Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் "கீ போட் புரட்சியாளர்கள்", "இணைய தளபதிகள்", "அரசியல் கொமிசார்கள்" என்கின்றனர்? சரி ஏன்?

"கீ போட் புரட்சியாளர்கள்", "இணைய தளபதிகள்", "அரசியல் கொமிசார்கள்" என்கின்றனர்? சரி ஏன்?

  • PDF

இப்படி கூறுபவர்கள், ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தவா, இப்படிக் கூறுகின்றனர்!? வர்க்கப் போராட்டத்தை நடத்தத்தான், அவர்கள் இதைக் கூறுகின்றனர் என்றால், எப்படி? அவர்கள் என்ன செய்ய முனைகின்றனர்? இந்த வகையில்தான் இதை நாம் ஆராய முடியும்.

அரசியல்ரீதியாக உயிரிலுள்ள மார்க்சியத்தை உயிரற்ற மார்க்சியமாக்கிவர்களின் அரசியல் யோக்கியத்தை  நாம் அம்பலப்படுத்தும் போது, அதை எதிர்கொள்ள முடியாத கூட்டம் தான் இதை எமக்கு எதிராக கூறுகின்றது. இந்த வகையில் தேசியத்தை புலிக்கு பின் அழித்த  தமிழ்தேசியவாதிகளும், இதைத்தான் எமக்கு எதிராக கூறுகின்றனர்.

மனித சமூகமோ வர்க்கங்களாலானது. அதனால் வர்க்கப் போராட்டங்களாலானது. இது ஒரு மெய்நிகர் உண்மை. வர்க்கங்கள், வர்க்கப் போராட்டங்கள், தொழிலாளி வர்க்க தலைமையில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதை கோருகின்றது. இதைத்தான் மார்க்சியம் வழிகாட்டியது.  இந்த வகையில் மார்க்சியத்தை தங்கள் அரசியல் வழிமுறையாக ஏற்றுக் கொள்பவர்கள்

1. வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் அரசியல் கடமையைச் செய்ய வேண்டும்.

2. தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை இதனடிப்படையில் முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.

இந்தவகையில் தான் மார்க்சியத்தை நாம் எமது தத்துவமாக ஏற்றுக்கொள்கின்றோம். இந்த அடிப்படையில் மார்க்சியத்தை முன்னிறுத்தாத போது, அதை தங்கள் சந்தர்ப்பவாத பிழைப்புவாத நோக்குடன் பயன்படுத்தும் போது, அதை நாம் அம்பலப்படுத்துகின்றோம். இது தான் எமக்கு எதிராக, முத்திரை குத்தி கூச்சல் போடுகின்றது.

சரி நீங்கள் யார்? நீங்கள் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கின்றீர்களா என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம். இதை நீங்கள் இன்று நடைமுறையில் நிறுவாதபோது, நாங்கள் செய்யாததை இட்டுக் கண்டு கொள்ளக் கூடாது என்கின்றனர். தாங்கள் கூடி கும்மியடித்து கொசிப்படிப்பதை அங்கீகரிக்கக் கோருகின்றனர். நாம் அவர்களுடன் சேர்ந்து இதை மறுக்கும் போது, முத்திரை குத்துகின்றனர்.

இணக்கமற்றவர்களாக, சமரசத்துக்கு உடன்படாதவர்களாக, தன் முனைப்பு கொண்டவர்களாக, தன்னகங்காரம் கொண்டவர்களாக என்று பலவாக எம்மைக் காட்டுகின்றனர். இந்த கூட்டம் பற்றி லெனினின்  கூற்று ஓன்றை இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தமானது. "போல்ஷெவிக்குகளைப் பற்றி பிலிஸ்டைனிடம் வழங்கமாயுள்ள கருத்து என்னவெனின் - அவர்களை அவதூறு செய்கின்ற பத்திரிகைகள் ஊக்கி வளர்த்துள்ள கருத்து இது - போல்ஷெவிக்குகள் யாருடனும் சமரசம் செய்ய என்றைக்கும் ஓப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதே" யாகும். போல்சுவிக்குகளின் கருத்தை இப்படித்தான் பிலிஸ்டைன்கள் தனிமைப்படுத்தினர். ஆனால் லெனின் உயிருள்ள மார்க்சியத்தின் வர்க்க அரசியலை எப்போதும் கோரினார். அதில் இருந்து தான், சமரசத்தை அணுகினார். இந்த வகையில் நாம் சமரசம் என்பதை, வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து, அதை நேர்மையாக முன்னெடுக்கும் சொந்த நடைமுறை எல்லைக்குள் தான் அனைத்தையும் அணுகுகின்றோம். இன்று குறைந்தபட்ச நேர்மையும், உண்மையாக இருத்தல் என்ற எல்லைக்குள் இதை நாம் அணுகுகின்றோம். இன்று நாம் எந்தத் தளத்தில் இயங்குகின்றோமோ, எது எதார்த்தமாக இன்று எம்முன் உள்ளதோ, அதற்குள் இதைப் பார்க்கின்றோம். 

