Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் புருலியா ஆயுதக் கடத்தல்: “ரா”வின் சதிச்செயல் அம்பலமாகியது

புருலியா ஆயுதக் கடத்தல்: “ரா”வின் சதிச்செயல் அம்பலமாகியது

  • PDF

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பு  அதாவது, 1995 டிசம்பர் 17ஆம் நாளன்று மே.வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விமானத்தின் வழியே பாராசூட் மூலம் ஒரு மர்ம கும்பலால் பெட்டி பெட்டியாக நள்ளிரவில் ஆயுதங்கள் போடப்பட்டன. ஏகே47, ஏகே56 ரக அதிநவீன துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், ஏவுகணைத் தாங்கிகள், டாங்கி எதிர்ப்புக்குண்டுகள், கையெறி குண்டுகள் மற்றும் பிற போர்க்கருவிகள் கிராமங்களில் விழுந்து நாடெங்கும் இச்சம்பவம் பரபரப்பானதால், மையப் புலனாய்வுத் துறைமூலம் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. பாக். உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் சதி என்றும், மே.வங்கத்தில் இயங்கிய ஆனந்தமார்கி பயங்கரவாத கும்பலுக்கு வந்த இரகசிய ஆயுதங்கள் என்றும் பலவாறாக கூச்சல் போட்டது, அன்றைய நரசிம்மராவ்அரசு.

 

 

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்த லாட்வியா நாட்டைச் சேர்ந்த இந்த விமானத்திலிருந்து ஆயுதங்கள் இரகசியமாகப் போடப்பட்டுள்ளன. பாகிஸ்தானிலிருந்து டிசம்பர் 17 அன்று பிற்பகலில் புறப்பட்ட இந்த விமானம், அன்று மாலையில் வாரணாசியில் தரையிறங்கி, பின்னர் இரவு 10 மணியளவில் கொல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றபோது, இடையில் புருலியாவில் ஆயுதங்களைப் போட்டுவிட்டுச் சென்றுள்ளது. பின்னர் இந்த விமானம், டிசம்பர் 18 அன்று கொல்கத்தாவிலிருந்து தாய்லாந்திலுள்ள புகேட் நகருக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு டிசம்பர் 21 அன்று சென்னையில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு நள்ளிரவில் மும்பைக்குப் புறப்பட்டுச்சென்ற போதுதான், நடுவானில் இந்த விமானத்துக்கு எச்சரிக்கை தரப்பட்டு இந்திய அரசால் கட்டாயமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.

விமானத்திலிருந்த இக்குற்றக் கும்பலின் முக்கிய புள்ளியான டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கிம் டேவி என்பவன், தரையிறக்கியதற்கான கட்டணத்தை விமான நிலைய அதிகாரிகளிடம் செலுத்திவிட்டு வருவதாகக் கூறிவிட்டு தப்பியோடிவிட்டான். விமானத்திலிருந்த பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் பிளீச், மற்றும் 5 லாட்விய நாட்டினர் கைது செய்யப்பட்டனர். இந்த விமானம் இந்தியாவில் பறக்க அனுமதி பெற்றுத் தந்த டெல்லியில் தனியார் சரக்கு விமான நிறுவனத்தை நடத்திவந்த வர்த்தகர்கள், அந்நிய நிதியுதவி பெற்று இயங்கிவந்த மதவெறி பயங்கரவாத அமைப்பான மே.வங்கத்தின் ஆனந்தமார்கி இயக்கத்தினர் உள்ளிட்டு 16 பேர் மீது மையப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

2000வது ஆண்டு பிப்ரவரியில், இந்த வழக்கின் மீதான விசாரணை முடிந்து, கைது செய்யப்பட்ட பீட்டர் பிளீச் மற்றும் 5 லாட்விய நாட்டினருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர்,ரஷ்ய வல்லரசின் நிர்ப்பந்தம் காரணமாக பயங்கரவாதச் சதிக்குற்றம் சாட்டப்பட்ட 5 லாட்வியர்கள் அரசுத் தலைவரால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அதன் பிறகு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தம் காரணமாக 2004இல் பீட்டர் பிளீச் விடுவிக்கப்பட்டான். தப்பியோடித் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்பட்ட கிம் டேவி, 2001ஆம் ஆண்டில் டென்மார்க் ஆட்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டான். இருப்பினும்,மைய அரசு அவனை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி உருப்படியாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மிகத் தாமதமாக மையப் புலனாய்வுத்துறை டென்மார்க் அரசிடம் தாக்கீது செய்த பிறகு, ஆயுதங்கள் போட்டதில் தொடர்பு உள்ளதாக இந்திய நீதி மன்றத்தில் தீர்ப்பு எழுதப்பட்டால், குற்றம் சாட்டப்பட்ட கிம் டேவிக்கு மரண தண்டனை அளிக்கக் கூடாது என்று டென்மார்க் அரசு நிபந்தனை விதித்தது.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கிம் டேவி, காங்கிரசு அரசுக்கும் இந்திய உளவு நிறுவனமான "ரா' வுக்கும் தெரிந்தேதான், அவற்றின் ஒப்புதலோடுதான் ஆயுதங்கள் போடப்பட்டதாக வெளிப்படையாக அறிவித்துள்ளான். மும்பை விமான நிலையத்திலிருந்து தப்பித்து நேபாளம் வழியாக டென்மார்க் சென்றதாகவும், சில அதிகாரிகள் இதற்கு உதவியதாகவும் கூறியுள்ளான். சில இந்திய உளவுத்துறை அதிகாரிகள் இந்த ஆயுதங்கள் போடும் விவகாரத்தில் உடந்தையாக இருந்து, பின்னர் அதை மூடிமறைக்கத் துணையாக இருந்ததாக பீட்டர் பிளீச்சும் தெரிவித்துள்ளான். இருப்பினும், இவையனைத்தும் பொய்கள் என்று இந்திய உளவுத்துறை அமைப்பான "ரா' மறுக்கிறது.

