Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் மூடிமறைத்து அரசியல் செய்யும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!!

மூடிமறைத்து அரசியல் செய்யும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!!

  • PDF

மனிதனின் வாழ்வில் பின்னிப்பிணைந்தது அரசியல். அப்படிப்பட அரசியலை ஒரு சிலர் “அரசியல் ஒரு சாக்கடை” என்றும், “எனக்கு அரசசியலுடன் ஈடுபாடில்லை” என்று செல்வதும் கூட அரசியல் தான். தாம் எந்த அரசியலில் இருக்கின்றார்களோ அந்த அரசியலைக் காப்பாற்ற கூறும் கூற்றுகள் இவை. இதை இன்றைய இந்த சமூகத்தில் நிறையவே காணலாம்.


நாம் எந்த வர்க்கத்தை சார்ந்திருக்கின்றார்களோ அந்த வர்க்கத்தின் கருத்துகளே அவரது அரசியலில் மேலோங்கி காணப்படுகின்றது இந்த கூற்றின் பிரகாரம் அண்மையில் பிரித்தானியாலில் நடந்த சம்பவம் பற்றிய ஒரு பார்வையை முன் வைக்க முனைகின்றேன்.


ராஜ் என்பவருக்கு புலியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதை அரசுசார் சக்திகளும், புலிசார் சக்திகளும் எவ்வாறு பயன்படுத்துகின்றது என்பதை தெளிவாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ஏன் என்றால் இவ்வாறான சம்பவங்கள் மீள நடைபெறும் பட்சத்தில், தமது குறுகிய அரசியல் அபிலாசகளுக்காக சம்பவங்களை கையாள்வது என்ற சிந்தனை முறையை தவிர்த்து, மக்கள் சார் அரசியலில் இருந்து நாம் அவற்றை கையாள இது பற்றிய தெளிவு அவசியமாகின்றது.


 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மக்களை பார்வையாளர்களாக பெரும்பாலான இயக்கங்கள் வைத்திருந்தன. இது ஆரம்பகாலத்தில் இருந்த இயக்கங்கள் எல்லாவற்றிலும் இருந்தன. இவ்வியக்கங்களை தமது குறுகிய அரசியல் லாபத்திற்காக ஓன்றையொன்று அழித்து, தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிதிகள் என்ற நிலையினை புலிகள் உருவாக்கின. தமது குறுகிய அரசியலுக்கு ஏற்ப தமிழ் மக்களை மந்தைகளாக்கி (மூளைச் சலவை செய்து), தமது சின்னங்கள், சிந்தனைகள்  தான் தமிழ் மக்களின் சின்னங்கள் சிந்தனைகள் என்ற கொள்கையை உருவாக்கின. இதன் கீழ் தான் மக்கள் அணிதிரட வேண்டும் என்ற கோட்பாட்டையும் உருவாக்கின. தமது இந்த அரசியலை ஏற்காதவர்கள் அனைவரும் தமிழ் மக்களின் துரோகிகள் என்ற சிந்தனையையும் விதைத்தனர். அத்துரோகிகளை அழிப்பது தான், ஒரே வழி என்ற கருத்தின் கீழ் கொல்வதை சரி என்றனர். தனிமனித பயங்கரவாதத்தை அரசிலாக்கிய, பிணங்களை கணக்கிடும் அரசியலே தமிழ் தேசிய அரசியலாக்கியது. இந்த மக்கள் விரோத அரசியல் தளத்தில் நின்ற புலிகள், இறுதியில் தன்னையும் தமிழ் மக்களையும் காட்டிக் கொடுத்து அழிந்து போனது. இருந்த போதும் அது விதைத்து சென்ற அரசியல் மட்டும் இன்றும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. இந்த வகை அரசியலை நடத்துபவர்கள் ஒருபுறத்தில் ஏகாதிபத்தியங்களின் கைக் கூலிகளாகவும், இலங்கை அரசின் உளவாளிகளாகவும், மக்கள் பணத்தை சுரட்டி ஏப்பவிட நடத்தும் அரசியல் நாடகமாகவும், பழைய புலி அரசியலை கையில் ஏந்தி நிற்கின்றனர்.


