Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் ரூபர்ட் முர்டோச் : ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழ நரி

ரூபர்ட் முர்டோச் : ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழ நரி

  • PDF

ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், "வால் ஸ்டிரீட் ஜர்னல்', "டைம்ஸ் ஆப் லண்டன்', "நியூயார்க் போஸ்ட்' உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் திரைப் பட நிறுவனம்... இத்தனைக்கும் சொந்தக்காரரான உலக ஊடக சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தி ரூபர்ட் முர்டோச் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.

 

 

ஊடக சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை என்பவைகளின் இலக்கணத்தைப் படைத்து மனித குலத்துக்கு வழங்கியதாக பீற்றிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் செய்தி ஊடகங்கள் அதிர்ச்சியில் வீழ்ந்திருப்பது போன்றதொரு போலித் தோற்றத்தைக் காட்டுகின்றன. நடக்கக் கூடாததும், நடக்கவே முடியாததும் நடந்து விட்டதைப் போன்ற ஒரு பாசாங்கு!

ரூபர்ட் முர்டோச்சின் ஊடக சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த "நியூஸ் ஆப்த வோர்ல்ட்' எனும் பத்திரிகை போலீசுக்கு இலஞ்சம் கொடுத்து, லண்டன் குண்டு வெடிப்பு மற்றும் அமெரிக்காவில் நடந்த 9ஃ11 தாக்குதல் போன்றவற்றில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடைய தொலை பேசிகளை ஒட்டுக் கேட்டுள்ளது என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது.

அது மட்டுமின்றி, இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் தொலைபேசிகளையும் கூட முர்டோச்சின் பத்திரிகை கள்ளத்தனமாக ஒட்டுக் கேட்டிருக்கிறது.ராஜ குடும்பத்தின் அந்தரங்கத்திலேயே மூக்கை நுழைத்து விட்டார் ரூபர்ட் முர்டோச் என்று போட்டி சாம்ராஜ்ஜியங்களைச் சேர்ந்த ஊடகங்கள் சாமியாடிக் கொண்டிருக்கின்றன.

இங்கிலாந்தில் ரூபர்ட் முர்டோச்சின் மேல் நடந்து வரும் விசாரணைகளைப் போலவே, அமெரிக்கப் புலனாய்வுத் துறையும் தங்கள் நாட்டில் முர்டோச்சின் ஊடகங்கள் பின்பற்றிய முறைகேடான விவகாரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறியிருக்கிறது.

முதலாளித்துவ தனிநபர் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதல் போன்று தோற்றமளிக்கும் இந்த நிகழ்வுகள் உண்மையில் எம்.ஜி.ஆர்.  நம்பியார் கத்திச் சண்டை ரகத்தைச் சேர்ந்தவையே. புலனாய்வு என்ற பெயரில் மஞ்சள் மசாலாக்களை கடைவிரிக்கும் இதழியலுடன் இவை நேரடித்தொடர்பு கொண்டவை.

கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனைச் சேர்ந்த மில்லி டோலர் என்கிற 13 வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போகிறார். முர்டோச்சிற்கு சொந்தமான "நியூஸ் ஆப் தெ வோர்ல்ட்' பத்திரிகையின் சார்பாக களமிறங்கும் தனியார் துப்பறியும் நிபுணர் க்ளென் முல்கெய்ர், மில்லியின் தொலைபேசியை கள்ளத்தனமாக இயக்கி,  மில்லி எங்கோ இருக்கிறார் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். மில்லியின் குடும்பமும் இதை நம்புகிறது.

போலீசாரும், இதையே ஆதாரமாக வைத்து தமது புலனாய்வை தவறான திசையில் தொடருகிறார்கள். கடைசியில் அதே ஆண்டு நவம்பர் மாத வாக்கில் மில்லியின் சிதைந்த உடற்பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அதுவரை அக்குடும்பம் மில்லி உயிரோடு இருப்பதாகவே நம்பிக் கொண்டிருக்கிறது. போலீசாரும் அதே கோணத்தில் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே இக்கொலைச் சம்பவம் குறித்தும் விசாரணைகள் பற்றியும் "நியூஸ்ஆப் த வோர்ல்ட்' பத்திரிகை பரபரப்பாக எழுதுகிறது.

