Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் தேசம்நெற் சூத்தையைக் கிண்டும், பேரினவாதக் குச்சிகள் : தனிமனித அவதூறு அரசியலை விட, மக்கள்விரோத அரசு சார்பு அரசியல் ஆபத்தானது.

தேசம்நெற் சூத்தையைக் கிண்டும், பேரினவாதக் குச்சிகள் : தனிமனித அவதூறு அரசியலை விட, மக்கள்விரோத அரசு சார்பு அரசியல் ஆபத்தானது.

  • PDF

புலிகளின் தோல்விகள் பேரினவாதத்தின் வெற்றியாக மாறுகின்றது. புதிய இந்த நிலைமை தான், புலம்பெயர் நாட்டிலும் பேரினவாத நிகழ்ச்சியாக அனைத்தும் மாறத் தொடங்கிவிட்டது. ஜனநாயகம், சுதந்திரம் என்பது புலியை அழித்தல், அதனிடத்தில் அரசை நிறுவுதல் என்பதாகத் தான், புலியல்லாத புலம் பெயர் அரசியல் புழுத்துவிட்டது. இதற்கு புலியெதிர்ப்பு என்பது, இனிமேல் ஒரு அடைமொழி தான். புலிக்கு எதிரான ஒவ்வொரு நிகழ்ச்சியும், அரசை எதிர்ப்பதில்லை அதை ஆதரிக்கின்றது. அரசை ஆதரிக்கின்ற கும்பல் இன்றி, புலம்பெயர் மாற்று என எதுவும் இன்று கிடையாது. எல்லாம் அதுவேயாகிவிட்டது.

இந்த அடிப்படையில் தான் 'அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல" என்ற அறிக்கையும் வெளிவந்துள்ளது. அரச எடுபிடிகளின், அதன் கைக் கூலித்தனத்தின் இழிவான இழிந்த பண்பு கெட்ட நடத்தைகளை பாதுகாக்க, இந்த அறிக்கை உதவும் என்று மனப்பால் குடிக்கின்றனர். தேசம்நெற் என்ற அவதூறு இணையத் தளத்தை கண்டிப்பதன் மூலம், தமது சொந்த மனித விரோத இழிசெயலை ஜனநாயகமானதாக காட்ட முனைகின்றனர்.

 

பேரினவாத அரச எடுபிடிகளாக, அரச கைக்கூலித்தனத்தையே அரசியலாக கொண்ட கொலைகாரக் கும்பலுடன் சேர்ந்து நடத்துகின்ற மக்கள் விரோத அரசியல் விபச்சாரத்தை, தேசம்நெற்றைக் கண்டிப்பதன் மூலம் நிமிர்த்த முனைகின்றனர்.

 

இப்படி இதில் கையெழுத்திட்டவர்கள் எல்லாம் யார்? பேரினவாத எடுபிடிகள், கேட்டால் கையெழுத்திடும் அரசியலற்ற அப்பாவிகள், அரசியல் ரீதியாக முடிவெடுக்க முடியாத தலையாட்டும் ஓணான்கள், அரசியலைத் துறந்தவர்கள் தான். பேரினவாத எடுபிடிகளின் திட்டமிட்ட சதியின் ஒரு அங்கமாக, இந்த அறிக்கை அரங்கேறியுள்ளது.

 

எதிரெதிராக உள்ள இவ்விரண்டு தரப்பும் அன்று ஒன்றாக கும்மியடித்த போதும் சரி, இன்று பிரிந்த பின்னும், எம(ன)க்கு எதிராக அள்ளி வீசிய அவதூறுகள் ஆபாசங்கள் குவிந்து கிடக்கின்றது. மக்களுக்கான உங்கள் அரசியல் என்ன என்று கேட்கும் எமக்கு எதிராக, இவர்கள் அரசியலையா வைத்தார்கள். இல்லை அவதூறுகளைத் தான் அள்ளி வீசியவர்கள்.