சரி நீங்கள் யார்? நீங்கள் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கின்றீர்களா என்ற கேள்வி ஒருபுறத்தில், இதை முன்னெடுக்காத தங்கள் சந்தர்ப்பவாத மற்றும் பிழைப்புவாதத்தை நியாயப்படுத்தும் பொதுத்தளத்தில் அநேகமாக முன்வைக்கப்படுகின்றது. மறுதளத்தில் இது நியாயமான அதன் பாலான அக்கறையில் இருந்தும் எழுகின்றது.

இரண்டையும் சரியாக நாம் இனம் காண வேண்டியுள்ளது. முதலாவது வகையினர் மார்க்சியத்தை வர்க்கப் போராட்டமல்லாத தங்கள் இருப்புசார் எல்லைக்குள் இதை மூடிவைக்கின்றனர். இது மக்களின் நடைமுறை சார்ந்த வாழ்வியலின் ஒரு வர்க்கப் போராட்டத் தத்துவமல்ல என்பதே, அவர்கள் முன்தள்ளும் மார்க்சியமாக உள்ளது. உயிருள்ள மார்க்சியத்தை, தங்கள் தங்கள் அளவில் அதைக் கடைப்பிடிக்கவேண்டிய ஒரு  வாழ்வியல் நெறியல்ல என்பதே இவர்களின் அரசியல் நிலை. தம் சுய இருப்புக்குள், மார்க்சியத்தைப் புதைக்கின்றனர். இப்படி இருத்தல் மூலம், தங்களையும் மார்க்சியவாதிகளாக கூறிக் கொள்கின்றனர். நாம் இதை அம்பலப்படுத்துவதால், அவர்கள் எமக்கு எதிராக மூச்சிரைக்க பாய்ந்து முட்டுகின்றனர். இதுதான் இன்று நடப்பது.

அவர்கள் வெள்ளைவேட்டி மூலம் தங்கள் பண்பான மொழியில் தம்மைக் காட்டிக் கொள்ளும் இந்தக் கூட்டம், பின்னூட்டம் மூலம் தங்கள் அரசியல் வக்கிரத்தை மூடிமறைக்கின்றனர். அவர்களுக்கு எப்போதும்; இரண்டு முகம் உண்டு. சொந்தப் பெயரில் பூர்சுவா மொழிப் பண்பாட்டில் எழுதும் இவர்கள் தான், கீழே பல புனைபெயரில் பூர்சுவா வக்கிரங்களை கொட்டுகின்றனர். உண்மையில் பின்னூட்ட அவதூறு அரசியல் தான், முத்திரை குத்தும் அரசியலை பொது அரசியல் தளத்தில் செல்வாக்குடன் செய்கின்றது. இதுதான் இதில் உள்ள மெய்நிகர் உண்மை. இதன் மூலம் வர்க்க அரசியல் அல்லாத உயிரற்ற மார்க்சியத்தை, பண்பாடு கொண்ட வர்க்க நடைமுறையாக காட்டுகின்றனர். இன்றைய இலங்கை சூழலில், இதுதான் நடைமுறையாக பீற்றப்படுகின்றது.

இதை நாம் அம்பலப்படுத்தும் போது செயல் சார்ந்த வர்க்க அக்கறை உள்ளவர்கள், அடுத்து என்ன என்ற அக்கறையுடன் எம்மை நோக்குகின்றனர். எதர்த்தத்தில் நாம் எதிர்கொள்ளும் ஒரு நெருக்கடியும், ஏன் சவாலும் கூடத்தான். நாங்கள் எந்த எதார்த்தத்தையும் கடந்து வழிகாட்டவில்லை. நாங்கள் முடிந்த எல்லா நிகழ்தகவுகளையும், அதேநேரம் வர்க்கப் போராட்டம் அல்லாத அனைத்தையும், உயிருள்ள மார்க்சியம் வழிகாட்டும் அரசியல் ஒளியில் நின்று ஒளியூட்டிக் காட்ட முனைகின்றோம். இதன் மூலம் நடைமுறையில் உயிருள்ள மார்க்சியம் என்றால் என்ன என்பதை, உயிரற்ற மார்க்சியத்தில் இருந்து நாம் அதை புரியவைக்கின்றோம். இதுதான் இன்றைய எமது நடைமுறை.

