Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல் - பி.சாய்நாத்

பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல் - பி.சாய்நாத்

  • PDF

மீண்மும் இப்படிப்பட்ட கொடுமை நிகழக்கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட போபால் மக்கள். எனினும், அதற்கு நேர் எதிரானதையே நாம் உறுதிப்படுத்தி வருவதாகத் தோன்றுகிறது.

இருபதாயிரத்துக்கும் மேலானோர் கொலை; ஐந்து லட்சத்துக்கும் மேலானோர் முடமாக்கப்பட்டனர், பல வகைகளில் பாதிக்கப்பட்டனர். வழங்கப்பட்ட இழப்பீடு 1989-ஆம் ஆண்டின் ரூபாய் மதிப்பில் தலைக்கு வெறும் 12,414 ரூபாய்கள் மட்டுமே. யூனியன் கார்பைடின் இந்தியத் துணை நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள் ஏழு பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதைப் பார்ப்பதற்குத்தான் கால் நூற்றாண்டு காத்திருந்தோமா? ஆகப்பெரும் பொறுப்பாளியான அமெரிக்கத் தலைமை நிறுவனத்தின் ஒரு அதிகாரி கூடத் தண்டிக்கப்படவில்லை.

இருப்பினும், வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொணரத் தவறியதுதான் போபாலுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்பதாகக் கருதுவது கொஞ்சம் கேலிக்குரியதாக இருக்கிறது. பகாசுரத் தொழிற்கழகங்களின் கொடுங்கோன்மையை அப்பட்டமா வெளிக்காட்டிய 1984 போபால் விஷவாயுப் பேரழிவிலிருந்து படிப்பினை பெறுவதைத் தவிர்க்கும் முயற்சி அப்படித்தான் இருக்கிறது. இந்நிறுவனத்தின் மெத்தில் ஐசோசயனேட் வாயு 20,000 மக்களை (பெரும்பாலும் பரம ஏழைகள்) படுகொலை செய்து 20 ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடிவிட்டன. இந்நிலையில், அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்திய அரசின் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா நிறைவேற்றப்படுமானால், அது நாடெங்கிலும் இவ்வாறான குற்ற நடவடிக்கைகளுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்குவதாகவே அமையும்.

படுபயங்கரமான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைப் போபால் குறித்துக் காட்டியது. தொழிற்கழகங்களின் மிருக பலத்தைத் தடுக்கும் சக்திகள் நொறுங்கிச் சுக்கலாகிப் போனதை வெளிச்சமிட்டது இந்த நிகழ்வு. மெக்சிகோ வளைகுடாவில் நடைபெறும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் துரப்பணப் பணியில் ஏராளமான எண்ணைக் கசிவு ஏற்பட்டுவருகிறது - ஒரு நாளைக்கு 30,000 முதல் 80,000 பேரல்கள் அளவுக்கு எண்ணை கடலில் கசிவதாக மதிப்பிடப்படுகிறது.

பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் மீதான பாரக் ஒபாமாவின் ‘கடுஞ்சொற்கள்’ எல்லாம் நவம்பருக்கு முந்திய தேர்தல் சவடால்களேயன்றி வேறல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகளிலிருந்து பிரிட்டிஷ் பெட்ரோலியம் இளைப்பாறுதல் பெறலாம்.

