Mon05062024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

இரண்டாகப் பிளவுறும் விடுதலைப் புலிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்19) : ஐயர்

  • PDF

மத்தியகுழு உறுப்பினர்கள் நால்வரும் இப்போது இலங்கையில் தான் இருக்கிறோம். கோண்டாவிலில் பிரபாகரன் என்னைச் சந்தித்த மறுநாளே நாம் நால்வரும் இன்னும் சிலருடன் மாங்குளம் முகாமிற்குச் செல்கிறோம். பிரபாகரன் இப்போது என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. நாங்கள் பல தடவை மத்தியகுழு ஒன்று கூடல்களை நடத்துகிறோம்.

இது வரையில் மத்திய குழுக் கூட்டங்கள் எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகவே நடத்தப்படும். முதல் தடவையாக நமது வழிமுறை தவறானது என்று கருத்துக் குறித்து விவாதிப்பதற்காக ஒரு இறுக்கமான சூழலில் ஒன்றுகூடல் நடை பெறுகிறது. யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை. எதோ ஒன்றை இழந்துவிட்டது போன்ற சோகமான உரையாடல்கள் இடம்பெற்றன.

ஒவ்வொரு தடவையும் நான் முன்வைத்த முன் மொழிவுகள் குறித்தே பேசுகிறோம். குறிப்பாக மத்திய குழு கலைக்கப்ப்பட்டு செயற்குழு ஒன்றிடம் இயக்கத்தின் நிர்வாகம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை உறுதியாக வாதட வேண்டிய தேவை எழுகிறது. பின்னர் இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி மக்கள் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதும், தேடப்படுகின்ற உறுப்பினர்கள் அனைவரும் மார்க்சியக் கல்வி கற்றுக்கொள்வதற்காக தமிழ் நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதையும், அரசியல் பத்திரிகை ஒன்றை வெளியிட வேண்டும் என்பதையும் மத்திய குழுவில், நீண்ட விவாதங்களின் பின்னர் பிரபாகரனின் உடன்பாட்டுடன் முடிவெடுக்கிறோம்.

பிரபாகரன் முழுமனதுடனும் கோரிக்கைகளுக்கு உடன்படவில்லை. ஆரம்பத்திலிருந்து பிரபாகரனோடு முழுமையாக ஒத்துழைத்த என்மீது பிரபாகரன் வெறுப்படைந்திருந்தது போலத் தென்பட்டது. எனக்குப் பின்பு எம்மோடு மத்திய குழுவிலிருந்த நாகராஜாவும் எனது கோரிக்கைகளுக்காகக் குரல்கொடுக்கிறார். இவையெல்லாம் பிரபாகரனை மேலும் அதிர்ப்த்திக்கு உள்ளாக்குகின்றது
இவ்வாறான வெறுப்புணர்வுடனும் வெறுமையுடனும் தான் செயற்குழு நியமனக் கூட்டம் நடத்தப்படுவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

பதினேழு வயதில் இராணுவம் சார்ந்த நடவடிக்கைகளில் வெற்றிபெற்றிருந்த பிரபாகரன் தூய இராணுவ நடவடிக்கைகள் மட்டும் தான் வெற்றிக்கான ஒரே வழி என்பதை உறுதியாக  நம்பியிருந்தார்.அதனை விமர்சிக்கின்ற யாரும் போராட்டத்தைக் சிதைவடையச் செய்வதாக எண்ணினார். நீண்ட விவாதங்கள், கருத்துப் பரிமாறல்கள் ஊடாக தவிர்க்கவியாமல் எமது கோரிக்கைகளுக்கு ஒத்துழைக்கிறார்.

செயற்குழுவை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகவே ஆரம்பித்துவிட்டோம். அதுவும் உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து செயற்குழு ஒன்றை ஒரு மனதான நியமன அடிப்படையில் உருவாக்குவது என்று முடிவு செய்கிறோம். யாழ்ப்பாண மாவட்டமே சந்திப்பிற்கு வசதியானதாக அமையும் என்ற அடிப்படையில் அங்கு எமது செயற்குழுவை உருவாக்குவதற்கான கூட்டத்தை ஒழுங்கு செய்வதாக முடிவெடுக்கிறோம்.