 

இன்று அரச எடுபிடிகளாக, ஏகாதிபத்திய நக்குண்ணிகளாக வலம் வரும் இந்த போக்கிலிகள், பேசிய ஜனநாயகம் இன்று எங்கும் அம்மணமாகி வருகின்றது. அரசாலும், ஏகாதிபத்தியத்தாலும் விலைபேசப்பட்ட இந்தக் கும்பல்கள், பல மட்டத்தில் பல வடிவில் வேஷம் கட்டி ஆடுகின்றனர்.

 

இந்த கும்பல் கூறுகின்றது 'நிதர்சனம்.கொம் தீப்பொறி.கொம் போன்ற ஆயுத அரசியல் சார்ந்த சில ஊடகங்களும் வெறும் பச்சை வியாபார ஊடகங்களுமே இந்த அவதூறுக் கலாச்சாரத்தின் பிரநிதிகளாக இருந்திருக்கிறார்கள்" என்று. இது வேடிக்கையானது, ஆனால் தேசத்துக்கு ஒத்த கொசிப்பு வாதம். கருணா கும்பலுக்கு வில்லுப்பாட்டு பாடும் விழிப்பு செய்யாததையா, நெருப்பு செய்யாததையா! தேனீ செய்யாததையா! இவர்கள் செய்துவிட்டனர். வேடிக்கையாக இவர்களும் அவதூறுக்கு எதிராக கண்டிகின்றனராம். இப்படி அரசுக்கு சார்பாக கையெழுத்திடுகின்றனர்.

 

இப்படி அரச ஆதரவுக் கும்பல், திடட்மிட்ட வகையில், ஒரு தரப்புக்கு எதிராக மட்டும், அவதூறு பற்றி அவதூறாக சேறடிக்கின்றனர். இங்கும் இது அரசிலயற்ற அவதூறுதான். இதை நோண்டினால், அரசு ஆதரவு அவதூறாகிவிடுகின்றது.

 

இங்கு 'நிதர்சனம்.கொம் தீப்பொறி.கொம்" என்று குறிப்பாக்கி, அரசுக்கு ஆதரவாக கும்மியடிக்கின்றனர். அரசுக்கு எதிரான இணையத்தை, குறிப்பாக்கி, அதை அவதூறு இணையமாகக் காட்டி தாக்குகின்றனர். தம்முடன் (அரசுடன்) சேர்ந்து கும்மியடிக்கும் இணையங்கள், அவதூறு செய்யவில்லை, அது அரசியல் செய்கின்றது என்பது இவர்களின் முடிந்த முடிவு. சரி அந்த அரசியல் தான் என்ன? அது எப்படி மக்கள் அரசியலை வைக்கின்றது. மக்களுக்கான அரசியலை வைக்காத அனைத்தும், அவதூற்று அரசியலை விட படுகேவலமானது இழிவானது. மக்களை அடிமைப்படுத்துகின்ற, மக்களை ஏமாற்றுகின்ற, அவர்களின் முதுகில் குத்துகின்ற அரசு சார்பு அரசியல் அவதூறாலானது.

 

தனிமனித அவதூறு அரசியலை விட, மக்கள்விரோத அரசு சார்பு அரசியல் மிகவும் ஆபத்தானது. அது சதித் தன்மை கொண்டது. நேர்மையற்றது. புலிக்கு பதில் அரசு மூலம் மக்களை அடக்கியாளத் துடிக்கின்றது. அதைத்தான் கிழக்கிலும் வடக்கிலும் செய்கின்றது.

 

'நிதர்சனம்.கொம் தீப்பொறி.கொம்" மற்றும் 'தேசம்நெற்" மட்டும் அவதூறு செய்வதாக கூறுவது, பச்சையான அவதூறு. இது உண்மையை திரிப்பதாகும். கருணா கும்பலுக்காக முக்கும் விழிப்பு இணையம் முதல் அரசுக்காக குத்தி முறியும் தேனீ வரை செய்யாத அவதூறுகளா!?

