Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் கிரிமனல் மயமாகிவிட்ட அரசியலே, தேசத்தின் அரசியல்

கிரிமனல் மயமாகிவிட்ட அரசியலே, தேசத்தின் அரசியல்

  • PDF

தனக்கென்று ஒரு மக்கள் அரசியல் நிலையை எடுக்காத அனைவரும், நிலவும் கிரிமினல் அரசியலை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிப்பவர்கள் தான். புலிகளின் அரசியல், புலியெதிர்ப்புக் கூலிக் குழுக்களின் அரசியலும் இதே வகைப்பட்டவை தான். இவற்றைத் தாண்டி "தேசத்"திடமும் அவற்றை விட எந்த மாற்று அரசியலும் கிடையாது. இதை கொண்டு பரஸ்பரம் தூற்றுகின்ற,

 இதுவல்லாத மாறுபட்ட கருத்துகள் மீது தனிநபர் தாக்குதலை நடத்தவென உருவாக்கப்பட்டதே, "தேசம்". இதனால் தேசத்தில் இருந்த இடதுசாரி கருத்தாளர்களும், அக் கருத்துகளும் துரத்தியடிக்கப்பட்டன. இப்படி தேசமோ பக்காக் கிரிமினல்களின், கும்மியடிக்கும் ஒரு தளமாகியது.

 

வெளிச்சத்திலோ கவுரமான வெள்ளை வேட்டி அரசியல் வாதிகள். இருட்டில் இவர்கள் தமது வக்கிரத்தைக் கொட்டும் கிரிமினல்கள். இதற்கேற்ப உருவாக்கப்பட்டது தான் "தேசம". எத்தனை வாசகர்கள் தம்மிடம் உள்ளனர் என்று காட்டவே இணைய வித்தை. தமது வாசகர் எண்ணிக்கையை பெருப்பித்துக்காட்டும், இழிவான மலிவான விளம்பர மோசடிகள். தளத்தில் ஒரே நபரே எத்தனை தடவைகள் மீள வந்தாலும் அவ்வருகைகள் எல்லாவற்றையும் (HITS), இலக்கமாக மாற்றி விட்டு, பார்வையாளர் எண்ணிக்கை என்று போட்டுவிடுகின்றனர். எல்லாம் கிரிமினல்களுக்கே உரிய அற்ப உத்தி.

 

இப்படிப்பட்ட சகலகலாவல்ல பக்காக் கிரிமினல்களுடன் நாம் மோதுகின்றோம். புலி மற்றும் புலியல்லாத முன்னாள் இன்னாள் கொலைகாரர்கள் முதல், அதன் வாரிசுகள் தான் இந்த தளத்தில், இவர்களுக்கு ஆதாரமாக எமக்கு எதிராக உள்ளனர்.

 

நாங்கள் சமூக மாற்றம் பற்றிப் பேசுவதோ, இவர்களால் சகித்துக்கொள்ளவே முடிவதில்லை. எமக்கு முன்னால் இந்தக் கிரிமினல்கள் தொடர்ச்சியாக அம்பலமாவதால், "தேசம்" தனது கடைந்தெடுத்த பொறுக்கித்தனத்தை பாதுகாத்துக் கொள்ள முனைகின்றது. இதனால் தம்மைத் தாம் ஊடகவியலாளர் என்று கூறி, தம் மீது பட்டு வேட்டியை போட்டு மூடுவதன் மூலம் அரசியலில் நடிக்கின்றனர். ஊடகவியலாளனுக்கு அரசியல் கிடையாதாம். இந்திய கைக்கூலிகளான ஈ.என்.டி.எல்.எப் அரசியல் செய்யும் ரீ.பீ.சீயும் கூட, தாம் ஊடகவியலாளர் என்று இதையே கூறிக் கொள்கின்றது. இப்படி எல்லா கிரிமினல்களும் வேஷம் போட்டே, மக்களின் முதுகில் அரசியல் செய்ய முனைகின்றனர்.

