Language Selection

பலருக்கும் புரியாத புதிர். அங்கு ஏதாவது அற்புதம் நடக்கும் என்று நம்பும் எல்லையில் கனவுகள்;. ஆயுதங்கள் முதல் விமானம் வரை கொண்டுள்ள புலிகள், மூச்சு விடமுடியாத பாசிச நிர்வாகத்தை அச்சாகக் கொண்டுள்ள புலிகள், இன்று என்ன செய்கின்றனர் எனத் தெரியாது பலர் புலம்புகின்றனர். இந்த எல்லையில் ஆய்வுகள், அறிக்கைகள் வேறு. 

1980-1983 இல் போராட்டம் தொடங்கிய போது, 'சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்ற பழமொழியை எமது தந்தைமாரும் ஊரில் வயதானவர்களும் கூறினர். ஆனால் ஆயுதத்தை வழிபட்ட எம் தலைமுறை, அதை எள்ளி நகையாடியாது, இழிவாடியது. அதுவோ இன்று எம் இனத்தையே அழித்துவிட்டது. ஆக்கிரமிப்பு யுத்தம், தற்காப்பு யுத்தம் என்று, என்னதான் தொப்பியை புரட்டிப் போட்டாலும், சொந்த மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியவர்களின் அழிவு அரங்கேறுகின்றது. அவர்கள் தம் அழிவின் போது, மக்களை யுத்தமுனையில் திணித்து கொன்றுவிடுகின்ற அதே அரசியல் வக்கிரமும் அரங்கேறுகின்றது.  

 

கடந்த 30 வருடமாக மணலால் கட்டிய கோட்டையில், ஆயுதத்தைச் செருகி அதையே தமது வழிபாட்டுப் பொருளாக்கினர். எல்லாம் அவன் செயலே என்று நம்புமளவும் வீங்கியவர்கள், செயல்கள் செய்கைகள் மூலம் கற்பனையில் ஒரு விம்பத்தையே உருவாக்கினர். புலித்தேசியம் பாசிசமாக, மக்களின் சுயநிர்ணய உரிமையோ உரிமை மறுப்பாக்கியது. எதுவும் தம்மை மீறியில்லை என்ற அளவுக்கு, முழுச் சமூகத்தையும் அச்சமூட்டி பீதியடைய வைத்தவர்கள், மக்களை செயலற்றவர்களாக்கினர். இப்படி தம்மைத் தாம் மக்களில் இருந்து ஒதுக்கி, தம்மைத்தாம் தோற்கடித்துக் கொண்டனர்.    

 

மக்களையிட்டு அலட்சியத்துடன், மக்கள் அரசியலை திண்ணைப் பேச்சாக எள்ளி நகையாடினர். இன்று அந்த மக்களை தம் பணயப் பொருளாக கொண்டு, புலி தன்னை பாதுகாக்கின்ற பாசிச வக்கிரம் அரங்கேறுகின்றது. புலிகள் தமது சொந்த பாதுகாப்பிற்காக மக்களை ஒரு கேடயமாக்கி விட்டனர். மக்களுக்கான போராட்டத்தை மறுத்தவர்கள், இன்று தம்மை பாதுகாக்க மக்களையே பயன்படுத்துகின்ற கேவலமான அரசியல். எங்கும் யுத்த கோரங்கள்;. அப்பாவிகள் இதில் சிக்கி அழிகிற போது எழும் கதறல்கள்.   

 

இதனால் தினம் தினம் மரணம். உணர்வை உலுக்கும் மரணங்கள். உற்றார், உறவினர், நண்பர்கள், சுற்றத்தார் என்று, எம் மக்கள் பேரினவாதத்தின் கோரமான ஆக்கிரமிப்பு யுத்தத்தில், புலிகளால் பலியிடப்படுகின்றனர். யுத்த முனையில் யுத்தம் செய்ய வைக்கப்பட்ட அப்பாவிகள் முதல் அஞ்சி நடுங்கி ஓடும் எம்மின மக்கள் கொல்லப்படும் அவலம்.

