Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

  • PDF

ஈழப் போர் துயரமான முறையில் முடிவுக்கு வந்திருக்கிறது. போர் நிறுத்தம் கேட்டு போராட வேண்டிய நேரத்தில் ஓட்டுச் சீட்டு சந்தர்ப்பவாத அரசியலில் சிக்கி ஈழத் துரோகி கருணாநிதியோடும், உழைக்கும் மக்களுக்கே எதிரி ஜே ‘ வோடும் கைகோர்த்தவர்களும், ஈழப் பிணங்களை வைத்து ஆதாயமடையப் பார்த்தார்கள். ஒருவர் பதவியைக் காப்பாற்ற தொடர் நாடகங்களை நடத்தினார்.

 

 இன்று வரை நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் இதை வைத்து பதவிக்கு வரும் நோக்கத்திற்காகவே வெற்று வீர வசனங்களை உதிர்த்தார்.

 

மொத்தத்தில் ஈழ மக்கள் இந்திய, இலங்கை இராணுவங்களால் கொல்லப்பட்ட போது, அதை தங்களுக்கு ஆதாயமான ஒன்றாக மாற்றிக் கொண்ட சந்தர்ப்பவாதிகள் பிழைப்புவாதிகள் பலர். ஈழம் அவர்களுக்கு ஒரு கறவை மாடு. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்ட ஈழம் எனும் பசுவின் மடியிலிருந்தும் கூட பால் கறக்க முடியும் என்பதை நமக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஜெகத் கஸ்பார் எனும் பாதிரி.

 

"ஈழ மக்கள் மீதான படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து, யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிராக நூறு பேர் கவிதை எழுதுகிறார்கள் நீங்கள் கவிதை கொடுக்க வேண்டும்" என்று த.செ.ஞானவேல் என்பவர் பலரிடமும் கேட்டிருந்தாராம். அவருக்காக ஆனந்தவிகடனின் திருமாவேலனும், டைம்ஸ் ஆப்ஃ இண்டியா இதழின் குணசேகரன் என்னும் பத்திரிகையாளரும் கூட இப்படிப் பலரிடமும் கவிதை கேட்டிருக்கிறார்கள். நூலை ஞானவேல் எனும் பத்திரிகையாளர் வெளியிடப் போவதாகச் சொல்லித்தான் அனைவரிடமும் கவிதை வாங்கியிருக்கிறார்கள்.

 

ஒரு வழியாக "ஈழம்.... மௌனத்தின் வலி" என்ற அந்தக் கவிதை நூல் இப்போது வெளிவந்திருக்கிறது. கிறிஸ்தவப் பாதிரி ஜெகத்கஸ்பர் ராஜ் என்பவருக்குச் சொந்தமான "நல்லேர் பதிப்பகம்" சார்பில் வெளிவந்திருக்கிறது இந்தக் கவிதை நூல். ஞானவேலோ அவர் அமைப்பாளராக இருக்கும் "போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்போ" இந்நூலை வெளிக் கொண்டுவரவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதிகாரவர்க்கங்கள், புகழ்பெற்றவர்கள் என்னும் வரிசைப்படி கட்டமைக்கப்பட்டுள்ள அந்நூல் கமலஹாசன் முதல் ரஜினிகாந்த் வரை என்னும் அமைப்பில் பல நண்பர்கள் தோழர்கள், சமூக ஆர்வலர்களின் கவிதைகளோடு வெளிவந்திருக்கிறது.

 

"ஈழம்.... மௌனத்தின் வலி" என்னும் தலைப்பிலான அக்கவிதை நூலின் முதல் கவிதையை கமலஹாசனும், கடைசிக் கவிதையை ரஜினிகாந்தும் எழுதியிருக்கிறார்கள். கமல் எழுதிய கவிதை தெனாலி படப்பிடிப்பின் போது எழுதப்பட்டதாம். ரஜினிகாந்த் எழுதியுள்ள பஞ்ச் டயலாக் கவிதையை அவர் இவர்களுக்காவே எழுதிக் கொடுத்தாரா? அல்லது ஏதாவது மேடைகளில் உதிர்த்த முத்தா ? என்று தெரியவில்லை. மற்றபடி தோழர் துரை.சண்முகம், இயக்குநர் கவிதா பாரதி, கலாப்பிரியா, ராஜுமூருகன் உள்ளிட்ட இன்னும் சிலரின் கவிதைகளைத் தவிர பெரும்பாலான கவிதைகள் மொக்கைகள்.

 

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் நிருபர் குணசேகரன், "ஈழம் தொடர்பான புகைப்படங்களைப் பொருத்தமான கவிதையுடன் வெளியிட இருப்பதாகவும், பத்திரிகையாளர்கள் சேர்ந்து வெளியிடும் இந்த கவிதை நூலுக்கு நீங்களும் ஒரு கவிதை தர வேண்டும்" என்று தோழர்.துரை சண்முகத்திடம் கவிதை ஒன்று கேட்டாராம். "தன்னார்வக் குழுக்கள் வெளியிடுவதாக இருந்தால் கவிதை தரமுடியாது. கவிதையில் ஒரு சொல்லைத் தணிக்கை செய்வதாக இருந்தாலும் கவிதை தர முடியாது" என்று குணசேகரனிடம் கூறியிருக்கிறார் துரை.சண்முகம். இரண்டிற்கும் குணசேகரன் உத்திரவாதம் கொடுத்ததன் அடிப்படையில் கவிதையையும் தந்திருக்கிறார்.

