Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் கருங்காலி அரசியலும்; காலி இலக்கியவிழாவும்

கருங்காலி அரசியலும்; காலி இலக்கியவிழாவும்

  • PDF

புலிப்பினாமிகளும், அவர்களின் இடது-திடீர் தேசியவாதிகளும் கொழும்பில் நடந்த இலக்கிய சந்திப்புக்கெதிராக கையெழுத்துப்போர் நடாத்தி, தோற்றுப்போய், ஓய்ந்துபோயுள்ள நிலையில்; தற்போது சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் வேஷ்டித்தலைப்பில் மறைந்தபடி ஒன்றாக இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. இவ் அறிக்கையில் காலியில் இடம்பெறவுள்ள இந்த இலக்கிய விழாவினைப் புறக்கணிக்குமாறு மேற்குறித்த இந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

மேலும் இவ்வறிக்கையில் புகழ்மிக்க எழுத்தாளர்கள் மற்றும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களான Noam Chomsky, Arundathi Roy, Ken Loach, Antony Loewenstein, Tariq Ali, ஆகியோரும் ருத்திரமூர்த்தி சேரன் என்ற அன்ரன் பாலசிங்கத்தின் வாரிசும் கையெழுத்திட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக கருத்து எழுதிய தமிழரங்க எழுத்தாளர் ராஜாஹரன் கீழ் கண்டவாறு கூறுகிறார் .

 

 

"மக்கள் திரள் அமைப்பை உருவாக்குவதன் மூலம் தான், இலங்கை பாசிச அரசின் ஒடுக்குமுறைகளையும், அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள முடியும். தமிழ் - சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றுபட்ட செயற்பாட்டை முன்வைக்காத, அதைக் கோராத, அதுவல்லாத குறுகிய எழுத்து சார்ந்து எழும் புறக்கணிப்புவாத அரசியல், பூர்சுவா வர்க்கத்தின் அற்ப நலன் சார்ந்த குறுகிய வக்கிரமாகும். இந்த அரசியல் நிராகரிக்கப்பட வேண்டும்."

இதன் மூலம் பாசிச சூழ்நிலையில்; புறக்கணிப்புவாதம் என்பதை பூர்சுவா வர்க்கத்தின் சந்தர்ப்பவாத அரசியலாக அம்பலப்பட்டு நிற்பதை தோலுரித்து காட்டுகிறார்.

அதேவேளை இன்று தன்னை உலகமஹா புத்திஜீவியாகவும், தமிழ் தேசியத்தின் இடதுசாரிக் காவலனாவும் காட்டிக்கொள்ளும் சில திடீர் அரசியல்வாதிகள், ராஜஹரனின் நிலைப்பாட்டிலிருந்து தம்மை வித்தியாசமானவர்களாக காட்டிக்கொள்ளவும், தமது நிலைப்பாடு தான் இலங்கையில் புரட்சியையும்; தமிழ்இன விடுதலையையும் பெற்றுத்தரும் என்பது போன்று பாவ்லா காட்டியபடி இந்த புறக்கணிப்புவாதத்திற்கு தூபம் போடுகின்றனர்.

இது சம்பந்தமாக புலம்பெயர் புலிப்பினாமிகளுக்கு சிவப்புச்சாயம் பூசும் நாவலன் தனது அறிக்கையில் இவ்வாறு கூறுகிறார்.

”ஆரவாரமின்றி திரைமறைவில் ஜனநாயக நாடு ஒன்றின் சாதாரண நாளாந்த நிகழ்வு போல ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கிய விழாவிற்கு எதிரான கண்டனங்கள் அருந்ததி ராய், தாரிக் அலி, நாஓம் சொம்ஸ்கி போன்ற போர்க்குணம் மிக்க குரல்கள் ஒலிப்பது, ஒடுக்கப்பட்ட தேசிய இனமான தமிழ்ப் பேசும் மக்களுக்கு நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றுகளாகும். அமெரிக்கா, நெதர்லாந்து, நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளின் அரசுசார் நிறுவனங்களின் ஆதரவோடு நடைபெறும் விழா நமது எதிரிகளை தெளிவாக இனம்காட்டியுள்ளது. எல்லைகளற்ற செய்தியாளர்களின் அமைப்பும் (Reporters Without Borders), ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவியலாளர்களின் அமைப்பும் (Journalists for Democracy in Sri Lanka (JDS)) இணைந்து விழாவிற்கு எதிராக விடுத்த அறிக்கை அருந்ததி ராய், சொம்ஸ்கி, தாரிக் அலி போன்றவர்களால் கையெழுத்திட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது."

