Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் சட்டிஸ்கருக்கு சல்வாஜூடும் மே.வங்கத்துக்கு ஹர்மத் வாகினி : ஹர்மத் வாகினி – சி.பி.எம் கட்சியின் குண்டர் படை !!

சட்டிஸ்கருக்கு சல்வாஜூடும் மே.வங்கத்துக்கு ஹர்மத் வாகினி : ஹர்மத் வாகினி – சி.பி.எம் கட்சியின் குண்டர் படை !!

  • PDF

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, இத்தனை நாளும் தங்களுக்கு ஹர்மத் வாகினி என்ற பெயரில் எந்தக் குண்டர் படையும் இல்லை என்று கோயபல்ஸ் பாணியில் புளுகி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது அது உண்மைதான் என்று வேறு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த முகாம்கள் மாவோயிஸ்டு தாக்குதலிலிருந்து சி.பி.எம். ஊழியர்களைக் காப்பதற்கானது என்றும், இந்த ஊழியர் முகாம்களில் ஆயுதங்களோ, ஆயுதப் பயிற்சியோ கிடையாது என்றும் மே.வங்க சி.பி.எம். கட்சித் தலைமை அண்மையில் அறிவித்துள்ளது.

ஹர்மத் வாகினி - சி.பி.எம் கட்சியின் குண்டர் படைகடந்த 2009-ஆம் ஆண்டில், மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தில் பழங்குடியின மக்களின் பேரெழுச்சியைத் தொடர்ந்து அதுநாள் வரை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவந்த சி.பி.எம். கட்சியின் ஊழல் பெருச்சாளிகளும் சமூக விரோதிகளும் போலீசாரும் மக்களால் அடித்து விரட்டப்பட்டனர். சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இப்போராட்டத்தை மாவோயிஸ்டுகள் ஆதரித்து முன்னெடுத்துச் செல்லத் தொடங்கியதும், பயங்கரவாத பீதியூட்டி மத்திய-மாநில அரசுகளின் கூட்டுப்படைகள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டன. “போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி’’யை நிறுவிப் போராடிவந்த பழங்குடியின முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டும், மோதல் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டும் அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டும் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டது.

அரசு பயங்கரவாத அடக்குமுறையால் மாவோயிஸ்டுகள் பின்வாங்கியுள்ள நிலையில், இப்போது அப்பகுதிகளில் தமது குண்டர் படைகளைக் கொண்டு மீண்டும் அதிகாரத்தை நிலைநாட்டி வருகிறது, சி.பி.எம். கட்சி. போலீசும் துணை இராணுவப் படைகளும் தேடுதல் வேட்டையை முடித்துக் கொண்டு புறப்பட்டதும், சி.பி.எம். குண்டர்படையினர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் துப்பாக்கிகளுடன் வந்து வெற்றி ஊர்வலங்களை நடத்துகின்றனர். இது எல்லாப் பகுதிகளிலும் சொல்லிவைத்தாற் போன்று நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் தாரம்பூர், ராம்கார், பிராகடா முதலான பகுதிகளில் தமது கட்சி அலுவலகங்களை மீண்டும் திறந்து, லால்கார் மக்களின் பேரெழுச்சியில் விரட்டியடிக்கப்பட்ட சி.பி.எம். கட்சியின் குண்டர்படைத் தலைவன் அனுஜ்பாண்டே தலைமையில் வெற்றி ஊர்வலங்களை நடத்தி, லால்கார் பகுதியை மாவோயிஸ்டுகளிடமிருந்து விடுவித்து விட்டதாக சி.பி.எம். கட்சி அறிவித்தது.

இவ்வாறு ‘விடுவிக்கப்பட்ட’ கிராமங்களில்கூடப் பத்திரிகையாளர்கள் உள்ளே நுழைந்துவிட முடியாது. ஊர் எல்லையில் சி.பி.எம். குண்டர்படை காத்திருக்கும். ஊருக்குள் நுழைந்தால் மாவோயிஸ்டுகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சுறுத்தியும் மிரட்டியும் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர்; அல்லது அப்பகுதியின் சி.பி.எம். குண்டர்படைத் தலைவரின் துணையோடு மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

லால்கார் மக்களின் பேரெழுச்சியில் சி.பி.எம். கட்சி விரட்டியடிக்கப்பட்டதைச் சாதகமாக்கிக் கொண்டு இப்பகுதியில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசு காலூன்றத் துடிக்கிறது. நந்திகிராமத்தில் கிழக்கு எல்லைப்புற துப்பாக்கிப் படையின் துணையோடு சி.பி.எம். கட்சியினர் எவ்வாறு மீண்டும் அப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனரோ, அவ்வாறே மேற்கு மித்னாபூரின் ஜங்கல் மகால் பகுதியையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் துடிக்கின்றனர். சி.பி.எம். கட்சியின் இந்தக் குண்டர்படைகள் மாவோயிஸ்டு மற்றும் திரிணாமுல் காங்கிரசு கட்சி ஆதரவாளர்களைத் தாக்குவது, வீடுகளைச் சூறையாடுவதுடன் ஆள்காட்டி வேலையையும் செய்து வருகின்றன. மேலும், இப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தைப் பற்றிக் கூட்டுப் படைகளுக்குத் தகவல் தெரிவிக்கும் உளவுப் படையாகவும் செயல்பட்டு வருகின்றன என்பதை அம்மாநிலத்தின் உள்ளூர் நாளேடுகளே அம்பலப்படுத்தியுள்ளன.