 

"தேர்தலுக்காக இரத்தத்தைத் திருடிய உங்களிடம்

ஒப்படைக்க முடியாது எங்கள் கண்ணீரை.

இந்தியக் கொலைக்கரத்தை முறிக்காமல்

என் பிள்ளை துயிலாது"

 

என்று துரை சண்முகம் எழுதிக் கொடுத்த கவிதை வரிகளில் "தேர்தலுக்காக" என்ற சொல்லும் "இந்திய" என்ற சொல்லும் வெட்டப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்களுக்குப் பதிலாக வெளியீட்டாளராக ஜெகத் கஸ்பார் அவதரித்திருக்கிறார். இவ்விரு விசயங்கள் குறித்தும் உடனே குணசேகரனுக்கு போன் செய்து கேட்டாராம் துரை. சண்முகம். அதிர்ச்சி அடைந்த குணசேகரன், கவிதையை ஞானவேலிடம் கொடுத்ததாகவும் இந்த அயோக்கியத்தனம் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி வருந்தினாராம்.

 

ரஜனிகாந்த் கமலஹாசன் போன்ற கவிஞர்கள் எல்லாம் எழுதப்போகிறார்கள் என்ற விசயமும் துரை சண்முகத்துக்கு சொல்லப்பட வில்லையாம். இயக்குநர் சேரன் போன்றவர்கள் எழுதிய அயோக்கியத்தனமான கவிதைகளும் உண்டு. அழுது வடிந்து ஈழத்துக்காக போலிக்கண்ணீர் வடிக்கிற தந்திரக் கவிதைகளும் உண்டு. நூறு ரூபாய் விலையில்,"மனித நேயமிக்க எவரும் மறுபதிப்புச் செய்யலாம்" என்னும் அறிவிப்போடு பளபள காகித்தத்தில் வெளிவந்திருக்கும் நூலை, கிறிஸ்தவப் பாதிரி ஜெகத்கஸ்பார் ராஜ் வெளியிடுகிறார் என்பது தெரிந்திருந்தால் பாதிக்கும் மேலானவர்கள் கவிதை கொடுத்திருக்க மாட்டார்கள். ஏன் ஞானவேல் இப்படிச் செய்தார் என்று பலரும் இப்போது புலம்பித்திரிகிறார்கள்.

 

ஞானவேல் பத்திரிகையாளரா? என்று சிலர் கேட்டார்கள். அவர் ஆனந்த விகடனில் நிருபராக வேலை பார்த்ததாகவும் அதில் கிடைத்த தொடர்புகள் மூலம் அதிகார மட்டங்களில் உறவுகளை வளர்த்த பிறகு கலைக்குடும்பமான நடிகர் சிவக்குமார், அவரின் வாரிசு நடிகர் சூர்யா ஆகியோரின் பி,ஆர்.ஓவாகவும், சூர்யா ரசிகர் மன்றம், அவர்களின் அறக்கட்டளை வேலைகளைக் கவனித்துக் கொள்வதாகவும், நடிகர் பிரகாஷ்ராஜிற்கும் பி.ஆர்.ஓவாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். அவ்வப்போது "உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள்" என்னும் திடீர் பணக்காரர்கள் குறித்த தன்னம்பிகை கட்டுரைகளை சிலிர்க்க சிலிர்க்க உருட்டி உருட்டி எழுதுகிறவர் என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள்.

 

ஞானவேல் என்ற நபர் என்ன தொழில் செய்கிறார் என்பது இங்கு முக்கியமல்ல, ஆனால் இன்றைய இவரது நடவடிக்கை ஈழப் பிரச்சனை என்னும் பொதுப் பிரச்சனையில் அசிங்கமான அவதாரமாக உருவெடுத்திருக்கிறது. ஈழப்போராட்டத்தை இங்குள்ள அதிகார பீடங்களிடமும், சந்தர்ப்பவாத சாமியார்கள், பெரும் பண்ணைகளிடமும் கொண்டு போய் அடகு வைத்து இவர்களை ஈழ நாயகர்களாக உருவாக்குகிற ஆளும் வர்க்க நலன் சார்ந்த தந்திரமாக உருவெடுத்திருக்கிறது.

