Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு

சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு

  • PDF

வாரந்தோறும் 10000 அமெரிக்கர்கள் பலவந்தமாக, அவர்கள் குடியிருந்த வீடுகளில் இருந்து விரட்டப்பட்டு வீதிக்கு வருகின்றனர். வெட்டவெளியில் கூடாரமடித்து தங்கி வரும் வீடற்றவர்கள், அமெரிக்க நகரங்களில் புதிய சேரிகளை உருவாக்கி வருகின்றனர். பலர் தமது வீடுகளை விட்டு எழும்ப மறுத்து வருகின்றனர். சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். சில இடங்களில் கொலை கூட நடந்துள்ளது. ஊடகங்கள் இதைப்பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன, அல்லது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

வீட்டுக்கடன் பிரச்சினையால் உருவான நிதி நெருக்கடியின் நேரடி விளைவு தான் இதுவென்றாலும், 2007 ம ஆண்டில் இருந்தே இந்தப்பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்கள் என்றதால் யாருமே அக்கறைப்படவில்லை. 

 

ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து, கடைசியில் வங்கிகளுக்கே அடிவிழுந்த பிறகு தான், உலகமே அலறித் துடித்தது. இப்போது கூட என்ன நடக்கிறது? நிர்வாகிகள், முகாமையாளர்கள், முகவர்கள், என்று பதவிகளில் ஓட்டிக்கொண்டு, வங்கிகளில் பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகளை காப்பாற்ற அரசாங்கம் பணம் கொடுக்கின்றது. அமெரிக்க மூலதனத்தால் லாபமடைந்த முதலாளிகளும், நடுத்தர வர்க்கமும், வங்கிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர். "வங்கிக் கொள்ளையரால்" ஏமாற்றப்பட்டு, குடியிருந்த வீடுகளை இழந்து, நிரந்தர கடனாளியாகி நடுத்தெருவுக்கு வந்த அப்பாவி மக்களைப்பற்றி யாரும் திரும்பிப்பார்க்கவில்லை. அரசாங்கம் வழங்கும் மீட்பு பணத்தில் ஒரு பகுதி, வங்கியில் பணி புரியும் மேல்மட்ட நிர்வாகிகளுக்கு சம்பளமும், போனசும் வழங்க பயன்படப் போகின்றது. இது குறித்து செய்தி வெளியிட்ட பிரிட்டிஷ் Guardian பத்திரிகை பதவி விலகிச் செல்லும் வங்கி மேலாளர்கள் கூட மில்லியன் கணக்கில் போனஸ் பணம் பெற்று செல்வதாக தெரிவித்துள்ளது. உதாரணத்திற்கு (பகிரங்கப்படுத்தப் பட்ட) பிரிட்டனின் பெரிய வங்கியான Barclays தலைவரின் வருட சம்பளம் £250,000 ( 20,979,283.75 இந்திய ரூபாய்கள், 46,302,032.78 இலங்கை ரூபாய்கள்), ஆனால் போனசை சேர்த்தால், அவரது மொத்த வருட வருமானம் 36 மில்லியன் பவுன்கள். 
"நம்மூர் போல அமெரிக்காவில் வீட்டுக்கடன் தவணைப்பணம் கட்டத்தவறியவர்களை, ரவுடிகளை வைத்து மிரட்ட முடியாது. அதனால் தான் பங்குச் சந்தை சரிந்தது." என்று சில தமிழ்ப் பத்திரிகைகள் சிறுபிள்ளைத்தனமாக எழுதியிருந்தன. அமெரிக்காவில் அந்த வேலையை செய்ய ரவுடிகள் தேவையில்லை, அதை போலீஸ்காரர்களே செய்வார்கள். உதாரணத்திற்கு சில சம்பவங்கள். நியு ஒர்லின்சில், 'மத்திய அவசரகால முகாமையகம்' ஒரு வீட்டுக்காரனை எழும்பச் சொன்னது. சம்பந்தப்பட்ட வீட்டுக்காரன் கிட்ட வந்தால் சுடுவதாக மிரட்டியதால், போலிசின் உதவி கோரப்பட்டது. போலிஸ் தாக்குதல் பிரிவு, மிதமிஞ்சிய கண்ணீர்புகையை பிரயோகித்து, கடைசியில் அந்த நபரை சுட்டுக்கொன்றது. புளோரிடாவில் ஒரு நகரத்தில் இருந்த வீட்டை காலி பண்ண சொல்லி போலிஸ் நோட்டீஸ் அனுப்பியது. அந்த வீட்டின் குடும்பத்தலைவன், நோயாளியான முன்னாள் இராணுவவீரன். வீட்டை விட்டு வெளியேற்ற