நீர்வேலியில் வாய்காற்தரவை என்ற இடத்தில் எமது ஆதரவாளர்கள் புதிய உறுப்பினர்கள் போன்றோர், அங்குள்ள ஒரு மைதானத்தில் கிரிககட் விளையாடுவதாகவும் அதே வேளை அதற்கு அருகில் நாங்கள் செயற்குழுவை உருவாக்குவதற்கான கூட்டம் நடத்துவதாகவும் தீர்மானிக்கிறோம்.

எமக்கு ஆதரவு வழங்கியவர்கள், தொடர்பாளர்கள், புதிய உறுப்பினர்கள் போன்றோர் அங்கு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டனர்.உளவாளிகளும் காவல் துறையினரும் சுதந்திரமாக நடமாடிய அந்தக் காலத்தில் யாரும் சந்தேகப் படாமல் இருப்பதற்காகவே துடுப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். மறுபுறத்தில் அதே மைதானத்தின் பின் பகுதியில் நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய செயற் குழுவை உருவாக்குவதற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.

 வெய்யில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. ஈழத் தமிழ்ப்பேசும்  மக்களின் நாளாந்த வாழ்வில் முக்கிய பங்காகிவிடப் போகின்ற விடுதலை இயக்கம் ஒன்றின் வரலாற்றில் திரும்பல் புள்ளியாய் வாய்க்கால் தரவை மாறிவிடப் போகின்றது என்பதை அறியாமல் சில வயோதிபர்கள் துடுப்பாட்டத்தை இரசித்தபடி நடந்து சென்றார்கள். அவசர அவசரமாக சைக்கிளில் சென்ற மனிதர்களுக்குக் கூட நாம் ஒன்று கூடியிருப்பது அவர்களின் எதிர்காலத்தைக் குறித்துப் பேசுவதற்காகத் தான் என்பதை அறிந்திருக்க நியாயமில்லை.

மத்திய குழு உறுப்பினர்களான எம்மோடு,சாந்தன், சுந்தரம், மனோ, மாத்தையா, குமரப்பா, நந்தன், குமணன் மாதி,ராகவன் போன்ற உள்ளிட்ட அனைவரும் அங்கு சமூகம் தந்திருந்தனர்.

பண்ணைகள், முகாம்கள், குறிப்பிடத் தக்களவு பணம், கணிசமான தொடர்புகள், உறுப்பினர்கள் என்று அவ்வேளையில் கோடுட்டுக் காட்டத்தக்க இராணுவ அணியாக வளர்ந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் மாற்றம் ஒன்றிற்கு உள்ளாவதைப் சில உறுப்பினர்கள் ஆர்வத்துடன் அவதானித்தனர். சிலருக்கு அனாவசியமான குறுக்கீடாகத் தெரிந்திருக்கும். எது எவ்வாறாயினும் நூறு கருத்துக்கள் மோதின.

வாக்கு அடிப்படையில் அன்றி ஒரு மனதான நியமன அடிப்படையிலேயே செயற்குழுவைத் தெரிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது. நபர்கள் குறித்து நீண்ட விவாதங்கள் ஏற்படுகிறது. செயற்குழு உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் சென்று வெகுஜன வேலைகளை முன்னெடுகும் திறமை வாய்ந்தவர்களாக அமைய வேண்டும் என்பதை நாம் முன்னமே தீர்மானித்திருந்தோம். சட்டத்தின் வரம்புகளுக்குள் குற்றவாளிகளாகக் காணப்படாதவர்கள், தேடப்படாதவர்கள் போன்றோரை செயற்குழுவில் இணைத்துக் கொள்வதற்காகப் பிரேரிக்கிறோம். பலரின் பெயர்கள் முன் மொழியபடுகின்றன. பிரதேசங்களுக்கும் பிரதிநிதிகள் போன்ற அமைப்புக்கள் வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. செயற்குழு பன்முகத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும் என்ற நோக்கம் அனைவருக்கும் இருந்தது. மட்டக்கள்ப்பைச் சேர்ந்த டானியல் மட்டக்களப்பிற்கு ஒரு பிரதிநிதிதுவம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்.

அதே போல் திருகோணம்லைப் பிரதிநிதிதுவத்திற்காக ஆசீர் நியமிக்கப்படுகிறார். இவர்கள் தவிர, சாந்தன், அன்டன் சிவகுமாரன், குமணன் ஆகியோர் செயற்குழுவிற்குத் தெரிவாகினர்.