இதன் விளைவாகவே புலிகளை அம்பலப்படுத்தலை தேசத் துரோகமாக மாற்ற முற்படுகின்றனர். அவ்வாறு புலிகளின் செயற்பாட்டை அம்பலப்படுத்தினால், அதை இலங்கை அரசுசார் சக்தி என்றும், லும்பன்கள் என்றும் கூறி அரசியலை நடத்த முற்படுகின்றனர். புலிகளின் அரசியலை மக்கள் நலன் சார்ந்த அரசியல் என்ற வகையில் காட்டி, மூன்றாம் தர பிழைப்பை நடத்துகினர். தமது அரசியலை, புலிகளுக்குள் புகுந்து வேலை செய்வதன் புலிகளை திருத்தி முன்னெடுக்க முடியும் என்ற கற்பனைக் கதைளைக் கூறியவண்ணம், சதி அரசிலை முன்வைக்கின்றனர். இப்படி இதைத்தான் மார்க்சியம் என்று சொல்லி, சிவப்பு அரசியல் செய்கின்றனர்.


இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து தான், ராஜ்சின் மீதான தாக்குதல் சம்பவம் அணுகப்படுகின்றது. ராஜ்சிற்கு முன்பு, புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினர் (நான் சார்ந்த அமைப்பு) மூன்று தடவைகள் தாக்கப்பட்டபோது அதை கருத்தில் கொள்ளாத இந்த கூட்டம், இன்று ராஜ்சின் விடையத்திற்கு மட்டும் அறிக்கைகளையும், பிரசுரங்களையும், ஊடக அறிக்கைகளையும் வெளியிடுகின்றது. புலிகள் தாக்கினர் என்பதல்ல இங்கு பிரச்சனை, எவ்வாறு தமது புலிசார்பு அரசிலை இதன் மூலம் நகர்த்தலாம் என்பதையே இங்கு அவர்கள் முதன்மைப்படுத்தியுள்ளனர்.


புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினர் ஏன் தாக்கப்பட்டனர் என்ற கேள்வியையே கேட்காததும், இணைய பின்னூட்டத்தில் புதிய ஜனநாயக் மக்கள் முன்னணியினரின் கீரோயிச செயற்பாடு தான் நடந்த வன்முறையிற்கு காரணமென்றும்; அரசியல் செயற்பாடுகளை கொச்சைப்படுத்தியவர்கள் இவர்கள். பின்னர் அதே போன்றதொரு செயற்பாட்டிற்கு பாய்தடித்து ஜனநாயகம் (புலிகளின் ஜனநாயகம்) கதைக்கின்றனர்.
இந்த வகையில் புதிய திசைகள் அமைப்பினர் ஊடக அறிக்கை ஒன்றை இனியொரு இணையத்தளம் மூலம் வெளியிட்டிருந்தனர் அதில் ராஜ் தம்முடன் கதைத்ததாக பல புரடடுக்களை புனைந்துள்ளனர். இதை மறுத்து ராஜ் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


ஒரு அமைப்பு ஒரு நபர் கூறுவதாகக் கூறி அரசியல் இலாபம் தேட புறப்பட்டுள்னர். அதுவும் வன்னியன் பூட்க்கு(Vanniyan Foods) முன்பாக நடக்கவிருந்த ஆர்பாட்டத்தை தந்திரமாக இலங்கை அரசு சார்பு சக்திகள் தான் நடத்துகின்றன என்று கூறி, அவ்வார்பாட்டத்தில் கலந்து கொள்ள இருந்த பலரை தங்கள் புலி அரசியல் மூலம் தடுத்துள்ளனர். இவ்வாறான செயற்பாட்டின் மூலம் இவர்கள் புலி அரசலை முன்னெடுத்து, அந்த அரசியலை பாதுகாக்கின்றார்கள் என்பது மட்டும் தெட்டத் தெளிவாகின்றது.