 

போருக்கு எதிரான பத்திரிகையாளர் என்ற அமைப்பு என்ற ஒன்றைத் துவங்குவதோ, அதற்கு அமைப்பளாராக ஞானவேல் இருப்பதோ, ஈழத்துக்காக நூல் வெளியிடுவதோ தவறிலை, ஆனால் தனக்குத் தெரிந்த பணக்காரர்கள், ஆளும் வர்க்க அடிவருடிகள், நடிகர்கள், என்ற இவர்களின் பின்னணியில் ஜெகத் கஸ்பார் என்னும் ஆளும் கட்சி ஆதரவுபெற்ற ஒரு நபரின் நிதி உதவியோடு வெளியிடுவதும் , அதற்குப் பத்திரிகையாளர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வதும்தான் இங்கு பிரச்சனை. ஞானவேல் "அகில இந்திய சூர்யா ரசிகர் மன்றம்" சார்பில் இதைச் செய்திருந்தால் யாரும் கேட்கப் போவதில்லை.

 

போருக்கு எதிரானவர்கள் யார்?

 

மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நீடித்த இரண்டரை ஆண்டுகால இலங்கை அரசின் போர் என்பது வெறுமனே இலங்கை அரசின் போர் அல்ல. பிராந்திய வல்லரசுகளின் ஆதிக்க வெறியே ஈழத்தில் போர் வெறியாக மக்களைக் கொன்று தீர்த்தது. ஆனால் இப்பிராந்தியத்தில் வேறெந்த ஒரு நாட்டின் பங்களிப்பையும் விட இந்தியாவின் பங்களிப்பே வன்னிப் போரில் அதிகம்.

 

இவர்களே ஆயுதங்களைக் கொடுத்தார்கள், இவர்களே இராணுவத்தை அனுப்பினார்கள், இவர்களே இராணுவ டாங்கிகளையும், விமானங்களையும் அனுப்பினார்கள். இவர்களே கொலைகார பாசிஸ்டுகளான ராஜபட்சே சகோதர்களை பாதுகாத்தார்கள். போரை நிறுத்துங்கள் என்று தமிழகம் கேட்ட போது இறையாண்மையுள்ள இலங்கை தேசத்திற்குள் தலையிட மாட்டோம் என்றார்கள். போரை நடத்திய இந்திய, இலங்கை கூட்டு இராணுவப் படைகள் கொன்றொழித்தது புலிகளை மட்டுமல்ல ஐம்பதாயிரம் வன்னி மக்களையும்தான்; இனப்படுகொலையின் சூத்திரதாரி இலங்கை மட்டுமல்ல மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சியும்தான்.

 

போரை நிறுத்தாமல் அதை வேகமாக முடிக்க நெருக்கடி கொடுத்த இந்தியா இன்று ராஜபட்சேவுக்கும், சரத்பொன்சேகாவுக்குமிடையிலான போரை தீர்த்து வைக்க விரும்புகிறது. சமாதானம் பேசவே கொழும்பு சென்றிருக்கிறார் பிரணாப்முகர்ஜி. வன்னி மக்களைக் கொன்றொழித்த மத்திய காங்கிரஸ் அரசு, போர் நிறுத்தம் கோரிய ஜனநாயக சக்திகளின் நண்பனா? எதிரியா?

 

இதற்கும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். கட்டுரையை எழுத நினத்ததன் தேவையே அங்கிருந்துதான் உருவாகிறது. அதைச் சொல்வதற்கு முன்னால், வேறு சில விஷயங்களைப் பேசியே ஆகவேண்டும்.

 

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையில் மத்திய மாநில அரசு அதிகாரங்களை துய்த்து வரும் தி.மு.க இப்போது மாநிலத்தில் ஆளும் கட்சி, மத்தியில் ஆளும் கட்சியோடு பதவியை பங்கிட்டிருக்கும் கட்சி. தமிழகத்தில் போர் நிறுத்தம் கேட்ட போது கருணாநிதி தன் பதவி அதிகாரத்தைப்ப பாதுகாத்துக் கொள்வற்காக ஈழம் தொடர்பாக நாடகங்களை அரங்கேற்றினாரே தவிர கடைசி வரை ஈழ மக்களிடம் கரிசனம் காட்டவில்லை. மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற போது அவர் புலிகளின் சகோதரப் படுகொலை பற்றி பேசினார். வன்னி மக்களை காப்பாற்றுங்கள் என்ற போது பிரபாகரன் சர்வாதிகாரி என்றார். ஈழம் தொடர்பாக மத்திய அரசின் கொள்கையே மாநில அரசின் கொள்கை என்றார் கருணாநிதி.

 

கருணாநிதி மட்டுமல்ல அவரோடு அன்று காங்கிரஸ் கூட்டணியில் இருந்த டாகடர் ராமதாஸ் கூட சூழலுக்கு தக்கவாறு பேசியே நாடகங்களை அரங்கேற்றினார்.போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று பார்ப்பனத் திமிரோடு பேசிய ஜெயலலிதாவோ, கருணாநிதியின் பெயர் கெடுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு ஈழப் பிரச்சினையை கருணாநிதிக்கு எதிராக மடை மாற்றினார். மக்கள் அதை நம்பவில்லை என்பது தனிக்கதை.

