Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பலூன் கேட்கும் சனக்குழந்தைக்கு என் தேர்தல் புலம்பல்

பலூன் கேட்கும் சனக்குழந்தைக்கு என் தேர்தல் புலம்பல்

  • PDF

நான் சொல்ல வாற விசயம் அங்கங்க நீலக்கலரில இருக்கு. அத வாசிச்சா போதுமானது. 

புலம்பலை முழுக்கப்படிக்க நேரமிருந்தா படியுங்க. 

நன்றி. 

யார் இந்தமுறை வெல்லுவார்?

பெரும்பாலான இலங்கைச் சனத்தின் கதையெல்லாம் இப்போது இந்தக்கேள்வியைச் சுத்தித்தான் நிற்கிறது.

"என் முகத்தைப் பார். நன்றாகப்பார். நான்தான் வெல்லப்போறன் தெரியல்லயா?" என்கிறார் மகிந்த.

 

 


சரத் ஃபொன்சேகாதான் வெல்லப்போகிறார் என்ற நம்பிக்கை கூடப் பலரிடம் உண்டு.

மற்றவர்கள் நிச்சயம் வெல்லப்போவதில்லை.

வெல்வது யார் என்கிற பிரச்சினையைக்கூட நாளைக்கு இரவு யோசிச்சுக்கொள்ளலாம், யாருக்கு வாக்களிக்கிறது என்கிற பிரச்சினைதான் ஆகச்சிக்கலானது. 

"காதலில மட்டுமில்ல தேர்தலிலயும் 23 பேரில யாரைத் தெரிவுசெய்யிறது யாரை விடுறது எண்டது பெரிய குழப்பம்தான்" என்கிறார் பெண் நண்பர் ஒருவர். ;)

தமிழ்த் தேசியம் சொல்லுது ஃபொன்சேக்காவுக்கு போடு என்று. . சாந்தி அக்காவும் அதையே சொல்லுறாவாம் (இதுக்காகவே நான் SF க்கு போடாமல் விடப்போறன் பார் ;)). என்னுடைய அலுவலகச் சூழலும் அதத்தான் சொல்லுது.

இன்னொரு தமிழ்த்தேசியம் சிவாஜிலிங்கமாகப்பிரிந்துபோய் விக்ரமபாகுவோட மேடையில ஏறுது. (சிவாஜிலிங்கம் காசுவாங்கின கதை நிரூபணம் இல்லாதது சாமி. அதையேன் இப்ப நினச்சுக்குழம்பிறீங்க? அது இங்க தேவையுமில்ல)



திடீரெண்டு ஒரு வலைத்தளம் "மகிந்த வெல்வதே அவருக்குத் தண்டனை" என்கிறது.

"வியூகம்" விக்ரமபாகுவுக்கு போடச்சொல்லுது. விக்ரமபாகுவோ குதியங்குத்துறார். உள்ளரசியல்கள் பற்றி தெரியவாற கதைகள விட்டாலும்கூட, அந்தாள் தேர்தலை ஒரு மேடையாக்கி சிங்களச் சனத்துக்குள்ள ஒரு முற்போக்கான அரசியல் வழிக்கான பரப்புரையையாவது செய்வாரெண்டு பாத்தால், யாழ்ப்பாணத்திலபோய் தமிழ்ச்சனத்திட்ட வாக்குபிச்சை கேட்கிறார். அவர் வைக்கும் நியாயங்கள் ஒருபுறம். 

இவர்களைத்தவிர வேற யாருக்கும் போடுறதப்பற்றி எங்கட சனம் யோசிக்கும் எண்டு நான் நம்ப இல்ல.

போடுற பிரச்சினை இவ்வாறாக இருக்க, போடாமல் விடுற, பழுதாக்கிற பிரச்சினையும் இருக்கு.

புதிய ஜனநாயகக் கட்சி சொல்லுது போய் வாக்குச்சீட்டைப் பழுதாக்கச்சொல்லி. அதுக்கு முதல் சில சூழ்நிலைகளால அந்தக்கட்சி பொது வேட்பாளர் பற்றியும் கதச்சது. தமிழரங்கம் தொடக்கம் ம க இ க ஆதரவாளர் வரை தேர்தலைப் புறக்கணிக்கச்சொல்லுறாங்க. 

ஐயோ கடவுளே... யாருக்கு போடுறது /பழுதாக்கிறதா / புறக்கணிக்கிறதா எண்டு குர்-ஆன் லயோ, பைபிளிலயோ எளிமையா விளங்கிற மாதிரி சொல்லிவச்சிருக்கக்கூடாதா?


