Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பா.ம.க இராமதாஸ் + பச்சோந்தித்தனம் = புதுப்படம் ரிலீஸ்!!

பா.ம.க இராமதாஸ் + பச்சோந்தித்தனம் = புதுப்படம் ரிலீஸ்!!

  • PDF

சூழ்நிலைமைகளுக்கேற்ப தனது வண்ணத்தை பச்சோந்தி மாற்றிக்கொள்ளும். சுயநலத்திற்காக தனது அரசியல் கூட்டணி வண்ணத்தை இராமதாஸ் அடிக்கடி மாற்றுவார். இராமதாஸின் இந்த சாதனைச் செயலை கின்னஸ் உலக சாதனைக்கு இன்னும் ஏன் அனுப்பாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஒரு சீட்டுக்காக தி.மு.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க கூட்டணிக்கு மாறிய பா.ம.க ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியது. மத்திய அமைச்சரவையில் கடைசி நிமிடம் வரை பொறுக்கித் தின்றுவிட்டு பின்பு ஈழப்பிரச்சினைக்காக நடுவண், மாநில அரசுகள் ஒன்றுமே செய்யவில்லை என்று அதற்கு துணை போயிருந்த பா.ம.க கூச்சமில்லாமல் கூச்சலிட்டது. தேர்தலுக்கு முந்தைய நாள் வரைக்கும் ஈழத்தின் பிணங்களைக் காட்டி வாக்குகளை அள்ளிவிடலாமென்று குரூரமாக முயன்றது.

பாசிச ஜெயாவை ஈழத்தாயாக சித்தரிக்கும் வரலாற்று கொடுமைக்கு துணை போனது. ஆனாலும் இந்த நாடகத்தை மக்கள் நிராகரித்து விட்டார்கள். இந்தத் தோல்விக்கு தி.மு.க அரசின் பணபலமும், வாக்கு எந்திரங்களின் முறைகேடும்தான் காரணங்களென இராமாதாஸ் புகார் வாசித்தார்.

பா.ம.க இராமதாஸ் + பச்சோந்தித்தனம் = புதுப்படம் ரிலீஸ்!!

வெற்றிபெரும் கூட்டணிகளில் இடம்பெற்று மத்திய அமைச்சரவையில் சேர்ந்து பா.ம.க இதுவரை சம்பாதித்ததற்கு என்ன கணக்கு என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இவர்களும் வாக்களார்களுக்கு பணம் வழங்கினார்கள் என்பதும், அதில் தி.மு.கவோடு போட்டிபோட முடியவில்ல என்பதை விட எப்படியும் ஈழப்பிரச்சினைக்காக மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்று அலட்சியமாக பச்சோந்தி தலைவர் சிந்தித்தார். எப்படியும் வர இருக்கும் வெற்றிக்காக ஏன் பணத்தை வீணாக செலவழிக்க வேண்டுமென்பதே அவரது எண்ணம்.

ஏழு தொகுதிகளிலும் தோற்றபிறகு ஒப்பந்தப்படி பா.ம.கவிற்கு அளிக்கப்பட விருந்த ராஜ்ஜிய சபா தொகுதியும் இப்போது கேள்விக்கிடமானது. அதை ஜெயாவிடம் வலியுறுத்தும் அளவிற்கு பா.ம.கவிற்கு தைரியமில்லை. தோல்விக்குப் பிறகு இடதுசாரிகள் மற்றும் வைகோவை சந்தித்த ஜெயா பா.ம.க தலைவர்களை மட்டும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை.

இந்நிலையில் சென்ற சட்டமன்ற தேர்தலின் போது திண்டிவனத்தில் உள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டின் முன்நடந்த கொலைவழக்கில் இராமதாசு குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல பா.ம.கவினர் மீது வழக்கு தொடரப்பட்டது. கீழ் கோர்ட்டில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் சி.வி. சண்முகம் அவர்கள் வழக்கில் சேர்க்கக்கூறி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதை தடுக்க வேண்டுமென்பதற்காக பா.ம.கவின் கோ.க.மணியும், தன்ராஜும் கொடநாட்டில் அம்மையாரை சந்தித்து பேசினர்.

அப்போது அம்மா என்ன பேசினார் என்பது தெரியாவிட்டாலும் வழக்கின் மீது தலையிட அவர் விரும்பவில்லை என்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது. சரி ஜனநாயக நாட்டில் இத்தகைய வழக்குகளை சட்டபூர்வமாக எதிர்கொள்வதுதானே சரியாக இருக்கும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை நிறுத்துவதற்காக மத்திய ஆட்சியையே கவிழ்த்த ஜெயா அதே அளவுகோலின்படி தனது கூட்டணி கட்சிக்காகவும் வழக்கை விட்டுக்கொடுக்க சண்முகத்திற்கு கட்டளையிடுவார் என்பதே பா.ம.க கணக்கு. இந்த கணக்குதான் தற்போது பிழையாகியிருக்கிறது.

