Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பொய்களின் மேல் கட்டப்பட்ட பெர்லின் மதில்

பொய்களின் மேல் கட்டப்பட்ட பெர்லின் மதில்

  • PDF

ஜெர்மன் ஜனநாயக குடியரசில்(Deutsche Demokratische Republik, சுருக்கமாக: DDR), மேற்கு பெர்லினை சுற்றிக்கட்டப்பட்ட மதில்களுக்கு அப்பால், நாற்பதாண்டுகள் சோஷலிசத்தை கட்டியமைக்கும் பரிசோதனை நடந்து கொண்டிருந்தது. முன்னாள் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியின் பிரசைகள் சிலர், கடந்த காலம் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

இதனை அறிந்து கொள்ள நெதர்லாந்து நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிக்கும் குழுவொன்று(VPRO), நேரடி சாட்சியங்களை கேட்டு ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. பெர்லின் மதில் பற்றிய கேள்விகளுடன் ஆரம்பிக்கும், இந்த விவரண சித்திரத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கும் பதில்கள் (கம்யூனிச சர்வாதிகார கொடுங்கோன்மை) கிடைக்காதது, அவர்களுக்கு ஏமாற்றத்தை தருகின்றது. இந்தப் படத்தில் மூன்று முக்கிய பிரமுகர்கள் நேர் காணப்பட்டுள்ளனர்.
1. முன்னாள் உளவுத்துறை நிறுவனமான "ஸ்டாசி", Ministerium für Staatssicherheit("தேசப்பாதுகாப்பிற்கான அமைச்சு" சுருக்கமாக: Stasi), அதிகாரி Hagen Koch, பெர்லின் மதில் கட்டுவதற்கு திட்டமிடும் பணியை மேற்கொண்டவர். ஜெர்மனி ஒன்றான போது, சோஷலிசத்தை நிராகரித்தவர்.
2. "புதிய சோஷலிச மனிதனை" உருவாக்கும் சலனப்படம் ஒன்றை தயாரிக்கும் பணியில் இருந்த திரைப்பட இயக்குனர் Winfried Junge . உலகிலேயே மிகவும் நீளமான ஆவணப்படமான "The Children of Golzow" தயாரித்தவர். இன்றும் சோஷலிச நம்பிக்கை கொண்டவர்.
3. Gudrun Klitzke , அந்த ஆவணப்படம் தயாரிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட Golzow நகர பாடசாலையின் முதன்மை மாணவி.

நெதர்லாந்து படப்பிடிப்புக் குழுவின் நோக்கம், மனிதாபிமானமற்ற பெர்லின் மதிலின் (மேற்குலகில் "வெட்கத்தின் சின்னம்" என அழைக்கப்பட்டது.) இருண்டபக்கத்தை வெளிக்கொணர்வது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாம் உலகப்போர் முடிந்து, ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு உருவாகி, சுமார் பத்தாண்டுகளுக்கு பின்னர் 1961 ல் தான் பெர்லின் மதில் கட்டப்பட்டது. அதுவரை மேற்கு,கிழக்கு பெர்லின்களுக்கு இடையில் சுதந்திரமான போக்குவரத்து இருந்தது. அதனை இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடும் இயக்குனர் Junge, தானே மேற்கு பெர்லின் சென்று வந்ததாகவும், ஆனால் கொள்கைரீதியாக கிழக்கு ஜெர்மனியுடன் ஒத்துப் போனதால் அங்கேயே தங்கி விட்டதாக தெரிவிக்கிறார். மேலும் அமெரிக்க-ஆங்கிலேய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு பெர்லினை, கிழக்கு ஜெர்மனி உரிமை கோரியதாலும், அது நிறைவேறாததால் மதில் சுவர் கட்டும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த வரலாற்று உண்மையை பலர் வசதியாக மறந்து விடுகின்றனர்.

