Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் ஊழல் தடுப்பு ஆணைய மக்கள் வரைவுச் சட்டம்: புண்ணுக்குப் புனுகு!

ஊழல் தடுப்பு ஆணைய மக்கள் வரைவுச் சட்டம்: புண்ணுக்குப் புனுகு!

  • PDF

பத்திரிகைகளும், தனியார் தொலைக்காட்சி ஊடகங்களும் கடந்த ஏப்ரல் மாதத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஆகியவற்றுக்கு இணையாக முக்கியத்துவம் அளித்து விளம்பரப்படுத்திய நிகழ்ச்சி அண்ணா ஹஸாரே தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் நடத்திய உண்ணா விரதப் போராட்டமாகத்தான் இருக்கும். "ஊழல் தடுப்பு ஆணைய மக்கள் வரைவுச் சட்டத்தை உருவாக்குவதற்கான கமிட்டியை அமைத்து, அதில் குடிமைச் சமூக அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்; அக்கமிட்டி அரசு உருவாக்கியிருக்கும் ஊழல் தடுப்பு ஆணைய வரைவுச் சட்டத்தை மட்டுமின்றி, இது தொடர்பாக ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உருவாக்கியிருக்கும் வரைவுச் சட்டத்தையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்' எனக் குடிமைச் சமூக அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகளை மைய அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, அண்ணா ஹஸாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

 

 

இதன் அடிப்படையில், அரசு சார்பில் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், கபில் சிபல், வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகிய ஐந்து அமைச்சர்களையும், குடிமை அமைப்புகளின் சார்பில் அண்ணா ஹஸாரே, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் பிரசாந்த் பூஷண், சாந்தி பூஷண், கர்நாடக மாநில லோக் ஆயுக்தாவின் தலைவர் சந்தோஷ் ஹெக்டே ஆகியோரையும் கொண்ட கூட்டு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இக்கமிட்டி ஊழல் தடுப்பு ஆணையச்சட்டம் குறித்து விவாதித்து, ஒரு நகல் மசோதாவைத் தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊழல் என்பது இன்றோ, நேற்றோ தொடங்கி நடந்துவரும் பிரச்சினையல்ல. எனினும், உலக வங்கி உத்தரவுப்படி பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்த பின் நடைபெற்றுள்ள ஊழல்களோ மலைப்பூட்டுபவையாக உள்ளன. "தனியார்மய நடவடிக்கைகள் அரசுக்கு நட்டமேற்படுத்துவதாக இருந்தாலும், அந்நடவடிக்கைகள் முறையான ஏலம் போன்ற விதிமுறைகளின்படி நடந்திருந்தால், அவற்றை ஊழலாகப் பார்க்க முடியாது; தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கையாகத்தான் பார்க்க முடியும்' என்பதுதான் அரசு, நீதிமன்றம், பொருளாதார நிபுணர்கள் ஆகியோரின் கருத்து. இந்த அடிப்படையில்தான் மாண்டேக் சிங் அலுவாலியா, கபில் சிபல் உள்ளிட்ட பலர் 2ஜி அலைக்கற்றை விற்பனையை ஊழலாகப் பார்க்க முடியாது எனக் கூறிவருகின்றனர்.

இந்த ஊழல்களில் எலும்பைத் தின்றவர்கள் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்றால், டாடா, அம்பானி போன்ற இந்திய நாட்டைச் சேர்ந்த தரகு முதலாளித்துவக் கும்பலும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும்தான் கியைப் பங்கு போட்டுக் கொண்டவர்கள். எனவே, ஒரு டிராபிக் போலீசுக்காரன் ஐம்பது, நூறு எனக் கையூட்டுப் பெறுவதையும், தனியார்மயம் என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகள்  அரசியல்வாதிகள்  அதிகார வர்க்கம் ஆகியோர் கூட்டணி அமைத்துக்கொண்டு அடிக்கும் கொள்ளையையும் சமப்படுத்திப் பார்க்க முடியாது.