ஆனால், கராச்சியில் இந்த விமானம் நின்றிருந்த போதே சர்வதேச போலீசு அமைப்பு (இன்டர்போல்) மூலம் இந்திய உளவு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.வாரணாசி மற்றும் கொல்கத்தா விமான நிலையரேடார் திரையில் இந்த விமானம் மறைந்து போனது பற்றி விமான நிலைய அதிகாரிகள் கேள்வி எழுப்பவில்லை. மும்பை விமான நிலையத்திலிருந்து கிம் டேவி எப்படித் தப்பித்தான் என்பதைப்பற்றி இன்றுவரை மைய அரசு வாய்திறக்க மறுக்கிறது.

இவையனைத்தும் புருலியா ஆயுத நடவடிக்கையை ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம் மற்றும் உளவுத்துறையின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் ஒருக்காலும் நடத்தியிருக்கவே முடியாது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்திய உளவு நிறுவனமான "ரா', அனைத்துலகக் கிரிமினல் குற்றக் கும்பல்களின் துணையோடு, இந்தியாவில் ஏதொவொரு துரோக கைக்கூலி அமைப்புக்கு ஆயுதங்களைக் கொடுத்து பயங்கரவாதததைத் தூண்டி விடுவது, பின்னர் ஆயுதங்களைக் கைப்பற்றுவதாக நாடகமாடுவது, அந்நிய சதி  நாட்டுக்குப் பேராபத்து என்று பீதியூட்டி, அம்மாநிலங்களில் நிரந்தரமாக இராணுவத்தை நிறுத்தி அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது என்கிற சதியின் ஒரு அங்கம்தான் இது என்று சந்தேகிக்க காரணங்கள் வலுவாகவே உள்ளன.

அன்று, அசாமில் போடோ இன மக்களின் போராட்டத்தை பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொண்டு அங்கு அரசு பயங்கரவாத ஆட்சியை நிறுவும் நோக்கத்துடன் "ரா' இச்சதியை செய்திருக்கலாம். அல்லது, வடகிழக்கு மாநிலங்களில் ஏதோவொரு பயங்கரவாதச் சதியை அரங்கேற்றி நிரந்தரமாக இராணுவ ஆட்சியை நிறுவும் நோக்கத்துடன் இரகசியமாக ஆயுதங்களை இறக்கியிருக்கலாம். இரகசியமான இடத்தில் ஆயுதங்களைப் போடுவதற்குப் பதிலாக, அக்குற்றக் கும்பல் தவறுதலாக கிராமங்களில் போட்டு இந்த விவகாரம் வெளியே தெரிந்து விட்டதால், வேறு வழியின்றி விசாரணை நாடகமாடி குற்றவாளிகளைத் தப்புவிக்க ஏற்பாடுகள் நடந்துள்ளதையே கடந்த 15 ஆண்டுகால இழுத்தடிப்பு நிரூபிக்கிறது. டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் கிம்டேவி வெளிப்படையாக இருந்தபோதிலும், அவனைத் தேடிக் கண்டுபிடிப்பதாகக் கூறிக் கொண்டு உளவுத்துறை உல்லாச சுற்றுலா போய்க்கொண்டு மக்களின் வரிப்பணத்தைத் தின்று கொழுப்பதுதான் நடந்துள்ளது. கிம்டேவியை இந்தியாவுக்குக் கொண்டுவர டென்மார்க் நீதிமன்றத்தில் காலாவதியாகிப்போன கைது ஆணையை சி.பி.ஐ. தாக்கல் செய்த முட்டாள்தனம் அம்பலமாகி, பின்னர் கொல்கத்தாவிலிருந்து இப்போது புதிய ஆணையைப் பெற்று அதனை டென்மார்க் நீதி மன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. கடுமையாகவும் நுணுக்கமாகவும் துப்பறிந்து குற்றவாளிகளைக் கிடுக்கிப் பிடிபோட்டு மடக்கிப் பிடிப்பதாகச் சித்தரிக்கப்படும் இப்பேர்பட்ட சி.பி.ஐ.தான், 2ஜி ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் முதலானவற்றை விசாரித்து வருகிறது. இதிலிருந்தே சி.பி.ஐ. விசாரணையின் யோக்கியதையைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்நிய சீர்குலைவு சக்திகளால் நாட்டுக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது என்று தொடர்ந்து கூப்பாடு போடுகிறது, இந்திய அரசு. உண்மையில், நாடாளுமன்றத்துக்கோ, நாட்டு மக்களுக்கோ தெரியாமல் பயங்கரவாதச் சதிகளில் ஈடுபட்டுவரும் இந்திய அரசு மற்றும் உளவுத்துறை அமைப்புகளால்தான் இந்தப் பேராபத்து ஏற்பட்டுள்ளது என்பதை புருலியா விவகாரம் நிரூபித்துக் காட்டுகிறது.

• மணி