இதன் மூலம் ஒரு சர்வதேச செயற்பாட்டாளர் அணி தமிழர்களுக்கு சார்பாகவும்; இலங்கையில் ஏகாதிபத்திய நலனுக்கு எதிராகவும் உருவாகியுள்ளதைப் போல கதையளக்கிறார்.

எனது இந்தச் சிறிய கட்டுரையின் நோக்கம் இலக்கியமாநாடு சம்பந்தமாக இங்கு தத்துவ ஆய்வு செய்வதல்ல. மாறாக இந்தப் புறக்கணிப்பு கையெழுத்து வேட்டையின் பின்புலத்தில் உள்ள அமைப்பான இலங்கை ஊடகவியலாளர்களின் அமைப்பு (Journalists for Democracy in Sri Lanka (JDS), மற்றும் எல்லைகளற்ற செய்தியாளர்களின் அமைப்பு (Reporters Without Borders), போன்ற சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள்; இந்த புறக்கணிப்புவாதத்திற்கு விளக்குப் பிடிப்போர் சொல்வது போல உண்மையிலேயே தமிழர்களுக்கு சார்பாகவும்; இலங்கையில் ஏகாதிபத்திய நலனுக்கு எதிராகவும் இயங்கக்கூடிய மக்கள் சக்திகளா என்பதை ஒரு சிறு ஆய்வுக்குட்படுத்துவதும், இவர்களின் புறக்கணிப்பு வேண்டுகோளின் உண்மைத்தன்மையை ஆராய்வதுமேயாகும்.

 

எல்லைகளற்ற செய்தியாளர்களின் அமைப்பும் (Reporters Without Borders)

 

எல்லைகளற்ற செய்தியாளர்களின் அமைப்பு, எந்தவகையிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கான அமைப்பு அல்ல. மாறாக, முதலாளித்துவ மானிடவுரிமை அடிப்படையில் எழுத்து-பேச்சுரிமைக்கான போராட்டம் நடத்துவதாக கூறும் இந்த அமைப்பு அடிப்படையில் போராடுவது ஏகாதிபத்திய நலன்களைப் பேணுவதற்காகவே.

Reporters sans frontières (RSF), என்ற இந்த பிரான்சை சேர்ந்த சர்வதேச அரசுசாரா நிறுவனமானது (INGO) 1985 இல் உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியில் மேற்குநாடுகளின் உளவு அமைப்புகளும், அரசநிறுவனங்களும், பெரும் பணம்படைத்த முதலாளிகளும் இருந்து வருகின்றனர். இதன் வருமானத்தின் பெரும்பகுதி மேற்குநாடுகளின் அரசநிறுவனங்களாலும் பாரிய முதலாளித்துவ, மற்றும் பல்தேசிய கம்பனிகளாலும் வழங்கப்படுகிறது. உதாரணமாக Sanofi-Aventis (€400,000, 10% of its budget), François Pinault, The Fondation de France, The Open Society Institute of George Soros, The Sigrid Rausing Trust, Benetton,  The Center for a Free Cuba (which donated €64,000 in 2002), Saatchi & Saatchi போன்ற பல்தேசிய கம்பனிகளும் நோர்வே, ஸ்வீடன், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் மூன்றாம் உலகநாடுகளுக்கான அரசஅபிவிருத்தி நிறுவனங்களும்; எல்லைகளற்ற செய்தியாளர்களின் அமைப்பின் (Reporters Without Borders) முக்கிய நிதிவழங்குனர்களாகவுள்ளனர்.