எனவே, ஊழலை எதிர்த்துப் போராடுவதாகக் கூறுபவர்கள் தனியார்மயம்  தாராளமயம் என்ற பெயரில் சட்டபூர்வமாக நடந்துவரும் இந்த கார்ப்பரேட் பகற் கொள்ளையை எதிர்த்துப் போராடுவதையும் தமது நிகழ்ச்சி நிரலில் வைக்க வேண்டும். இதனை விடுத்து, வட்டாட்சியர் பத்திரப் பதிவு அலுவலகங்கள் போன்ற இடங்களில் நடைபெறும் சாதாரண ஊழல், கையூட்டையும்; அரசியல்வாதிகள் வாங்கும் இலஞ்சத்தையும் மட்டும் எதிர்த்து சண்டமாருதம் செய்பவர்கள் ஒன்று விவரம் தெரியாதவர்களாக இருக்க வேண்டும்; இல்லை, உண்மையை மூடிமறைப்பவர்களாக இருக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கும் அண்ணா ஹஸாரேவோ, தனது உண்ணாவிரதத்தை முடித்த கையோடு தனியார்மயம்  தாராளமயத்தை அமல்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, அதற்காகவே பாராட்டுகிறார். 2,000 முசுலீம்களைப் படுகொலை செய்த இந்து மதவெறிக் கும்பலின் தளபதி மோடியை எப்படிப் போராட்டலாம் எனக் கேட்டவர்களுக்கு, குஜராத்தின் கிராமப்புறங்களில் வளர்ச்சியைக் கொண்டுவந்திருப்பதற்காக மோடியைப் பாராட்டுவதாகவும், அதேசமயத்தில் தான் மதவாதத்தை எதிர்ப்பதாகவும் கூறுகிறார், ஹஸாரே. இந்து மதவெறி பாசிசமும், தனியார்மயம் தாராளமயமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பது ஹஸாரேவுக்கும், அவரை ஆதரிக்கும் மெத்தபடித்த கும்பலுக்கும் தெரியாதா?

குஜராத் மாநிலத்தில் விவசாயிகளின் நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களே நேரடியாக இறங்கி அடிமாட்டு விலைக்கு அபகரித்துக் கொள்ளும் வகையில் தனது ஆட்சியை நடத்தி வருகிறார், மோடி. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை நிறுத்திவிட்ட மோடி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளைக் கொட்டிக் கொடுக்கத் தயங்குவதில்லை. இதற்காகத்தான் மோடியின் படுகொலைகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, கார்ப்பரேட் முதலாளிகள் அவரைப் பாராட்டுகிறார்கள். அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களுள் ஹஸாரேவும் ஒருவர் எனும்பொழுது, "வளர்ச்சி' குறித்த பார்வையில் ஹஸாரேவுக்கும் ஆளும்கும்பலுக்கும் இடையே எவ்விதமான கொள்கை வேறுபாடும் கிடையாது என்பது தெளிவாகிவிடுகிறது. ஹஸாரே மோடியைப் பாராட்டியது மட்டுமல்ல் கார்ப்பரேட் பகற்கொள்ளையைச் செயல்படுத்தி வருவதோடு, அக்கொள்ளையில் பங்குதாரர்களாகவும் இருக்கும் ப.சிதம்பரம், கபில் சிபல் ஆகியோருடன் சேர்ந்து கூட்டுக் கமிட்டியில் அமர்வதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காததும் அவர்களின் கொள்கை உடன்பாட்டைப் பளிச்சென எடுத்துக் காட்டுகின்றன.

அந்த "வளர்ச்சிக்கு' ஊழல் தடையாக இருந்து விடக் கூடாது, ஊழலை விசாரிப்பதிலும் தண்டிப்பதிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசிற்கும் மேலான அதிகார அமைப்புகளாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதுதான் ஹஸாரே மற்றும் அவரது ஆதரவாளர்களின் கோரிக்கை. ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதிலும், தண்டிப்பதிலும் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்பதுதான் காங்கிரசு உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகளின் கொள்கை. இதுதான் இவர்களுக்கு இடையேயுள்ள வேறுபாடு.

பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் நடந்துவரும் ஊழல்கள், 2ஜி ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஊழல், இஸ்ரோவில் நடந்த எஸ்  பேண்ட் ஊழல்,காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் என அடுத்தடுத்து அம்பலமாகி வரும் இக்கார்ப்பரேட் பகற்கொள்ளை, பொது மக்களின் மத்தியில் இந்த அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையைக் குலைத்து வருகிறது. அதேசமயம், ஆளும் கும்பலும் ஓட்டுக்கட்சிகளும், பொதுமக்கள் புரட்சி போன்ற வேறு மாற்றுதேடிப் போவதைத் தடுப்பதற்கும், அவர்களிடம் இந்த அமைப்பின் நம்பகத்தன்மையைத் தக்க வைப்பதற்கும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் காட்டிக் கொள்கின்றன.

