Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் மக்களை கொல்வதை ஆதரிப்பதன் மூலம், 'ஜனநாயகத்தை" மீட்கும் அரசியல்

மக்களை கொல்வதை ஆதரிப்பதன் மூலம், 'ஜனநாயகத்தை" மீட்கும் அரசியல்

  • PDF

புலியல்லாத அரசியல் தளம் இப்படித்தான் உள்ளது. புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" பேசும் அனைவரும் பேரினவாத அரசின் வேலைத்திட்டத்தைக் கொண்டு தம் 'ஜனநாயகத்தை" நக்குகின்றனர்.

 

இப்படி தம் சொந்த மக்களை கொல்ல ஆதரவு தெரிவித்துக்கொண்டு, அவர்களுடன் கூடி நடத்துகின்ற எலும்புத்துண்டு அரசியல் இதுவே. இதற்கு வெளியில் அரசியல் நிகழ்ச்சி நிரல் எதுவும் இவர்களிடம் கிடையாது. இதை மூடிமறைக்க, எத்தனையோ வேஷங்கள். எத்தனையோ அடையாளங்கள். பேரங்கள் பெயரில், பிழைப்புவாத அரசியல்;. மக்களின் உரிமையின் பெயரில், மக்களின் உரிமைகளையே மறுக்கும் மாமா அரசியல். தமிழ் மக்கள் முன் எதையும் வெளிப்படையாக வைக்கவும், அதை விவாதிக்கவும் வக்கற்ற பச்சோந்திக் கூட்டம்.

 

அமைதி, சமாதானம், தீர்வு, மீள் கட்டுமானம், இன ஐக்கியம்…மக்கள் மீட்பு என்று இவர்கள் போடும் வேஷம் எதுவாகினும், அதை மக்கள் முன்வைக்க முடியாத மாமா அரசியல் செய்பவர்கள். இப்படி சமூகத்தின்; முன் மக்களைச் சார்ந்து அரசியல் செய்ய முடியாத சில புல்லுருவிகள், தாம் இரகசியமாக கூடி தமிழ் மக்களுக்கு குழிபறிக்கும் சகுனி வேலையைச் செய்கின்றனர். எப்படி தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்றும், தமிழ் மக்கள் நொந்து போய்க்கிடக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எப்படி அவர்கள் மேல் மா அரைக்கலாம் என்றும், தம் சொந்த  சதியை பேரினவாதிகளுடன் கூடி திட்டமிடுகின்றனர். இதன் மூலம் தாம் எப்படியும் நக்கிப் பிழைக்கலாம் என்ற தம் சொந்த இலட்சியத்துடன், அரசுடன் கூடிக் கூத்தாடுகின்றனர்.

  

இப்படி அண்மையில் பேரினவாத அரசாங்கத்துடன், புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் தமிழ் ஓட்டுண்ணிகள் கூடினர். தமிழ் மக்களை எப்படி ஒடுக்குவது என்ற, தம் சொந்த அரசியல் பேரங்களில் இறங்கினர். புலியை ஒடுக்குவது என்ற பெயரில், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை எப்படி மறுப்பது என்பது, இவர்களின் அரசியல் தேர்வாக இருந்தது.

 

சிங்களப் பேரினவாத அரசுக்கு, டக்கிளஸ் மாமா, ஆனந்தசங்கரி தாத்தா போன்ற பல புதிய 'கறைபடியாத" எட்டப்பர்கள் தேவைப்படுகின்றனர். சிங்கள மேலாதிக்கத்துக்கு சேவைசெய்த பழைய எட்டப்பர்கள், தம் நடத்தையால், தம் செயலால் தமிழ் மக்கள் மத்தியில் அம்பலமானவர்கள். இனியும் இவர்களைக் கொண்டு சிங்கள மேலாதிக்கத்துக்கு ஏற்ப, தமிழ் மக்களை ஏமாற்றி சேவை செய்யவைக்க முடியாது. இதற்கு புதிய முகங்கள், புதிய வேஷதாரிகள் தேவை. இதற்கு அமைய 'கறைபடியாத" கவர்ச்சியான 'ஜனநாயக" எட்டப்பர்கள் தேவைப்படுகின்றனர். தமிழ் மக்களை நன்கு ஏமாற்றக் கூடிய, தமிழ் பிழைப்புவாதிகள் பேரினவாதத்துக்கு தேவைப்படுகின்றது. யுத்தத்தின் பின் தமிழ் மக்களை அமைதியாக ஓடுக்குவதற்கு ஏற்ற, ரெடிமேற் தலைவர்கள் தேவைப்படுகின்றனர். ஒரு ஆப்கான், ஒரு ஈராக் பாணியில், எதற்கும் சோரம் போகக் கூடிய, ரெடிமெற் தமிழ் தலைவர்களை பேரினவாதம் உருவாக்க முனைகின்றது. இப்படி உருவாக்கியவர்களை தமிழர் தலைவர்களாக, தமிழ் மக்கள் சார்பாக பேச்சுவார்த்தை செய்யும் புரோக்கர்களாக பேரினவாதமே முன்னிறுத்த முனைகின்றது.  

 

தனது இனவொடுக்குமுறைக்கு அங்கீகாரம் பெற, தமக்கு இசைவான நக்கித்தின்னும் புதிய முகங்கள் தேவைப்படுகின்றனர். இந்த வகையில் இறக்குமதியாகும் திடீர் புலம்பெயர் அரசியல் பிழைப்புவாத பிரமுகர்கள் உருவாக்கப்படுகின்றனர். இப்படி சந்தையில் அரித்துப் புடைத்து பெற்ற துரோகிகளுடன் கூடிய ஒரு காட்டிக்கொடுக்கும் கூட்டத்தையே, பேரினவாத அரசு நடத்தியது.

 

தலித்தியம், கிழக்கியம், ஜனநாயகம், மனிதவுரிமை, சமாதானம், மக்களை மீட்டல் ..  என்ற ஆளுக்கொரு எலும்பைத் தூக்கிக் கொண்டுதான், இவர்கள் மகிந்தாவுக்கு பின்னால் ஓடினர். தத்தம் மக்கள் சார்பாக தம் பேசுவதாகவும், பேரம் பேசும் அரசியல் செய்வதாகவும் கூறுகின்ற இந்த புல்லுருவிகள், ஓட்டுமொத்த மக்களின் விடுதலைக்கு குழிபறிக்கின்ற சந்தர்ப்பவாதிகளாக அரசியலில் செயல்படுகின்றனர். இவர்கள் கடந்தகாலத்தில் புலம்பெயர் மாற்று அரசியல் தளத்தினுள் புகுந்து, நரிவேலை பார்த்து வந்தவர்கள்.

 

தமது இந்த பேர அரசியலின் பின் தாம் கொண்டுள்ள அரசியல் என்ன என்பதையும், எதை தாம் பேசப் போகின்றோம் என்பதையும், எதைப்பற்றிப் பேசினோம் என்பதையும், தமிழ் மக்களுக்கு சொன்னதில்லை, சொல்லப்போவதில்லை. எல்லாம் மூடிமறைக்கப்பட்ட சதிகள், காட்டிக்கொடுப்புகள், குழிபறிப்புக்கள்; தான், இதன் பின்னுள்ள அரசியல் அடிப்படையாகும். இதற்கு வெளியில் புலியெதிர்ப்புக் கும்பல் எதையும் குரைக்கவில்லை.

 

இந்த துரோகத்தைத்தான் இவர்கள் அரசுடன் சேர்ந்து செய்தனர். அதை அரசு 'புழஎவ. டிசநயமவாசழரபா in னயைடழபரந றiவா ளுசi டுயமெயn வுயஅடைள யடிசழயன " என்ற அறிக்கை மூலம், ஒரு இனத்தின் உரிமையை குழிபறிக்க புலம்பெயர் புல்லுருவிகளுடன் கூடி களத்தில் இறங்கியுள்ளதை அறிவித்துள்ளது. 

   

இப்படி தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுக்க புலியெதிர்ப்பு 'ஜனநாயக" வேஷம் போட்ட புலம்பெயர் புல்லுருவிக் கூட்டம் ஒன்று, இலங்கை அரசுடன் கூடி இன்று,  குழிபறிக்கின்றது. தமிழ் மக்களை கொல்லும் அரசுடன் கூடி, தமிழ் மக்களை மீட்பதைப்பற்றி கதைத்ததாக, தம் குழிபறிப்பு அரசியலைப் பற்றி பிபிசி தமிழ் சேவையில் கூறுகின்றது.

 

புலிகளை கொன்று ஓழிப்பதன்  மூலம் தான் 'ஜனநாயகத்தை" மீட்க முடியும் என்பதே இவர்களின் பாசிச அரசியல். இந்த வகையில் இலங்கை பேரினவாத அரசை ஆதரிக்கின்றனர். பேரினவாத அரசின் இன அழிப்புக்கு உடந்தையாக இருந்தபடி, தமிழ் மக்களை கொன்று புலியை ஒழித்து, தமிழ் மக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கும்படி கோருகின்றனர். இது தான் இவர்கள் முன்வைக்கும் 'ஜனநாயக" அரசியல். இப்படி மக்களைக் கொன்று மீட்கும் 'ஜனநாயக" விடுதலைதான், இவர்கள் கோரும் மக்கள் 'ஜனநாயகம்".

 

பி.இரயாகரன்
03.04.2009

 

Last Updated on Friday, 03 April 2009 08:53