இத் தீர்ப்புகளில் முதலாவது 2008-இல் வழங்கப்பட்டது. எக்சான் வேலிஸ் எண்ணெய் நிறுவனம் 1989-இல் நிகழ்த்திய வரலாறு காணாத எண்ணைக் கசிவு பற்றிய வழக்கில் வந்த தீர்ப்பு அது. எளிமையாகச் சொன்னால், இன்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் எக்சான் வேலிஸுக்கு நிகரான கசிவை எட்டு நாட்களுக்கு ஒரு முறை (ஏப்ரல் மாதம் முதல்) நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. எக்சான் வழக்கில் அந்த நிறுவனத்தின் மீது 5 பில்லியன் டாலர்கள் அபராதத் தொகை விதித்து 1994-இல் ஜூரிகள் தீர்ப்பு வழங்கினர். மேல் முறையீட்டு நீதிமன்றம் 2006-ஆம் ஆண்டில் அந்த அபராதத் தொகையை 2.5 பில்லியன் டாலர்கள் என்று பாதியாகக் குறைத்தது. ஜூன் 2008-இல், அமெரிக்க உச்ச நீதிமன்றமோ அபராதத் தொகையை வெறும் 500 மில்லியன் டாலர்களாக (மேலும் 80%) குறைத்தது."பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கப்போவது தலா 15000 டாலர்கள் மட்டுமே" என்று குறிப்பிடுகிறார், ஷரோன் ஸ்மித் (counterpunch.org). இந்த அபராத வழக்கை விடாப்பிடியாக நடத்திய எக்சான் நிறுவனத் தலைமை இயக்குனர் லீ ரேமாண்ட் மொத்தமாக 400 மில்லியன் டாலர்களைத் தனக்காக மட்டும் பெற்றுக் கொண்டு பணிஓய்வு பெற்றார். நாங்கள் 33,000 பேர் பகிர்ந்து கொள்ளும் தொகையை ஸ்மித் மட்டுமே சுருட்டிக் கொண்டு போவிட்டார் என எக்சான் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் வால் ஸ்டிரீட் மூலதனச் சந்தை சூதாடிகள் உலகப் பொருளாதாரத்தையே நிலைகுத்தச் செய்தனர். அவர்களது செயல் பல மில்லியன் அமெரிக்கர்கள் மற்றும் உலக மக்களின் வேலைக்கும், வாழ்வாதாரத்துக்கும் உலை வைத்தது. எனினும், அதே ஆண்டிலேயே அமெரிக்கத் தலைமை இயக்குனர்கள் பலர் போனசாகப் பல நூறு கோடி டாலர்களை அள்ளிச் சென்றனர். (அதே தேர்தல் ஆண்டில் தான், "தோண்டு கண்ணா, தோண்டு" என்ற குத்தாட்ட முழக்கத்துடன் ஆழ்கடல் எண்ணைத் துரப்பண நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டின பன்னாட்டு எண்ணெய்க் குழுமங்கள். இப்போது என்ன சொல்வது? "கசியட்டும் கண்ணு, கசியட்டும்... கடலே கூவமாகட்டும்" என்பதா?)

இவ்வாண்டு, பிரிட்டிஷ் பெட்ரோலியம் மெக்சிகோ வளைகுடாவையே குழம்பிய குட்டையாக்குவதற்கு மூன்றே மாதங்களுக்கு முன்னர்தான், அமெரிக்க உச்ச நீதிமன்றம் சிடிசன்ஸ் யுனைடட்-க்கும் தேசிய தேர்தல் ஆணையத்துக்கும் இடையிலான வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம் தொழிற்கழகங்களின் வலிமைக்கு மேலும் வலிமை சேர்த்தது. "ஏற்கெனவே வெள்ளமெனப் பாயும் கார்ப்பரேட் பணத்தில் தேர்தல் களம் மிதந்து கொண்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் மூலமாக தொழிற்கழகங்கள் நேரடியாகவே ஏராளமான பணத்தைக் கொட்ட முடியும்... உள்ளூர், மாநில, தேசிய அளவுகளிலான தேர்தல்களில் நிற்கும் எந்த நபரையும் இனி இவர்கள் விலைக்கு வாங்கவோ, மிரட்டிப் பணிய வைக்கவோ முடியும்" என்கிறார் ரால்ப் நடார். "இத்தீர்ப்பின் பின்னால் இருக்கும் கருத்து என்னவெனில், தொழிற்கழகம் என்பது ஒரு மனிதனுக்கு உரிய எல்லா உரிமைகளும் கொண்ட (ஆனால், எவ்விதக் கடமைகளும் இல்லாத) ஒரு ‘சட்டவகை மனிதன்’; எனவே, அது பேச்சுரிமையைப் பெற்றுள்ளது; நன்கொடை என்பது பேச்சு சுதந்திரத்தின் ஒரு வடிவமே" என்று "கவுண்டர்பஞ்ச்" எனும் இணையதள செய்திக் கடிதத்தில் மேசன் ஜாஃப்னி அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பொருளை விளக்குகிறார்.

அப்புறம் என்ன, துவளாதே பிரிட்டிஷ் பெட்ரோலியமே, துடித்தெழு!... வாய்ப்புகள் ஒன்றும் கைநழுவி விடவில்லை. அமெரிக்க காங்கிரஸ் மற்றும் செனட் நாற்காலிகளை அலங்கரிப்பவர்களில் எத்தனை பேர் பெரும் எண்ணைக் குழுமங்களின் பணமூட்டைகளைப் பெற்றவர்கள் தெரியுமா, அது மறந்துவிட்டதா என்ன?

பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் எண்ணைக் கசிவுப் பிரச்சினையில் கவனம் செலுத்துகின்ற இந்த தருணத்தில், இவ்வாறான பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களும் வெள்ளைத் தோல் மனிதர்களும் அல்லாத பிற மக்களைப் பற்றியும் சிறிது சிந்தித்துப் பார்க்கலாமே. "அயலுறவுக் கொள்கை பற்றிய பார்வை" (Foreign Policy in Focus ) என்ற இதழின் கட்டுரையாளர் கான் ஹல்லினன், "நைஜீரிய அரசின் புள்ளிவிவரப்படி 1970-ஆம் ஆண்டுக்கும் 2000-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 9000-க்கும் மேலான எண்ணைக் கசிவுகள் அங்கு நிகழ்ந்துள்ளன. தற்போது எண்ணை கசிவுப் பகுதிகள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவையின் எண்ணிக்கை 2000" என்று கூறுகிறார். கிடக்கட்டும்; ஆப்பிரிக்க உயிர்கள் அத்தனை மதிப்பு வாய்ந்தவையா என்ன?

போபால் பேரழிவு நிகழ்ந்து ஏழாண்டுகளுக்குப் பின்னர் உலக வங்கியின் தலைமைப் பொருளியலாளர் லாரி சம்மர்ஸ் கொடூரமானதொரு குறிப்பை எழுதினார். அக்குறிப்பில், "விசயம் நமக்குள்ளே இருக்கட்டும். இந்த அசிங்கம் பிடிச்ச தொழிற்துறைகளையெல்லாம் பின்தங்கிய நாடுகளுக்குத் தள்ளி விடுவதற்கு உலக வங்கி மேலும் கொஞ்சம் ஊக்கம் அளிக்கக் கூடாதா?" என்று கருத்தை எழுதியிருந்தார். "கூலி விகிதங்கள் மிகவும் குறைவாயுள்ள ஏழை நாடுகளில் அபாயகரமான நச்சுக் கழிவுகளை கொண்டுபோ கொட்டுவதுதான் பொருளாதாரக் கணக்கீடுகளின்படி புத்திசாலித்தனமானது என்றும், இந்த உண்மையை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்" என்றும் சம்மர்ஸ் பரிந்துரை செய்திருந்தார்.

விசயம் வெளியே வந்தவுடன், சும்மா கிண்டலுக்காகத்தான் அப்படி எழுதியதாகக் கூறி அவர் சமாளிக்க முயன்றார். ஆனால், அதை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. பின்னாளில் அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆனார்; இன்று, அதிபர் ஒபாமாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அவர்தான். அன்று அவர் எழுதிய குறிப்பின் சாரம்தான் உலகின் எதார்த்தமாக இருக்கிறது. போபால் நிகழ்வு முதல் இந்தக் கணம் வரை துல்லியமாக இதுதான் நடந்து வருகிறது.

போபால் தீர்ப்புக்கு ஐ.மு. கூட்டணி அரசு காட்டியுள்ள எதிர்வினையைக் காணும்போது, இந்த அரசாங்கத்தின் யோக்கியதை 1984-இல் எப்படி கேடுகெட்டதாக இருந்ததோ, அதிலிருந்து சற்றும் மாறுபட்டிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது. போபாலுக்கு அழுவதும் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதாவை சட்டமாக்கத் துடிப்பதும் ஒத்துப்போகவே முடியாத இரட்டை வேடங்கள். போபாலில் பேரழிவுக்குப் பின்னர் பாதிக்கப்பட்டோரின் நியாயம் விலை பேசப்பட்டது. அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதாவோ அரசாங்கத்தால் செய்யப்படும் முன்பேர விற்பனை. 1984 போபால் பேரழிவு தொடர்பான உண்மைகளை மறைப்பவை அரசாங்கங்கள் மட்டுமா?

