Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பெயரற்ற, முகமற்ற இன்னுமொரு மனிதப் பிணம்

பெயரற்ற, முகமற்ற இன்னுமொரு மனிதப் பிணம்

  • PDF

குரங்கிலிருந்து பிறந்தவன் – பாகம் 2

கதாநாயகனின் பிணம் தெருவோரமாகக் கிடந்தது. திறந்த வாயை மொய்த்த ஈக்கள் அவன் காய்ந்த எச்சிலில் கலந்திருந்த விஷத்தை விழுங்கியதால் அவன் பிணத்திலிருந்து பத்தடிக்கு உள்ளாகவே ஆங்காங்கு சுருண்டு விழுந்தன.

 

இறந்தவனைப் பற்றிக் கவலையே பட வேண்டாம்; அவன் நம் கதாநாயகனாக இருந்தாலும். இங்கு போயிருப்பது ஒரு மனித உயிர் அவ்வளவுதான். இதற்கு வருந்த வேண்டிய அவசியமே இல்லை.

 


 

 



 

உங்களுக்கு நான் குரூர மனதுக்காரன் என்று தோன்றினால் ஒரு நிமிடம் எழுந்திருங்கள். முகம் பார்க்கும் கண்ணாடி முன் நில்லுங்கள். உங்கள் அழகை ரசித்து கவனம் சிதற விடாதீர்கள். முதலில் நேராக நின்று இரு கைகளையும் விரித்து நீட்டிக் கொள்ளுங்கள்.

செய்து விட்டீர்களா? இப்போது உங்கள் வலது கை நடு விரல் நுனியிலிருந்து பார்வையை ஓட்ட ஆரம்பியுங்கள்.

அந்த விரல் நுனிதான் இந்த பூமிப் பந்து உருவான காலம் என வைத்துக் கொள்வோம். மெதுவாக நிகழ்ந்த கோடானு கோடிக்கால ஆண்டு காலமாற்றத்தில் வலது கைமணிக்கட்டை நீங்கள் அடையும் வரை பூமியில் அமில மழைதான் பெய்தது. பார்வையைத் தொடர்ந்து ஓட்டுங்கள்.

மெதுவாக. அமிலமழை நின்று அதன் பின் பூமி குளிர்வதற்கு உங்கள் முழங்கை ஆகிவிட்டது.வெறும் குழம்பாக இருந்த பூமிப் பரப்பில் அமினோ அமிலங்கள் ஒன்றோடு ஒன்று இணையத் தொடங்கின. அந்த அமிலங்கள் இணைந்து ஓரணு உயிர்கள் உருவாகி அவை பலப் பல கோடி ஆண்டுகளாக தன்னைதானே பிரதி எடுத்துக் கொண்டு பெருகுவதற்குள் உங்கள் தோள்பட்டை வந்துவிடுகிறது. இவை மேலும் மேலும் வளர்ந்து, ஆண் - பெண்ணென இருவகையாகப் பிரிந்து,பிரதி எடுப்பதற்குப் பதிலாக சிறு அளவில் அதே உருவத்தை இனப் பெருக்கம் செய்ய ஆரம்பிக்கும் போது நெஞ்சுக்கூட்டின் மேல் உங்கள் பார்வை வந்திருக்க வேண்டும். இன்னும் தாண்டி உங்கள் நடு நெஞ்சில் வந்தி நிற்கும்போதுதான் பூமியில் சிறு சிறு தாவர வகைகள்உருவாகின.


பெயரற்ற,-முகமற்ற-இன்னுமொரு-மனிதப்-பிணம்

இடப்புற விலா எலும்பை அடையும் போது தண்ணீர் வாழ் உயிரினங்கள் கிட்டத்தட்ட இந்தக் கால மீன்களுடன் ஒப்பிடும் வகையில் தோன்ற ஆரம்பித்து விட்டன. கண்கள், வாய், உணவுக் குழல், மலத் துவாரம், இனப் பெருக்க உறுப்பு, ரத்த ஓட்டம், அதை இயக்கும் இதயம், ரத்த நரம்புகள் என்று நமக்குப் பழக்கமான உயிர் அடையாளங்கள் தோன்ற ஆரம்பித்தன. பட்டாணியில் பத்தில் ஒரு பங்கு அளவில் மூளையும் தோன்ற ஆரம்பித்தது.

