Language Selection

புதிய கலாச்சாரம் 2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வாசகர்களுக்கு புவனேசுவரியைத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. விபச்சார வழக்கில் போலீசால் கைது செய்யப்பட்ட அந்த அம்மையார் சொன்னதாக சில பிரபல நடிகைகளின் பெயர்களை தினமலர் வெளியிட்டதைத் தொடர்ந்து, பத்திரிகை உலகத்துக்கு எதிராகக் கலை உலகம் கொதித்தெழுந்தது.

தமிழ்ச் சமூகத்தை தாங்கி நிற்கும் மூன்று தூண்களில் சினிமா, பத்திரிகை ஆகிய இரண்டு தூண்கள் மோதிக் கொண்டு வீழ்ந்துவிட்டால், டாஸ்மாக் என்ற மூன்றாவது தூணின் மீது தமிழ்ச்சமூகத்தின் மொத்த வெயிட்டும் இறங்கி, அந்தத் தூணும் தள்ளாடி நிலைகுலைந்து விடக்கூடும் என்ற அபாயத்தை தொலைநோக்குடன் புரிந்து கொண்ட கலைஞர், உடனே தலையிட்டு, அவ்விரு தூண்களுக்கிடையில் போர்நிறுத்தம் செய்து வைத்தார். அப்புறம் புவனேசுவரியைப் பற்றி நாம் எல்லோருமே மறந்து விட்டோம்.

இப்படி தனியொரு பெண்ணாக நின்று தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த புவனேசுவரி ‘யார்’ என்பதை அறிந்து கொள்ளும் அக்கறை, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமனுக்கு மட்டுமே இருந்திருக்கிறது. அந்த அம்மையார் யார் என்று புரிந்து கொண்ட மறுகணமே, அவரை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணித் தலைவியாக நியமித்துவிட்டார் டாக்டர் சேதுராமன். அந்த அம்மையார் தேவர் குருபூசைக்கும் சென்று வந்துவிட்டார். தமிழகத்தையே கட்டி ஆண்ட மூவேந்தர் பரம்பரையில் வந்தவர்தான் புவனேசுவரி என்ற தெரிந்த பிறகு, இனி அவர் மீது கைவைக்கும் தைரியம் போலீசுக்கு வருமா என்று பார்ப்போம்.

ஒரு வேளை வெள்ளைக்காரன் மட்டும் நம் நாட்டைப் பிடிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும், யோசித்துப் பாருங்கள்!

மன்னர் சேதுராம பாண்டியர், இளவரசி புவனேஸ்வரி, இளவரசர் கார்த்திக், தளபதி ஸ்ரீதர் வாண்டையார் போன்ற மாணிக்கங்களின் ஆட்சியின் கீழ் நாம் குடிமக்களாக இருந்திருப்போம். காந்தி கிடையாது, சுதந்திரம் கிடையாது, அரசியல் சட்டம் கிடையாது, அம்பேத்கரும் கிடையாது. எனவே பாப்பாபட்டி கீரிப்பட்டியும் கிடையாது. அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் அரச பரம்பரையினர் படிக்கவேண்டிய கட்டாயமோ, தேவர் குருபூஜைக்கு போஸ்டர் அடிக்க வேண்டிய தேவையோ, அப்புறம் அடிபட வேண்டிய அவசியமோ கிடையாது. என்ன செய்வது, வரலாறு என்பது வேந்தர் பரம்பரைகள் விரும்பும் வழியில் செல்வதில்லையே!

சென்னை சட்டக்கல்லூரி பிரச்சினையையே எடுத்துக் கொள்ளுங்களேன். புவனேசுவரி என்ற மாதர் குல மாணிக்கத்தை மகளிர் அணித் தலைவியாகவும், கார்த்திக் போன்ற தெளிந்த சிந்தனையாளர்களை கட்சித்தலைவர்களாகவும் கொண்டாட முடிந்த மூவேந்தர் வாரிசுகளான மாணவர்களுக்கு அம்பேத்கர் பெயரைப் போட்டு போஸ்டர் அடிப்பது கவுரக் குறைச்சலாக பட்டிருக்கிறது. எது கவுரவம் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்கக் கூடாதா என்ன?