பாசிஸ்டுகள் எப்போதும் தமக்கு ஒரு வழிமுறையைக் கையாண்டால் அதை மற்றவர்கள் பின்பற்றுவதை விரும்பமாட்டார்கள். அவ்வகையில் சட்டம், வழக்கு, நீதிமன்ற விவகாரங்களில் பா.ம.கவிற்காக தலையிட அன்னையார் விரும்பவில்லை. இப்படித்தான் ‘ஜனநாயக’ நெறிமுறை பா.ம.க விவகாரத்தில் பாசிச ஜெயாவால் நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

எப்படியும் கொடநாட்டிலுருந்து நல்ல சேதி வருமென்று காத்திருந்த பா.ம.க இராமதாஸ் இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்திருந்தார். அப்படியும் அம்மா அருள்பாலிக்கவில்லை. எனவே அவசரமாக கூட்டப்பட்ட பா.ம.கவின் நிர்வாகக்குழு கூட்ட முடிவின்படி அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதாக இரமாதாஸ் அறிவித்து விட்டார். இராமதாஸின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் எனபதற்காகவே கட்சி கூட்டணி மாறுகிறது என்றால் கட்சியின் நிர்வாகக் குழுவும் இராமதாஸின் குடும்ப நலனுக்காகத்தான் செயல்படுகிறது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வழக்கு குறித்த பிரச்சினயை சட்டப்பூர்வமாக சந்திக்கமாட்டோமென்ற ஜனநாயக விரோதத் தன்மையும் இங்கே குடும்ப அரசியலுக்காக வெளிப்பட்டிருக்கிறது.

அடுத்த சட்டமன்றத்தேர்தலுக்காக இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது, இப்போது விரட்டப்பட்ட பா.ம.க மீண்டும் வாலை ஆட்டியவாறு தன்னிடம்தான் வரும், அப்போது பார்த்துக்கொள்ளலாமென்பது ஜெயாவின் எண்ணம்.

இதில் தி.மு.க நிலை என்ன என்பதை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், “பா.ம.விற்கு இந்த ஞானோதயம் வர காரணம் கொள்கை ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ கிடையாது. தனிப்பட்ட சொந்தக் காரணங்களுக்காக அவர்கள் கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறார்கள்” என்று  தெரிவித்திருக்கிறார். இதை வைத்துப்பார்த்தால் முந்தைய பா.ம.க கூட்டணிகளெல்லாம் அரசியல் ரீதியிலானது என்று பொருளாகிவிடுகிறது.  இதுவரை பா.ம.க இடம்பெற்ற எல்லாக்கூட்டணிகளிலும் எத்தனை சீட்டு என்பதே இராமதாஸின் கொள்கையாக இருந்தது. எது எப்படியோ தி.மு.கவும் இப்போது அய்யா கட்சியை தமது கூட்டணியில் சேர்க்கத் தயாரில்லை என்பதை மறைமுகமாக அறிவித்திருக்கிறது. கருணாநிதியும் ஜெயா போல இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அய்யா வாலை ஆட்டிக்கொண்டு வருவார் என்று அலட்சியமாக சிந்திக்கலாம்.

இதற்கு ஆதரமாக பா.ம.கவின் கடந்த கால வரலாறு கட்டியம் கூறுகிறது. 1991, 1996 சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்துப்போட்டியிட்ட பா.ம.க 1998 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து 4 தொகுதிகளில் வென்றது. 1999 மக்களவைத் தேர்தலில் தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து 5 இடங்களை வென்றது. 2001 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 20 தொகுதிகளில் வென்றது. 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க கூட்டணிக்குத் திரும்பிய பா.ம.க., 6 தொகுதிகளில் வென்றது.

2006 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் நீடித்து 18 தொகுதிகளில் வென்றது. 2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

இப்போது அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. 2011 சட்ட மன்றத்தேர்தலில் இந்த பச்சோந்தி யாரிடம் சேருவார் என்ற முடிவு போயஸ் தோட்டத்திடமும், கோபாலபுரத்திடமும் உள்ளது.

ஆனால் அந்த தேர்தலில் மட்டும் இருவரும் பா.ம.கவிற்கு இடமில்லை என்று அறிவித்து விட்டால் ஒரு வரலாற்றுப் புகழ்பெற்ற பச்சோந்தியை நாம் தமிழக அரசியலிலிருந்து ஒழிக்கப்படுவதை காணலாம். பச்சோந்தியை வளர்த்து விட்ட இருகழகங்களும் அதை ஒழிப்பதையும் செய்து விட்டால் தைலாபுரத்தின் அரசியல் அனாதையாக மாறிவிடும். ஆனால் அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள். எனினும் இனியும் பேரம்பேசும் வலிமையை இழந்து அடிமை போல நடப்பதே இரமாதாஸின் விதி.

ஏனெனில் தற்போது வன்னிய சாதி நலன் என்ற பெயரில் வெறியை மீண்டும் வளர்த்து தனது சாதிய ஓட்டுவங்கி செல்வாக்கை கைப்பற்ற பா.ம.க முயல்கிறது. ஆனால் இக்காலம் 80கள் அல்ல என்பதை அவர்கள் உணரவில்லை. பெரும்பாலான வன்னியர்களே பா.ம.கவை  இராமதாஸின் குடும்பச் சொத்து என்று புரிந்துகொண்டு புறக்கணித்து வரும் வேளையில் இந்த சாதிய அரசியல் எடுபடாது.

இப்பேற்பட்ட பச்சோந்திதான் ஈழத்திற்காக குரல் கொடுத்தது என்று இன்னமும் அப்பாவித்தனமாய் நம்பி வரும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் இனியாவது புரிந்து கொள்வார்களா என்பதே நமது கேள்வி.

இறுதியாக ஒரிரு மாதங்களுக்கு முன்னர் இராமதாஸின் பச்சோந்தி கார்ட்டூனை நண்பர் ராஜா அனுப்பியிருந்தார். அதை எப்போது வெளியிடலாம் என்று காத்துக்கொண்டிருந்த நேரத்தில் இப்போது வெளியிடுவதற்கு வாய்ப்பளித்த இராமதாஸுக்கும் அதற்கு வழியமைத்துக் கொடுத்த பாசிச ஜெயாவிற்கும் எமது ‘நன்றி’யைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

http://www.vinavu.com/2009/10/05/pmk-ramadas-chameleon/