தமிழ்ச்சனத்துக்குள்ள இந்தத்தேர்தலில புதுசா ஏற்பட்டிருக்கிற நியாயம்தான் சரத் ஃபொன்சேக்காவுக்கு வாக்களிக்கவேண்டும் என்று சொல்கிற நியாயம். மற்ற நியாயங்கள் எல்லாம் பெரும்பாலும் பழையவை. 


நான் எங்க வேணுமெண்டாலும் வந்து சத்தியம் பண்ணுவன், சரத் ஃபொன்சேகாவுக்கு விழப்போற தமிழ் வாக்குகள் எதுவுமே சரத் ஃபொன்சேகாவுக்கானதல்ல. அதிலயும் பெரும்பாலானவை UNP க்கானவை அல்ல. எந்தவழிப்பட்டும் அவை JVP க்கானதும் அல்ல.

அப்பிடி எண்டால், என்ன அநியாயத்துக்குத்தான் சனம் போய் சரத் துக்கு போடப்போகுது?

சரத்துக்கு போடுறத நினைச்சா "வயித்தப் பத்தி எரியுது" என்றார் நேற்றொரு நண்பர். உண்மைதான். வயித்தப் பத்தி எரியிற தமிழ்ச்சனத்திட அரசியல் தலைவிதி இது. இன்னும் சொல்லப்போனால் தமிழர் அரசியலிட வங்குறோத்துத்தனத்திட உச்சக்காட்சி இது.

"ஆசிய மூலதனத்திட ஆட்சியை (மகிந்த) விடவும் மேற்கு மூலதனத்திட ஆட்சி (SF)ஓரளவு முதலாளித்துவ ஜனநாயகத்தையாவது உறுதிப்படுத்தும். அப்பிடிக்கிடைக்கிற இடைவெளியை வச்சு அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தொடக்கலாம். இந்த ஆட்சி இடியமீன் ஆட்சியாகப்போகுது"

என்று சொல்லும் உச்சாடனங்களும் ஆய்வுத் திரட்டுகளும் புத்திசீவிகளை வசியம்பண்ணும் தந்திரம் தான். சாதாரண சனத்துக்கு இதெல்லாம் தெரியாது. 

அந்தச்சனம் போய் SF க்கு போடப்போற வாக்கு அநாதைகளின் குமுறலாக, யார் எதிரி என்று தெரியாத அரசியற் சூனியத்துள் விடப்பட்ட மக்களின் சுவரில் கொண்டுபோய் தலையை அடித்துக் கோபத்தை ஆற்றும் செயலாக, மகிந்ததான் தமது முழு முதல் எதிரி என்று நம்பிக்கொள்வது போதுமானதாக இருப்பதால் எல்லாப் பேயையும் மகிந்த எனும் பூசணிக்காயில் புகுத்தி நடுத்தெருவில் குங்குமம் போட்டு அடித்து வெட்டிச் சிதறடிக்கும் ஆற்றாமையாக போய் விழப்போகிறது என்பது தான் உண்மை. எவர் என்ன சொன்னாலும். 

எண்பதுகளின் இறுதியில் இயக்கங்கள் ஆயுதத்தோடயே ஊருக்குள் சட்டபூர்வமாக உலாவிக்கொண்டிருந்த பிரமதாசாவின் சுதந்திர ஆட்சி, தொண்ணூற்று நாலில் வெண்புறா ஓடித்திருந்து வானத்தில் traffic jam உண்டாக்கிய சந்திரிக்கா ஆட்சி, The Great 2002 ரணில் ஆட்சி.. எல்லாம் என்ன ஆனது எங்குபோய் சேர்ந்தது என்பதை மறந்து முதலாளித்துவ ஜனநாயகப் பூனாக்கதை கதைக்காதீங்க என்றும் கோபக்குரல்கள் ஒலிக்காமலில்லை.

ரெண்டு பிசாசில் "இன்றைய அரசியலின் யதார்த்தத்தில் மூழ்கி நுணுக்கமாக ஆராய்ந்து" எடுக்கப்படுற முடிவின் படி ஒரு பிசாசை ஆதரிப்பது என்கிற போக்குக்கு வெளியாலே நிற்பவர்களின் வாக்குகள் விக்ரமபாகுவுக்கும் விழும். அவர் தமிழ் மக்களிடம் நல்ல பேர் வாங்கி வச்சிருக்கிறார். கூடவே அவருக்கு வாக்களிப்பதன் மூலம் அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு இத்தனை வீதம் வாக்குகள் என்ற தெளிவான அரசியல் செய்தியை சொல்லலாம் என்றும், சிங்கள-தமிழ் அரசியல் உறவுக்கு இது ஆரோக்கியமானது என்றும் வாதிடுவர்.