வெள்ளையனை எதிர்த்துப் போராடித் தூக்கில் தொங்குவது மருது சகோதரர்களுக்கு கவுரவமாகப் பட்டிருக்கிறது. அந்த மருது சகோதரர்களைத் தோற்கடிப்பதற்கு வெள்ளைக்காரனுக்கு வழி சொல்லிக் கொடுத்து, படை கொடுத்து, அவன் படைகளுக்கு சோறும் ஆக்கிப் போட்ட புதுக்கோட்டை தொண்டைமானுக்கு, வெள்ளைக்காரன் கொடுத்த மெடலைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வது கவுரவமாக இருந்திருக்கிறது.  வெள்ளைக்கார துரையால் வளர்க்கப்பட்ட இந்த தொண்டைமானின் இளவல், அந்த துரையைத்தான் அப்பா என்று கூப்பிடுவானாம். அவன் மகனுக்கு அதுதான் கவுரவமாகப் பட்டிருக்கிறது. இப்படி வெள்ளைக்காரனிடம் அப்பன் பதவியையே பறிகொடுத்த தொண்டைமான், சின்ன மருதுவை நாய் என்று ஏசியிருக்கிறான். இவையெல்லாம் கவுரவப் பிரச்சினை குறித்த சில வரலாற்று விவரங்கள்.

சரி நிகழ்காலத்துக்கு வருவோம். புவனேசுவரியை மகளிரணித் தலைவியாகக் கொண்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர், தேவர் குருபூசைக்கு ஒட்டுவால் மாதிரி மருதிருவர் குருபூசை என்று ஒரு கூத்தையும் கடந்த 5 ஆண்டுகளாக அரங்கேற்றத் தொடங்கியிருக்கின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கம் படம் பொறித்த மஞ்சள் கொடிகள், “”தேவர் வாழ்க! தேவர் படை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா! பனமரத்துக்கே வவ்வாலா! தேவருக்கே சவாலா!” என்ற தேவர் குருபூசையின் கொள்கை முழக்கங்கள்தான் மருதிருவர் குருபூசைக்கும்!

மருது சகோதரர்கள் அகமுடையார் சாதியில் பிறந்தவர்கள். எனினும் உடம்பில் ஐரோப்பிய ரத்தம் ஓடும் ஆங்கிலேய கைக்கூலிகளைத் தவிர மற்ற அனைவரையும் ஒரே மக்களாகக் கருதி, அணிதிரட்டியவர்கள். மேலும் வேலைக்காரர்களாக இருந்து பாளையக்காரர்களாக மாறியவர்கள் என்பதால், அவர்கள் மூவேந்தர் பரம்பரைக்குரிய தகுதி இல்லாதவர்கள். எனவே வேந்தர் பரம்பரையில் வந்த சேதுராமன், புவனேசுவரி அம்மையார் போன்றவர்கள் மருதிருவருக்கு குருபூசை நடத்துவது தங்களுடைய கவுரவத்துக்கு இழுக்கு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பக்கத்திலேயே இருக்கிறது புதுக்கோட்டை! விஜரகுநாத தொண்டைமான், முக்குலத்தில் ஒர் குலமான புதுக்கோட்டை கள்ளர் சாதியைச் சேர்ந்தவர். ஒரிஜினல் ஆண்ட பரம்பரை. மூவேந்தர் பரம்பரையின் கவுரவத்துக்கு ஏற்றவர்.

எனவே அடுத்த ஆண்டு முதல் மருதிருவர் குருபூசையைக் கைவிடுமாறும், புவனேசுவரி அம்மையார் தலைமையில் தொண்டைமான் குருபூஜையை துவக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். சிறப்பு விருந்தினர்களாக மன்மோகன் சிங்கையும் சிதம்பரத்தையும் அழைக்கலாம். தட்டாமல் வருவார்கள்.

-          புதிய கலாச்சாரம், ஜனவரி – 2010

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது