Language Selection

புலி அழியவில்லை, மற்றொன்றாகவே பிரதியிடப்படுகின்றது. இலங்கை எங்கும் கட்டவிழ்த்து விடப்படும் பாசிசமே, புலி அழிப்பின் ஊடாக மேலெழுந்து வருகின்றது. சாதாரணமான பத்திரிகைச் சுதந்திரம் முதல் போலித் தேர்தல்கள் வரை பாசிசக் கும்பலின் அதிகாரத்தின் எல்லைக்குள் அதை முடக்கி வருகின்றது. அனைத்தும் பாசிசக் கும்பல்களின் அதிகாரத்துக்கானதும் இருப்புக்கானதுமாகி, அதுவே நாட்டின் ஜனநாயகமாகின்றது.

 

புலிகளிடம் தமிழ் மக்கள் எதை இழந்து இன்று அரசியல் அனாதைகளானார்களோ, அது இன்று இலங்கை முழுக்க உருவாகின்றது. மக்கள் மக்களுக்காக சிந்திக்கக் கூடாது, இது இன்று ஒரு தேசக் குற்றம். இதுதான் மகிந்த சிந்தனை. ஆம், புலிகள் அழியவில்லை, மற்றொரு புலியாகி, இலங்கை முழுக்கவே அதுவாகின்றது. மகிந்த சிந்தனை என்ன செய்கின்றது, தம்மை யாரும் எதிர்க்காத வண்ணம் அனைத்தையும் கருவறுக்கின்றது. புலியின் பெயரில், இதை செய்கின்றது. யுத்தத்தை வெல்ல இது தடையாக இருப்பதாக கூறி, புலி முத்திரை குத்தியும் தன் பாசிசத்தை சமூகத்தில் திணித்து வருகின்றது

.

தாம் செய்வது மனித விரோத குற்றம் என்பது, நன்கு தெரிந்தே செய்கின்றது. இதன் மேலான விமர்சனத்தை தடுக்கவும், அம்பலமாவதைத் தடுக்கவும், முதலில் சுதந்திரமான ஊடாக ஜனநாயகத்தை அது திட்டமிட்டு நசுக்கி வருகின்றது. படுகொலை அரசியல் முதல் நாட்டை விற்று ஊழல் செய்வது வரை, அவை நாட்டின் நன்மைக்காகத்தான் என்று பிரச்சாரம் செய்யும்படி துப்பாக்கி முனையில் கோருகின்றது. மீறினால் மரணம், இதுதான் உன் கதி என்பதை வெளிப்படையாக, அது செய்தே காட்டுகின்றது. கருத்துச்சுதந்திரத்தின் குரல் வளையை நசுக்க, அனைத்தையும் புலியாக்கி, புலி முத்திரை குத்தியே தன் வெறியாட்டத்தைப் ஆடுகின்றது. யுத்த சூழலில் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்க முடியாது என்று பாசிச முழக்கமிட்டு, மனிதகுலம் மீது எகிறிப் பாய்கின்றது. 

 

இவர்கள் தாமே மக்களை அடக்கியாள உருவாக்கிய நாட்டின் சட்டம், நீதி என்று அனைத்தையும் மீறும் இவர்கள், இரகசியப் படுகொலைகள் முதல் நாட்டில் உயிருள்ள மனித உணர்வுகள் எல்லாவற்றையும் பொசுக்கி வருகின்றனர். அனைத்தையும் சட்டத்துக்கு புறம்பாக, நீதிக்கு புறம்பாக, தான் கட்டிவைத்துள்ள மிகப்பெரிய பயங்கரவாத இயந்திரத்தைக் கொண்டு, இதை கட்டவிழ்த்து விட்டுள்ளது. நாடு புலியழிப்பின் பெயரில், ஒரு இருண்ட காலத்தினுள் நுழைகின்றது. 

 

தமிழ்மக்களை புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதாகக் கூறிக்கொண்டு, (புலிப்) பயங்கரவாதத்தை இலங்கை முழுக்க நிறுவிவருகின்றது.

 

இதன் முதற்படி, சாதாரண ஜனநாயகத்தை மறுக்கின்றது. பயங்கரவாத ஒழிப்பில், இதுதான் அச்சாணி என்கின்றது. புலிகள் இதையே தேசியத்தை அடைய அச்சாணி என்றனர். இப்படி ஓரே விடையத்தை, இரண்டு தரப்பும், தத்தம் பாசிசத்தை நிறுவ மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்தன, மறுக்கின்றன.