அடுத்து 2005ம் ஆண்டு நவம்பர் வாக்கில் இளவரசர் வில்லியம்ஸின்மூட்டு வலி பற்றிய ஒரு செய்தியும் "நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பத்திரிகையில் வெளியாகிறது. மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த மூட்டு வலி விசயம் வெளியானதையடுத்து அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து போலீசார், இது குறித்து விசாரணை ஒன்றை நடத்துகிறார்கள். 'நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பத்திரிகை தொலைபேசிகளை திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கிறது என்பது தெரிய வந்தாலும், அது நிரூபிக்கப்படவில்லை. 2002ல் இப்பத்திரிகை இழைத்த குற்றம் 2011 ஜூலையில்தான் ஆதாரபூர்வமாக பிடிபடுகிறது.

முர்டோச்சின் பத்திரிகை பல்வேறு தருணங்களில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தும், சட்டவிரோதமான வகையில் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டும் செய்திகளைத் திரட்டியுள்ளது என்பது இச்சம்பவங்களைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக வெளியே வருகிறது. லண்டன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடைய தொலை பேசிகளும், 9ஃ11 இரட்டை கோபுரத் தகர்ப்பில் கொல்லப்பட்ட பிரிடிஷ் பிரஜைகளின் உறவினர்களின் தொலைபேசி உரையாடல்களும் கூட ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கின்றன என்று தெரிய வருகிறது.

தொடர்ந்து நடந்த விசாரணைகளில் "நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பத்திரிகை லண்டன் போலீசின் கணினிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் மொத்தத்தையும் லஞ்சம் கொடுத்து கள்ளத்தனமாக கைப்பற்றியிருக்கிறது என்ற உண்மையும் அம்பலமாகிறது. அதாவது, இங்கிலாந்தின் குடிமக்கள் யார் எப்போது எந்த வழக்கில் சிக்கியிருந்தாலும், அந்த விவரம் இப்போது முர்டோச்சினுடைய பத்திரிகையின் கைக்கு வந்துவிட்டது.

1969இல் "நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பத்திரிகையை விலைக்கு வாங்கிய முர்டோச், அதனை டேப்லாய்ட் வகையைச் சார்ந்த ஒரு பத்திரிகையாக மாற்றினார். வேறு விதமாகச் சொன்னால் அது ஒரு மஞ்சள் பத்திரிகை. முர்டோச்சுக்கே சொந்தமான இன்னொரு வாரப்பத்திரிகையான "தி சன்' என்ற மஞ்சள் பத்திரிகையைக் காட்டிலும் கேவலமான பத்திரிகை இது. உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களின் படுக்கையறைச் செய்திகள், கள்ள உறவு பற்றிய கிசுகிசுக்கள் ஆகியவைதான் இப்பத்திரிகையின் மூலதனம்.

இன்றைக்கு விவகாரம் அம்பலமானவுடன் மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்கள் காட்டும் ஆச்சரியம்தான் உண்மையில் ஆச்சரியப்படத்தக்கது. ஏதோ ரூபர்ட் முர்டோச் இத்தனை காலமாக யோக்கியமாகத் தொழில் செய்து வந்தவர் போலவும், இப்போதுதான் அவரது ஊழல்கள் வெளியாகியுள்ளது போலவும் இந்தப் பத்திரிகைகள் அங்கலாய்க்கின்றன.

ஆனால், ரூபர்ட் முர்டோச் தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியதிலாகட்டும், தனது கிளைகளான ஒவ்வொரு ஊடகங்களையும் வெற்றிகரமாக நடத்தியதாகட்டும்  அனைத்திலும் அவர் பின்பற்றியது பச்சை அயோக்கியத்தனமான வழிமுறைகள் தானென்பது அனைவருமே அறிந்து வைத்திருந்த "ரகசியம்'தான்.

ஐந்து கண்டங்களையும் தழுவி பல்வேறு நாடுகளில் 175க்கும் மேற்பட்ட செய்தித் தாள்கள், நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள், இணையச்சேவை வழங்கும் நிறுவனங்கள், உலகெங்கும் செயற்கைக்கோள் தொலைகாட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் என்று பரந்து விரிந்து கிடக்கும் ரூபர்ட் முர்டோச்சின் ஊடக சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகள் நமது கற்பனைகளை விஞ்சிய ஒன்று. 1953ல் ஆஸ்திரேலியாவில் அவரது தந்தையான கெயித் முர்டோச்சின் ஊடக நிறுவனத்தின் பொறுப்பிற்கு வரும் ரூபர்ட் முர்டோச், அடுத்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் அசைக்கமுடியாத ஒரு மீடியா மன்னனாகிறார்.

பின்னர், மார்கரெட் தாட்சரின் முழுமையான ஆதரவோடு இங்கிலாந்தைச் சேர்ந்த "நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பத்திரிகையின் பங்குகளை வாங்குவதன் மூலம் அப்பத்திரிகையைக் கைப்பற்றுகிறார். எண்பதுகளின் துவக்கத்தில், "நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பத்திரிகையின் வழமையான வடிவத்தை உதறிவிட்டு அதனை ஒரு டேப்லாய்ட் வகைப்பட்ட பத்திரிகையாக மாற்றுகிறார்.

செய்திப் பத்திரிகை என்பதன் கடமை செய்திகளைச் சொல்வது எனும் இலக்கணத்தை உடைத்து, செய்திகளினூடாக மசாலாத் தூவப்பட்ட மலினமான கிசுகிசுக்களை விற்பனை செய்ததே முர்டோச்சின் பிரம்மாண்ட வளர்ச்சியின் அடிநாதமாக இருந்தது. இது துவக்கம். காலம் செல்லச் செல்ல,வெறும் கிசுகிசுக்கள் மற்றும் வலதுசாரி அரசியலின் வெறிகொண்ட துவேசப் பிரச்சாரங்கள் மட்டுமே செய்திப் பத்திரிகையின் முதன்மைச் செய்திகளாயின.

சினிமாத் துறையினர், அரசியல்வாதிகள் போன்ற மேட்டுக்குடியினரின் கள்ளக்காதல் விளையாட்டுக்கள் பற்றிய கிசுகிசுக்களைத் தேடி அவரது பத்திரிகையாளர்கள் அலையும் தேவை இருக்கவில்லை. திரைப்பட, தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனங்களையும் முர்டோச்சே நடத்தி வந்ததால், பிரபலங்கள் தேடி வந்தனர்.

முர்டோச் தொடங்கி வைத்த வழி முறைகளைப் பிற போட்டி பத்திரிகைகளும் பின்பற்றத் துவங்கியதால், ஆபாசத்தை விற்பதில் அவர்களுக்குள்ளேயே கழுத்தறுப்புப் போட்டிகள் துவங்கின. 'கதைகள்' கிடைக்காத சந்தர்பங்களில் எதேச்சையாக நடந்து விடும் குற்றச் சம்பவங்களை இட்டுக் கட்டி மசாலாத் தடவி வெளியிடுவது, நடந்தே யிராத செய்திகளை உருவாக்குவது, பிரபலங்களின் படுக்கையறை விவகாரங்கள், கள்ள உறவுகள் ஆகியவற்றைத் தனியார் உளவு நிறுவனங்கள் மூலம் துப்பறிந்து வெளியிடுவது, அதி நவீன புகைப்படக் கருவிகள் மூலம் அவர்களது அந்தரங்கங்களைப் படம் பிடித்துப் போடுவது போன்ற கீழ்த்தரமான வழிமுறைகளைக் கையாண்டனர். இத்தகைய புகைப்பட நிருபர்கள் "பாப்பராஸி' என்றழைக்கப்பட்டனர்.

பிரபலங்களின் அரை அம்மண, அம்மணப் படங்கள், கள்ளக் காதல்கள் ஆகியவற்றை படமெடுத்து பத்திரிகைகளுக்கு விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தொழில், ஒரு மாபெரும் "சுயதொழிலாக' உலகமெங்கும் பரவத்தொடங்கியது. பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் காதல் விவகாரத்தை படம் பிடிப்பதற்காக பாப்பராஸிகள் அவரைக் காரில் துரத்த, அவர்களிடமிருந்து தப்புவதற்காக விரைந்த டயானாவின் கார் கவிழ்ந்து டயானா இறந்ததும், உடனே பாப்பராஸிக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பற்றிய விவாதத்தில் பத்திரிகை உலகம் இறங்கியதும் 90களின் செய்திகள்.

