Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் மானம் கெட்ட அரசியல் பிழைப்பு

மானம் கெட்ட அரசியல் பிழைப்பு

  • PDF

கருத்தை கருத்தாக எதிர்கொள்ளும் புலியிசமும் கிடையாது. புலியெதிர்ப்பிசமும் கிடையாது. கருத்தைச் சொல்பவனைக் கொல்வது, விலைக்கு வாங்குவது, செயலற்ற வகையில் முடக்குவது, முடிந்தவரை மிரட்டுவது, இல்லாதுபோனால் பல குறுக்கு வழிகளில் அச்செயல்பாட்டை இல்லாததாக்குவது.

இது மட்டும் தான் புலிப் பாசிசமாகட்டும், புலியெதிர்ப்பு ஜனநாயகமாகட்டும், அவர்களுக்கு தெரிந்த ஒரேயொரு அரசியல் வழியாகும். விவாதிக்கும், விமர்சிக்கும் தகுதி இந்த மானம் கெட்ட கும்பலுக்கு கிடையாது.

 

சுவிஸ்சில் இருந்து வெளிவரும் ஈரஅனல் இணைய ஆசிரியரின் வீடு புகுந்து நடத்திய சூறையாடல் இதை மறுபடியும் நிறுவியுள்ளது. தமிழ் மக்களுக்காக செயல்படுவதாகவும், அவர்களுக்காக உழைப்பதாகவும் கூறிக்கொண்டு திரிகின்ற, மக்கள் விரோதிகளின் துரோக நடத்தைகள் தான் இவைகள்.

 

கொல்லுதல், திருடுதல், சூறையாடுதல், வீட்டுக்கு நெருப்பு வைத்தல், நஞ்சிடுதல், விபத்துக்களை நடத்துதல், தூசணங்களால் தூற்றுதல், ஆதாரமற்ற அவதூறுகளை கற்பித்தல் என்று, பற்பலவிதமான இழிந்த வடிவங்களில் தான், தமிழ் மக்களுக்காக இவர்கள் போராடுகின்றனர். அறிவியல் பூர்வமாக, தமிழ் மக்களின் நலனைச் சார்ந்து இருத்தல் என்பது அருகி விடும் போது, மேலும் மேலும் கேவலமான இழிவான குறுக்கு வழிகளை அரசியலாக்குகின்றனர்.

 

புலிகள் முதல் புலியெதிர்ப்பு கும்பல் வரையிலான அனைவரினதும் அரசியல் வழியாக இருப்பது இதுதான். அரசியல் ரீதியாக இவர்களுக்கு இடையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. அதாவது தமிழ் மக்களின் சமூக nhhருளாதார நலன்கள் பற்றி, இரண்டு தரப்பும் ஒரேவிதமான கண்ணோட்டமே கொண்டுள்ளது. இந்த வலதுசாரிய இழிந்த அரசியல், எந்தக் குழுவையும் அதன் செயல்பாட்டைiயும் ஒரேவிதமாகவே வழிநடத்துகின்றது.

 

இப்படிப்பட்ட கேடுகெட்ட மலிந்த சமூக அரசியல் தளத்தில் தான், தமிழ் இனம் தூக்கில் தொங்குகின்றது. புலி, புலியெதிர்ப்பு என இரண்டு கும்பலும், மக்களுக்கு எதிரான வலதுசாரிய அரசியலைக் கொண்டவர்கள். மாற்று வழி தெரியாதவர்கள். மக்களின் சமூக பொருளாதார கூறுகளைச் சார்ந்து, சொந்தமாக எந்த ஒரு கருத்தையும் முன்வைக்க வக்கற்றவர்கள்.

 

அண்மைக்காலமாக அரசு தரப்பு, வெளிநாடுகளில் புலி அல்லாத தரப்புக்குள் வேகமாக ஊடுருவி வருகின்றது. மக்களைச் சார்ந்து இருக்க முடியாதவர்கள், அரசுடன் இயல்பாக இணக்கமாக கூடிவிடுகின்றனர். புலிகள் எப்படி புலித்தலைவர் பெயரால் புலம்புகிறதோ, அப்படி புலியல்லாத புலியெதிரிப்பு கும்பல் அரசுடன் கூடி குலைக்க தொடங்குகின்றது.