 

கடைசியில் புலிக்கோஷமிட்டவர்களாலேயோ, நாடகங்களை நடத்தியவர்களாலேயோ, ஈழத் தமிழர்களை காப்பாற்ற முடியாது என்பதைத் தெரிந்து கொண்டோம். இவர்களால் உள்ளூர் தமிழர்களையும் காப்பாற்ற முடியாது என்பதை இன்றைக்கு மீனவர் பிரச்சனையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைகோ, திருமா, கருணாநிதி, ஜே, நெடுமாறன், என எல்லா தலைகளும் சந்தர்ப்பவாதிகளே என்பதை தீயில் எரிந்து முத்துக்குமார் உணர்த்தினான். முத்துக்குமாரின் தியாகத்தை தற்கொலை என்றார் திமுகவின் அன்பழகன். இதெல்லாம் போரின் போது நடந்த சில கசப்பான உண்மைகள்.

 

ஜெகத்கஸ்பார் கும்பல் சொல்கிற மாதிரி அமைதியாக மௌனமாக இல்லாமல் தமிழகத்தின் இரண்டு துருவ அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டு பல அமைப்புகளும்,வழக்கறிஞர்கள், மாணவர்கள், பெண்கள், மனித உரிமை அமைப்பினர், கண் தெரியாதவர்கள், தையல் கலைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், என பலரும் போராடினார்கள். ஆனால் பத்திரிகையாளர்கள் மட்டும் போருக்கு எதிராக போராடவில்லை. ஒரு வேளை அப்போது இந்த அமைப்பு துவங்கப்பட்டு போருக்கு எதிராக போராடியிருந்தால் சீமானையும், கொளத்தூர் மணியையும், கோவை இராமகிருட்டிணனையும் ஏனைய தோழர்களையும் சிறையில் தள்ளி ஒடுக்கிய கருணாநிதி, இந்த பத்திரிகையாளர்களையும் உள்ளே தான் தள்ளியிருப்பார்.

 

ஈழப்போருக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்த வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றத்தில் எது கிடைத்ததோ, அதுவே பத்திரிகையாளர்களுக்கும் கிடைத்திருக்கும். போராட்டம் என்பதன் வலியறியாத பத்திரிகையாளர்கள் ஈழத்துக்காக போராடவில்லை என்றால், சில பிழைப்புவாத துரோகிகளோ அம்சாவின் காலடியில் விழுந்து கிடந்தார்கள். இது குறித்தெல்லாம் ஏற்கனவே விரிவாக வினவில் எழுதியிருக்கிறோம். போர் நடக்கும் போது மவுனமாக இருந்து விட்டு இப்போது போருக்கு எதிரான அமைப்பு என்று துவங்கியிருக்கிறார்களே, எந்த போருக்கு எதிரானது இந்த அமைப்பு என்று அதன் அமைப்பாளர் ஞானவேல் சொல்வாரா?

 

வடகிழக்கில் இந்தியப் படைகள் நடத்திக் கொண்டிருக்கிறதே அந்தப் போருக்கு எதிரானதா? அல்லது அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக ஈராக் மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்களே வீரம் செறிந்த போர், அந்தப் போருக்கு எதிரானதா? அல்லது ஆப்கான் போருக்கு எதிரானதா? அல்லது இந்திய அரசு விரும்பாத போராக சரத்பொன்சேகாவிற்கும், ராஜபட்சேவுக்கும் இடையில் தற்போது நடக்கும் போருக்கு எதிரானதா?

 

ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி

 

இன்று இந்தப் பாதிரியார் குறித்து எழுத பலரும் பயப்படுகிறார்கள். சிலர் இவர் பிரபாகரனோடு உண்டு உறங்கி வாழ்ந்தவர் என்று மிரட்சியோடு பார்க்கிறார்கள். இன்னும் சிலரோ இவர் கனிமொழி, கார்த்திக் சிதம்பரம், சிதம்பரம் என பெரிய இடத்து தொடர்புகள் உள்ளவர் அதனால் வம்பு வேண்டாம் என்று ஒதுங்குகிறார்கள். இன்னும் சிலரோ இவர் பின்னால் திருச்சபை இருக்கிறது. மிகப் பெரிய அதிகார பீடமது. அதனால் நாம் இவரை பகைத்துக் கொள்ள முடியாது என்று ஒதுங்குகிறார்கள். மே 18க்குப் பிறகு இவர் எழுதிய நக்கீரன் கட்டுரைகளை பதிவுலகில் பலர் வெளியிட்டு ஜெகத் கஸ்பாரை பிரபாகரன் ரேஞ்சுக்கு உயர்த்தினார்கள்.

 

கஸ்பாரைப் பொறுத்தவரை ஈழம் என்பது அவருக்கு "காலம் உருவாக்கித் தந்த கறவை மாடு. அவருக்கு ஈழத்தின் மீதோ, திமுக மீதோ, கருணாநிதியின் மீதோ அபிமானமோ, பற்றோ கிடையாது. பெரிய மனிதர்களின் பழக்கமும் தனது தன்னார்வக்குழுவுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்வதும்தான் ஜெகத்தின் நோக்கம்.