இந்த அமைப்பின் பெரும்பான்மையான செயற்பாடுகள் அமெரிக்க மற்றும் ஜரோப்பிய நலன்களுக்கு எதிராக செயற்படும் கியுபா, வெனிசுவேலா, ஈரான், வடகொரியா, சீனா போன்ற நாடுகளை குறிவைத்தே முன்னெடுக்கப்படுகிறது. இந்த அமைப்பின் உண்மையான முகத்தைப்பற்றி எழுதுவதானால் ஒரு புத்தகமே எழுதலாம். இவ்வாறு ஏகாதிபத்திய நலன் காக்கும் அமைப்பு இலங்கையில் புரட்சிக்கும், ஜனநாயகத்திற்கும், தமிழ்இன விடுதலைக்கும் வழிவகுக்கும் எனப் படம் காட்டுவது புலிகள் செய்தது போல மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதேயாகும்.

 

ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவியலாளர்களின் அமைப்பு (Journalists for Democracy in Sri Lanka (JDS) )

 

இலங்கையில் ஜனநாயகம், ஊடக சுதந்திரம், மற்றும் மனிதவுரிமைகான நடவடிக்கைக் குழு என்று தம்மை அறிமுகம் செய்யும் இக்குழு ஜரோப்பாவை தளமாக கொண்டு இயங்குகிறது.

இதில் இயங்குபவர்கள் பலர் முன்னாள் ஜே.வி.பி உறுப்பினர்கள் ஆவர். பிரேமதாச காலத்தில் படுபயங்கரமான ஒடுக்குமுறைகளைச் சந்தித்த இவர்களில் பலர் பிற்காலத்தில் INGO உதவியுடன் ஊடகவியலாளர்களாகவும், மனிதவுரிமை பாதுகாவலர்களாகவும் அறியப்பட்டவர்கள். இவர்கள் பலருக்கு தமிழ் இனவிடுதலை சம்பந்தமாக சரியான பார்வை இருந்து வருகிறது. அதேவேளை பலவருட ஒடுக்குமுறையும்; அதனில் இருந்து தப்பிக்க இவர்கள் சரணடைந்த சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுடனான இவர்களது உறவானது, இன்று இவர்களை சுயநலம் சார்ந்து ஏகாதிபத்திய நலம் பேணும் வரட்டுவாதிகளாக உருவாக்கியுள்ளது.

உதாரணத்திற்கு அனைத்து மட்டத்திலும் நன்கு தெரிந்த சுனந்த தேசப்பிரியவை கூறலாம். நல்லதொரு போராளியாக இருந்து பின்  MIRJE என்ற (Movement for Inter Racial Justice & Equality) சர்வதேச அரசசார்பற்ற நிறுவன உதவியுடன் யுக்திய என்ற பத்திரிகைக்கு தலைமை ஆசிரியராக இயங்கினார். பின்பு Free Media Movement of Sri Lanka, CPA (Center for Policy Alternatives)) போன்ற சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பணத்தில் இயங்கும் அமைப்புகளின் தீவிர செயற்பாட்டாளராகவும், அவ் அமைப்புகளின் திட்டங்களை நடைமுறைப்படுத்துபவராகவும் இயங்கினார். பல பத்து மில்லியன் ரூபாய்கள் இவரூடாக சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களால் இலங்கையில் ஊடகம் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க பாவிக்கப்பட்டது. பின்னாளில் இவரும் இன்னும் சிலரும்; சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்ட நிதியை தவறாக பாவித்தனர் என்று லசந்த விக்கிரமதுங்காவை ஆசிரியராகக் கொண்ட சண்டேலீடர் அம்பலப்படுத்தியது. இதன் பின் சுனந்த பதவி விலகினார். இன்று புலம்பெயர்ந்து வாழ்கிறார். இதனை நான் இங்கு எழுதுவது சுனந்தாவை அவமானப்படுத்தவல்ல. அவரும் அவர் போன்ற பல முன்னாள் மக்கள் நலம் சார்ந்த சக்திகள் எவ்வாறு இன்று சீரழிந்தனர் எனக் காட்டுவதற்கே.