தரத்தில் காமக் கிளுகிளுப்புக்கு இணையானதும் அதே அளவுக்கு சந்தையில் விலை போகக் கூடியதுமான பண்டம்  அச்சத்தையும் வெறுப்பையும் தூண்டும் துவேசப் பிரச்சாரம். ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வையும் அச்சத்தையும் விசிறி விட்டதில் முர்டோச்சின் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

முர்டோச்சின் ஊடக நிறுவனங்கள் தாம் இயங்கிய நாடுகள் அனைத்திலும், அங்கிருந்த வலதுசாரி பாசிஸ்டு கட்சிகளையும் அதன் தலைவர்களையுமே உயர்த்திப் பிடித்தன. இசுலாமியர்கள், இசுலாமிய நாடுகளின் மீது வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டதில் முர்டோச்சின் ஊடகங்கள் தலைமைப் பாத்திரம் ஆற்றின. இந்த அச்சமும் வெறுப்புணர்வும்தான் இன்று வரையில் ஈராக்கில் சிதறும் உடல்கள் மேற்குலக மக்களின் மனசாட்சியை உலுக்காமல் இருப்பதற்கான உளவியல் ரீதியிலான அடிப்படை ஒன்றைத் தோற்றுவித்துள்ளது.

இங்கே தலித்துகள், இசுலாமியர்கள், தமிழ் உணர்வாளர்கள், கம்யூனிஸ்டுகள் மீதான வெறுப்புணர்வை "தினமலர்' திட்டமிட்டே எப்படி தோற்றுவிக்கிறதோ, அதேபோல் மேற்கில் இசுலாமிய வெறுப்பை விதைத்ததில் முர்டோச்சின் ஊடக நிறுவனங்கள் பெரும் பங்காற்றியுள்ளன.

இரண்டாயிரமாவது ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே தனது பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகளில், 'இதோ சதாம் அணு ஆயுதம் தயாரிக்க அவரது விஞ்ஞானிகளிடம் சொல்லி விட்டார்', "இதோ ஈராக்கில் அணு குண்டு பரிசோதனை நடந்து விட்டது' என்பது போன்ற பச்சை புளுகுகளை அவிழ்த்து விடத் துவங்கினார் முர்டோச்.

சதாம் உசேனால் இந்த பூமிக்கே ஆபத்து என்பது போலெல்லாம் விரிந்த அந்தக் கதைகள் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த சாதாரண மக்களின் மனங்களில் அவரை சாத்தானின் அவதாரம் என்று பதிய வைத்தது. சதாம் அழிக்கப்பட வேண்டியவர் என்றும், இந்தப் போரினால் நாகரீக உலகத்து மக்களின் நலவாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் அம்மக்கள் நம்பும் அளவுக்கு உளவியல் ரீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் மூலம் போருக்கு ஆதரவாக உலகெங்கிலும் ஒரு பொதுக்கருத்தை உண்டாக்குவதில் முர்டோச் வெற்றியடைந்தார்.

ஈராக்கின் மேலான யுத்தம் துவங்கியதும் ஜார்ஜ் புஷ்{க்கும், டோனி பிளேருக்கும் தனது முழுமையான ஆதரவைத முர்டோச் வெளிப்படையாகத் தெரிவித்தார். அமெரிக்கா இதுகாறும் நடத்தியுள்ள போர்களைப் பற்றிய செய்திகளை சாகசகக் கதைகள் போல் விவரித்து, போர் என்பது மனிதர்கள் கொல்லப்படும் கொடூர நிகழ்வு என்பதாக இல்லாமல் ஒரு சாகச விளையாட்டு என்பதாகப் பொதுபுத்தியில் பதியச் செய்தார். சர்வதேச அளவிலான பிற முதலாளித்துவ பத்திரிகைகளும் இதே பாணியில் தான் இயங்கின என்றாலும், முர்டோச்சின் பத்திரிகைகளே இதில் முன்னணியில் நின்றன.

போரின் முடிவில் அணு ஆயுதங்கள் ஏதும் ஈராக்கில் கண்டிபிடிக்கப் படவில்லை. ஆனால், முர்டோச்சின் பத்திரிகைகள் உள்ளிட்டு அந்தக் கதைகளைப் பரப்பிய எந்த முதலாளித்துவ ஊடகமும், இத்தகையதொரு பொய்யான பொதுக்கருத்தை உருவாக்கியதற்காக தண்டிக்கப்பட வேண்டும் என்று முதலாளித்துவ அறிஞர்களோ மேற்குலக ஜனநாயகவாதிகளோ கருதவில்லை.

போரில் கொல்லப்பட்ட  ஈராக்கியர்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம். இன்று அந்த நாடே வாழ்க்கையிழந்து நிற்கிறது. எனினும் முர்டோச் வெளியிட்ட செய்திகளுக்கு என்ன ஆதாரம் என்றோ, அதன் விளைவுக்கு என்னபதில் என்றோ யாரும் கேட்கவில்லை.