 

அரசியல் ரீதியாக எதற்கும் லாயக்கற இந்த புலியெதிர்ப்புக் கும்பல், அரச பிரதிநிதிகளுடன் கூடி கைலாக்கு கொடுக்கும் படங்களைக் கூட பெருமையாக படம் பிடித்து வெளியிடுகின்றனர். அந்தளவுக்கு அரசியல் தரம், தாழ்ந்து நாயிலும் கீழாகவே உண்ணியாகச் செல்லுகின்றது. உண்மையில் இந்த அரச பிரதிநிதிகளோ, பாரிய மனித உரிமை மீறலைச் செய்த பாரிய குற்றவாளிகள். அது மகிந்த முதல் டக்கிளஸ் வரை பொருந்தும். கொலைகளின்றி இவர்கள் அதிகாரத்தில் அமர்ந்து இருக்கவில்லை. புலிகள் போல், கொலைகளை நம்பித்தான் அரசியலையே நடத்துகின்றனர். கூடி நின்று செயல்படுவது முதல் கூடி நிற்கும் படங்கள் வரை, மனித உரிமை மீறலுக்கு துணை போவதைத்தான் எடுப்பாகவே எடுத்துக்காட்டுகின்றது. பிரபாகரனுடன் நின்று படம் எடுத்து போடவும் கூட தயங்காத, அதற்கு ஆசைப்படக் கூடிய அற்ப மனிதர்கள் தான், இந்த அரசியல் தரகு விபச்சாரர்கள்.

 

இதில் ஈரஅனல் விதிவிலக்கல்ல. அண்மையில் இலங்கை ஜனாதிபதியுடன் கூடி நின்று படங்களைக் கூட வெளியிட்டவர்கள். அந்த ஜனாதிபதியை ஈரஅனல் சந்திப்பதை தடுக்க நடந்த "ஜனசாயக" அரசியல் சதிகள் ஒருபுறம். வலதுசாரிய பிரிவுகள் ஓரே குட்டையில் நடத்துகின்ற அரசியல் இழுபறிகள் இவை. இதைத்தான் இவர்கள் ஜனநாயகம் என்கின்றனார்.

 

இந்த வலதுசாரிய வக்கிரங்களோ புழுக்கின்றது. புழுத்துப்போன தரம் கெட்ட செய்திகளை சொல்வதே, தமிழ் மக்களின் நலன்கள் என்று கூறுகின்ற அளவுக்கு 'ஜனநாயக' புலம்பல்கள். இந்த வலதுசாரிய தரம்கெட்ட செயல்பாடுகளை, எதிர் கொள்ளும்விதம் தான் இந்த சூறையாடல்கள்.

 

மக்களைச் சார்ந்து அவர்களின் சமூகப் பொருளாதார அரசியலை முன்னிறுத்தி நிற்க, எந்தத் தரப்புக்கும் வக்கு கிடையாது. புலியெதிரப்புக்கு எல்லாம் குடைபிடித்து நிற்கும் ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கமோ, உப்புச்சப்பற்ற பேரினவாதத் தீர்வை தூக்கிகொண்டு ஊர் ஊராக காவடியெடுப்பதும், அதை வைத்துக் கொண்டு அழுவதுமாக திரிகின்றார். மக்களைச் சார்ந்து நிற்க, சொந்த அரசியல் எதுவும் சுயமாக இவர்களிடம் கிடையாது. மற்றவனுக்குத் தரகுத் தொழில் பார்ப்பதே இவர்களின் அரசியல். இப்படிப்பட்ட இந்தக் கும்பலில் உள்ள சிலர், மந்திரியுடனும் ஜனாதிபதியுடனும் கூடிநின்று அழுவதை 'ஜனநாயக' அரசியல் என்கின்றனர்.

 

பாவம் தமிழ் மக்கள். அந்த மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதில்லை. அதைப்பற்றி பேச யாருக்கும் துப்புக் கிடையாது. மானம் கெட்ட பிழைப்புத்தான் ஒரே அரசியல் வழி என்று கூறி, விதம்விதமாக நக்குகின்றனர்.

பிஇரயாகரன்
05.07.2007