"கிழக்கு பெர்லினில் பொருட்களின் விலை மலிவாக இருந்ததால், மேற்கு பெர்லின் மக்கள் பெருமளவு வந்து வாங்கிச் சென்றதாகவும், கிழக்கு பெர்லின் பொருளாதாரத்தை காப்பாற்றவே மதில் கட்டப்பட்டதாக", அங்கிருந்த மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததை பிரதிபலிக்கிறார், இந்த ஆவணப்படத்தில் சாட்சியமளிக்கும் Gudrun. மேற்கு பெர்லின் வழியாக உளவாளிகள் ஊடுருவதை தடுப்பதற்கே மதில் கட்டியதாக, கிழக்கு ஜெர்மன் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஆனால் இது போன்ற மறுபக்க வாதத்திற்கு "சுதந்திர மேற்கு ஐரோப்பாவில்" ஒரு போதும் இடம் இருந்ததில்லை. இப்போதும் சரித்திர பாட நூல்களில் இடம்பெற்ற வாசகங்கள்: "கிழக்கு ஜெர்மனியில் மக்களை கொடுமைப்படுத்தும் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. திறந்தவெளிச் சிறைக்குள் அகப்பட்ட மக்கள், சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்காக மேற்கு ஜெர்மனி நோக்கி பெருமளவில் வெளியேறினர். அதனை தடுத்து நிறுத்தும் பொருட்டு, பெர்லின் மதில் கட்டப்பட்டது. மீறிச் சென்ற அகதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்."

மதிலை கட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட Hagen Koch சாட்சியத்தின் படி, கிழக்கு பெர்லின் நகர மக்கள் வெளியேற மேற்கு-பெர்லின் தீயணைப்புப் படை உதவியுள்ளது. மதில் கட்டப்பட்ட போது, மேற்கு பெர்லின் பகுதிகளில் இடையூறு இருந்தது. காவல் கடமையில் இருந்த கிழக்கு-பெர்லின் வீரர்களை, தப்பியோடும் அகதிகளும், மேற்கு-பெர்லின் காவலர்களும் சுட்டதில், 25 பேரளவில் கொல்லப்பட்டனர். பெர்லின் மதில் நான்கு கட்டங்களாக, பல அடுக்கு பாதுகாப்பு அரண்களுடன் கட்டப்பட்டிருந்தாலும், நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்படவில்லை. அதற்கு காரணம் நெருக்கமான நகரப்பகுதி என்பதால். ஆனால் மேற்கு பெர்லின் நிர்வாகம் தனது பக்கத்தில் கண்ணி வெடிகள் புதைத்து வைத்திருந்தது.

இவற்றை சொன்ன அந்த ஸ்டாசி அதிகாரி, தற்போது கம்யூனிசத்தை தவறென்று வாதிடுபவர். அதற்கு அவர் கூறும் காரணம்: "மனிதர்க்கிடையே ஏற்றத்தாழ்வற்ற, வறுமையற்ற, யுத்தமற்ற சமுதாயத்தை உருவாக்குவதென்ற கொள்கை வெறும் கனவு. மட்டுமே. நடைமுறையில் சாத்தியமற்றது. பல்வேறு வேறுபாடுகளை இயற்கையாக கொண்ட மனித குலத்தை எப்படி ஒன்றுபடுத்தலாம்?" அதேநேரம் நெதர்லாந்து படப்பிடிப்பாளர்கள் அறிய முயன்ற, "கொடுமைக்கார ஸ்டாசி" பற்றி அந்த முன்னாள் அதிகாரி கருத்து எதுவும் கூற மறுக்கிறார். "அப்போது சர்வாதிகாரம் இருந்தது தான். ஆனால் ஹிட்லரினதைப் போல மோசமாக இருக்கவில்லை. வெளியே தெரியாத அளவிற்கு மிக நுணுக்கமானது. (மேற்குலக நாடுகளிலும் அப்படித்தான், ஐயா) ஸ்டாசியில் வேலை பார்த்தவர்கள், அவரவருக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை மட்டுமே செய்தனர். மற்றவர் என்ன செய்கிறார் என்று எனக்குத் தெரியாது. அதனால் தான் அந்த அமைப்பு கட்டுக் குலையாமல் இருந்தது."

கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில், போலந்து எல்லைக்கு அருகே அமைந்துள்ளது Golzow என்ற சிறிய நகரம். ஒரு காலத்தில், அயலில் உள்ள கிராமங்களின் விவசாய நிலங்களை எல்லாம் இணைத்து, ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய கூட்டுறவுப்பண்ணை உருவாகியது. செழிப்பான தரை, சிறந்த விவசாய செயல்முறை, இவற்றின் காரணமாக அதிக விளைச்சலையும், லாபத்தையும் கொடுத்த கூட்டுறவுப்பண்ணை, Golzow மக்களை வாழ்க்கை வசதிகை மேம்படுத்தியது. இன்று? அது ஒரு கைவிடப்பட்ட நகரம், பெரும்பாலும் முதியோர்கள் மட்டும் அங்கே தங்கிவிட, இளைஞர்கள் வேலை தேடி வெளியேறுகின்றனர். Golzow மக்கள் ஒரு காலத்தில் தம்மை சீரும் சிறப்புமாக வாழவைத்த சோஷலிச பொருளாதாரம், மீண்டும் வரவேண்டும் என ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இங்கேயாவது, எவராவது கம்யூனிச சர்வாதிகாரம் பேச மாட்டார்களா? என எதிர்பார்த்த நெதர்லாந்தின் ஆவணப்பட தயாரிப்பாளருக்கு ஏமாற்றம். என்ன காரணம்? என்ற கேள்விக்கு எதோ ஒரு திருப்தியான பதிலை பெற்றுக் கொள்கிறார். "பலரை அங்கவீனர்களாக்கிய,போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைதியான வாழ்க்கையை தெரிவு செய்தனர்." ஆனால் பேட்டி கொடுக்கும் அந்த சாதாரண விவசாயியே விளக்கமளிக்கிறார்: "எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. அதிருப்தியாளர்கள் எங்கேயும் இருப்பார்கள்." திரைப்பட தயாரிப்பாளர் Winfried Junge அதனை பிரதிபலிக்கிறார்: "கிழக்கு ஜெர்மனியில் நடந்தது ஒரு சோஷலிச பரிசோதனை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்வோமே. ஆரம்ப முதலே மேற்கு ஜெர்மனி, சோஷலிச கட்டுமானத்தை உடைப்பதிலேயே குறியாக இருந்தது."


Golzow நகர ஆரம்ப பாடசாலையில் ஆறு வயதில் சேரும் குழந்தைகள், அவர்களது மாணவப்பருவம், வகுப்பில் வெளிப்படும் திறமைகள், பிற்காலத்தில் அந்த மாணவர்கள் எந்தெந்த தொழில்களை செய்கின்றனர், இன்னபிறவற்றை பொறுமையாக சுமார் முப்பது ஆண்டு காலம் கடுமையாக உழைத்து, "The Children of Golzow" என்ற சலனப் படமாக தயாரித்திருக்கிறார் Winfred Junge. இந்த ஆவணப்படத்தில் வரும் திறமையான மாணவியான Gudrun இறுதியில் நகரசபை மேயராக தெரிவாகிறார்.

 

ஆவணப்படத்தில் முதன்மை பாததிரமான Gudrun னின் கால் நூற்றாண்டு வரலாறு, சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. உலகின் நீளமான வரலாற்றை ஆவணப்படுத்திய ஜெர்மன் மொழி பேசும் குறுந்தகடுகளை(DVD) , நீங்கள் இங்கே: Die Kinder von Golzow பெற்றுக் கொள்ளலாம். அன்றைய கிழக்கு ஜெர்மனியின் சாதாரண பிரசைகளின் வாழ்க்கை முறையையும், அவர்களை சுற்றியிருந்த அரசியல் சூழலையும் புரிந்து கொள்ள இந்த ஆவணப்படம் உதவும்.

"1961-DDR" என்ற பெர்லின் மதில் பற்றிய, (டச்சு மொழி) ஆவணப்படத்தை இங்கேயுள்ள தொடுப்பில் பார்வையிடலாம்.

Last Updated on Tuesday, 10 February 2009 21:12