அவர் அரசியற் பொறுப்புணர்வோடும் நேர்மையோடும் இம்முறை நடந்துகொள்ளவில்லை என்ற கருத்து புதிய ஜனநாயக் கட்சி வட்டாரத்தில் நிலவுகிறது.

நானும் கொஞ்சம் குழம்பிப்போயிருந்த வேளையில அமெரிக்கா ஒரு அருமையான அறிக்கையை வெளியிட்டு என் ஞானக் கண்ணைத் திறந்து வைத்தது. 

"ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா நடுநிலையாகவே உள்ளது. எந்த வேட்பாளர் வென்றாலும் கவலையில்லை. அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்தும். இத் தேர்தல் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகும். அதாவது முதன்முறையாக நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் மக்கள் தமது ஜனாநாயக உரிமை மூலம் இந்நாட்டை தலைமை தாங்குவதற்கான தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்கவுள்ளனர். எந்த்வொரு வேட்பாளரையும் அமெரிக்கா ஆதரிக்கவில்லை. இறுதி முடிவுகளை விட ஜனநாயக ரீதியான முறையில் தேர்தல் இடம்பெறவேண்டும் என்பதே நோக்கம். எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கையர்கள் அனைவரும் எவ்வித இடையூறும் இன்றி, வன்முறைகள் இன்றி சுதந்திரமாக வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்டி ஒன்றிணைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும்"

அடா அடா அடா...

என்னெ ஒரு தெளிவான அறிக்கை. (அறிக்கை எல்லாமே புண்ணாக்கில் புடுங்கி எடுத்த பொய்கள் தான் என்றபோதும்)

மகிந்த வெல்லலாம் அன்றி சரத் வெல்லலாம். இந்த ரெண்டும் தவிர்த்து மூண்டவது ஒன்று இருக்கு. அது நிச்சயமாய் வெல்ல வேண்டும் என்கிறது அமெரிக்கா. அது நிச்சயமாய் வெல்லத்தான் போகுது. 

"தேர்தல்" அதுதான் இந்தத்தேர்தலில் வலு நிச்சயமாய் வெல்லப்போற ஒரேயொரு சாமான். 


போனமுறை யாழ்ப்பாண உள்ளூராட்சித்தேர்தலில 80% புறக்கணிப்பால இந்தத்தேர்தல் தோற்கடிக்கப்பட்டது. அந்தத் தோற்கடிப்புக் கொடுத்த அதிர்வலைகள் இலங்கை அரசியற் சூழலிலும் பன்னாட்டு அளவிலும் தெளிவாக உணரப்பட்டது. தேர்தலைக்காப்பாற்ற எல்லாரும் யாழ்ப்பாணத்துக்கு ஓடிப்போய் சேட்டுகளைக் கழட்டிப்போட்டு கொழுப்பெடுத்த உடம்பைப் போட்டோவுக்குக் காட்டிக்கொண்டு நிண்டாங்க.

தேர்தல் தான் இந்த உலக ஒழுங்கில மக்களுக்கு கிடைக்கிற ஒரேயொரு ஆகக்குறைந்த ஜனநாயக உரிமை என்றொரு கருத்து இருக்கு.

எனக்கென்னவோ தேர்தல் என்பது உலகம் முழுக்க இருக்கும் ஆள்வோர் மக்களை ஆட விட்டு வேடிக்கை பார்க்கும் அழகான மீன்தொட்டியாகத்தான் மனதில் படம் போடிருக்கிறது.

நீ கோபப்பட்டால் என்ன, மாற்றினாலென்ன, குதித்தாலென்ன, கூயடித்துக் கத்தினாலென்ன எல்லாம் மீன்தொட்டிக்குள்தான். மீன்தொட்டியை மீறாத வரைக்கும் எல்லாம் சுபமே. 

அமெரிக்கா அறிக்கையில் சொல்கிறது. இது வரலாற்றுச்சிறப்பு மிக்க கண்காட்சி. மீன்களே.. மீன்தொட்டியை நன்றாக அழகுபடுத்துங்கள்!