இப்போது மீண்டும் இப்பகுதியில் சி.பி.எம். குண்டர்களின் கை மேலோங்கியதும், பழிவாங்கும் வெறியோடு எதிர்க்கட்சியினரும் ஜனநாயக சக்திகளும் இக்குண்டர்படையால் தாக்கப்பட்டு வருகின்றனர். மேற்கு மித்னாபூர் மாவட்டம், புரிபால் எனும் கிராமத்தின் ஆரம்பப் பள்ளி, சி.பி.எம். குண்டர்படையின் முகாமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அந்தப் பள்ளியைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த மண்டல் எனும் பத்திரிகையாளரின் இடது கை சி.பி.எம். குண்டர்களால் முறிக்கப்பட்டது. இப்பகுதியின் உள்ளாட்சித் தேர்தல்களில் திரிணாமுல் கட்சி கணிசமாக வெற்றி பெற்றுள்ள போதிலும் தமது ஆதிக்கத்தை இழக்க சி.பி.எம். தயாராக இல்லை. திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சித் தலைவர்கள் அடித்து விரட்டப்பட்டுகின்றனர்; அல்லது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு முடக்கப்படுகின்றனர்.

ஹர்மத் வாகினி - சி.பி.எம் கட்சியின் குண்டர் படை

கடந்த செப்டம்பரில் கேஜூரி நகரைக் கைப்பற்றுவதற்கான போட்டாபோட்டியில் சி.பி.எம். கட்சி குண்டர்களும் திரிணாமுல் குண்டர்களும் நடத்திய மோதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இரு தரப்பும் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலை வெறியோடு நடத்தின. தொடரும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களால், வருமாண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் கொடிய வன்முறைத் தேர்தலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.

சி.பி.எம்.கட்சி பல பகுதிகளில் ஹர்மத் வாகினி எனப்படும் ஆயுதமேந்திய குண்டர்படைகளைக் கட்டியமைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது என்று திரிணாமுல் காங்கிரசு தலைவி மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றஞ் சாட்டி வருகிறார். கூட்டுப் படைகளை இப்பகுதியிலிருந்து விலக்க வேண்டும் என்றும் சி.பி.எம். குண்டர்படைகளை வெளியேற்றி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் கோரி திரிணாமுல் காங்கிரசு கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது. திரிணாமுல் காங்கிரசின் நிர்பந்தம் காரணமாக மைய அரசின் உளவுத்துறை இது பற்றி கடந்த ஏப்ரலில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மேற்கு மித்னாபூரில் சி.பி.எம்.கட்சி ஆயுதமேந்திய குண்டர் படையைக் கொண்டு ஆயுதப் பயிற்சி நடத்துவதையும், பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகங்கள் முதலானவை குண்டர் படையின் முகாம்களாக மாற்றப்பட்டிருப்பதையும், சி.பி.எம். குண்டர்படைத் தளபதி அனுஜ் பாண்டேவின் சகோதரர் ஷியாம் பாண்டே தலைமையில் குண்டர்படை இயக்கப்படுவதையும் உளவுத்துறை அறிக்கையே அம்பலப்படுத்தியுள்ளது. பீகாரின் மூங்கீரிலிருந்து அசன்சால் வழியாக ஆயுதங்கள் வருவதும், மே.வங்க அமைச்சர் தபன்கோஷின் மகன் நிர்மல்கோஷ் இதற்கு ஏற்பாடுகள் செய்து ஆயுதமேந்திய குண்டர் படையை நடத்துவதும் இந்த அறிக்கையில் அம்பலமாகியுள்ளன. இந்த அறிக்கையிலுள்ள விவரங்கள் “தெகல்கா” வார இதழிலும் வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் மே.வங்க அரசுக்கு அண்மையில் அனுப்பியுள்ள கடிதத்தில், மாநிலத்தின் சில பகுதிகளில் சி.பி.எம். கட்சி ஊழியர்களின் ஆயுத முகாம்கள் நிலவுவதைக் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாகவே இப்போது ‘தற்காப்புக்காக ஊழியர்களின் முகாம்கள்’ உள்ளதாக சி.பி.எம். கட்சி பசப்புகிறது.

குண்டர் படை இல்லாமல் பாசிஸ்டுகளால் ஒரு நிமிடம் கூட அதிகாரத்தில் நீடிக்க முடியாது. அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவும் சமூக பாசிஸ்டுகளான சி.பி.எம். கட்சி பெரிதும் நம்பியிருப்பது குண்டர் படைகளைத்தான். பாசிஸ்டுகள் ஆளும் சட்டிஸ்கருக்கு சல்வாஜூடும்! சமூக பாசிஸ்டுகளான சி.பி.எம். ஆளும் மே.வங்கத்துக்கு ஹர்மத் வாஹினி!

________________________________

- புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
______________________________