 

கஸ்பார் கிறிஸ்தவ நிறுவனமான வெரித்தாஸ் வானொலியில் பிலிப்பைன்சில் பணியாற்றிய போது புலிகளோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வன்னி மக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் புலத்து மக்களிடம் வசூலித்ததாகவும், பின்னர் அதில் நிதி தொடர்பான பிணக்கில் ஃபாதரை வன்னிகே அழைத்து புலிகள் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுவதுண்டு. அதன் பின்னர் கஸ்பார் சாதித்து வந்த மௌனத்தின் உணைமையான வலி இதுதான்.

 

நீண்டகால மௌனத்திற்குப் பிறகு, புலிகள் இல்லாமல் போன பிறகு, புலிகள் பற்றி பேசத் தொடங்கியருக்கிறார் கஸ்பார். புலிகளோடு தான் மிக மிக நெருக்கமாக இருந்ததாக தொடர்ந்து எழுதுகிறார். கடந்து போன நிகழ்வுகள் குறித்து எழுதும் போது, அதை மறுக்கவோ, அல்லது உண்மைதான் என்று சொல்லவோ சம்பந்தப்பட்ட நபர்கள் இல்லை என்றால் இம்மாதிரி நபர்களுக்கு அதுவே கொண்டாட்டமாகிவிடுகிறது.

 

பிலிப்பைன்சில் இருக்கும் வெரித்தாஸ் வானொலி நிலையம் அமெரிக்க சி.ஐ.ஏவின் நிதி, கட்டுபாடுடன் ஆசியாவில் கம்யூனிசத்தையும், தேசிய விடுதலை இயக்கங்களையும் உளவறிந்து ஊடுறுவி, கண்காணத்து குலைப்பதற்கான பிரச்சாரத்தை செய்து வந்த நிறுவனம் என்பது பலருக்கும் தெரியாது.

 

இப்போது ஜெகத் இந்திய உளவு நிறுவனத்தில் உளவாளியாக இருப்பாரோ என்ற சந்தேகங்கள் புலத்து மக்களிடமிருந்து வெளிப்படுவதோடு, தமிழகத்திலும் கூட அப்படியான பேச்சுகள் அடிபடுகின்றன. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மிக முக்கியமாக ஆராயப்பட வேண்டியது. மே-மாதம் வன்னிப் போர் துயரமான முறையில் - இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்களையும் போராளிகளையும் ஈவிரக்கமற்ற முறையில் கொன்றொழித்து - முடிவுக்கு வந்த பிறகு வெளிவந்த நக்கீரனில் "வன்னியில் என்ன நடந்தது?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது.

 

அக்கட்டுரையில் காங்கிரஸ் கட்சியின் பெரியவர் ஒருவரைத் தொடர்பு கொண்டு புலிகளின் சரணடைவுக்காக, தான் முயற்சித்ததாகவும் தானே கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வெள்ளைக் கொடியோடு புலிகளை சிங்கள இராணுவத்திடம் சரணடைய வைத்ததாகவும், ஆனால் இலங்கை அரசின் துரோகிகள் நடேசனைக் கொன்று விட்டதாகவும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் ஜெகத் கஸ்பார் . இதில் நமக்கு உறுத்துகிற ஒரு கேள்வி இருக்கிறது. சரண்டையச் சொல்லி புலிகளுக்கு ஆலோசனை அல்லது நிர்ப்பந்தம் கொடுத்த மூன்றாம் தரப்பு யார்?

 

பல நாட்களாக தூக்கமின்றி, உணவின்றி, போராடும் வலுவின்றி, காயங்களுக்கு மருந்தின்றி உளவியல் ரீதியாக பலவீனமாகிப் போயிருந்த போராளிகளை சரணடையச் சொல்லி கடிதம் தயாரித்த ஜெகத் அக்கடிதத்தை யாருக்காக, யாருடைய வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தார்? தான் ஏதோ புலிகளுக்கு உதவி புரிந்ததாகவும், ஆனால் ராஜபட்சே சகோதர்கள்தன் துரோகம் இழைத்து நடேசனைக் கொன்று விட்டதாகவும் கூறுகிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும். கடைசி நேரத்தில் ஜகத் கஸ்பார் தொடர்பு கொண்ட "அந்த டில்லி பெரியவர்" இந்த துரோகம் குறித்து என்ன சொன்னார்? அந்தப் பெரியவர் யார்? இந்தக் கபட நாடகம் குறித்து அந்தப் பெரியவருக்குத் தெரியாதா? தெரியாது என்று கஸ்பார் தேவ சாட்சியம் கூறுகிறாரா? ஒரு கொடூரமான அரசியல் படுகொலையை நடத்திவிட்டு, தான் நடத்திய திரை மறைவு பேரத்தை இன்னமும் இரகசியமாக வைத்துக் கொள்ளும் உரிமை கஸ்பாருக்கு உண்டா?

 

புலிகளின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை இலகுவாக வெல்ல இந்தியா பயன்படுத்தியிருக்கக் கூடிய தந்திரம்தான் இந்த "சரணடைவு நாடகம்" என்பதை இப்போதும் கூடவா ஒருவர் புரிந்து கொள்ள முடியாது? அதற்கு இந்திய வம்சாவளியினரான விஜய்நம்பியாரை இந்தியா பயன்படுத்திக் கொண்டது. அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் இலங்கை இராணுவத்தில் ஊதியம் பெறும் ஆலோசகராக இருக்க அவரது அண்ணனான விஜயநம்பியாரோ ஐநாவின் சார்பில் இலங்கையில் சமாதானம் பேசுகிறார். தம்பியின் கையில் துப்பாக்கி... அண்ணனின் கையில் சமாதானப்புறா..... இந்த சமாதானப்புறாவை வைத்து தமிழக சமாதானபுறாவான ஜெகத் கஸ்பர் மூலமாக புலிகளை வழிக்குக் கொண்டு வந்திருக்கிறது, இந்திய. இலங்கை கூட்டு இராணுவம். இந்த திட்டம் குறித்து அன்றைக்கு எனக்குத் தெரியாது என்று கஸ்பார் சாதிக்கலாம். ஆனால் இன்றைக்கும் இது புரியவில்லை என்று அவர் வாதாடமுடியாது.

 

இந்தக் கொலை வெறித் திட்டம் குறித்த செய்திகள் 21-05-2009 தேதியிலேயே கசிந்தது. அன்றைய மன அழுத்தங்களில் யாரும் பெரிதாக அதை கண்டுகொள்ளவில்லை. அந்தச் செய்தியில் இருந்தது இதுதான். வற்புறுத்தலாக சமாதானச் செயலகத்தைச் சேர்ந்தவர்கள் சரணடைய நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்த செய்திகளில் உண்மை இருக்கத்தான் செய்தது. விரைந்து போரை முடிக்க இந்தியா இலங்கைக்கு கொடுத்த நெருக்கடியின் இன்னொரு தந்திரமே இந்த வற்புறுத்தலான சரணடைவு. ஜெகத் கஸ்பார் ராஜ் யாருக்காக நடேசனுக்கு இந்த வற்புறுத்தலைக் கொடுத்தார்? பின்னர் எதற்காக இப்போது ஈழத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்?

 

சில வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ திருச்சபையின் இதழான நம்வாழ்வு இதழில் புலிகளை மோசமாக சித்தரித்து கட்டுரை எழுதினார் இதே ஜெகத். அன்றைய மதுரை ஆர்ச் பிஷப் ஆரோக்கியசாமி இதனைக் கண்டிக்க, உடனே "மறுப்பு மாதிரி" ஒன்றை வெளியிட்டு சமாளித்தார். (இதற்கும் ஆரோக்கியசாமி தொடர்பாக சால்ஜாப்பு எதையும் ஜெகத் எழுதினால் அதை மறுக்க ஆரோக்கியசாமியும் உயிருடன் இல்லை)

 

சி.ஐ.ஏ புகழ் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றிய இந்த அனுபவசாலியை இந்திய உளவு நிறுவனங்கள் கைவிடவில்லை என்பது இப்போது தெரிகிறது. சமாதானக் காலத்தில் புலிகளுடன் உறவு கொண்டு ஊடுறுவ அனுப்பியிருக்கிறது. ஆனால் இந்த வசூல் மன்னனின் உண்மை முகத்தைத் தெரிந்து கொண்ட புலிகள் இவரை பட்டும் படாமலும் ஒதுக்கி தங்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப் பார்த்திருக்கின்றனர். கூடாநட்பு குழிபறித்து விட்டது.

 

இப்போது புலிகள் இல்லை. கஸ்பார் புலிகள் பற்றிப் பேசுகிறார். ஈழ மக்களுக்காக எதையாவது செய்யத் துடிக்கிறாராம். அதற்காகவே சிதம்பரத்தோடும், ஆளும் கட்சியோடும் நெருக்கமாக இருப்பதாக வேறு சொல்லிக் கொள்கிறார்.

 

ஞானவேல்.. வளர்ந்து வரும் ஜெகத் கஸ்பாரே!

 

ஜெகத்தின் நல்லேர் பதிப்பகத்தின் நிதியில் பத்திரிகையாளர்களின் பெயரில் நூல் கொண்டு வந்திருப்பதன் மூலம் அதில் ஏழுதிய ஏராளமானவர்களையும் ஏமாற்றி, சக பத்திரிகையாளர்களையும் ஜெகத் கஸ்பாரோடு சேர்ந்து ஏமாற்றியிருக்கிறார் ஞானவேல். பொதுவாக எதிர்ப்பியக்கங்களின் போராட்ட வடிவங்களெல்லாம், இன்றைய அரசு அடக்குமுறைகளின் விளைவாக போர்க்குணமிக்க வடிவத்துக்கு மாறும் காலம் இது. அது போல அரசு அடக்குமுறைக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது, மனுக்கொடுப்பது, கண்ணீர் அஞசலி செலுத்துவது போன்ற அபத்த நாடகங்கள் இந்தியாவில் காமெடியாகிவிட்டது. மக்கள் இவ்வாறு போராடி போராடி அலுத்துப் போய்விட்டார்கள். அப்படி போராடுகிறவர்கள் மண்டையை பிளக்கிறது போலீஸ் அராஜகம். இப்போது இம்மாதிரி போராட்டங்களில் மக்கள் சலிப்படைந்து விட்டார்கள். அதனால்தான் போர் நடைபெற்ற காலத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களும் வன்முறை வடிவம் எடுத்தன. அப்போது ஜெகத் மௌன ஊர்வலம் நடத்தினார்.