 

ஒரு மனிதன், நிலவும் இச் சமூக அமைப்பிலான பொதுவாழ்வில் எதைச்செய்தாலும், தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள போக்குகளையும் சுயவிசாரணை செய்தேயாக வேண்டும். இது யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. அதிலும் புலியை விமர்சிக்கின்றவன், புலியல்லாத கைக்கூலி அரசியலை கடுமையாக விமர்சித்தேயாக வேண்டும். இதேபோல் புலியல்லாத தளத்தை விமர்சிக்கின்றவன், புலிகளின் பாசிச அரசியலை கடுமையாக விமர்சித்தேயாக வேண்டும். இந்த இரண்டையும் செய்யாதவர்கள், எப்படிப்பட்ட கிரிமினலாக இருப்பான் என்பது வெளிப்படையானது.

 

தேசத்தில் கருத்திடும் வாசகர்களில் பெரும்பான்மை, இப்படிப்பட்ட பக்காக் கிரிமினல்கள். முன்னாள் இன்னாள் கொலைகார கும்பல்கள் அல்லது அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், இருப்பவர்கள் தான். இந்த எல்லைக்குள் தான் தேசம், நடுநிலை வேட்டி கட்டி, தனக்கு வேஷம் போடுகின்றது. ஊடகவியலாளன் பெயரில், சமூக பொறுப்பற்ற ஒரு பொறுக்கியாக இருக்க முடியும் என்கின்றது. இதனால், தாம் எந்த முடிவையும் எடுக்கத் தேவையில்லை என்கின்றது. ஊடகவியலாளன் பணி இதுவா! இவர்களா இந்த சமூகத்தை வழிகாட்டுகின்றனர். இல்லை இவர்கள் சமூகத்துக்கு வேட்டு வைக்கின்ற பிழைப்புவாதிகள்.

 

புலி மற்றும் புலியெதிர்ப்பு அரசியல் என்பது, அரசியல் ரீதியாக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இந்த இரண்டும், மனிதத்தையே வேட்டையாடியவை, வேட்டையாடுபவை. இதை யாராலும் மறுக்க முடியுமா? இதைப்பற்றி முடிவெடுக்க முடியாது என்று கூறுகின்றவன் யார்? இவற்றுடன் ஒன்றி சலசலப்பவனை, இதை மறுக்காது இந்த இழிவான நடத்தைகளை கொண்டு அரசியல் வம்பளப்பவனை, நாம் எப்படி அழைப்பது? நாம் பொறுக்கிகள் என்றும் கிரிமினல் என்று கூறுவதில், என்ன தவறு உண்டு. இல்லை என்று யாராலும் இதை மறுக்க முடியுமா?

 

இப்படி இதற்குள் அரசியலே கிரிமினல் மயமாக்கிவிட்டது. பாசிசம் தேசியமாகிவிட்டது. ஜனநாயகம் கைக் கூலித்தனமாகிவிட்டது. இலங்கை இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை நக்குவதைத் தான் ஜனநாயகம், என்கின்றனர். இப்படி இவற்றுக்குள் இயங்குபவன், எப்படி சமூக அக்கறை உள்ளவனாக இருக்கமுடியும். இதன் மீது விமர்சனம் செய்யாத, விமர்சனம் செய் மறுக்கின்றவர்கள் யார்? இவர்கள் எல்லாம் பக்காக் கிரிமினல்கள் தானே.

 

இப்படிப்பட்ட "தேசத்"திடம் எந்த நேர்மையும் கிடையாது. '.. 'எனது பதிவு ஒன்றில் இருந்து ஒரு பகுதியை நீக்கிய தேசம் அதை அவதூறு என்றது.” இதுவே இரயாகரன் தேசம் மீது கொதிப்படையக் காரணம்" என்கின்றது. இதுவே அப்பட்டமான முழுப் பொய். எமது கருத்தை மறுக்கின்ற, தேசத்தின் இழிவான அரசியல் உத்தி. அத்துடன் கருத்துக்கு வெளியில், முதலில் முரண்பாடுகள் தொடங்கியது எங்கே? நான் ஒரு கூட்டத்தில் பேசியதையே தேசம் திரித்தபோது தான், விவாதம் தொடங்கியது.

