Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் 'சிங்களவன் உடன் எப்படி நாங்கள் சேர்ந்து வாழ்வது?" அவன் …

'சிங்களவன் உடன் எப்படி நாங்கள் சேர்ந்து வாழ்வது?" அவன் …

  • PDF

அவன் உன்னைப்பற்றி என்ன நினைக்கின்றான் என்பதற்கு முதல், நீ அவனைப்பற்றி என்ன நினைக்கின்றாய் என்பதுதான் முதன்மையானது. நீ சேர்ந்து வாழத் தயாரா!? அதற்காக முயன்றாயா!? எப்படி, எந்த வழியில்!?

 

சிங்கள அரசு தான் உன் எதிரி. சிங்கள மக்கள் அல்ல. இந்த வேறுபாட்டை எப்போதாவது உன் வாழ்வில் நீ எண்ணிப்பார்த்ததுண்டா!? தமிழனை, முஸ்லீமைக் கூட, எதிரியாக்கியவன் அல்லவா நீ. ஏன் உன் சிந்தனை, நடைமுறை எல்லாம் அதுவாகவே இருந்தது. அதைத்தான் தேசியத்தின் பெயரில் புலித் தேசியம் உனக்கு, உன் சிந்தனையாக ஊட்டியது.    

 

துரோகிகள், கைக்கூலிகள், ஒட்டுக்குழுக்கள் மக்களின் எதிரியான சிங்கள அரசுடன் கூடி நிற்கின்றானே ஒழிய, உன்னைப் போன்ற சிங்கள மக்களுடன் அல்ல. நீ ஏன் உன்னைப் போன்ற சிங்கள மக்களுடன் நிற்க முடியாது!?

 

இதைப் புரிந்து கொள்ளாத மூடனாய், குறுந் தமிழினவாதம் கொப்பளிக்க, சிங்களவனுடன் வாழமுடியாது என்று ஏன் தர்க்கம் செய்கின்றாய். இப்படி மற்றவனுடன் சேர்ந்து வாழமுடியாது என்று கூறும் உன் சிந்தனை, உள்ளடக்கத்தில் நீ அவனுக்கு எதிராக முதலில் இருக்கின்றாய் என்பதுதான் உண்மை. இப்படி சேர்ந்து வாழ நீ மறுக்கின்றாய் என்பதே, வெளிப்படையான உண்மை. இதை மறுக்க, நான் அல்லாத அவன் பற்றிய எதிர்மறை கற்பனைகளை, நாம் எமக்குள் உருவாக்கிக் கொள்கின்றோம்.

 

இப்படி எதிரி யார் என்ற உன் குழப்பம், அனைவரையும் உனக்கு எதிரியாக்கின்றது. இலங்கையில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள், தமக்குள் தாம் எதிரியாகக் கருதியே வாழ்கின்றனர். உன்னுடைய வீட்டில், உன்னுடைய உழைப்பில் அவன் வாழ்வதில்லை. உன்னுடன் நிற்பதாக கூறி உன் உழைப்பைச் சார்ந்து தின்னும் சக மனிதன் போல், அவன் உன் உழைப்பை புடுங்கி தின்ன முனைவதில்லை.

 

அப்படியிருக்க அவன் எப்படி உன் எதிரியானான்!? இதைச் சொல்பவன் தான், இதை செய்ய முனைபவன் தானே, உன் எதிரி. நீ மற்றவனை ஒடுக்கவும், சுரண்டவும், நினைக்காத வரை உனக்கு எதிரி யாரும் கிடையாது. அப்படியிருக்க நீயாக எதிரியை, ஏன் உனக்குள் கற்பனையில் உருவாக்குகின்றாய்.

 

சிந்தித்துப் பார். ஒடுக்கப்பட்ட அப்பாவி சிங்கள மக்களா உன்னை ஒடுக்கினார்கள் அல்லது பேரினவாத அரசா ஒடுக்கியது? கண்ணை மறைக்கும் இனவாதம், உன் சிந்தனையை தலைகீழாக்கியுள்ளது. ஏன் இந்த மட்டமான உன் சிந்தனையே தான், தமிழ் இனத்தை அழித்துள்ளது.

 

யார் ஓடுக்குகின்றான்!? தாழ்ந்த சாதியை நீ ஒடுக்க நினைக்கின்றாயா? அவனை உனக்கு கீழ்ப்பட்ட ஒருவனாக எண்ணுகின்றாயா? இழிவாக பார்க்கின்றாயா? அவனின் உழைப்பை இழிவுபடுத்துகின்றாயா? சுரண்டுகின்றாயா? இதை கண்டு கொள்ளாமல் இருக்க முனைகின்றாயா? இங்கு நீ ஒடுக்கு முறையாளன். இப்படித்தான் இந்த விடையத்தை ஆராய வேண்டும்.

 

இப்படி ஒடுக்குமுறையை எனக்குள் நான் தக்க வைத்துக்கொண்டு, மற்றொரு ஒடுக்குமுறையைப் பற்றி பேசும் அருகதை கிடையாது. இதைத்தான் கடந்த காலத்தில் செய்தோம். இதன் மூலம் தவறாக எதிரிகளை உருவாக்கினோம்.