பல்வேறு நாடுகளின் ஆளும் வர்க்கத்தோடும் அதிகார வர்க்கத்தோடும் முர்டோச் கொண்டிருந்த உறவும், செல்வாக்கும், அவரது மீடியா சாம்ராஜ்ஜியத்தின் அபரிமிதமான வீச்சும் அவருக்கு வரம்பற்ற பலத்தையும் திமிரையும் அளித்திருந்தன.

ஈராக் மட்டுமல்லாமல், சிரியா, லிபியா, பாலஸ்தீனம் என்று அமெரிக்காவுக்கு அடங்காத இசுலாமிய நாடுகள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் விஷத்தைக் கக்கி, உலகெங்கும் மக்கள் மத்தியில் இசுலாமிய விரோதத்தை ஊட்டி வளர்க்கும் முர்டோச்சின் பத்திரிகை நிறுவனத்தில் இரண்டாம் பெரிய பங்குதாரர் சவூதி இளவரசர் அல்லாவி பின்தலால். (மதமா  வர்க்கமா என்கிற முரண்பாடுகள் எழும் போது முதலாளித்துவவாதிகள் எப்போதும் சரியான நிலையையே எடுக்கிறார்கள் என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டு).

தற்போது முர்டோச்சின் வழிமுறைகள் அம்பலமாகியிருப்பினும் இதெல்லாம் முதலாளித்துவ உலகத்திற்கு புதிய செய்தியில்லை. இன்றைக்கு முர்டோச்சைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் பிற முதலாளித்துவ ஊடகங்கள் பின்பற்றுவதும் இதே வழிமுறைகளைத்தான். ஆயினும், தற்போது எழுந்திருக்கும் சலசலப்புகளால் 168 வருடங்களாக வெளியாகி வந்த "நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பத்திரிகையை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு முர்டோச் ஆளாகியுள்ளார். விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டு கைகட்டி நிற்கிறார்.

எப்பேர்பட்ட கொம்பனாக இருந்தாலும் அந்தத் தவறுக்கு தண்டனை உண்டு என்பதைப் போன்றும், மேற்கு நாடுகளில் நிலவும் தனிமனித உரிமை போன்ற ஜனநாயக விழுமியங்கள் இன்னமும் செத்துப் போகாமல் இருப்பதன் ஒரு சமகால சாட்சிதான் முர்டோச் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது என்பது போலவும் சர்வதேச ஊடகங்கள் எழுதுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களும் அவ்வாறே நம்ப வைக்கப்படுகிறார்கள். உப்புத் தின்றவன் தண்ணி குடிப்பான்; தப்புசெய்தவன் தண்டனை அனுபவிப்பான். படம் முடிந்தது. ரசிகர்கள் வீட்டுக்குக் கிளம்பலாம் என்று முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு ஒரு 'சுபம்' போட்டு முடிக்கப் பார்க்கின்றன.

ஆனால், இது அத்தனை சுலபத்தில் கடந்து போகும் ஒரு பிரச்சினையல்ல. முர்டோச்சின் பாணியும் வழிமுறைகளும் அவருக்கு மட்டுமே சொந்தமானதாக இல்லை என்பது ஒரு புறம் இருக்க, இன்றைக்கு "குற்றங்கள்' என்று அவர்மேல் சுமத்துப்பட்டுள்ள செயல்கள் எதுவுமே அவர் புரிந்துள்ள உண்மையான குற்றங்களின் நிழலைக் கூடதொடவில்லை என்பதே உண்மை.