செயற்குழுவிற்குத் தெரிவான சிலர் இன்னமும் பாதுகாப்பற்ற சூழலிலேயே வாழ்வதால் இவர்கள் குறித்த வேறு விபரங்களை இச்சந்தர்ப்பத்தில் வெளியிடுவது பொருத்தமானதாகக் கருதவில்லை.

பிரபாகரன் இல்லாத தலைமை ஒன்று முதல் தடவையாக விடுதலைப் புலிகளை வழி நடத்தும் நிலை உருவாகிறது. அனைவரும் புதிய நம்பிகையுடனேயே இந்தத் தெரிவினை மேற்கொண்டோம். மிக நீண்ட நேரத்தை செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதிலேயே செலவழித்து முடித்திருந்தோம். துடுப்பாட்டம் பாதி நேரத்தைக் கடந்து உற்சாகமாக நடந்து கொண்டிருந்தது. சூரியன் கூட உச்சியைக் கடந்து சற்றுக் கீழே இறங்கியிருந்தது நிழலுக்கான நம்பிக்கையை தந்தது.

செயற்குழு உருவாகிவிட்டது. இனி நாம் எம்மை மக்களுக்கு அறிமுகப்படுதும் நுளை வாயிலாக சஞ்சிகை ஒன்றை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம். நான் முன்வைத்த முன்மொழிவுகளிலும் சஞ்சிகை அல்லது பத்திரிகை குறித்துக் குறிப்பிடப்படிருந்தது. செயற்குழு உருவாக்கத்தின் பின்னர் பத்திரிகை வெளியிடுவது குறித்து அனைவரும் புதிய உற்சாகத்துடன் பேசிக்கொள்கிறோம். பத்திரிகையின் பெயர் “உணர்வு” என்று ஏறத்தாள ஒரு மனதாக முடிவெடுக்கப்படுகிறது.

அதே வேளை தேடப்படுகிறவர்கள் அனைவரும் இந்தியா சென்று அங்கு மார்க்சியக் கல்வியையும் பயிற்சியையும் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

மத்திய குழுவிலிருந்த நாகராஜா, நான், பிரபாகரன்,மற்றும் ராகவன், செல்லக்கிளி ஆகிய அனைவருமே அரசியற் கல்விக்காக தமிழ் நாடு செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

கூட்டம் முடிவடைந்து அனைவரும் பண்ணைகளுக்கும் இருப்பிடங்களுக்கும் செல்கின்றனர். செயற்குழு தெரிவாகிய இரண்டாவது நாள் நான் எனது சகோதரி வீட்டிற்குச் சென்று ஒரு நாள் ஓய்வெடுத்துவிட்டு இந்தியாவிற்குச் செல்வது குறித்தும் தகவல் தெரிவித்துவிட்டு வரலாம் என எண்ணினேன். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கு சென்று ஒரு நாள் தங்கியிருந்து விட்டு மறுபடி வரும் போது நிலைமை தலை கீழாக மாறியிருந்தது.

செயற்குழு தெரிவான பின்னர் கலாபதி மனோ மாஸ்டருடனும் பிரபாகனுடம் பேசியிருக்கிறார்.

மனோமாஸ்டரிடம் பேசிய கலாபதி இது வெறுமனே பிரபாகரனிற்கு எதிரான காழ்ப்புணர்வைத் தீர்த்துக்கொள்வதற்கான செயற்பாடே தவிர, மக்கள் அமைப்புகளை உருவாக்கி புதிய திசைவழியில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான செயற்குழு அல்ல என்று கூறிருக்கிறார். பிரபாகரனிடம் பேசிய கலாபதி இந்தச் செயற்குழு எல்லாம் பிரபாகரனை வெளியேற்றுவதற்கான சதிட்டம் என்றும் இதை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

இதே வேளை நந்தனுக்கும் மனோ மாஸ்டருக்கும் இடையேயான விவாதம் மறுபடி எழுந்த வேளையில் நாங்கள் நினைத்ததைச் சாதித்துவிட்டோம் இப்போது பிரபாகரன் வெளீயேறப்ப‌ட்டுவிட்டார் என மனோ மாஸ்டரிடம் கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பாக, மத்திய குழுவில் நாங்கள் விவாதம் நடத்த நாட்களைச் செலவிட்டுக் கொண்டிருந்த வேளைகளில் பிரபாகரனுக்கு எதிரான தனிப்பட்ட விமர்சனங்களைச் சுந்தரம் போன்றோர் பண்ணைகளில் இருந்த ஏனைய உறுப்பினர்களுடன் மிகவும் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டனர்.