இடது தோள்பட்டையை நீங்கள் அடையும் காலத்தில் பூமியில் டைனோசார்கள் புரண்டு கொண்டிருந்தன. உடல் அளவில் பல ஆயிரம் மடங்கு வளர்ந்த இந்த உயிர்களுக்கு மூளை மட்டும் அந்த அளவு அதிகரிக்கவில்லை. அதே உணவு, உறக்கம், இனப்பெருக்கம் என்ற உயிர் வாழும் கவலைகள் மட்டும்தான் இருந்தன. இந்த ராட்சத உயிரினம், பல்வேறு உயிர் வகைகளாக மாறி நிமிர்ந்து, நடந்து, ஓடி, பறந்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டபோது கால ஓட்டத்தில் உங்கள் இடது முழங்கை வந்து விட்டது.

ஆறரை கோடி வருடங்கள் முன்பு, நன்றாக நிறுத்தி நிதானமாக, ஒரு பூச்சியத்தையும் விடாமல் எழுதி விடுகிறேன் – 6,50,00,000 வருடங்கள் முன்பு  பூமியின் மீது திசை மாறி வந்த ஒரு விண்கல் மோதியபோது உலகையே ஆட்டிப் படைத்த டைனோசார் வம்சமே பூண்டோடு கருகிப் போனது. பல லட்சம் ஹிரொஷிமா குண்டுகளுக்கு இணையான அந்த வெப்ப விபத்திலும் தப்பித்த ஒரே உயிரினம் கரப்பான் பூச்சிதான். மீண்டும் ஒரு முறை பூமி முழுவதும் குளிர்ந்து,பனியால் மூடி, பனி உருகி வேறு உயிரினங்கள் உருவான போது இடது மணிக்கட்டை வந்து அடைந்து விட்டோம்.

இப்போது புதிதாகத் தோன்றிய உயிரினங்களில் சில முட்டை போடாமல் நேரடியாகக் குட்டி போட்டன, முலைப் பால் கொடுத்தன. இந்த நாலுகால் விலங்குகள் மரத்திலிருந்து இறங்கி வந்து இரண்டு கால்களால் நடக்க ஆரம்பித்த போது உங்கள் இடது கை நடுவிரலின் தொடக்கத்தில் வந்து நிற்கிறோம். முக்கியமான நிகழ்வு. தலையில் இருக்கும் மூளை என்ற சதைத் தொகுப்பு அளவில் பெருக்க ஆரம்பித்து விட்டது. நினைவுகள் பதிந்து கொள்ளும் வண்ணம் அதன் உட்புற ரகசியங்கள் பரிணாம வளர்ச்சி அடைய ஆரம்பித்தன. இப்போது குரங்குகள் மரத்திலிருந்து கீழிறங்கி நடக்க நடக்க முன்கால்கள் வலுக்குன்றி நீளம் குறையத் தொடங்கின. முதுகெலும்பு நிமிர ஆரம்பித்தது. ஆண்குறி நீளம் குறையத் தொடங்கியது. குரங்குகளின் குரோமோசோம்களின் எண்ணிக்கை சிறுகச்சிறுக மாறி மனிதனைப் போலவே தோற்றம் கொண்ட ஆனால் முழு மனிதனல்லாத ஒரு உயிரினம் உருவானது.

இப்போது உங்கள் நடுவிரலில் சதை முடிந்து நகத்தின் அடிப்பாகத்தில் இருக்கிறோம். இந்த உயிரினம் தனித்தனியாக வாழ்ந்தது. தனித்தனியாக வேட்டையாடியது. தற்கால மனிதர்களுக்கும் இந்த உயிரினங்களுக்கும் வெளிப்புறத்தில் எந்த வேறுபாடும் இல்லை. இந்த உயிரினம் மேலும் மேலும் பரிணாம வளர்ச்சி அடைய அடையத்தான் மனிதர்கள் தோன்றத்தொடங்கினர். ஆனால்இவர்களுக்குள் மூளை அளவும் குரோமோசோம் எண்ணிக்கையும் மாறுபட்டன. அதோடுமனிதர்களால் இந்த உயிரினத்துடன் உடலுறவு கொள்ள முடியும். ஆனால் அதனால்இனப்பெருக்கம் நடக்காது.