நாங்கள் புலம்பெயர்ந்த நாட்டில் வாழ்வதும், மறுதளத்தில் இலங்கையில் உயிருள்ள வர்க்க அரசியல் அடித்தளம் எதுவும் அங்கு இல்லாது இருப்பதும், எம்முன்னுள்ள அரசியல் எதார்த்தம். இந்த எதார்த்தத்தையே நாம் இன்று எதிர்கொண்டேயாக வேண்டியுள்ளது.

இந்த எதார்த்தத்தை புரிந்து கொண்டு அதை கடந்து செல்ல தடைகள் பல. ஆனால் மார்க்சியத்தின் பெயரில் இருக்கின்ற சந்தர்ப்பவாத பிழைப்புவாத கூட்டம் தான், இதன் முதன்மையான தடையாக உள்ளது. இவர்களிடமிருந்து மார்க்சியத்தை விடுவித்தாக வேண்டும். இது மார்க்சியத்தின் உயிர்துடிப்புள்ள அரசியல் கூறுகளை மறுத்து நிற்கின்றது. பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்குகின்ற வர்க்கத்தின் நிலைக்கு ஏற்ற மார்க்சியமாக, மார்க்சியத்தை வழிகாட்டுகின்றனர். இந்தப் போக்கு கொண்ட மார்க்சிய அடிப்படை மட்டும் இலங்கையில் நீடிக்கின்ற இன்றைய நிலையில், இது இலங்கையில் சர்ந்தர்ப்பவாத பிழைப்புவாதத்தை அரசியலாக முன்தள்ளுகின்றது. உயிர்த்துடிப்புள்ள மார்க்சியத்தின் அரசியல் கூறுகள் அங்கு உருவாக முடியாத வண்ணம், அதை அதன் கருவில் வைத்தே அழித்து சீரழிக்கின்றது. பிழைப்புவாதத்தையும், சந்தர்ப்பவாதத்தையும் மார்க்சியமாக காட்டுகின்ற எல்லா அரசியல் கூறுகளையும், அரசியல் ரீதியான தெளிவுக்கும் முடிவுக்கும் கொண்டு வரும் போராட்டம் தான் இன்று முதன்மையான வர்க்க போராட்டத்தின் அரசியல் கூறாக உள்ளது. அண்மைய நிகழ்வுகள், அதை துரிதமாக்க மேலும் அம்பலமாக்க கோருகின்றது. இந்த வகையில் எம்முன் இணையம் முக்கியமான அரசியல் செயல்தள ஊடகமாக மாறியுள்ளது.

வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்தல் என்பது, வர்க்க சக்திகளின் அணிசேர்க்கையை அடிப்படையாக கொண்டது. இதை ஏற்றுக் கொண்ட செயல்வீரர்களை உருவாக்குவது தான், இன்று முதன்மையான மைய அரசியல் பணியாகும். பிழைப்புவாத சந்தர்ப்பவாத உயிரற்ற மார்க்சியத்தில் இருந்து, மார்க்சியத்தை விடிவித்தாகவேண்டும். செயலற்ற எழுத்துத் தளத்தில் இது உள்ளதால், மார்க்சியத்தை உயிரற்ற எழுத்துக்கு பலியிடுவதை நாம் அனுமதிக்க முடியாது. இதைத்தான் லெனின் "உயிர்ப்புள்ள மார்க்சியத்தை உயிரற்ற எழுத்துக்குப் பலியிடுவதாகும்" என்றார். உயிர்ப்புள்ள மார்க்சியத்தை, உயிரற்ற எழுத்துக்கு பலியிடுவதன் மூலம், சமூகத்தை கைவிட்டு கடந்தகால வரலாற்றை தொடர்ந்து தொடர நாம் அனுமதிக்க முடியாது.