 

மனித இனத்தையே அவதூறு செய்துவிட்டுத்தான், ஜனநாயகம் பற்றி ஒப்பாரி வைப்பவர்கள் இவர்கள். கருணா - பிள்ளையான் தாலியறுத்தும், மனித உழைப்பையே கொள்ளையடித்து நடத்தும் வக்கிரத்தின் மேல் தான், அதை கொம்பு சீவிவிடத்தான் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.

 

மக்களுக்கு எதிராக செய்திகளை திரிப்பது முதல் காறி உமிழ்வது வரை, புலியெதிர்ப்பு இணையங்கள் அனைத்தும் புகழ் பெற்றவை. அரசுக்கு ஆதரவாகவும், தம்மோடு இல்லாத அனைவரையும் விதவிதமாக திரித்தும், அவதூறும் செய்து தான் அரசியல் நடத்தினர், நடத்துகின்றனர். இதை விட வேறு மாற்று மக்கள் அரசியல் எதுவும் இந்த கும்பலிடம் கிடையாது.

 

செய்திகளை திரித்தும், மனித குலத்தையே அவதூறு செய்தும், அரசுக்கு ஆதரவாக அவதூறுகளை அரசியலை செய்கின்ற கும்பலைச் சேர்ந்த பலர், இதில் வீரமாக கையnழுத்திட்டுள்ளனர்.

 

இந்த அறிக்கையை பிரசுரிக்கும் பெரும்பாலான இணையங்கள் அரச சார்பானவை. அரசுக்காக வேலை செய்கின்றவை. இதில் சில கிழக்கு பாசிட்டுகளின் பாசிச இணையங்கள். நுணுகிப் பார்த்தால் கிழக்கு பாசிட்டுகளின் அரசியல் ஆலோசகர் ஞானத்தின் ஏற்பாடு தான், இந்த அறிக்கை. கருணா ஆதரவு இணையங்களை மையப்படுத்தி, அங்கும் இங்கும் கருத்தின்றி இயங்கும் இணையங்களை தம் சொந்த அரச ஆதரவு வட்டத்துக்குள் கொண்டுவரும், சதி முயற்சியையும் உள்ளடக்கியதே இந்த பாசிசக் கூத்து.

 

ஜனநாயகம், சுதந்திரம், அவதூறுக்கு எதிர்ப்பு, இவைகளுக்கு எல்லாம், இவர்களுக்கு அரசியல் இல்லை என்பது தான் இவர்களின் அரசியல். இதையே இந்த அவதூறுக்கு எதிர்ப்பு அறிக்கை ஊடாக, அரசியல் சதி மூலம் செய்துள்ளனர். பேரினவாத அரசுடன், அதனுடன் கூலிக் குழுக்களாக சேர்ந்து இயங்குகின்ற மக்கள் விரோதக் கும்பல்கள் பேசுகின்ற ஜனநாயகம், சுதந்திரம், அவதூறு எதிர்ப்புக்கு, அரசியல் இல்லை என்பதன் ஊடாக, அரசுக்கு சார்பாக அறிக்கையை தயாரித்துள்ளனர்.

 

இந்த அறிக்கையில் கூறுகின்றனர் 'இணையத்தளங்கள் ஊடாகக் கருத்து சுதந்திரம் என்ற பதாகையின் கீழ் அப்பட்டமான புனைவுகளையும் பொய்க்கதைகளையும் தனிமனித சேறடிப்புகளையும் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர். இந்த இணையத்தளங்களும் இவ்வாறான செயலுக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கித் தமது இணையத்தளத்தைப் பரபரப்பாக வைத்துக் கொள்ளும் மலினமான உத்திகளைச் செய்து வருகின்றன" என்று இழுத்து புலம்பும் இவர்கள் யார்? அதையே செய்கின்ற பொறுக்கிகள் தான் இவர்கள். இவர்களிடம் எந்த மாற்று அரசியலும் கிடையாது.