 

அதாவது யாரைப் பற்றியும் எதுவும் பேசாமல் ஒரு ஊர்வலம். அதாவது கொலை செய்கிற இந்தியாவைப் பற்றிப் பேசக் கூடாது. கொலைகார அரசுகளைப் பற்றிப் பேசக் கூடாது. கொலைகார இந்திய அரசோடும், அதற்கு துணைபோகும் மாநில அரசோடும் சேர்ந்து கொண்டு "ஏதாவது" செய்ய வேண்டும். இதுதான் கஸ்பாரின் கொள்கை. அந்தக் கொள்கையை இப்படித்தானே அமல் படுத்த முடியும்?

 

மக்களின் எதிர்ப்பு வடிவங்களை அரசியல் அற்ற ஒன்றாக மாற்றுவதும் அதை அரசு நிறுனத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதும்தான் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரியின் வேலை. பெரும்பாலான கிறிஸ்தவ பாதிரிகளின் வேலையும் இதுதான்.

 

அயோக்கியத்தனத்தின் ஒரு போராட்ட வடிவமாக மௌன ஊர்வலத்தையும், மெழுகுவர்த்தி பிரார்த்தனயையும் நடத்தினார் ஜெகத். அதன் போருக்குப் பிந்தைய இன்னொரு வடிவம்தான் இந்த "மௌனத்தின் வலி" நூல் வெளியீட்டு விழா. கருணாநிதின் பெயரை சரி செய்யும் முயற்சியும், போராட்டங்களை மடைமாற்றும் முயற்சியும் கூட இந்த விழாவில் இருக்கிறது. அதாவது அனைத்து பத்திரிகையாளர்களும், கலைத்துறையினரும், கவிஞர்களும், எழுத்தாளர்களும் எங்களின் பின்னால் நிற்கிறார்கள் என்ற தோற்றத்தை ஞானவேலும், ஜெகத்தும் தோற்றுவித்திருக்கிறார்கள். கவிதை வெளியீட்டு விழாவில் பிரமுகர்கள் மேடையில் பேசினார்கள்.

 

பிரகாஷ்ராஜ் அவர் என்ன பேசினார் தெரியுமா? மௌனமாக இருந்து விட்டோம் என்று குறைபட்டார். ( மௌனமாக இருந்த ஞானவேல் பக்கத்தில் இருந்தார்) சிவக்குமார் பேசவே இல்லை ஏதோ கவிதை படித்தார். போலிச் சாமியார் சத்குரு ஜக்கி வாசுதேவ் "அன்பும் கருணையும் பொழியட்டும், மக்கள் போராடக் கூடாது, சேகுவேராவை யாரும் பின்பற்றக் கூடாது" என்றான் அந்த தாடிக்கார சொறி நாய்......"நான் விரைவில் ஈழ மக்களுக்காக ஒரு ப்ராஜக்ட் செய்யப் போகிறேன்" என்று ஆட்டையப் போட்டான் அந்தப் பாவி. ஏ.ஆர் முருகதாஸ் ஏதோ பேசினார்.

 

அந்த விழாவில் கடைசியாக நன்றி சொன்னது யார் தெரியுமா? மருத்துவர் எழிலன். அவர் திட்டக்குழு தலைவரும் தீவிர திமுக அனுதாபியுமான கருணாநிதியின் செல்லப் பிள்ளையுமான நாகநாதனின் மகனாம். துரோகங்களை என்ன மையிட்டு மறைத்தாலும் அது இந்த புயல் மழையில் கரைந்து கொண்டே இருக்கும்தானே? எவருடைய பேச்சிலும் அரசியல் இல்லை. போரின் இந்திய முகத்தை சுட்டிக் காட்டவோ, தமிழக துரோகத்தை தோலுரிக்கவோ முடியாத ஆளும் வர்க்க பெரும்பண்ணைகள் தங்களின் சந்தர்ப்பவாத ஆளும் வர்க்க நலனை முன்னெடுத்தே இதில் பேசினார்கள்.

 

வந்திருந்த கூட்டத்தில் பாதி அல்லேலுயா கோஷ்டிகள். மீதி பேர் சத்குருவின் பக்தர்களாம். கூட்டம் முடிந்ததும் சத்குருவைப் பார்த்து அழுது அரற்றினார்களாம். சத்குருவிடம் அழுதால் கஷ்டங்கள் மறைந்து விடும் என்று சாங்கியம் இருப்பதால் அப்படியாம். ஆக ஈழத்துக்காகப் போட்ட கூட்டத்தில் ஆடியன்ஸ் அழுதது சத்குருவுக்காக.