 

சிங்களவன் என்று அனைத்து சிங்கள மக்களையும் பொதுமைப்படுத்தி, தமிழ் (புலித்) தேசியம் தனக்கு எதிரியாக அவர்களை காட்டியது. அதேநேரம், அதே தேசியம் தமிழ் மக்களை ஒடுக்கியது. இப்படி தமிழ் மக்களை ஒடுக்க, சிங்கள மக்களை தனக்கு எதிரியாக காட்டியது. உனக்கு அதை மூளைச்சலவை செய்து திணித்தனர்.

 

ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் வேறு, பேரினவாத அரசு வேறு. இதை மறுத்த குறுந்தேசியம், அனைத்தையும் ஒன்றாக்கியது. அனைவரையும் எதிரியாக சித்தரித்தது. இப்படி உருத்திராட்ச மாலையை கையில் வைத்து உருப்போட்ட 30 வருட புலிச் சிந்தனை முறை, தாம் அல்லாத அனைத்து மக்களையும் எதிரியாக பார்த்தது, பார்க்க வைத்தது. இதுதான் அறிவிழந்த, பகுத்தறிவற்ற, உனது சிந்தனை முறை.

 

இப்படி சிங்கள மக்களை, முஸ்லீம் மக்களை, கிழக்கு மக்களை, தான் அல்லாத தாழ்ந்த சாதிகளை என்று, எல்லோரையும் எதிரியாக காட்டியது. இவர்களை தம்மில் இருந்து விலக்கி, அவர்களுக்கு எதிராக இருக்கவும் பார்க்கவும் சிந்திக்கவும் செயல்படவும் முனைவதே தமிழ் தேசியம் என்றனர். இல்லை என்கின்றீர்களா!?  இப்படி எம்மைச் சுற்றி இல்லாத எதிரிகளை கற்பித்து, பலரை எம் மக்களுக்கு எதிரியாக்கியவர்கள், நண்பர்களை உருவாக்கவில்லை. மாறாக எதிரியாக இருக்காதவனைக் கூட, வலிந்து எம்மக்களின் எதிரியாக்கினர்.

 

சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை, ஏன் இந்த பேரினவாத அரசு ஒடுக்குகின்றது!? அவர்கள் பற்றி எமது சொந்த அறிவுசார் நிலைப்பாடுதான் என்ன!? அவர்களுக்காக நாம் என்ன செய்தோம்!? எதிரியின் எதிரியை வென்றெடுக்க, நாம் ஏன் முனையவில்லை!? ஏன் அப்படி சிந்திக்கவும், செயல்படவுமில்லை!? எம்மை எது எப்படி தடுத்தது!?

 

இப்படி நண்பனை எதிரியாகவே பார்த்த தவறு எம்முடையது. அப்படியே இன்றும் பார்க்கின்ற குறைபாடு எம்முன்னுள்;ளது. இது எம் அறிவுசார், பகுத்தறிவுசார் குறைபாடாகும்.

 

அவன் என்னைப்பற்றி என்ன நினைக்கின்றான் என்பது இரண்டாம் பட்சமானது. நாம் அவனைப்பற்றி என்ன நினைக்கின்றோம் என்பது, முதன்மையானது. நாம் சரியாக இருக்கும் போதுதான், அவனும் சரியாக இருப்பதை நாம் உணர முடியும்.

 

எந்த அப்பாவி சிங்கள மக்களும், தன்னையொத்த தமிழனை கொல்வதை ஆதரிப்பதில்லை, சுரண்ட நினைப்பதில்லை. ஆனால் நாங்கள் அப்படியா சிந்திக்கின்றோம். முஸ்லீம் மக்களிடமிருந்து எல்லாவற்றையும் புடுங்கிய பின், அவர்களை வடக்கில் இருந்து புலிகள் துரத்திய போது, பெரும்பான்மை தமிழ்மக்கள் என்ன நினைத்தார்கள்!? அதை நியாயப்படுத்த, முஸ்லீம் மக்கள் பற்றிய உனது இழிவான அறியாமை சார்ந்த தர்க்கங்களை எல்லாம், இன்று நீ சுயவிமர்சனம் விமர்சனம் செய்தாயா?

 

உனக்குள் இருக்கின்றது, நீயல்லாத மக்கள் பற்றிய வெறுப்புணர்வு. இதை நீ  களைவது தான், உனது வெற்றிக்கும், சமூகத்தின் வெற்றிக்குமான முதற்படியாகும்.

 

உன்னிடமுள்ள தப்புகளையும், தப்பபிராயங்களையும் களைவதன் மூலம், தவறுகளில் இருந்து நீயும் மக்களும் மீளமுடியும். இதன் மூலம் உரிமைகளை பெறுவதற்கான அரசியல் பலத்தை, உனக்குள்ளும் எம்மைச் சுற்றியும் ஒருங்கிணைக்க முடியும். இதைத்தான் நீ செய்கின்றாயா என்பதை, உன்னை நீயே கேட்டுப்பார். தமிழ் மக்களுக்காக முதலில் நீ செய்யவேண்டியது, உன்னிடமுள்ள தவறுகளை இனம் காண்பதும், அதை களைவதும் தான்.

 

பி.இரயாகரன்
17.06.2009

 

Last Updated on Thursday, 18 June 2009 18:48