 

இதன் முதற்படியாக தம்மையும், தமது யுத்த அழித்தொழிப்பு பயங்கரவாதத்தையும் பற்றிய செய்திகளை பிரசுரிக்கக் கூடாது என்கின்றது. இதற்குள் நாட்டை விற்கும் ஊழல்கள் அம்பலப்படுத்தக் கூடாது என்கின்றது. இன அழிப்பை, இனச் சுத்திகரிப்பை இட்டு யாரும் எதுவும் பேசக்கூடாது என்கின்றது. இதுவோ புலி ஒழிப்பிற்கு உட்பட்டது என்கின்றது. இதை மீறினால் புலி முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர் அல்லது சிறைகளில் தள்;ளப்படுகின்றனர்.


 
இதற்கு மாறாக வாழ்வது என்றால், தாம் செய்யும் இனஅழிப்பு யுத்தத்தை ஆதரிக்கக் கோருகின்றது. இதற்கு மாறான மாற்றுக் கருத்துகள் அனைத்தும், இன்று படிப்படியாக ஒடுக்கப்படுகின்றது. இப்படி முதலில் தமிழரின் மாற்றுக்கருத்து தளம் நலமடிக்கப்படுகின்றது. அனைத்தையும் புலியாக முத்திரை குத்தியே, நசுக்கப்படுகின்றது. ஒரு அசாதாரணமான பாசிச சூழல், பாசிச வெறியுடன் கடித்து குதறுகின்றது. முன்பு புலிகள் முன் எது நிலவியதோ, அதே நிலை. ஆனால் இன்று முழு இலங்கையிலும், அரசுக்கு முகம் கொடுக்கின்ற மனித அவலம்.

 

சாதாரண இந்தியாவில் இருந்து வரும் தமிழ்மொழிப் பத்திரிகை இறக்குமதியாளர்களைக் கூட,  அது விட்டுவைக்கவில்லை. அதன் விநியோகஸ்;தர்கள் என்று அனைவரும் கைது செய்யப்பட்டு, சிறைகளில் தள்ளப்படுகின்றனர். இப்படி தமிழ் இனம், அதன் மொழி, அதன் உரிமை எல்லாம் மிரட்டப்பட்டு, அடிமைப்படுத்தப்படுகின்றது. பாசிட்டுக்கு ஏற்ற கொலைவெறி பிடித்த கொலைகாரத் தம்பி கோத்தபாய, ஒரு தலைமுறையல்ல பத்து தலைமுறைக்கு இன உரிமையை கேட்காத வண்ணம், தமிழன் அடக்கப்படுவான் என்று வெளிப்படையாக கொக்கரிக்கின்றான். புலியின் பெயரால், தமிழன் ஒடுக்கப்படுகின்றான்;. இன அழிப்புக்கும், இனச் சுத்திகரிப்புக்கும் உள்ளாக்கப்படுகின்றான்.  

 

இதற்கு இலங்கையின் எந்த சட்ட நடைமுறைக்கும் உட்படாத ஒரு வெறித்தனத்துடன், சட்டத்தை வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். இதன் மேல் எந்த நீதி விசாரணையும் கிடையாது. விசாரணை செய்யவேண்டியவன், இங்கு இனஅழிப்பையும் இனச் சுத்திகரிப்பையும் செய்பவனாக உள்ளான். இப்படி தமிழினம் மேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள பேரினவாத இனஅழிப்பு, இன்று இலங்கை தளுவிய பாசிசமாக உருவெடுத்து நிற்கின்றது. தமிழ் இனத்தை மட்டுமல்ல, இலங்கையின் முழு மக்களையும் தன் பாசிச பிடிக்குள் ஒடுக்கத் தொடங்கியுள்ளது. புலிகளைப் போல், தன் இனஅழிப்பு வெற்றிகளைக் காட்டி, தன் பாசிசத்தை நியாயப்படுத்தி முழு மக்கள் மேல் இதை இறக்குகின்றது. இதன் மூலம் ஒரு அடிமை நிலைக்குள், முழு மக்களையும் இட்டுச்செல்லுகின்றனர்.

 

இன்று இதை இனம் கண்டு போராடுவதும், இலங்கையின்  முழு மக்களுடனும் ஜக்கியப்படுவது அவசியமானது. அதேநேரம் மேலெழுந்து வரும் பாசிசத்துக்கு எதிராக போராடுவதே, அவசரமானதும் அவசியமான இன்றைய தேவையாகும்.

 

பி.இரயாகரன்
17.03.2009
  

 

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