அதிகாரிகள் வந்த போது, குடும்பத்துடன் வீட்டுனுள்ளே இருந்து கொண்டு, தன்னிடம் துப்பாக்கி இருக்கின்றது, என்று மட்டும் கூறிக்கொண்டிருந்தார். அயலவரின் வற்புறுத்தலால் இறுதியில், விட்டுக் கொடுத்தாலும், போலிசை மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் ஒவ்வொரு நகரமும், கிராமமும் இது போன்ற சோகக் கதைகளை சொல்கின்றது. வீட்டை விட்டு வெளியேற வேண்டிய தருணம் வந்த போது, வீட்டினுள்ளே தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள், அல்லது தனிநபர்கள். வீட்டிற்கு நெருப்பு வைத்து விட்டு தன்னையும் மாய்த்துக் கொண்டவர்கள். வீட்டை விட வேண்டிய நாள் வந்தால், தனது பிணத்தை வந்து பார்ப்பீர்கள், என்று ரியல் எஸ்டேட் கொம்பனிக்கு கடிதம் எழுதிய வயோதிப மாது. வீட்டை விட மறுத்து, கையில் கிடைத்ததை வைத்து எதிர்த்து போரிட்ட குடும்பத் தலைவர்கள். இந்தப்பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது. (பார்க்க: As economy sinks, officials fear violent solutions)
வீடற்றவர்களாக வீதிக்கு வரும் தனிநபர்கள், அவர்கள் வயோ
திபர்ஆனாலும், நோயாளி ஆனாலும், பொதுக் கட்டிடங்களின் கீழ், அல்லது பூங்காக்களில் உறங்க வேண்டிய பரிதாப நிலை. வீடுகளை இழந்த குடும்பங்கள் நகரின் ஒதுக்குப்புறமாக உள்ள வெட்டவெளிகளில், சிலநேரம் நகரமத்தியில் இருக்கும் பூங்காக்களில் கூட, கூடாரங்களை அமைத்து தங்கி வருகின்றனர். Los Angeles, Chattanooga, Columbus, St. Petersburg, Seattle and Portland போன்ற அமெரிக்க நகரங்களில், இந்தக் கூடார வீடுகள் முகாம்களாக மாறிவருகின்றன. உண்மையில் அவை நமது நாட்டில் இருப்பதைப் போன்ற சேரிகள்.(பார்க்க:ECONOMY-US: No Joy in Hooverville) 
இந்த நவீன சேரிவாசிகள், தமக்குள்ளே சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளனர். போதைவஸ்து, மது, அடிதடி என்பன தடுக்கப்பட்டுள்ளது. சில சேரிகளை உள்ளூராட்சி சபை ஆதரவளித்து வருகின்றது. வேறு சில இடங்களில் சட்டவிரோதமாக பார்க்கப்படுகின்றன. இந்த நவீன சேரிவாசிகள் எல்லோரும், வீட்டுக்கடன் என்ற பொதுப்பிரச்சினையால் வீதிக்கு வந்தவர்கள். அவர்களில் சிலர் மூன்று படுக்கையறை கொண்ட பெரிய வீடுகளை சொந்தமாக வைத்திருந்தவர்கள். குடும்ப உறுப்பினர் யாராவது திடீரென கடுமையான சுகயீனம் அடைந்த பிறகு தான் சனியன் பிடிக்க ஆரம்பித்தது. அமெரிக்காவில் காசிருந்தால் மட்டுமே வைத்தியம் பார்க்கலாம், அல்லது கிடந்தது சாக வேண்டியது தான். தமது சேமிப்பை எல்லாம் வைத்தியம் பார்க்க செலவழித்ததால், வீட்டுக்கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டார்கள்.
அமெரிக்காவில் இந்த நவீன சேரிகள் "Hoovertowns" என்று அழைக்கப்படுகின்றன. அது ஒரு காரணப்பெயர் ஆகும். 1930 ம ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக, பல கோடி மக்கள் தொழிலை இழந்து, வீட்டை இழந்து வீதிக்கு வந்தார்கள். அப்போது அவர்கள் அமைத்துக்கொண்ட கூடார முகாம்கள், அல்லது சேரிகள், அன்றைய ஜனாதிபதி Hoover என்பவற்றின் பெயரால் அழைக்கப்படலாகின. RealityTrac என்ற நிறுவனம் செய்த ஆய்வின்படி, சமீபத்திய நிதி நெருக்கடியால் இன்னும் ஐந்து கோடிப் பேர் கடனை அடைக்க முடியாமல் வீடுகளை இழக்கும் அபாயம் உள்ளது. அப்படியானால் அமெரிக்காவில் சேரிகள் பெருகப் போகின்றன என்று அர்த்தம்.

 

 

Last Updated on Sunday, 02 November 2008 11:15