 

இந்த விழாவில் பேசிய கிறிஸ்தவ பிஷப் மலையப்பன் சின்னப்பா, இறைவன் ராஜபக்சேயை தண்டிப்பான் என்று பேசினார். தங்களைப் போன்ற யூதாஸ்களுக்கு என்ன தண்டனை என்பதை அவர் கூறவில்லை. கிறிஸ்தவத்துக்குள் இருக்கும் பெரும்பலான பாதிரிகள் சாதி வெறியர்கள். பண மோசடிப் பேர்வழிகள். கிறிஸ்தவ மீனவர்களுக்காக வந்த நிதிகளை பெருமவளவு மோசடி செய்த குற்றச்சாட்டுகள் பாதிரிகளுக்கு உண்டு. இந்த சென்னை மயிலை பிஷப் மலையப்பன் சின்னப்பாவோ திமுக ஆதரவாளர். ஆளும் கட்சியோடு தொடர்பு வைத்து தங்களின் மத நிறுவனங்களுக்கு அனுகூலங்களைப் பெற்று அதன் மூலம் தங்கள் வாழ்வையும் வளப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள்.

 

ஜெகத் தனது "நாம்" அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கும்,இந்த மௌனத்தில் வலி நூலிற்கும் 68,லஸ் கோவில் சாலை என்னும் முகவரியைப் பயன்படுத்துகிறார். இது கிறிஸ்தவ நிறுவனமான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தின் முகவரியாகும். ஆக ஜெகத்தின் இன்றைய ஈழம் சார்ந்த துரோகக் கருத்துக்களுக்கு வலிமை சேர்க்க கிறிஸ்தவ திருச்சபையின் ரப்பர் ஸ்டாம்ப்

 

இறுதியாக,

 

பத்திரிகையாளர்கள் ஈழத்துக்காக நூல் வெளியிடுவதோ, அதற்காக போரடுவதோ தவறில்லை, ஆனால் போர் நடந்து கொண்டிருந்த போது இந்த பத்திரிகையாளர்கள் எங்கே போயிருந்தார்கள் ? போருக்கு எதிரானது என்று சொல்லப்படும் இந்நூல் நல்லேர் எனப்படும் ஜெகத்தின் பணத்தில் ஏன் வெளிவரவேண்டும்? "நாம்" அமைப்பின் நிறுவனர்களாக இருக்கும் கார்த்திக் சிதம்பரம் போன்ற ஈழக் கொலைகாரர்களின் பணம் "நாம்" அமைப்பிடம் இல்லை என்பதற்கு பத்திரிகையாளர்களின் பெயரில் ஜெகத்திற்கு பந்தி வைத்த ஞானவேல் ஏதாவது உத்திரவாதம் தருவாரா? அல்லது நல்லேர் பதிப்பகத்தின் செலவில் வெளிபட்டப்பட்டிருக்கும் இப்பணம் என்பது புலிகளை கடைசி நேரத்தில் எளிதாக சரணடைய வைத்ததற்காக இந்திய உளவு நிறுவனம் ஜெகத் கஸ்பருக்கு சன்மானமாக வழங்கப்பட்ட பணத்தில் இந்நூல் வெளியிடப்படவில்லை என்று உத்திரவாதத்தையாவது ஞானவேல் கொடுப்பாரா?

 

அன்பான ஈழத் தமிழர்களே!புலத்து மக்களே! தமிழக மக்களே! வித விதமான குரலில் பேசி உங்கள் கழுத்த்தறுத்த இந்த துரோகிகளை இனம் காணுங்கள். இன்னும் நீங்கள் இவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் ஈழத்தில் எஞ்சியிருக்கும் உயிர்களைக் கூட இந்த இரத்த வெறியர்களிடம் நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். இந்தத் துரோகிகளை இனங்கண்டு கொள்ளுங்கள். துரோகத்தை மறைக்க வித விதமான முகமூடிகளோடு வந்து தங்கள் கறைகளை கழுவ நினைக்கும் இந்த கைக்கூலிகளை அம்பலப்படுத்துங்கள். புதிய அரசியல் பாதையை உங்களின் சொந்த அரசியல் அறிவில் முன்னெடுங்கள்.

 

- கட்டுரையாளர்: வெண்மணி


தொடர்புடைய பதிவுகள்

ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !
ஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்?
ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் ! - வெளியீடு - PDF டவுன்லோட்
ஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக்கூத்து!
ஈழப்படுகொலையில் மகிழும் இந்திய ஊடகங்கள் !
இனி ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தி அடையுமா?
காஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !
புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.
ஜூ.வி ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன்? - இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் - தெரியாத செய்திகள்!
ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !
ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?
பிற ஈழம் தொரடர்பான கட்டுரைகள் - கருத்துப்படங்கள் - போராட்டக்காட்சிகள்

http://www.vinavu.com/2009/11/16/father-jegath-gaspar-raj-milks-blood/

 

Last Updated on Monday, 16 November 2009 11:20