சனல் 4 இல் வெளியான கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை வைத்து எவ்வாறு இலங்கை அரசிற்கு அழுத்தத்தை கொடுப்பது என்ற முயற்சியில் இடுபட்டிருக்கும் PTFவினை (புலிகள்) இந்த சம்பவங்கள் மூலம் அம்பலப்படுத்தக் கூடாதாம். இதன் பொருட்டு இவ்வாறான ஒரு ஆர்பாட்டம் நடந்தால், புலிப் பாசிச பயங்கரவாதச்  செயல்கள் இன்றும் ஐரோப்பாவில் நடந்தேறிய வண்ணம் தான் உள்ளது என்று உலகிற்கு தெரிந்துவிடுமாம். இதனால்  பொய்யானதும், கற்பனையில் உருவானதுமான கருத்துக்களை எழுதி ஊடாக அறிக்கையாக வெளியிட்டதன் மூலம், தமது விசுவாசத்தை புலத்துப் புலிகளிற்கு தெரிவித்துள்ளனர்.

புதிய திசைகள், இனியொரு அந்த ஆர்பாட்டத்தை இலங்கை சார் சக்திகள் நடத்தின என்ற புரட்டை அம்பலப்படுத்தும் வகையில், ஈழபூமி வெளியிட்ட துண்டுபிரசுரம் அடிப்படையில் அவ்வார்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இங்கு ஒரு கேள்வி தோன்றுகின்றது, அதாவது 26.06.11 அன்று ஆர்ப்பாட்டம் நடக்காமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்.

இதிலிருந்து இவர்களின் அரசியல் என்பது குறுகிய நலன் அடிப்படையில் நடப்பவை என புரிந்து கொள்ள முடியும். இவர்கள் யாருக்காக யாருடன் வேலை செய்கின்றனர் என்பதும் தெட்டத்தெளிவாக உள்ளது.


அடுத்தது ராஜின் பிரச்சனையை எவ்வாறு அரசு சார்பு சக்திகள் பயன்படுத்துகின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ராஜ் அரசு சார்பு சக்திகளையும் விமர்சித்து அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அவரின் அறிக்கையின் அடிப்படையில் தேசம்நெற்றில் அரசுக்கு சார்பாக இயங்குபவர்களுடன் தன்னையும் இணைந்து கூறியதை மறுத்து உள்ளதுடன், அவர்களின் அக் கூற்றையும் அம்பலப்படுத்தியுள்ளார்.


அதாவது புலிகளுக்கு எதிரானவர்கள் என்றால் அவர்கள் அரசு சார்பானவர்கள் என்ற மாயை எமது சமூகத்தில் உள்ளது. அதை முதலில் அகற்றவேண்டும். புலிகளுக்கு எதிரானவர்கள் எல்லோருமே அரச சார்பானவர்களாக இருக்க முடியாது. ஆனால் அரச சார்பானவர்கள் எல்லோருமே புலிகளுக்கு எதிரானவர்கள் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தவகையில் ராஜ் இன் பிரச்சனையை அரசு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புலிகள் மாற்றுக் கருத்தாளர்களை துரோகிகள் என்ற போர்வையில் கொலை செய்து வந்துள்ளது. இதை ஒரு தனி விடையமாக எடுத்து இலங்கை அரசு தனது குற்றத்தை மறைக்க முன்தள்ளுகின்றது. புலிகளின் மாற்றுக் கருத்தாளர்கள் மீதான தாக்குதலை தொடரும் பட்சத்தில், புலிகள் தான் குற்றவாளிகள் என்று கூறி அரசு தன்னை காப்பாற்ற முனைகின்றது. இதற்கு பயன்படுத்துவது புலி எதிர்பாளர்களான அரசு சார்பு சக்திகளையே.

இவ்விரு சக்திகளுக்கும் அப்பால் மக்கள் நலன் கொண்ட சக்திகள் இயங்குவதை இவ்விரு சாராரும் அனுமதிக்க மாட்டார்கள். காரணம் அந்த சக்திகளால் இருவருக்குமே ஆபத்து என்பது தான். ஆனால் மக்கள் நலனில் உள்ளவர்களால் மட்டும் தான் மக்களை அணிதிரட்டி மக்கள் விரும்பிய போராட்ட நடத்த முடியும் என்பதே உண்மை. போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்

-சீலன்-

Last Updated on Wednesday, 06 July 2011 12:42