 

தேசம்நெற் இதைத்தான் செய்கின்றது. எம(ன)க்கு எதிராக முதன் முதலில் தேசம் நெற் அவதூறு செய்தபோது, நாம் தான் முதலில் இதை அம்பலம் செய்தவர்கள். அப்போது இதில் கையெழுத்திட்ட பலர், எம(ன)க்கு எதிராக இந்த அவதூறை செய்வதில், தேசம்நெற்றிலேயே குந்தியிருந்து பேந்தவர்கள் தான். இன்று அது தமக்கு எதிரான தம்மை ஒத்த ஒரு அணியின் கை ஒங்கியவுடன், வெள்ளை வேட்டியைக் கட்டிக் கொண்டு அரசுக்கு ஆதரவாக அரசியல் விபச்சாரம் செய்ய முனைகின்றனர்.

 

'பரபரப்பாக வைத்துக் கொள்ளும் மலினமான உத்திகளைச் செய்து வருகின்றன" என்று கூறும் இவர்கள், கிழக்கில் பிள்ளையானுக்கு வெள்ளை வேட்டியும் ரையும் கட்டி செய்வது இதைத்தான். பரப்பரப்பான அறிக்கைகள், அவதூறு அறிக்கைகள், விளம்பர அறிக்கைகள், புனைவு அறிக்கைகள் விடும் கருணா கும்பல் தான், இந்த அறிக்கையையும் தயாரித்துள்ளது. நீங்கள் மக்கள் விரோத அரசியல் ஊடாக 'பரபரப்பாக வைத்துக் கொள்"ள முனையும் போது, அதை தேசம்நெற் செய்தால் என்ன குடியா மூழ்கிப்போய்விடும்!?

 

இதை உங்கள் மக்கள் விரோத அரசியலுக்கு ஏற்ப எதிர்க்கும் நீங்கள், என்னத்தைத் தான் இதற்கு பதில் இந்த சமூகத்துக்காக பெற்றுக்கொடுக்க போகின்றீர்கள்? மக்களின் வாழ்வின் மீதான நாசத்தைத் தவிர, வேறு எதையும், இந்த அரச எடுபிடிகள் இதன் மூலம் வழிகாட்ட முனையவில்லை.

 

இப்படிப்பட்ட அரசு எடுபிடிகளுடன் கூடி கையெழுத்திட்ட அப்பாவிகளே, இதன் மூலம் நீங்கள் சமூத்துக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் முனைகின்றீர்கள்? அரச எடுபிடிகளுடன், புலி எடுபிடிகளுடன், எப்படி தான் சேர்ந்து கும்மி அடிக்க முடியும். சொல்லுங்கள்? புலியுடன் சேர முடியாது என்று கூறி விலகி நிற்கும் நீங்கள், அரச கும்பலுடன் எப்படி சேர்ந்து நிற்கமுடிகின்றது!? சொல்லுங்கள். முன்னைய தனிப்பட்ட நட்பா!, உங்கள் விலாங்குத் தன்மையா!, அரசியலற்ற உங்கள் சோரமா!, அரசு மீட்பது தான் ஜனநாயகம் என்ற உங்கள் புனித அரசியல் நிலைப்பாடா! இதுவே மக்களுக்கு எதிரான மானம் கெட்ட அரசியல் பிழைப்பு அல்லவா.

 

இந்த பேரினவாத அரசின் அறிக்கையில் 'பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குகள் - குழுக்கள் நிலவும்போது எதிர்க் கருத்துகள் அல்லது மாற்றுக் கருத்துகள் கொண்ட ஒரு தரப்பைக் கருத்துப் பலமற்ற மற்றொரு தரப்பு அவதூறுகளால் ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளால் எதிர்கொள்வது எப்போதும் நடக்கும் ஒன்றுதான்." ஆகாகா, என்ன அறிவு. சதியையே அரசியலாக கொண்ட ஒரு வாதம்.