நீதிமன்ற முனைப்பைக் காட்டி இனி ஊழலற்ற நேர்மையான ஆட்சிக்கு வழிபிறந்து விட்டதாகக் கூறினார்கள். ஆனால், கீழமை நீதிமன்றங்கள் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை ஊழலில் புரையோடிப் போயிருப்பது அம்பலமாகி, அந்த நம்பிக்கை தகர்ந்து விட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டு, அச்சட்டம் அதிகார வர்க்க முறைகேடுகளைத் தடுத்து நிறுத்திவிடும் எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது. அச்சட்டமே பிரதம மந்திரி, உச்ச நீதி

மன்ற நீதிபதிகள் மற்றும் இராணுவம், போலீசு அதிகாரிகளைப் பாதுகாக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டிருப்பதோடு, அச்சட்டத்தின் கீழ் அதிகார வர்க்க முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர முயன்ற தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்களுள் பலர்மாஃபியா கும்பல்களால் கொலை செய்யப்பட்டனர்.

இப்பொழுது ஹஸாரேவும் அவர்களது ஆதரவாளர்களும் கோருவது போல, ஊழல் ஆணையத் தடுப்புச் சட்டத்தையும் ஊழல் தடுப்பு ஆணையத்தையும் உருவாக்கிவிட்டால், இந்தியா வல்லராசவதற்கு இருந்துவரும் கடைசித் தடையும்  ஊழலும்  ஒழிந்துவிடும் என்பது போல பிரச்சாரம் செய்யப்படுகிறது.

"உச்ச நீதிமன்றம், தேர்தல் கமிசன் போல ஒரு சுயேச்சையான அமைப்பாக, அப்பழுக்கற்ற உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த ஆணையத்தை அமைக்க வேண்டும்; பிரதம மந்திரி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக்கூட விசாரிக்கும் அளவிற்கு இவ்வாணையத்திற்கு அதிகாரம் தரப்பட வேண்டும்' என இவர்கள் கோருகிறார்கள். எனினும், இப்படி அமைக்கப்படும் ஆணையம் ஊழல் புகார்களை விசாரிப்பதற்கும், வழக்கு நடத்தித் தண்டிப்பதற்கும் சி.பி.ஐ., போலீசு, நீதிமன்றம் ஆகிய அதிகார வர்க்க அமைப்புகளைத்தான் சார்ந்து இயங்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே ஊழல்  அதிகார வர்க்க முறைகேடுகளால் புரையோடிப் போயிருக்கும் இவ்வமைப்புகள், ஊழல் தடுப்பு ஆணையத்தின் கீழ் வந்தவுடன் நேர்மையாக நடந்து கொள்ளும் என நம்புவது குருட்டுத்தனமாகத்தான் இருக்க முடியும். ஒரு சில நேர்மையான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முனைந்தால்கூட, கார்ப்பரேட் பகற்கொள்ளையில் ஈடுபட்டுள்ள மாஃபியா கும்பல்கள் அவர்களைக் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் மண்ணெண்ணெய் கலப்படத்தைத் தடுக்க முயன்ற உயர் அதிகாரி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஊழலை மட்டுமல்ல, தனியார்மயம்  தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவதன் விளைவாக உருவாகும் பல்வேறு சமூக அநீதிகளை, இந்த அமைப்பிற்குள்ளேயே தீர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஆளும் கும்பல் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. ஒருபுறம், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் கொள்ளைக்காகப் பழங்குடி இன மக்களைக் காடுகளில் இருந்து துரத்தியடித்து வரும் இந்திய அரசு, இன்னொருபுறம் பழங்குடி இன மக்களுக்காக வனஉரிமைச் சட்டத்தை இயற்றுகிறது. உணவுப் பொருட்களை வாங்க வழியின்றி ஏழை மக்கள் பட்டினிக்குள் தள்ளப்படும் சூழ்நிலையில், உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் பன்னாட்டு ஏகபோக மற்றும் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் உள்ளூரில் கோவில் கட்டிக் கொடுப்பது, உள்ளூர்வாசிகளுக்கு அமைப்பு சாரா தொழில்களில் பயிற்சி கொடுப்பது ஆகிய நடவடிக்கைகளில் இறங்குவதைக் காட்டி, கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூக அக்கறையுடன் செயல்படுவதாக விளம்பரப்படுத்துகிறார்கள்.

இவை போன்ற சீர்திருத்தக் கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவும், அதற்காக அவர்களை அணி திரட்டுவதற்காகவும் தான் பல்வேறு அரசுசாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஆளும் கும்பலே திட்டமிட்டு உருவாக்கி இறக்கிவிட்டு வருவதோடு, அவற்றுக்கு நிதியுதவியும் அளித்து வருகின்றன. ஹஸாரேவும், அவரை முன்னிறுத்தும் "ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பும் இப்படிபட்ட அரசு சாரா நிறுவனங்களுள் ஒன்றுதான்.

