Wed04172024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

பௌத்த சிங்கள பேரினவாத அரசின் கொலைவெறியின் 10வது ஆண்டு

  • PDF

ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு இன்று 10 ஆண்டுகள் கடந்து விட்டது. 1993 ஆடி 23 இல் பௌத்த சிங்கள இனவெறி அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனக்கலவரமானது இன்று தமிழ் தேசிய இனத்தை அழித்துவிடுமளவுக்கு வளர்ந்துள்ளது. அன்று சில ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், பல கோடி சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும், தமிழ் தேசிய இனத்தின் பொருளாதாரத்தை சிதைக்க முனைந்தது. மனித நாகரிகமே வெட்கித் தலைகுனியும் வண்ணம் ஸ்ரீலங்கா அரச வதைமுகாமில் 53 தமிழ் சிறைக ;கைதிகளை சித்திரவதை செய்து கண்கள் பிடுங்கப்பட்டும் வெட்டியும் படுகொலை செய்து தமிழ் தேசியத்தை அடக்க முயன்றது.

 

1983 களில் தமிழ் தேசிய இனத்தின் மீது நடாத்தப்பட்ட மிருகத்தனமான அடக்குமுறையைத் தொடர்ந்து தமிழ் தேசிய எழுச்சியானது வீறு கொண்டது. சிங்கள தேசியவெறி தமிழ்மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான இன அழிப்பை தொடங்கியதை அடுத்து பல அமைப்புக்கள்; உருவாகின. அதில் இணைந்து கொள்ள பல ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள் மக்கள் ஆதரவுடன் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக தம்மையும் இணைத்துக்கொண்டனர்.

 

இவ்விளைஞர்களின் தியாகங்களும், உணர்வுகளும் இன்று சிதைக்கப்பட்டு, புலிகளின் தேசிய வெறியாக மாறி அது பாசிசமாகிச் சீரழிந்துள்ளது. அன்றும் இன்றும் போராடப் புறப்படும் ஒவ்வொரு இளைஞர்களின் தியாகத்தையும் ஏகாதிபத்திய நலன்களைக் காப்பாற்ற பயன்படுத்துகின்றனர். 1983 இன் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியில் உந்தப்பட்ட தியாகிகளின் உட்படுகொலைகள், மாற்று இயக்க அழிப்புகள், கிராமங்களில் இருந்த நியாய விரும்பிகள் மற்றும் ஜனநாயகவாதிகள் கொல்லப்பட்டும், மக்களின் தேசிய உணர்வுகள் துப்பாக்கி முனையில் அடக்கப்படுகின்றது.

 

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினை சிங்கள இனவெறி அரசு, தமிழ் துரோகிகளை அரவணைத்து, அவர்களை கைக்கூலிகளாகப் பயன்படுத்துவதன் மூலம் சிதைத்து வருகிறது. தமிழ் துரோகக் குழுக்கள் இந்தியா, இலங்கை என்று நக்கிப்பிழைக்கும் தொழிலை சிறப்பாகச ;செய்தபடி மக்களின் முதுகில் குத்தி வருகின்றனர். தமிழ் மக்களின் தேசியவிடுதலையை கொச்சைப்படுத்தி வரும் இந்தத் துரோகிகளை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.

 

புலிகள் முஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதுடன் அவர்களின் பராம்பரிய பிரதேசங்களையும் அபகரித்து. அவர்களின் உடமைகளை கொள்ளையடித்ததன் மூலமும் தமிழ்மக்களின் தேசிய விடுதலை போராட்டத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

 

இன்று கூர்மையடைந்துள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடு தமிழ் மக்களின் தேசிய விடுதலையை கோரி நிற்கின்றது. அதை புலிகள் துப்பாக்கி முனையில் அடக்கி, ஒடுக்கி தமது சொந்த நலன்களின் அடிப்படையிலான நோக்கத்துடன் அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகளுக்கு பாய்விரித்துள்ளதுடன், சிங்கள இனவெறி அரசுடன் நடாத்தும் பேச்சுவார்த்தைகளை தமிழ் மக்கள் முன் உத்தியோக பூர்வமாக வெளியிட மறுப்பதுடன், இது தொடர்பாக கேள்வி எழுப்புவோரையும் அழித்து வருகின்றனர்.

 

மக்களே!

1983 இல் சிங்கள இனவெறி அரசின் இன அழிப்பு நடவடிக்கையானது தீவிரப்படுத்தப்பட்டு இன்று மொத்த சமூகத்தையுமே சீரழித்துவிட முனையும் இன்றைய நிலையில், தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுக்க முனையும் புலிகளின் கைகளிலிருந்து, மக்களின் கைகளுக்கு போராட்டத்தை மாற்றுவதன் தேவை இன்று எம் எல்லோர் முன்நிலையிலும் உள்ளது.


பௌத்த சிங்கள இனவெறி அரசே:

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைக் கொடு!

பொருளாதாரத்தடையை நீக்கு!

யுத்தத்தை நிறுத்து!

 

புலிகளே:

தேசியவிடுதலையை காட்டிக்கொடுக்காதே!

மக்களுக்கு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை கொடு!

சமரசங்களை நிறுத்து!

 

தமிழ் துரோகிகளே:

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு துரோகம் செய்யாதே!

மககள் மீதான படுகொலை, சித்திரவதைகளை நிறுத்து!

அரசுடன் கூடிக்குலாவுவதை நிறுத்து!

 

மூன்றாவது பாதை-

23-07-1993