 

பாரிஸ் தலித் மாநாட்டை தொகுத்த விதமே திரிபுதான். இதை நாம் மறுத்தபோது தான், நேரடி விவாதம் தொடங்கியது. வேறு இருவர் இதே போன்று குற்றச்சாட்டை வைத்தபின் தான், மௌனவிரதத்துக்குச் சென்றார். பின் எம்மீது எதிர் தாக்குதலுக்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டு, தாக்கத் தொடங்கியவர், எனது அரசியலை விமர்சிக்க முடியாது, தனிநபர் தாக்குலை நடத்தத் தொடங்கினார். அவரே கூறுவதுபோல், 'அது ஊடக வரைமுறைகளுக்கு அப்பால் தனக்கென ஒரு அரசியல் கருத்து நிலையை எடுக்காது" என்று மற்றவனை கேனயனாக்கி கதை கூறுகின்றவர்கள், எம்மீது என்ன நிலையை எடுக்கின்றனர். அதுவே தனிநபர் தாக்குதலாகின்றது. அதனூடாக அரசியல் செய்ய முனைகின்றனர். எம்மீது குற்றம் கண்டு பிடிக்க முனைந்தனர், முனைகின்றனர். இப்படித் தான், இதற்குள் தான் அனைத்தும். இதனால் இல்லாத பொல்லாததை, எம்மீது வாரி அறைகின்றனர்.

 

தேசம் ஊடகவியல் நேர்மையைப் பாருங்கள் '4. 'ஈ.என்.டி.எல்.எப் ஏகபோக தலைவர் ராஜனின் சகோதரர் கொழும்பில் காணாமல்போன பின்னணியுடன் இந்த தேன் நிலவு” என்று நான் எழுதியதைப் குறிப்பிட்டெழுதி, 'ராஜனைக் கடத்தியது யார்?"என்கின்றார். ராஜனைக் கடத்தியது யார் என்று நான் எழுதினேனா? எப்போது? எங்கே? ராஜனின் தம்பி கடத்தப்பட்டார் என்று தானே நான் கூறினேன். ஒரு ஊடகவியலாளன் அரசியல் அவதூறுக்காக, ராஜனைக் கடத்தியது யார் என்று கேள்வி எழுப்புவது வேடிக்கை தான். இவரே கூறும் 'ஒரு ஊடகவியலாளன் ஒரு தகவலை சேகரிக்கும் போது, யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? போன்ற கேள்விகளைக் கேட்டு தகவலை உறுதிப்படுத்த வேண்டும்." என்கின்றார். ஆனால் அவரின் இந்த வாக்கு அது எனக்கு விதிவிலக்கு.

 

ராஜனின் தம்பியை புலி தான் கடத்தியது. இதற்குள் தான் அரசியல் பேரம் நடந்தது. இதற்கு ஆதாரம் இல்லை என்பது, பிழைப்புவாத அரசியலின் திருகுதாளங்கள். இது மக்களுக்கு உதவாது. கிரிமினல்கள் இதை தொடர்வதற்கே உதவும். 'யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?" என்று எழுதும் இவர்கள், இதன் மூலம் அந்த கிரிமினல்களை பாதுகாப்பவர்கள். ஆனால் எமக்கு எதிராக கற்பிக்கும் கற்பனையை பாருங்கள். 'உடைந்த ரீ.பீ.சீயின் உபகரணங்களை புலிகளே திருத்திக் கொடுத்ததாகவும் எழுதுகிறார்." நாம் சொல்லாத ஒன்றை, இப்படி சொல்ல முனைவது தான் இவர்களின் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஊடகவியல்.

 

'யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?" என்றால் இதை, மூடிமறைத்து இருட்டில் இயங்கும் கிரிமினல்களுக்கு, இதை எப்படி பயன்படுத்துவது? அதன் கொலை அரசியல் முதல் அதன் இழிவான தேசியம் ஜனநாயக அரசியல் வரை எப்படி சுயவிசாரணை செய்வது?

 

தமிழ் மக்கள் தம்மைத் தாம் சுட்டுக் கொன்றனரா? தம்மை தாம் கழுத்தை அறுத்து கொன்றனரா?. தம்மைத் தாம் கடத்திச் சென்றனரா? மொத்தத்தில் அரசியல் தற்கொலைக்கு உரிய சதி அரசியலையும் பேரங்களையும் தமிழ் மக்களா செய்தனர்? இவற்றுக்கு, 'யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?" என்று, எந்த நேரடி ஆதாரமும் கிடையாது என்று கூறி, தேசம் அதைப் பாதுகாக்கின்றது. அதை தொடர ஊக்கமளிக்கின்றது. இதுதான் தேசத்தின் அரசியல்.

 

பி.இரயாகரன்
25.01.2008