மனிதர்களும் அவர்களுக்கு முந்தைய உயிர்களும் சேர்ந்து வாழ ஆரம்பிக்கும் காலத்தில், நாம் உங்கள் இடக்கை நடுவிரல் நகத்தில் பாதியைத் தாண்டி விட்டோம். இப்போது உருவாகியிருக்கும் மனிதர்களின் மூளைகள் இன்னும் வளர்ந்திருந்தன. அவர்களால் சிந்திக்க முடிந்தது. நினைவுகளைப் பதிந்து வைத்துக் கொள்ள முடிந்தது. தனக்கு முந்திய உயிரினம் தன்னைப் போல புத்தி சாலியாக இல்லையென்பதை அவர்களால் உணர முடிந்தது.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு உண்மை அவர்களுக்குப் புரிந்தது.

அது தனக்கு முந்தைய அந்த உயிரினத்தின் இறைச்சி தின்பதற்கு சுவையாக இருந்தது என்பதே.

10 லட்சம் ஆண்டுகள் மனிதனும் அந்த ஜீவராசியும் பூமியில் பல மூலைகளில் சேர்ந்தே வாழ்ந்தனர். அந்தப் 10 லட்சம் ஆண்டுகளும் அந்த உயிரினம் மனிதர்களால் கூட்டம் கூட்டமாக வேட்டையாடப் பட்டது. கொன்று தின்னப் பட்டது. முழுமையாக அந்த இனம் அழிந்து மனிதன்மட்டுமே பூமியில் கோலொச்ச ஆரம்பித்த போது நக நுனியில் இருக்கிறோம்.

நண்பரே! ஒரு சிறு ரம்பம் கொண்டு உங்கள் இடது கை நடுவிரல் நக ஓரத்தை லேசாக இராவி விட்டால் போதும். பூமியில் மனிதனுக்கு தனி வரலாறு கிடையாது. கொஞ்சம் அழுத்தி நகத்தை வெட்டி விட்டால் போதும். மனிதனே கிடையாது.

இந்த ஒட்டிக் கொண்டிருக்கும் ஓர உயிரில்தான் நம் பரம்பரைப் பெருமை, பாட்டன், முப்பாட்டன்,காந்தி, திப்பு சுல்தான், ஷேக்ஸ்பியர், முகம்மது, ஏசு, அலெக்ஸாண்டர், வள்ளுவர், அசோகர், சிந்து வெளி நாகரிகம், சக்கரம் கண்டு பிடித்தவன், நெருப்புக் கண்டு பிடித்தவன் எல்லோருமே ஊசலாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு வெட்டு. எல்லோரும் காணாமல் போக வேண்டியதுதான். அதன் பின் மிஞ்சி இருப்பது பல நூறு கோடி ஆண்டுகளாக நிலவி வரும் அமைதி மட்டுமே.

நாடு கிடையாது. மொழி கிடையாது. இனம் கிடையாது. மதம் கிடையாது. கடவுள் கிடையாது.

இந்த நிராகரிக்கக் கூடிய அளவிலான புத்தம் புதிய இனம் முழுமையாக இல்லாமலேபோனாலும் உலகம் சுழன்று கொண்டுதான் இருக்கும். இனமே இல்லாதபோது அந்த இனத்தின் வழியே வந்த ஒரு உயிர், ஒரே ஒரு உயிர், போனால் என்ன குறைந்து விடும்? கதாநாயகனாக இருந்தாலும் பரவாயில்லை. சாகட்டும் விடுங்கள்.

அவனுக்காக அழ வேண்டாம். ஆனால் அவன் மரணத்தின் காரணம் மட்டும் தெரிந்து கொள்வோம்.