"செக்குவ" நாடகம் பார்த்தேன். இந்தத் தேர்தல் செக்கினை எப்படிச்சுற்றினால் என்ன, எந்த மாட்டை மற்றினாலென்ன, எத்தனை மாட்டைக்கட்டினாலென்ன, கம்பை நீட்டினாலென்ன, நீயே செக்கை சுற்றினாலென்ன, வருகிற எண்ணெயை வழித்துத்துடைத்து கொண்டுபோய் விடுவார்கள். செக்கைச்சுற்றி நடந்து நீ சேரவேண்டிய இடத்துக்கு போய்விட முடியாது.


மக்கள் முன் வைக்கபப்ட்டிருக்கும் பெரிய பொறியான இந்தத்தேர்தலைப்புறக்கணிக்கச்சொல்லும் கோரிக்கைகள் இதனாற்தான் எழுகிறது. 

எபப்டிப் புறக்கணிப்பதென்பது அடுத்த கேள்வி. 

"கண்டுகொள்ளாமல் விடுறது" தேர்தல் நாள் லீவில சந்தோசமா வீட்டில நிண்டு யாரும் சமைக்கச் சாப்பிட்டு நித்திரைகொண்டு ஓய்வெடுக்கிறது. காதலனோடு மகிழ்ந்து குலாவிறது. வாக்களிப்புக்கு போகாமல் சின்ன விரல் நகத்தை அழகாகவே வைத்திருக்கிறது.

ஆனா இதச்செய்ய ஆக்களுக்கு மனம் வராது. அப்பிடி ஒரு நாடும் பொலிசுக்காரர்களும். போடாமல் விடப்படுற அத்தனை வாக்குகளையும் அள்ளிக்கொண்டுபோய் கள்ள வாக்கு போடிருவாங்க. பிறகென்ன புறக்கணிப்பு.. எல்லாமே "கணிப்புத்"தான். தேர்தல் முடிவில் சிலவேளை 100% வாக்களிப்புக்கூடப் பதிவாகிவிடலாம்.

இரண்டாவது வழி போய் பழுதாக்கிட்டு வாறது. 

போனமுறை ஜனாதிபதித் தேர்தலில நான் போய் "நான் இலங்கை அரசியல் யாப்பை நிராகரிக்கிறேன்" எண்டு தெளிவா மூண்டு மொழியிலயும் எழுதிட்டு வந்தனான்.

என்ட நண்பர் ஒருத்தர் கீழ மேலதிகமா ஒரு கூடு அடிச்சு அதில "A. R. ரஹ்மான்" எண்டு எழுதி அதுக்கு புள்ளடி போட்டிட்டு வந்தவர். கிறுக்கிப்போட்டும் வரலாம். எது செய்தாலும் அழிக்க முடியாதபடி பழுதாக்கிட்டு வாறது.

இந்தியாவிலயெண்டா 49ஓ இருக்கு எங்களுக்கு அதெல்லாம் இல்லையே..

இதத்தான் செய்யச்சொல்லி புதிய ஜனநாயக் கட்சி சொல்லுது.

செல்லுபடியற்ற வாக்குகள் இத்தனை என்று முடிவில அறிவிக்கப்படும். தவறுதலா செல்லுபடியற்றதானதா திட்டமிட்டு சனம் செய்ததா எண்டது தெளிவாத்தெரியாது.

தமிழரங்கம் இதை கடுமையா எதிர்த்தது.

புறக்கணிப்பு எண்டு வந்திட்ட பிறகென்ன போறதும் பழுதாக்கிறதும் சின்னிவிரலுக்கு பெயின்ட் அடிக்கிறதும்.. எண்டு ஒரு சாராரும், போகாட்டில் நூறுவீத வாக்குப்பதிவாகிருமோ எண்ட அச்சத்தோடு மற்ற சாராரும். 

நான் போய் சனத்தைப்பார்த்து தேர்தலைப் புறக்கணியுங்கள்/பழுதாக்குங்கள் எண்டு சொல்ல, சனமோ வில்லுப் படத்தில விஜய்யை பார்த்துச் சிரிச்ச மாதிரி என்னைப்பாத்து வெடித்துச் சிரிக்குதுகள். 

ஒரு விசயம் நல்லா விளங்குது, உறைக்குது.

தேர்தலைப் புறக்கணிக்கும் அரசியல் விழிப்புணர்வு எண்டது நித்திரையால எழும்பி வந்து விழிப்பூளையைத் துடைச்சுக்கொண்டு சனத்தைப்பார்த்து "தேர்தலைப்புறக்கணி தேர்தலைப்புறக்கணி" எண்டு கத்துறதல்ல. அதுக்குப் பேர் ஜோக்!