பேரழிவு நடந்த அந்த நாட்களிலேயே, "தொழிலாளிகள் வேண்டுமென்றே நடத்திய சதிவேலை விளைவாகத்தான் இப்பேரழிவு நிகழ்ந்து விட்டது" என்று யூனியன் கார்பைடு நிர்வாகம் திட்டமிட்டே அவிழ்த்து விட்ட பொய்க்கதைகளை பல செய்தித்தாள்கள் மகிழ்ச்சியுடன் பிரசுரித்தன. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், யூனியன் கார்பைடு நிறுவனத்திடம் காசு வாங்கிக்கொண்டு நடத்தப்பட்ட ஒரு ‘ஆய்வு’, அதிருப்தியுற்ற ஒரு தொழிலாளியின் நடவடிக்கைதான் இந்தப் பேரழிவைத் தோற்றுவித்ததாக நிரூபிக்க முயன்றது. கார்பைடு நிறுவனமும் தனக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாதபடி உத்திரவாதப்படுத்திக் கொண்டது. இந்த வழக்கை நடத்துவதற்குச் சரியான இடம் இந்திய நீதிமன்றங்களே என்று நானி பல்கிவாலா உள்ளிட்ட இந்தியாவின் சட்ட மேதைகள் சிலர் அமெரிக்க நீதிமன்றங்களை ஏற்கச் செய்தனர். அமெரிக்க நீதிமன்றங்கள் விதித்திருக்கக் கூடிய ஒப்பீட்டளவில் கூடுதலான இழப்பீட்டுத் தொகையிலிருந்தும் கார்பைடு நிறுவனத்தை இத்தகைய செயல்கள் விடுவித்தன.

அடுத்த பத்தாண்டுகளிலேயே, தாராளமயம் என்ற புதிய சகாப்தத்தின் குறியீடாக என்ரான் பரிணமித்தது. இந்த என்ரான் கும்பலைப் பரிசுத்தவான்களாகக் காட்டுவதற்கு பெரும் கல்வியாளர்களும் ‘வல்லுனர்களும்’, கட்டுரையாளர்களும் கடுமையாக உழைத்தனர். என்ரான் ஒப்பந்தம் பற்றி துவக்கத்திலேயே எழுந்த கடும் விமர்சனங்களுக்குப் பின்னர்தான் இவையெல்லாம் நடந்தன என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இந்தியாவில் பொதுக் கருத்தை உருவாக்குவோர், சட்டம் இயற்றுவோர் போன்றவர்களுக்குக் "கற்பிப்பதற்கு" என்ரான் நிறுவனம் இறக்கிவிட்ட பல மில்லியன் டாலர் பணம்தான், இவர்களுக்கெல்லாம் இதய மாற்று அறுவை சிகிச்சையை முடித்து, மன மாற்றத்தை ஏற்படுத்தியது போலும். பத்திரிகைகளுக்கு விளம்பரங்களும் தாராளமாக அள்ளி வழங்கப்பட்டன. என்ரான் பற்றி மிகக் கடுமையாக விமரிசித்து எழுதிவந்த ஒரு பிரபல பத்திரிகை திடீரென்று கட்சி தாவி, அதன் தீவிர துதிபாடியாக மாறியது. மேலும் பலரும் இவ்வாறே செய்தனர். பிரம்மாண்டமான தொகைகள் எக்கச்சக்கமாகக் கற்றுக் கொடுக்கும் போலும்!

ஆனால், மகாராஷ்டிரத்துக்கும் இந்தியாவுக்கும் அது பேரழிவைக் கொண்டுவந்தது. முன்பு லாபகரமாக இயங்கிய அம்மாநிலத்தின் மின்வாரியம் - என்ரான் வருகைக்குப் பின் - கோடிக்கணக்கில் நட்டத்தைக் குவித்தது. அதன் விளைவாக, மக்களுக்கான சேவைகள் மற்றும் நலத் திட்டங்களுக்கான நிதியை அம்மாநில அரசு, தாறுமாறாகக் குறைத்தது. மோசடியின் திருவுருவமான என்ரான் நிறுவனம் தனது ஊழல் நடவடிக்கையால் அமெரிக்காவில் வீழ்ச்சியுற்றது. அதன் தலைமையில் இருந்த சிலர் சட்டத்திடமிருந்து தப்பித் தலைமறைவாயினர். ஆனால், அந்நிறுவனம் ஏற்படுத்திய குளறுபடிகள் மட்டும் இன்றளவும் நம்மை வதைக்கின்றன. சி.ஐ.டி.யு.வும் அப மேத்தாவும் தாக்கல் செய்த என்ரான் ஒப்பந்தத்துக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தூக்கி வீசியதன் காரணமாக, இந்தப் பேரழிவில் இருந்து தப்புவதற்கு இருந்த ஒரே வாய்ப்பும் தொலைந்துவிட்டது. இதுதான் கதை.

