Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் டைஃபியின் (DYFI) குத்தாட்டப் புரட்சி !

டைஃபியின் (DYFI) குத்தாட்டப் புரட்சி !

  • PDF

“அரியலூர்  பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முதல்முறையாக… தமிழர் திருநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாபெரும் நடனப் போட்டி…” என சன் டி.வி ரேஞ்சுக்கு நம்மைச் சுண்டியிழுத்தது அந்த விளம்பரம்.

அதுமட்டுமா? ஒரு மூலையில் பகத்சிங்கின் படத்தை வேறு போட்டிருந்தார்கள், அந்த பிரசுரத்தில். அட, வேறு யாருமில்லீங்க! நம்ம டைஃபி (DYFI- CPIM கட்சியின் இளைஞர் அமைப்பு) பங்காளி(லி)ப் பசங்கதான் இதுக்கெல்லாம் ஏற்பாடாம்.

வந்த ஆத்திரத்தை திட்டி தீர்த்துரலாமுன்னு டைஃபி மாவட்ட செயலரு ஆர்.செல்லபாண்டியனுக்கு போன் போட்டு “டைஃபி சார்பா என்ன எழவ வேணாலும் நடத்திக்கோங்க. சம்பந்தமேயில்லாம எதுக்கு பகத்சிங் படத்த போட்டுத் தொலைக்கிறீங்க”ன்னு கேட்டா…

“எல்லாம் நம்ம தலைவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தத்தான் தோழரே” என்றிழுத்து, “முதலாளித்துவப் பத்திரிக்கைகள் நம்ம அமைப்பை விளம்பரப்படுத்த மாட்டேன்கிறான் தோழர். இப்ப பாருங்க மாவட்ட செய்தியில் நம்ம அமைப்பு செய்தியை(!) எவ்வளவு பெரிசா போட்டிருக்கான் பார்த்தீங்களா?” என நிறுத்தி; “கூடவே நிகழ்ச்சிக்கு இடையிடையே நம்ம கருத்தையும் விடப் போகிறோம் தோழரே!” என சீரியசாக(!) பேசியதைக் கேட்ட எம்மால் மேல்வாயால் சிரிக்க முடியாமல் போய்விட்டது.

அது கிடக்கட்டும்; அப்படி என்னதான் கருத்தை ஆட்டத்துக்கு நடுவே அவுத்துவுடப் போகிறார்கள் என பார்த்து விடலாம் என மனதை ஆறுதல்படுத்திக் கொண்டு கிளம்பினோம் நிகழ்ச்சிக்கு.

“ஆட்டமா… சதிராட்டமா”… தொடங்கி, “என் செல்லப் பேரு ஆப்பிள்; என்ன சைசா கடிச்சிக்கோ…” வரையிலான பலான பலான பாடல்களுக்கு பள்ளிச் சிறுமிகளின் தொப்புளில் ஜிகினா தடவி ஆடவிட்டு சன் டி.வி.யையே விஞ்சுமளவுக்கு ரிக்கார்டு டான்ஸ் நடத்தி “ரிக்கார்டு” செய்து விட்டனர்.

மைக்கைப் பிடித்து மேடையேறினாலே விசிலடித்து, கூச்சல் போட்டு கீழே இறக்கி விட தயாராயிருந்தது வாலிபக் கூட்டம்! இடையிடையே கருத்தை அவிழ்த்து விடும் முயற்சி புஸ்வாணமாகி விட்டது!

சி.பி.எம். கட்சியின் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்லதுரை பெரம்பலூரிலிருந்து பஸ் புடிச்சி வந்திருப்பதாகவும்  இங்கே பேசவிருப்பதாகவும் கேள்விப்பட்டு அவர் பேச்சுக்காக காத்திருந்தோம்.

நோட்டீஸ் படித்தும், போனில் கேட்டும், நேரில் பார்த்தும் நம்மால் விளங்கிக் கொள்ளாததை நேர்மையாய் சொன்னார் அவர்.

“இங்கு நடனமாடிய இளைஞர் இளைஞிகள் அனைவரும் சிம்பு, தனுஷ், அஜித், விஜய், நயன்தாராவை போலவே நடனமாடினார்கள். இது, மன இறுக்கத்தை நீக்கி மகிழ்ச்சியளிக்கிறது. (இல்லாமலா பின்ன!) நீங்கள் எல்லாம் ‘அசத்தப் போவது யாரு’ போன்ற நிகழ்ச்சிக ளுக்குச் செல்லவேண்டும். சன் டி.வி. போன்ற டி.வி.களும் இளம் இயக்குனர்களும் இவர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனப் பின்னணியில் பலத்த கரவொலியும் விசிலும் காதைப் பிளக்க பேசி அமர்ந்தார் அவர்!

நாட்டை இருள் கவ்விய சூழலில் இன்ப களியாட்டம் போடும் இவர்களிடம் முடிவாய் இனி சொல்ல என்ன இருக்கிறது? முகத்தில் காறி உமிழ்வதைத் தவிர!

-  பு.ஜ. செய்தியாளர், செயங்கொண்டம்.

புதிய ஜனநாயகம், பிப்ரவரி’ 09

தொடர்புடைய இடுகைகள்

‘கோலி’வுட்டை வளைக்க ‘போலி’ கம்யூனிஸ்டுகள் சதி!

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

அடிவாங்கினால் பொன்னாடை! இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive!!

அமர்நாத் - சோம்நாத்

Last Updated on Monday, 09 February 2009 07:02