தேர்தல் புறக்கணிப்பு என்பது மக்கள் மத்தியிலான, மக்களைச்சார்ந்த உறுதியான தொடர்ச்சியான வேலைத்திட்டத்தின் வழியாகச் செய்யப்படவேண்டியது. 

தேர்தல் மழைக்குக் காளான் முளைத்த மாதிரி மேடை போட்டு அரசியல் விழிப்புணர்வு பேசுவது அர்த்தமற்றது. 

தேர்தலுக்கு மாற்றான அரசியல் வேலைத்திட்டம் ஒன்றினை மக்களது நம்பிக்கையை வெல்லுமுகமாக அவர்களிடமிருந்தே உருவாக்கிக்கொள்ள வேண்டும். 

இணையத்தில் மட்டுமல்லாது ஊரூராக அதைப் பரவலாகச்செய்யவேண்டும். மக்களுக்கு எதிரியை, மாயையை சரியாக இனம் காணும் விழிப்புணர்வினைப்பெற்றுக்கொடுக்க உதவ வேண்டும். 

மாற்று அரசியல் வேலைத்திட்டம் இவ்வாறு கட்டியெழுப்பப்பட்ட பிற்பாடு வலுவான அடியாக, சக்தி மிக்க ஆயுதமாக, ஒரு போராட்டமாக நாம் தேர்தல் புறக்கணிப்பினைச் செய்ய முடியும். 

அயுதம் தாங்கியிருந்த, தாங்கியிராத தமிழ்த்தேசியப்போராட்டம் தனது அழிவோடு, அடுத்த தலைமுறைக்கான எந்தத்தொடக்கப்புள்ளியையும் விட்டுவைக்காது அதையும் சேர்த்து அழித்துக்கொண்டு போய்விட்டது. 

மக்களின் அரசியல் உணர்வும் கோபமும் கனன்றபடித்தான் இருக்கிறது. ஆனால் எதிரி யார் என்று தெரியாத சூனியத்தில், மகிந்தக் கொடும்பாவியில் கோபங்களைக் கட்டி வைத்து எரிக்கும் மனநிலையில். 

இந்த உணர்வினைத் தலைமைதாங்க முற்போக்குச் சக்திகள் முன்வரவேண்டும்.

ஓரளவுக்காவது இத்தகைய மக்கள் நிலை அரசியல் வேலைத்திட்டத்தினைத் தொடங்கக்கூடிய புள்ளியாக புதிய ஜனனாயகக் கட்சியே இலங்கையில் இருக்கிறது. அந்தப்பொறுப்புணர்வை உணர்ந்து அது முன்செல்லும் என்று நம்புகிறேன்.


அதுவரைக்கும் சனக்குழந்தைக்குத் தேர்தல் சந்தை ஒவ்வொரு முறை கூடும் போதும் எதாவதொ "சிறப்புச் சூழ்நிலை" பலூன் சிவப்பு பச்சை நீல வண்ணங்களில் தொங்கிக்கொண்டிருப்பது வழக்கம்தான். 

ஒவ்வொருமுறை சந்தை கூடும் போதும் சனக்குழந்தை அந்தச் "சிறப்புச் சூழ்நிலை" பலூனைக் கேட்டுக்கத்தும். 

சிலவேளை வாங்கிக்கொடுக்கப்படும். சிலவேளை கிடைக்காது. 

எப்படியும் அடுத்தநாளைக்கிடையில் பலூன் வெடித்துவிடும் அல்லது காற்றுப்போகும். 


இந்தமுறை தமிழ்ச் சனம் சரத் ஃபொன்சேக்கா பலூனை ஆவெண்டு பாத்துக்கொண்டு அழுதபடி நிக்குதுகள். 

என் செல்லச் சனக்குழந்தையே.. என் தத்தா யானை வைத்திருந்தார். அதை தருவதாகச்சொன்னேன். நீ விழுந்து விழுந்து சிரித்துவிட்டுத் தொடர்ந்து அழுகிறாய்.. உனக்கு வாங்கித்தர என்னிடம் எதுவுமில்லை. உன் விருப்பப்படியே இந்த சரத் பலூனை இந்த முறை வாங்கிக்கொள்.... உன் கோபங்களைத் தீர்த்துக்கொள்... 

நாளைக்கு பலூனில் காத்துப்போனபிறகு அழாதே.. 

உன் உணர்வுகளுக்குத் தலைசாய்ப்பதை விட இப்போது உன்னிடம் பேச எனக்கு எதுவுமில்லை.

http://mauran.blogspot.com/2010/01/blog-post.html

Last Updated on Monday, 25 January 2010 07:16