இந்த வகையில் எமது போராட்டம் என்பது, உயிர்ப்புள்ள மார்க்சியத்தை வர்க்கப் போராட்டத்தில் இணைப்பதுதான். மார்க்ஸ் கூறுவது போல் "நமது தத்துவம் ஒரு வறட்டுச் சூத்திரம் அல்ல, செயலுக்கு வழிகாட்டி அது" இந்த உண்மையை சந்தர்ப்பவாதிகளும் பிழைப்புவாதிகளும் மறுக்கின்றனர். இலங்கையில் மார்க்சியம் பேசும் கூட்டமும், புலத்தில் பிழைப்புவாத சந்தர்ப்பவாத கூட்டமும், மார்க்சியத்தை நடைமுறையற்ற வறட்டு தத்துவமாக்கிவிட்டு, தம்முடன் எம்மை கூடக்கோருகின்றனர். இப்படி கூடினால் பிள்ளையை நாங்கள் பெற முடியும் என்கின்றனர். இதை மறுப்பதையே அவர்கள் "வரட்டுவாதம்", "தனிநபர் அவதூறு" என்கின்றனர். மார்க்சிய தத்துவத்தை நடைமுறையில் இருந்து வறட்டு சூத்திரமாகியவர்கள், தங்கள் நடைமுறையை ஏற்காத எம்மை வறட்டுவாதிகள் என்கின்றனர். வர்க்க அரசியலைக் கைவிட்டு பிரமுகமானவர்கள், மக்களை ஏய்த்து பிழைக்கப் போனவர்களுக்கு வெளியில், வர்க்க அரசியலைக் கோரி தனிநபராக போராடியதையே தனிநபர் தாக்குதல் என்கின்றனர். இதையே தன்னை முன்னிலைப்படுத்திய சேறடிப்பு அரசியல் என்கின்றனர். இப்படி கடந்து போன வர்க்கமற்ற அரசியல் சீரழிவில் கொஞ்சி விளையாடிய போக்குகளுக்கு எதிராக போராடியே எமது நிலையை, இன்று முத்திரைகுத்தி புதைக்க முனைகின்றனர். உயிருள்ள மார்க்சியத்தை மீட்க நடத்தும் போராட்டத்தில் இன்று நாம் சந்திப்பது அவதூறு சார்ந்த முத்திரை குத்தல்.       

இன்று எங்கள் நிலை என்ன? லெனினிடம் இருந்து இதை கற்றுக்கொள்கின்றோம். "ஒரு மார்க்சியவாதி எது சாத்தியம் என்ற நிலையிருந்தல்லாமல், எது யதார்த்தத்தில் இருப்பது என்கிற நிலையிருந்து தொடங்கவேண்டும்" என்றார் லெனின். "எதார்த்தம்" கடந்த "சாத்தியம்" என்பது, பிழைப்புவாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் எம்மீது திணிக்கின்றது. இன்றைய வர்க்கப்போராட்டம் சார்ந்த எதார்த்தம் என்பது, உயிரற்ற மார்க்சியமாக எம் முன் உள்ளது. இதற்குள் எது சாத்தியம் என்று எம்மை இனம் கண்டு செல்லக் கோருகின்றது. அதற்கு மாறாக நாம் உயிரற்ற மார்க்சியத்திடமிருந்து, உயிருள்ள மார்க்சியத்தை மீட்கும் போராட்டம் தான் எம்முன் கடமையாக உள்ளது. வர்க்கத்தின் கடமை என்ற வகையில், இதுதான் எம்முன்ளுள்ள அரசியல் எதார்த்தமாக உள்ளது.

வர்க்கப் போராட்டம் என்பது, உயிருள்ள மார்க்சியத்தில் இணைப்பது தான்;. வர்க்கத்தின் தலைமை நிறுவுதல் என்பது, அதற்கான தடையை இனம் காணுதல் தான். லெனின் இதுபற்றி "அரசியல் தலைமைக்கு வர விரும்புகிறவர்கள் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி தீர்க்கமாகச் சிந்திக்கத் திறன் பெற்றிருக்க வேண்டும், இந்த திறனில்லாமை "இடதுசாரிகளை" ஒரு ஊசலாட்டமான கொள்கையைப் பிரச்சாரம் செய்யும் முதுகெலும்பற்ற பிரச்சாரகர்களாக மாற்றிவிடுகிறனர்" என்றார். இலங்கையில் வர்க்கங்கள், வர்க்கமாக அணிதிரளாமை என்பது "இடதுசாரிகளின்" வர்க்க போராட்டமற்ற பிரச்சாரத்தின் மூலம் தான் என்பது தெளிவானது.  மார்க்சிசத்தை உயிரற்ற மார்க்சியமாக்கி விட்டு, அதன் மூலம் பிழைப்புவாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் அரசியலாக முன்தள்ளுகின்றனர். இதற்கு எதிரான போராட்டம் தான், வர்க்க அரசியலை மீட்கும் போராட்டத்தில் முதன்மையானது மையமானது. இதற்குள் தான், நாம் தூற்றப்படுகின்றோம்.

பி.இரயாகரன்
06.10.2010

Last Updated on Thursday, 07 October 2010 05:52