இவை அனைத்தும் ஒருங்கு சேர, செயற்குழு என்பதே பிரபாகரனை அன்னியப்படுத்துவதற்கான சதித்திட்டம் என்ற ஒரு சிலரின் கருத்துக்கள் உள்ளரங்கிற்கு வருகிறது.

இவ்வாறு செயற்குழுவிற்கு எதிரான அபிப்பிராயம் குறித்த சில உறுப்பினர்களிடையே விவாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக சுந்தரம் தலைமையில் ஒரு குழுவும் பிரபாகரனுக்கு ஆதரவாக ஒரு குழுவும் உருவாகிறது. நான் எனது சகோதரி வீட்டிலிருந்து திரும்பி வந்த வேளையில் சுந்தரம் குழுவும் பிரபாகரன் குழுவும் தமக்குத் தெரிந்த ஆயுதங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பகுதியினர் மறப்பகுதியினரைச் சந்தித்தால் கொலை செய்துவிடுகின்ற கோரம் இரண்டு பகுதியினரிடமும் காணப்பட்டது.

பிரபாகரன் குழுவினர் யாழ்ப்பாணப் பகுதியிலிருந்த ஆயுதங்களையும் சுந்தரம் குழுவினர் முத்தையன்கட்டுப் பகுதியிலிருந்த ஆயுதங்களையு கையகப்படுத்தியிருந்தனர். பிரபாகரன் தனக்குத் தெரிந்த பண்ணைகளில் சென்று தனது அனுமதியின்றி ஆயுதங்களை யாருக்கும் கொடுக்கவேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறார். இதையறிந்த செல்லக்கிளி சுந்தரத்திடம் பிரபாகரன் ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களைக் கொலைசெய்யத் திட்டமிடுவதாக நடந்தவற்றை மிகைப்படுத்திக் கூறியிருக்கிறார். இதன் விளைவாக சுந்தரம் குழுவினர் முத்தயன்கட்டுப் பகுதியில் இருந்த ஆயுதங்களைக் கைப்பற்றி அங்கு பிரபாகரன் குழுவினர் வந்தால் திருப்பித் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற முடிபுடன் இருந்தனர். அனைவரையும் விரக்தியும் வெறுப்பும் வெறுமையும் ஆட்கொண்டிருந்தது.

முன்னர் பிரபாகரனின் சர்வாதிகாரத்திற்கு எதிராக மட்டுமன்றி ஒரு மக்கள் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கருத்துதை ஆதரித்தவரும் ஏற்கனவே இடது அரசியலில் குறித்தளவு ஆற்றல் பெற்றவருமான மனோ மாஸ்டர் பிரபாகரன் சார்பு நிலை எடுத்திருந்தது பலரை விரக்திக்கு உள்ளாக்கியிருந்தது. அவர் தான் எமக்கு எல்லாம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். இவரின் இந்தத் திடீர் முடிபு இன்றைக்கு வரைக்கும் என்னால் மட்டுமல்ல பலராலும் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே உள்ளது.

 மனோவின் திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்ன? நந்தனுக்கும் மனோவிற்கும் தொடர்ச்சியாக நிலவிவந்த முரண்பாடா, சுந்தரம் அரசியலை அன்றிப் பிரபாகரனை முதன்மைப்படுத்தி முன்னெடுத்த தனிநபர் தாக்குதல்களா என்று பல வினாக்கள் எனது வாழ்நாள் முழுவதும் விடையின்றியே தொக்குநிற்கின்றது.

மனோ மாஸ்டரைத் தொடர்ந்தே மாத்தையாவும் பிரபாகரனின் பக்கத்தை நியாயப்படுத்த ஆரம்பித்தனர்.