இவ்வமைப்பினர் இந்திய "ஜனநாயகத்தின்' மீது மட்டுமல்ல, அது செயற்படுத்திவரும் தனியார்மயம் தாராளமயக் கொள்கைகள் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழலுக்கு எதிரான இவ்வியக்கத்தை நடத்துவதற்கு, "சமூக அக்கறையோடு' 82 இலட்சம் ரூபாயை "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பிற்கு நன்கொடையாக அளித்திருப்ப@த இதனை நிரூபிக்கிறது (ஆதாரம்: தினமணி, 18.04.2011). @மலும், ஆன்மிகவாதிகள் என்ற போர்வையில் உலா வரும் கருப்புப் பண, கார்ப்பரேட் சாமியார்களான ராம் தேவ் மற்றும் சிறீ சிறீ ரவிசங்கர் ஆகியோரும் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். குறிப்பாக, இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை ஆதரித்து நிற்கும் நகர்ப்புற மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கம், சம்பள உயர்வு, வருமான வரி விலக்கு, நுகர்பொருள் கடன், வீட்டு மனை கடன் எனத் தனியார்மயம் வீசியெறிந்து வரும் பல்வேறு சலுகைகளையும் அனுபவித்து வருவதோடு, தனியார்மயம்  தாராளமயத்தை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்தியா வல்லரசாக முடியும் என நம்புகிறது.

ஊழல்தான் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் தார்மீக கோபத்தோடு உறுமுகிறார்க@ள, அந்த அரிய கண்டுபிடிப்பு இவர்களின் சொந்த சரக்கல்ல அது, ஏகாதிபத்தியவாதிகள் ஏழை நாடுகளின் மீது பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் திணிப்பதற்காகக் கண்டுபிடித்த ஒரு சாக்கு. பொருளாதாரம் அரசின் பிடிக்குள் இருப்பதனால்தான் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், பொருளாதாரத்தை அரசின் பிடியில் இருந்து விடுவித்து, சந்தை தீர்மானிக்கும்படி விட்டுவிட்டால் ஊழல் ஒழிந்துவிடும் என்றும், "சிறந்த அரசாளுமை' என்பதே எல்லா அரசுகளின் நோக்கமாக இருக்க வேண்டுமெனவும் ஏகாதிபத்தியவாதிகள் உபதேசித்து வருகிறார்கள். ஆனால், தனியார்மய ஊழலோ கார்ப்பரேட் பகற்கொள்ளை என்ற அளவிற்கு பூதாகரமாக வளர்ந்து விட்டது; சிறந்த அரசாளுமை என்பதோ மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் மறுக்கும் கார்ப்பரேட் பாசிசமாக மாறி நிற்கிறது.

இக்கார்ப்பரேட் பாசிசத்திற்கு ஏற்றவாறு இந்திய அரசின் கட்டமைப்பும், அதன் நிர்வாகமும், அதன் சட்டங்களும் மாற்றப்பட்டு, நாடு மறுகாலனியாக்கப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை. இம்மறுகாலனியாதிக்கத்தை எதிர்த்து, இக்கட்டமைப்புக்குள் தீர்வைத் தேட முடியாது என அம்பலப்படுத்தி போராடுவதாலேயே, நக்சல்பாரி புரட்சியாளர்களை ஒழித்துக்கட்ட காட்டு வேட்டை நடத்தப்படுகிறது, இக்கார்ப்பரேட் பகற்கொள்ளையை எதிர்க்கும்

பினாயக் சென் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள். அதே பொழுதில், கார்ப்ப@ரட் பகற்கொள்ளைக்கு ஊறுநேராத வண்ணம், இம்மறுகாலனிய கட்டமைப்புக்குள்ளேயே ஊழலுக்கான தீர்வை முன்வைக்கும் ஹஸாரேயின் கோரிக்கைகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

ஹஸாரேவையும் அவரது ஆதரவாளர்களையும் முதலாளித்துவ ஊடகங்கள் "ஹீரோ'க்களைப் போலக் கொண்டாடுவதையும், அரசு அவர்களை ராஜமரியாதையோடு நடத்தி, அவர்களது கோரிக்கைகள் குறித்துப் பேச்சுவாரத்தை நடத்துவதையும் இந்தப் பின்னணியில் இருந்துதான் பார்க்க வேண்டும்.

தெலுங்கானா போராட்டம் நடந்தபொழுது, காந்தியவாதியான வினோபா@வயின் பூமிதான இயக்கத்தை ஆளும் கும்பல் முன்தள்ளி ஆதரித்ததைப் போல, இப்பொழுது மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் கிழக்கு மாநிலங்களில் நடந்துவரும் வேளையில், காந்தியவாதியான ஹஸாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை முன் தள்ளி, உழைக்கும் மக்களை ஏய்க்கப் பார்க்கிறது, இந்திய அரசு.

 

ரஹீம்