 

உயிர் வாழக் கூட உரிமை கிடையாது

 

சண்டை செய் அல்லது சண்டையில் சிக்கி சா. இது புலிகளின் தத்துவம்;. பேரினவாத தத்துவமோ சரணடை அல்லது தப்பியோடிச் சா. இப்படி உயிர்வாழவே அனுமதியற்ற, மனிதாபிமானமற்ற இராணுவங்கள், மக்களை தம் யுத்தத்தில் பலியிடுகின்றன.   

 

புலிப் பூசாரிகள் மக்களின் கழுத்தில் கயிற்றைப் போட்டு இழுத்துப் பிடிக்க, பேரினவாதம் வெட்டுகின்றது. ஒரு வேள்வி நடக்கின்றது. பலி ஆடுகளாக மக்கள் சிக்கிவிட்ட நிலையில், இவை புலித் தேசியத்;தின் பெயரில் அரங்கேறுகின்றது.

 

அரசியலை வெறுத்தவர்கள், எல்லாமே ஆயுதம் என்றவர்கள், யுத்த வெறியை பிரச்சாரம் செய்தவர்கள், ஒரு யுத்தம் மூலம் தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்றவர்கள், தம் எண்ணிக்கையை காட்டியவர்கள், எதையெல்லாமோ தம் பலம் என்றும் தம்மை அசைக்க முடியாது என்றவர்கள், இன்று இவை எல்லாம் இருந்தும் என்ன, தோல்வி. தம்மை கூட அவர்கள் பாதுகாக்க முடியாது போனார்கள். இன்று அவர்கள் தம்மை பாதுகாக்க, அப்பாவி மக்களை தம் பணயப் பொருளாக்கியுள்ள அவலம். இங்கு ஆயுதங்கள் உதவவில்லை. படைபலம் உதவவில்லை. பணம் உதவவில்லை.

 

மக்களை வெறுத்து அரசியல் செய்தவர்கள், மக்களை போராட்டம் மீதே வெறுப்படைய வைத்தவர்கள், இன்று தம் சொந்த பாதுகாப்புக்கு அந்த மக்களையே பணயம் வைத்துள்ளனர். மக்களை நேசிக்கவும், அவர்களிள் நலனை உயர்த்தியும், ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்த மறுத்தவர்கள், இன்று அந்த மக்களை வருத்தி அழிக்கின்றனர். மக்களால் எதைச் செய்யமுடியம் என்று கேலி செய்தவர்கள், இன்று தம் பாதுகாப்புக்கு மக்களை பணயம் வைத்து, அவர்களை பலியிட வைக்கின்ற நிலைமை மனிதத்தையே அதிரவைக்கின்றது.

 

ஆயுதங்கள், ஆட்பலம், விமானம், கடற்படை, நிர்வாகம் என்று வீம்பாக வீராப்பு பேசியவர்கள், இன்று எதுவும் செய்ய முடியாது திணறுகின்றனர். மக்கள் தம்மைவிட்டு தப்பியோடினால், தம் கதி அதோ கதி என்று எண்ணும் அளவுக்கு புலிகள் உணருகின்றமையால் தான், அவர்கள் தம்மைப் பாதுகாக்க மக்களை பணயம் வைத்துள்ளனர்.

 

தம்மை அழிப்பதானால் மக்களை பெருமளவில் கொல்ல வேண்டும் என்ற நிலைக்குள், யுத்தம் சுருங்கிவிட்டது. எண்ணங்கள், சிந்தனைகள், நடைமுறைகள் எல்லாம், இப்படியே இதற்குள்ளாகிவிட்டது. அரசியல் பேசுவதையும், மக்கள் போராட்டத்தையும் எள்ளி நகையாடியவர்கள், இன்று தம் இலக்கற்ற எதிர்காலத்தை பற்றிய கற்பனையில் நம்பிக்கை கொள்கின்றனர். இதற்காக தினம்தினம் பேரினவாத கோரப்பசிக்கு மக்களை பலியிடுகின்றனர். 

          

பி;.இரயாகரன்
22.01.2009

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