நிற்க. ஒபாமாவின் சவடால்கள் பிரிட்டிஷ் சகபாடிகளின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டது போல் தெரிகிறது. அமெரிக்கா கடந்த காலங்களில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு நிதியும், ஆதரவும் நல்கி பேருதவி புரிந்திருக்கிறது என்பதே உண்மை.

"வரலாற்றின் மாபெரும் கைதூக்கிவிடல்" என்று அலெக்சாண்டர் காக்பர்ன் சித்தரிக்கும் நிகழ்வில், 1953-ஆம் ஆண்டு கேவலமான சதிவேலை மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி, ஈரானின் முகமது மொசாதே அரசை அகற்றியது, அமெரிக்க சி.ஐ.ஏ. நாட்டைக் கடுமையாகச் சுரண்டி வந்த ஆங்கிலோ-ஈரானியன் ஆயில் கம்பெனியை தேசவுடைமை ஆக்குவது என்று இரானிய நாடாளுமன்றம் ஒருமனதாக முடிவு செய்ததால் மொசாதேயின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவரது இடத்தில் மேலை நாட்டு எண்ணைக் கம்பெனிகளின் வளர்ப்புப் பிராணியான ஷா ரிசா பஹல்வி சர்வாதிகாரியாக அமர்த்தப்பட்டார். ஆங்கிலோ-ஈரானியன் ஆயில் கம்பெனி தனது பழைய சலுகைகளில் நாற்பது சதவீதத்தை மீளப் பெற்றது. பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்ற பெயர் மாற்றத்துடன் சர்வதேசக் குழுமம் ஆனது. பன்னாட்டுத் தொழிற்கழகங்களால் மூன்றாம் உலக நாடுகளில் நிகழ்த்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புகளைப் பட்டியலிட்டால் பல நூல்கள் எழுத வேண்டியிருக்கும்.

யூனியன் கார்பைடு போபாலில் செய்ததும், தண்டனையே இல்லாமல் தப்பியதும் அதிர்ச்சி அளிக்கத்தான் செய்கிறது. ஆனால், நிச்சயமாக வியப்பளிக்கவில்லை. அதற்குப் பிந்திய கால் நூற்றாண்டு காலத்திலும் தொழிற்கழகங்களின் அதிகார வலிமை கணிசமாக உயர்ந்தே வந்திருக்கிறது. தொழிற்கழகங்களைச் சமுதாயத்திற்கு மேலானதாகவும், தனியார் இலாபத்தை பொது நலனுக்கு மேலானதாகவும் மதித்து சமூகம் சலுகை வழங்குகின்ற வரை போபால்கள் பல தொடரத்தான் செய்யும்.

போபாலில் பாதிக்கப்பட்ட மக்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் ஒரு முக்கியமான விசயத்தையும் நினைவில் நிறுத்துங்கள். "மீண்டும் இப்படிப்பட்ட கொடுமை நிகழக்கூடாது என்பதை நாம் உறுதி செய்யவேண்டும்" என்கிறார்கள் அம்மக்கள். எனினும், அதற்கு நேர் எதிரானதையே நாம் உறுதிப்படுத்தி வருவதாகத் தோன்றுகிறது. எதிர்காலத்தில் இந்திய மண்ணில் அணுஉலை விபத்து நிகழக் காரணமாக இருக்கப்போகும் எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும், அற்பத் தொகையை இழப்பீடாக எடுத்து வீசிவிட்டு, தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை தற்போதைய அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா வழங்குகிறது.

போபாலில் வழங்கப்பட்ட இழப்பீட்டை தற்போது நாம் ஒரு குற்றம் என்று கருதுகிறோம். இம்மசோதா நிறைவேறிவிட்டால் எதிர்காலத்தில் இதுதான் இழப்பீடுகள் தொடர்பான சட்டபூர்வமான அளவுகோலாகவே இருக்கும்.

லாரி சம்மர்ஸ் அவர்களே, மீண்டும் வருக; உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

(ஜூன் 15, 2010 - "தி இந்து" நாளேட்டில் பி.சாய்நாத் எழுதிய கட்டுரையின்
சுருக்கப்பட்ட தமிழாக்கம்)