பல ஆயிரம் வருடம் முன்னால் ஒரு கதாநாயகன் ஒரு கிழவனிடம் கேட்ட கேள்விகள் காலப் போக்கில் பரிணாம வளர்ச்சி அடந்து இந்தக் கதாநாயகன் இந்தக் காலக் கிழவனிடம் கேட்கும் போது உரு மாறி விட்டன.

ஒரு கதாநாயகன், சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டவன் எப்படி உயிருடன் திரும்ப முடியும்? நம்ப முடியவில்லயே! என்றான். தாடி வளர்த்த கிழவர்களின் கூட்டம் அவனுக்கு இறந்தவன் காட்சி அளித்ததாகக் கதை சொல்லி ஊர் வாயை அடைத்தது.

வேறொருவன், மனிதனுக்காகத்தான் இந்த உலகமும், சூரியனும் வானமும் என்கிறீர்களே?ஆனால் நான் பரிசோதனை செய்து பார்க்கும் போது பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது. பூமிக்கு விண்வெளியில் அவ்வளவு முக்கியமில்லையே! என்றான். கிழவர்கள் கூட்டம் அவனுக்கு சிரச்சேதம் செய்தது.

கடவுள் மனிதனைப் படைத்தார் என்றால், மனிதனை உருவாக்க ஏன் இத்தனை காலம் ஆயிற்று? தன்னை உணரும் ஜீவராசி வந்தால்தானே தான் இந்த உலகின் அதிபதி எனும் எண்ணமே தோன்றும்? 99.99% உலக வரலாற்றில் அப்படி ஒரு பேச்சுக்கே இடமில்லையே, ஏன்?”இந்தக் கேள்விகளைக் கேட்டவன் தலையை யானை இடறியது.

ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் மட்டுமே முதலில் கடவுள் படைத்தாரென்றால்,அவர்களுக்குக் குழந்தை பிறந்திருப்பது எப்படி என்று புரிகிறது. மூன்றாம் தலைமுறை எங்கிருந்து வந்தது? தாயும் மகனும், தந்தையும் மகளும், சகோதரனும் சகோதரியும் புணர்ந்துதான் நம் வம்சாவளி உருவானதா?” இந்தக் கேள்வி கேட்ட நாக்கு வெட்டப் பட்டது.

தெருவோரம் இறந்து கிடக்கும் கதாநாயகன் கேட்ட கேள்வி உங்களுக்குத் தெரிய வேண்டாமா?இதோ அவன் குரலிலேயே கேளுங்கள். ஏய், கிழவா! சிலுவையில் அறைந்ததால் செத்த கிழவன் சொன்னது எல்லாம் சரி என்றும் அவனும் நீயும் ஒரே தகப்பனுக்கு 650 வருட இடைவெளியில் பிறந்த சகோதரர்கள் என்றுதானே இத்தனை நாள் சொன்னாய்? இப்போது திடீரென்று உன்பேச்சையெல்லாம் அவன் கூட்டம் ஏற்காத ஒரே காரணத்தால் உனக்கும் கடவுள் மலை உச்சியில் வைத்து தனியாக அறிவுரை சொன்னதாக புதுக்கதை விடுவது சரியில்லை. நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்”. என்றான். அவ்வளவுதான். கைகள் பின்புறம் கட்டப் பட்டன. தலைமுடி பிடித்து இழுக்கப்பட்டு, வலியில் திறந்த வாயில் விஷம் ஊற்றப் பட்டது. இப்போது அவன் பிணம் ஈ மொய்த்துக் கிடக்கிறது.

இதில் கோபப் பட ஒன்றுமில்லை. தன் வசதிக்கேற்ப விதிகளை மாற்றுவது கிழவர்களின் வழக்கம்.