தமிழ் அரசியல் வட்டத்தில் பார்ப்போமானால் இவரை போலவே சீரழிந்தவர்கள் தான் முன்னாள் தமிழ்முற்போக்குகளான சரிநிகர் பத்திரிகையை சேர்ந்தவர்களாவர். இவர்களில் சந்தர்ப்பத்தைச் சரியாக பாவித்து; தனது இருப்பை கல்வி, பொருளாதாரம், சமூகஅந்தஸ்தில் நிலைநிறுத்தி கொண்டவர் திருவாளர் ருத்திரமூர்த்தி சேரன் என்றால் மிகையாகாது.

இதன் அடிப்படையில்; சீரழிந்து செயலிழந்த இந்த முன்னாள் அரசியல் குட்டிச்சுவர்கள் எல்லாம் மக்கள் விடுதலைக்கு வழிகாட்டும் கோபுரங்கள் எனக் கதை அளப்பதும் "ஒடுக்கப்பட்ட தேசிய இனமான தமிழ்ப் பேசும் மக்களுக்கு நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றுகளாகும்" என அறிக்கை விடுவதும் சந்தர்ப்பவாத சகதியில் அரசியல் செய்யும் பிழைப்புவாதமாகும்.

 

காலி இலக்கிய விழா ((Galle Literary Festival))

 

2007 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழாவானது இலங்கையில் உள்ள அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய மேல்தட்டு வர்க்கத்தின் இலக்கியக் கொண்டாட்டமாகும். இந்த விழாவில் நடாத்தப்படும் நிகழ்வுகள் அனைத்திலும் ஒருவர் பங்கு கொள்வதானால் அதற்கான கட்டணமாக 20000 ரூபாய்களை செலுத்த வேண்டும். சல்சா நடனமும், வெளிநாட்டு மதுவும் வழிந்தோட நடத்தப்படும் இந்த இலக்கியவிழாவும் தமிழ் சுய தம்பட்டக்காரர் கொழும்பில் நடாத்தியது போன்றதொரு விழாவே. இதன் பின் இலங்கை அரசின் தன்னலம் சார்ந்த தீவிரப்பிரச்சாரம் எதுவும் இல்லை. இந்த விழாவை நிராகரிக்க கோரும் அறிக்கையில் லசந்த விராமசிங்கவை கொலை செய்ததையும் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும்; எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும் புறக்கணிப்பிற்கான காரணமாக கூறுகின்றனர். ஆனால், லசந்த விக்ரமதுங்கவின் மனைவியும்; அவர் கொலையின் பின் தலைமை ஆசிரியராக சண்டேலீடரில் பணிபுரிபவரும், மஹிந்த பாசிசஅரசின் விமர்சகருமான சோனாலி சமரசிங்க 2009 இல் நடந்த விழாவில் கலந்து கொண்டார். (சோனாலி 2007 -2009 வரை ஒவ்வொரு வருடமும் பங்குபற்றியுள்ளார்.)

அதாவது லசந்த கொலை செய்யப்பட்டது தை மாதம் 8 ஆம் திகதி 2009 இல். சோனாலி விழாவில் கலந்து கொண்டது 1 ஆம் திகதி மாசி மாதம் 2009 இல். அவர் அதில்  Can journalism actually shape events?  who will get to  decide the new world order? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டார். இன் நிகழ்வு தவறென்றால், இது மஹிந்த அரசு சார்ந்த ஏற்பாடென்றால் அதன் விமர்சகரான சோனாலி ஏன் இதில் பங்கு கொண்டார்? மேலும் ஏன் கடந்த வருடம் நடந்த நிகழ்விலும் சண்டே லீடர் பத்திரிகையின் நிருபர்கள் பங்கு கொண்டுள்ளனர்? போன்ற கேள்வி இங்கு எழுகிறது. இதற்கான பதில் இவர்கள் லசந்தவின் கொலையை இங்கு பாவிப்பது தமது சுயதேவைக்காகவும் தமது அங்கிடுதத்தி அரசியலை சர்வதேச அரங்கிலும் நிலைநிறுத்துவதற்காகவுமே என்றால் மிகையாகாது.