நான் முதலில் முத்தையன்கட்டுப் பண்ணையை நோக்கிச் செல்கிறேன். மக்கள் அமைப்புகளூடாக ஆயுதப் போராட்டத்தை உருவாகுகின்ற அரசியல் வழிமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் என்று கூறுகின்ற சுந்தரம் குழுவினரிடமும் கூட ஆயுதங்களுக்காகச் சண்டை போட்டுக்கொள்கின்ற குழுவாதப் போக்கைக் காணக்கூடியதாக இருந்தது.

மக்கள் சார்ந்த அரசியல் வழிமுறை என்பது மிகக் கடினமான ஆனால் ஒரே சாத்தியமான வழிமுறை என்பதை உலகத்தில் வெற்றிபெற்ற போராட்டங்கள் எல்லாம் ஒரு முறை இருமுறை அல்ல ஒவ்வொரு தடவையும் தீர்க்கமான அனுபவங்களை எம்முன்னால் விட்டுச் சென்றிருக்கின்றன. பல ஆயிரம் வருடங்கள் சமூகத்தின் அழுக்குப் படர்ந்த சிந்தனை முறை எம் ஒவ்வொருவரையும் ஆட்கொள்வது உண்மைதான். ஆனால் அவை முன்னிலைப்படுத்தப்படும் போது தான் அழிவுகள் நிறைந்த முடிபுகளை நோக்கி வழிநடத்தப்படுகிறோம்.

சுந்தரம் குழுவினரிடம் ஆயுதங்களுக்காகச் சண்டை  போட்டுக்கொள்வது தவறு என விவாதிக்கிறேன். பலர் உடன்படுகிறார்கள்.சுந்தரம் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்ற தனது நியாயத்தைச் சொல்கிறார்.நாகராஜா,சாந்தன்,குமணன்,நந்தன் போன்றோரும் ஆயுதங்கள் உடனடி அவசியமில்லை நமது உடனடி வேலை மக்கள் அமைப்பை உருவாக்குவதே என்று என்னுடன் சேர்ந்து உறுதியாக வாதிடுகின்றனர்.

முதலில் சுந்தரம் இதற்கு உடன்படவில்லை. ஒரு வகையில் தவிர்கவியலாத நிலையிலும், பல உறுப்பினர்களின் உந்துதலுக்கு உள்ளான நிலையிலும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு சுந்தரத்துடனிருந்த அனைத்து உறுப்பினர்களும் உடன்படுகிறோம்.

இப்போது பிரபாகரன் குழுவைச் சார்ந்த எம்மை முழுமையான எதிரியாகக் கணக்கிடாத ஒருவரைத் தெரிவு செய்து ஆயுதங்களை ஒப்படைப்பதாகத் தீர்மானிக்கிறோம்.

பிளவு ஏற்பட்ட வேளையில் பிரபாகரன் குழுவோடு இணைந்து கொண்டவர்களில் ராகவனும் ஒருவர். ராகவனுடன் பகைமுரண்பாடற்று உரையாடக் கூடிய சூழல் ஒன்று இருந்தது.

ஆக, நான் ராகவனை அழைத்து அவரூடாக ஆயுதங்கள், ஏனைய உரித்துக்கள், எஞ்சியிருந்த பணம் போன்ற அனைத்தையுமே பிரபாகரன் சார்ந்த குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்றேன். சுந்தரத்தின் சலிப்பான பதிலுக்கு மத்தியில் எல்லோரும் ஒரே முடிவாக இதனை ஏற்றுக்கொள்கிறோம்.

இன்னும் வரும்..

01.20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்  

 

02.70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

03.தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)

 

04.முக்கோண வலைப்பின்னலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

 

05.பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்

06.புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஆறு) ஐயர்

 

07.புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர்

 

08.புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு)

 

09.சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது)

 

10.நிசப்தம் கிழித்த கொலைகள் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர் பாகம் பத்து

 

11.கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று)

 

12.அடிமைச் சாசனம்- புலிகளின் எதிர்வினை – ஈழப்ப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 12)

 

13 வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட வங்கிக் கொள்ளை-ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 13)

 

14.பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர்

 

15.உமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு – புதிய முரண்பாடுகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர்

 

16.கொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16)

 

17.நாம் செல்லும் திசை தவறானது – புலிகளுள் துளிர்விடும் அதிர்ப்தி – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 17)

 

18.புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர்

 

http://inioru.com/

 

Last Updated on Thursday, 17 June 2010 06:08