தன் தாயார் எவனாலோ புணரப் பட்டு தன்னை உருவாக்கினால், தான் கடவுளின் குழந்தைஎன்றும், தன் தாய் கன்னித்தாய் என்றும் சொல்லிக் கொள்ளலாம். தனக்கு காலமுக்கி விடுவது பெண்ணென்றால் ஊரெங்கும் எல்லா ஆண்களும் பெண்களை அப்படி நடத்தலாம். தான் கள்ளருந்தினால் மட்டுமே தன் வழித் தோன்றல்களும் அருந்தலாம். தனக்கு இன்னோரு ஆணுடன் புணரப் பிடித்தால் அப்போது தான் பெண் அவதாரம் எடுத்ததாகச் சொல்லிக் கொள்ளலாம். தனக்கு நான்கு மனைவியென்றால், ஊரிலும் நான்கு மனைவி வரை மணக்கலாம். ஐந்தாவது கூடாது. நானே செய்து கொள்ளவில்லை. உனக்கென்னடா? தன்னை எவன் எதிர்த்தாலும் அவனின் தலையெடுக்கலாம். நரகம் வருமென்று பயமுறுத்தலாம். தான் தெய்வீகமெனச் சொல்லிக் கொள்ளும் மடத்தினுள்ளே பெண்களுடன் காமதாகம் தணித்துக் கொள்வதைக் குறை சொல்லி பொதுமக்கள் படிக்க எவனாவது எழுதினால் அவன் வீடு புகுந்துவெட்டிக் கொல்லலாம்.

இது கிழவர்களின் உலகம். கதாநாயகர்களுக்குத் தொடர்ந்து தோல்விதான் மிஞ்சும்.

ஆனால்..

கண்ணோ, வயிரோ, குடலோ, மலத்துவாரமோ, ரத்த நாளமோ பல நூறு கோடி ஆண்டுகளாக வளர்ந்து வருகையில், இந்த மூளை மட்டும் சில கோடி ஆண்டுகளாகவே பரிணாம வளர்ச்சிஅடைந்து வருகிறது. இன்னமும் மனிதன் தூக்கத்தில் கீழே விழுவது போல் கனவு காண்பது மரத்தில் குரங்காக வாழ்ந்த நினைவின் எச்சமே. தன்னை ஏறெடுத்துக் கூடப் பார்க்காத உலக அழகியைப் பற்றி நினைத்து ஆண்குறி விரைப்பது இனப்பெருக்க எண்ணமே தவிர தெளிவான மூளை ஒப்புதல் சொல்லும் நடைமுறையில் சாத்தியமான காமம் அல்ல. பக்கத்தில் இருப்பவன் தட்டைப் பார்த்து எச்சில் ஊறுவது போல. நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் என்று முட்டாள்தனமாக நம்புவது போல. இறந்தவர்களின் “ஆத்மா” என்ற கண்ணில் படாத ஒன்று “பேய்” என்ற அருவமாக சுற்றிவரும் என்று நம்புவது போல.மூளை முழுமையாக வளராததால் இருக்கும் நடைமுறைக் குறைகள் எண்ணற்றவை. அதில்ஒன்றுதான் கடவுள் நம்பிக்கையும்.

முதுகெலும்பு நிமிர்ந்தது போல, முன்கால்கள் குறுகியது போல, மூளையும் இன்னும் சில கோடி ஆண்டுகள் தொடர்ந்து வளர்வதே இயற்கை. காலம் போகப் போக, மூளை வளர வளர, சரியான கேள்விகள் தொடர்ந்து கேட்கப் பட, இந்த மூட எண்ணங்கள் மறையும். அதுவரை கதாநாயகர்களின் குரல் வளை நெரிக்கப் படட்டும். கிழவர்களின் களியாட்டம் தொடரட்டும்.

ஆனால் ஒவ்வொரு முறை கதாநாயகன் கொல்லப் படும்போதும் நாம் அழாவிட்டாலும் வேறு எங்கிருந்தோ ஒரு அழுகை சத்தம் வருவதை கவனித்தீர்களா?

அது அடுத்த கதாநாயகனின் பிறப்பின் அறிவிப்பு!

தொடரும்

-வித்தகன்

http://www.vinavu.com/2009/08/21/evolution-vithagan-2/

 

 

Last Updated on Friday, 21 August 2009 09:13