சோனாலியுடன் மேற்கண்ட விவாதத்தில் கலந்து கொண்ட மற்றொருவர் பாக்கியசோதி சரவணமுத்து. இவர் யாரென்றால் Centre For Policy Alternatives என்ற நிறுவனத்தின் சர்வதேசநிதியில் சுனந்த தேசபிரிய போன்றவர்களுக்கு ”போராட” வசதி செய்பவர். இவரின் நிறுவனத்தின் நிதியை தவறாக பாவித்ததனால் தான், சண்டேலீடர் பத்திரிகையினால் சுனந்த அம்பலப்படுதப்பட்டார்.

அடுத்ததாக ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவியலாளர்களின் அமைப்பு உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும், இவர்களைப் போன்று இலங்கையில் INGO நிதியில் ஜனநாயகத்திற்காகவும் மனிதவுரிமைக்காகவும் போராடுபவர்கள் பலரும் இந்தவருட நிகழ்வில் பங்கு கொள்கின்றனர். உதாரணமாக இலங்கையின் பிரபல மனிதவுரிமைவாதி சுனிலா அபயசேகரவை கூறலாம்.

ஆகவே இன்று இந்தப் புறக்கணிப்பு போராட்டம் செய்பவர்களும்; அவர்களுக்கு தூபம் போட்டு ஆராதனை செய்பவர்களும் சந்தர்ப்பவாத, சுயநலம் சார்ந்த அடிப்படையிலேயே இந்தப் புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.

இறுதியாக

அருந்ததிராய், சொம்ஸ்கி, தாரிக் அலி போன்றவர்களால் கையெழுத்திட்டு இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால்; அது சரியான அரசியல் அடிப்படையில் தான் முன்னெடுக்கப்படுகிறதென்ற வாதம் யாராவது முன்வைத்தால் அது கூட பிரமுகத்தனத்தின் நிழலில் அரசியல் நடத்த முயலும் வெளிப்பாடே அல்லாமல் வேறொன்றும் இல்லை. அது போலத் தான்; ராஜஹரன் கருத்துச் சொன்னால் அதற்கு எதிராக சொல்வது தான் தமிழ்ஈழ விடுதலைக்கான முன்நிபந்தனை என்பது போல அரசியல் அறிக்கை விடுவதுமாகும்.

பிற்குறிப்பு:

இந்தக் கட்டுரை மூலம் இந்த சந்தர்ப்பவாத புறக்கணிப்புவாதிகளை அம்பலப்படுத்துவதென்பது, காலி இலக்கிய விழாவின் வர்க்க அரசியலை நான் ஏற்றுக் கொண்டவன் என்பதல்ல. இந்த இரண்டு பிரிவினரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இந்த இரு பிரிவினரின் அரசியலும் ஏகாதிபத்தியம் சார்ந்த மக்கள்விரோத அரசியலே !!!

உசாத்துணை:

 

1. http://www.galleliteraryfestival.com/files/galle/Galle_LiteraryFestival_Programme_2009.pdf

2. http://www.asiantribune.com/node/14788

3. http://en.rsf.org/cuba.html

4. http://www.puthinappalakai.org/view.php?20110120102976

5. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7690:2011-01-22-115900&catid=343:2011

6. http://en.wikipedia.org/wiki/Reporters_Without_Borders

7. http://www.galleliteraryfestival.com/part2011

8. http://no.wikipedia.org/wiki/Lasantha_Wickrematunge

9. http://inioru.com/?p=19522

Last Updated on Tuesday, 25 January 2011 20:26