மக்களுடன் நின்று போராடும் சக்திகள் இன்று இனம் கண்டு முறியடிக்க ஒன்றிணைய வேண்டும். இதுதான் இந்த வரலாற்று சூழல் எமக்கு இட்ட பணியாகும்.

பி.இரயாகரன்

09.07.2012

அ.மார்க்ஸ் தொடர்பான கட்டுரைகள்

1.தமிழின அழிப்புக்கு உதவும் அ.மார்க்ஸ்சின் யாழ்பாண வருகையும் , தமிழினியின் புனர்வாழ்வும் - நாகலிங்கம் சற்குணன்

2."பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும்" அ.மார்க்ஸ்

3.வெள்ளைத்திமிர் என்ற பெயரில் கற்பிக்கும் அந்தோனிசாமி மார்க்சின் கறுப்புத்திமிர்

4.அ.மார்க்ஸ் எந்த வர்க்கத்தின் பிரதிநிதி அவரை அழைத்துக் கூடிக் கூத்தடிப்போர் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள்

5.மக்களின் அவலங்களின் மீது பிழைப்பு நடத்துவோர் யார்?

6.அ.மார்க்ஸ், ரவிகுமார்.. அனேகமாக எல்லா பின்நவீனத்துவ வாதிகளும் பிழைப்புவாதிகளே! : மருதையன்

7.பேரினவாதத்துக்கு விளக்கு பிடிக்கும் அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பல்

8.தலித் தேசியத்துக்கு எதிரானது என்று கூறுவதற்காக, ஒரு தலித்விரோத மாநாடு

9.தேசியத்தை கற்பிதம் என்பவன் யார்?

10.இனிநாம் நிறப்பிரிகையினர் "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற கோட்பாட்டை ஏன் உயர்த்துகின்றனர் எனப் பார்ப்போம்.

11." தேசியம் ஒரு கற்பிதம் "தொடர்பான புரட்சிகர இயங்கியல் ஆய்வு

12.தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல

..

Last Updated on Monday, 09 July 2012 06:50