அரச குடும்பத்தையே ஒட்டுக்கேட்டது, ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களின் தனிமனித உரிமையில் கைவைத்தது, போன்ற சில்லரை அத்து மீறல்கள்தான் இன்று இங்கிலாந்திலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் அதிர்ச்சியையும் சத்தியாவேசத்தையும் தூண்டியுள்ளது. ஈராக் பற்றி வெளியிட்ட புளுகுச் செய்திகளுக்காக அவரைத் தண்டிக்க வேண்டும் என்று எவரும் கோராததற்குக் காரணம், அது ஏகாதிபத்தியங்களின் விருப்பம் மற்றும் நலன் சார்ந்தது. இந்த அடிப்படையில் இருந்துதான் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்களுடைய உயிர்களை விட அரச குடும்பத்தினர் மற்றும் தனிநபர்களின் 'ப்ரைவசி' மற்றும் தனிநபர் உரிமைகளை மேன்மையானதாகச் சித்தரிக்கும் அவர்களின் விசாரணைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமையை இன்னமும் முர்டோச் குடும்பத்தினரே ஆக்கிரமித்துள்ளனர். மேற்கத்திய கார்ப்பரேட் நிர்வாக முறையின் பார்வையில் மிகவும் பின்தங்கியதான இந்தக் குடும்ப ஆதிக்கமும், முர்டோச்சை நோக்கி எழும் விமர்சனங்களுக்கு ஒரு கூடுதல் காரணமாக இருக்கிறது. கூக்குரல்கள் அனைத்தும் இந்தத் 'தலையை' மட்டுமே குறிவைக்கின்றன. நியூஸ் கார்ப்பரேஷன் எனும் மொத்த உடலையும் இயக்கி அதன் நாளங்களில் இரத்தமாய்ப் பாய்ந்து கொண்டிருக்கும் ஏகாதிபத்திய நலன் குறித்த விவாதங்களே எழவில்லை என்பதிலிருந்து நாம் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

மீளாத போர் வெறியில் மூழ்கிக் கிடக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு ரூபர்ட் முர்டோச்களின் தேவை தீர்ந்து விடவில்லை. சதாம் உசேனும், பின்லேடனும் ஒழிந்து விட்டார்கள். ஆனால், நாளையே வேறு ஒரு மூன்றாம் உலகநாட்டின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் துவக்குவதற்கு முன் மக்களின் பொது புத்தியைக் கட்டமைக்க வேண்டியிருக்கும். இசுலாமியர்கள் மேல் கருத்துக்களத்தில் தாக்குதல் தொடுத்து அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும். அதற்கு ரூபர்ட் முர்டோச் கட்டாயம் தேவைப்படுவார்.

அவர் தயாரித்து வழங்கிய பாசிச பிரச்சார ஆயுதத்தின் பணி இன்னமும் நிறைவுறவில்லை. இறுகும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வை ஏகாதிபத்தியங்கள் போர்களினூடேதான் தேடிச் செல்லும். அப்போது பொருத்தமான கதைகள் விதைக்கப்பட வேண்டும்; வில்லன்கள் குறித்த அச்சமூட்டும் வர்ணனைகள் செய்யப்பட வேண்டும்; மக்களின் பொதுக்கருத்தை நெம்பிவளைக்க வேண்டும்  அதற்கு நியூஸ் கார்ப்பரேஷன் போன்ற பிரச்சார ஆயுதங்கள் வேண்டும். எனவேதான், படுக்கையறையை எட்டிப் பார்த்த ரூபர்ட் முர்டோச்சின் அநாகரீகங்கள் பரபரப்பாகப் பேசப்படும் அளவுக்கு அவரின் கொலைப் பாதகங்கள் பேசப்படுவதில்லை.

ரூபர்ட் முர்டோச் ஊடகத் துறையில் துவக்கி வைத்துள்ள போக்குகள் மேற்குலகம் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. அதன் பாதிப்புகளும், பிரதி பிம்பங்களும் உலகெங்கும் உள்ள முதலாளித்துவ ஊடகங்களின் செயல்பாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் தனியார் தொலைகாட்சி சேனல்கள் அனுமதிக்கப்பட்டு, இன்றைய தேதியில் சுமார் 600 தொலைக்காட்சி சேனல்களுக்கானலைசென்சுகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை வழங்கியிருக்கிறது.

மேற்கத்திய நாடுகளைப் போல் செய்திகளுக்கு மசாலா சேர்ப்பது, பரபரப்புக் கூட்டும்  'ஆணூழூச்டுடிணஞ் Nழூதீண்' 'உதுஞிடூதண்டிதிழூ Nழூதீண்' போன்ற கழிசடைக் கலாச்சாரங்கள் தொன்னூறுகளின் மத்தியிலிருந்து ஸ்டார் குழுமத்தால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. புதியரக உயர் நடுத்தரவர்க்கத்தினரின் நொறுக்குத் தீனிகளுக்கு இந்த பரபரப்புபாணி செய்திகள் சுவை கூட்டின.