 

'பல்வேறு அரசியல் கருத்துகள்" என்கின்றீர்கள். சரி அது என்ன? உங்கள் கருத்து முரண்பாடு கொண்ட, அந்த சாக்கடையை திறந்து விடுங்களேன். பேரினவாத அரசுக்காக இயங்குகின்ற உங்களிடம், மாற்றுக்கருத்து என்பது தனிப்பட்ட முரண்பாடு தான். தேசம்நெற்றில் கும்மியடிக்கும் கும்பலும் சரி, அரசுக்கு பின்னால் பைலா ஆடும் நீங்களும் சரி, உங்களிடையே அரசியல் ரீதியாக எந்த மாற்றையும், முரண்பாட்டையும் கொண்டது கிடையாது. அரசியல் ரீதியாக ஒரே குட்டையில் ஓடும், அதே சாக்கடை அரசியல் தான்.

 

இங்கு 'பல்வேறு அரசியல் கருத்துகள்" தனிநபர் முரண்பாடுகள் தான். மக்களைந் சார்ந்து நிற்பதிலா உங்கள் முரண்பாடு! அப்படி ஒன்று இருந்தால், அந்த அரசியல் முரண்பாடு தான் என்ன? சாக்கடை அரசியல் உள்ள தனிமனித முரண்பாடுகள், எந்த அரசுசார்பு குழுவை ஆதரித்து நக்கித்தின்பது முதல் எப்படி எதனூடாக அரசை ஆதரிப்பது என்பது தான். இதைத் தவிர வேறு முரண்பாடு கிடையாது. கருணாவை ஆதரிப்பதா, ஆனந்தசங்கரியை ஆதரிப்பதா, டக்கிளஸ்சை ஆதரிப்பதா, அல்லது விளம்பரம் செய்வதா, எப்படி இதன் மூலம் அரசியல் செய்வது என்பது தான் முரண்பாடு.

 

இப்படி மக்களுக்கு எதிரான அரசியலுடன், அன்று முதல் இன்று வரை அரசுக்கு சார்பாக புலியெதிர்ப்பு அரசியல் செய்தவர்கள், இன்று கன்னை பிரித்து அங்குமிங்கும் நிற்பதும், அதற்குள் வக்கரித்து கிடப்பதும் தான், இவர்களின் மக்கள் விரோத அரசியல்.

 

'இவர்களுக்கு இலங்கை பிரச்சனை பற்றிய அக்கறையை விடச் செயலூக்கம் கொண்டியங்கும் தனி நபர்கள் மீதும் அமைப்புகள் மீதும் அவதூறு மேற்கொள்வதே தலையாய கடமையாகி வருகிறது." இங்கு அந்த செயலூக்கமுள்ள அரசியல் தான் என்ன? பேரினவாத அரசுக்கு சார்பாக இயங்குதல். மக்களுடன் நிற்க மறுப்பவர்கள். அதற்கு எதிராக, அரசுக்கு ஆதரவாக செயலூக்கத்துடன் எதிர்புரட்சியை அரசியலாக கொண்டவர்களின் அறிக்கை தான் இது. மக்களின் முதுகில் குத்துவது தான், தலித்தியம் முதல் கிழக்கு மேலாதிக்கம் வரை. இது இப்படிதான் முகிழ்கின்றது. இதனடிப்படையில் தான், இந்த அவதூறுக்கு எதிரான அறிக்கையும். மக்களைச் சார்ந்து அரசியல் செய்யும் எந்த அரசியல் அடிப்படையுமற்றது.

 

அவதூறுக்கு எதிரான பேரினவாத எடுபிடிகளின் இந்த அறிக்கை, அரசுக்கு ஆதரவாக மோசடித்தனமாக பலரின் அறியாமையின் மேல் வெளியிடப்பட்டுள்ளது.

 

பி.இரயாகரன்
13.09.2008

 

Last Updated on Saturday, 13 September 2008 11:47