செய்தியையும் அதன் கண்ணோட்டத்தையும் பகுத்தறிய முடியாத வண்ணம், ரூபர்ட் முர்டோச்சின் பாணியை நகலெடுத்து 'டைம்ஸ் நௌ', 'என்.டி.டி.வி.', 'ஐ.பி.என்.', 'டி.வி.9', 'ஹெட்லைன்ஸ் டுடே' என்று புற்றீசல் போல ஊடக கார்பரேட்டுகள் தோன்றின. இவர்களின் செய்திச் சந்தையின் இயக்கத்திற்கான அச்சாணி, மலிவான முறையில் உணர்ச்சியையும் பரபரப்பையும் தூண்டுவது மட்டுமே என்றான பின்னால், இதுகாறும் போலியாகவாவது தூக்கிப் பிடிக்கப்பட்டு வந்த நேர்மை, புனிதம் போன்ற பழைய விஷயங்கள் தேவையற்றதாகின.

லண்டனைச் சேர்ந்த மாணவியான மில்லி டோலரின் மரணத்தில் 'நியூஸ் ஆப் த வோர்ல்ட்' பின்பற்றிய அதே வழிமுறைகளைத்தான் தில்லியைச் சேர்ந்த ஆருஷி என்கிற பள்ளி மாணவியின் மரணத்திலும் இந்திய ஊடகங்கள் பின்பற்றின.

ரூபர்ட் முர்டோச்சின் ஊடகங்கள் உலகளவில் இசுலாமியர்கள் மீதும் இசுலாமிய நாடுகள் மீதும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றன என்றால், இந்திய முதலாளித்துவ ஊடகங்களோ இசுலாமியர்கள் மீதும் பாகிஸ்தான் மீதும் அவதூறுப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஒவ்வொரு முறை இந்தியாவில் குண்டுகள் வெடிக்கும் போதும், செய்திச் சேனல்கள் விசாரணையேதுமின்றி இசுலாமியர்களை நோக்கியும் பாகிஸ்தானை நோக்கியும் விரலைச் சுட்டுகின்றன.

முர்டோச்சின் ஊடகங்கள் சொன்ன பேரழிவு ஆயுதங்கள் பற்றிய புளுகுகள் அம்பலமானதைப் போன்றே இந்திய ஊடகங்கள் இசுலாமியர்களைக் குற்றவாளிகளாக்கிய எத்தனையோ குண்டு வெடிப்புகளின் உண்மையான காரணம் இந்துத்துவ கும்பல்தான் என்கிற உண்மை அம்பலமாகியிருக்கிறது. தனது பொய்கள் அம்பலமான போது ரூபர்ட் முர்டோச் கடைபிடித்த அதே விதமான கள்ள மௌனத்தைத்தான் இந்திய ஊடகங்களும் கடைபிடிக்கின்றன.

மேற்கில் அன்றாட வாழ்வின் குரல்வளை மேல் அமர்ந்து அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார யதார்த்தத்தை பயங்கரவாத பீதியூட்டி மடைமாற்ற முடிகிறது. இங்கே தமது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக் கொள்ள போராட்டத்தில் இறங்கியுள்ள விவசாயிகள், ஆதிவாசி மக்களின் போராட்டங்களைப் பின்தள்ளுவதற்கு பயங்கரவாதம்  மட்டுமல்ல காந்தியவாதமும் ஊடகங்களுக்குப் பயன்படுகிறது.

நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பதிலும், திசை திருப்புவதிலும், அரசியல் தலைவர்களை உருவாக்குவதிலும் அழிப்பதிலும், ஊடகங்களின் பாத்திரம் முன் எப்போதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. உணவு, உடை, பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், ரசனை, சிந்தனைமுறை உள்ளிட்ட அனைத்தையும், அதாவது நமது ஆளுமையை அடக்கி ஆள்வதில், அல்லது வளைந்து உருவாக்குவதில் ஊடக முதலாளிகளின் பாத்திரம் முன் எப்போதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்து விட்டது.

ரூபர்ட் முர்டோச் எனும் கிழவன் நமது தோளில் அமர்ந்து உத்தரவிடுகிறான். சிரிக்கவும், வெறுக்கவும், அழவும் சொல்லிக் கொடுக்கிறான். முன்னால் சென்று வழி காட்டுகிறான். பின்னால் நின்று கண்காணிக்கிறான்.

அவனைக் கூண்டில் ஏற்றிவிட்டதாகவும் தண்டிக்கப் போவதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள் பத்திரிகை சுதந்திரத்தின் காவலர்கள்.

தமிழரசன்