Mon05062024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...25.

  • PDF

கோத்ராவில் நடந்த தீ வைப்பு சம்பவத்துக்கு மோடியின் பின்னணியே காரணம் என சில அரசியல் குழுவினரும், சமூகத்திலுள்ள சில பொதுமக்களிலுள்ள பிரிவினரும் குற்றம் சுமத்துகின்றனர். திட்டமிட்ட படுகொலைகளை நிகழ்த்தி, அதனடிப்படையில் அரசியலில் இன ரீதியில் பிரிவு மற்றும் பிளவுகளை அறுவடை செய்திட இவன் (மோடி) S-6 பெட்டியை எரித்தான் என்று அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இது உண்மையா?

 

 


கோத்ராவில் உண்மையிலேயே நிகழ்வுற்றது என்ன? என்னும் பேருண்மையை பெறுவதற்காக, தெஹல்கா 6 மாத காலங்களாய் நெடிய புலனாய்வை நடத்தியது. பொய் வலைகள் உண்மைகளோடு சேர்த்து பின்னப்பட்டதையும், உண்மை நிகழ்வுகளோடு கற்பனைகளும் கலந்து தரப்பட்டதையும், மிகுந்த எச்சரிக்கையுடனும், அதி கவனத்துடனும் நடத்தப்பட்ட புலனாய்வு வெளிப்படுத்தியது. எங்களின் தேடல்கள் எம்மையே அதிர்ச்சி அடைய வைத்தது. உண்மையை கண்டறிவது மிகக் கடினமாக உள்ளதே என்றல்ல, மாறாக மேலே கூறப்பட்ட புனைவுகள் ஏராளமாக இருந்த காரணத்தாலே அதிர்ச்சியாக இருந்தது. இப்புனைவுகள் எல்லா இடத்திலும் இருந்ததை பார்க்க முடிந்தது. தாள்களிலும், உயிர் பிழைத்தவர்களின் வாக்குமூலத்திலும் இன்னும் தெரு வெளிகளிலும் காணக் கூடியதாகவே இருந்தது. எங்களின் தேடல்கள் எம்மையே அதிர்ச்சி அடைய வைத்தது. உண்மையே அதிர்ச்சியாக இருந்தது என்பதால் அல்ல, மாறாக மிக விவரத்துடனும் தீய நோக்குடனும் உண்மைகள் அழிக்கபட்டு இருந்ததனாலேயாகும். நாங்கள் பார்த்தது என்னவென்றால்.. மோடியும் அவனது அரசாங்கமும் சொல்லும் அனைத்தும் பொய்யே என்பதனை இது நிரூபிக்கின்றது. இது ஒரு சாதரண பொய்யல்ல, மாறாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொய்கள். லஞ்சம் வழங்கப்பட்டும், நிர்பந்திக்கப்பட்டும், மிரட்டபட்டும் செயல்படுத்தபட்டவைகள்.


இதுவே நாம் கண்ட தகவல்கள். எப்போதும் போல், உண்மைகள் விளக்கமாக..

 

 

வந்து சேருதல்: சர்மதி விரைவு தொடர் வண்டி கோத்ரா நிலையத்தில் நுழைகிறது.

 

27 பிப்ரவரி 2002, காலை மணி 7:43, அயோத்தியிலிருந்து கரசேவகர்களை தங்கள் இருப்பிடங்களுக்கு திருப்பி அழைத்து கொண்டு சபர்மதி விரைவு வண்டி எண் 9166, கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில் வந்து சேருகிறது. இவ்வண்டி சுமார் ஐந்து மணி நேர காலதாமதத்திற்குப் பிறகு வருகிறது.


கோபத்தை தூண்டிய நிழ்வு முதல் நிகழ்வு: நடைமேடையில் தேநீர் விற்பனை செய்யும் முஸ்லிம் வியாபாரிகளிடம் கரசேவகர்கள் மோதினார்கள்.


கோத்ரா சம்பத்தில் முக்கிய அம்சமே ஒரு கேள்வி தான். அது என்னவென்றால் கலவரக் கும்பலை உசுப்பி விட்டது எது? மோடி அரசாங்கமோ இது உணர்ச்சி மேலீட்டால் தற்செயலாக நடந்து விட்ட சம்பவம் அல்ல, மாறாக திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என்றே உறுதிபட கூறி வருகிறது. S-6 பெட்டியில் பயணித்து, அக்கொடூர சம்பத்திலிருந்து உயிர்பிழைத்தாக கூறப்படும் இரு பயணிகளால் சத்திய பிரமாணம் அளித்து தரப்பட்ட சாட்சியத்தில் பொய்யாக தரப்பட்டிருந்தது. இவ்விருவரும் கரசேவகர்களோ அல்லது விஹெச்பியின் மற்றும் பஜ்ரங்தள் உறுப்பினர்களோ அல்ல, மாறாக தாங்கள் வேலை பார்க்கும் அஹ்தமாபாத்திற்கு தங்களுடைய சொந்த ஊரிலிருந்து பயணித்து கொண்டிருந்தவர்கள் ஆவர். தொடர் வண்டி நிலைய நடைமேடையில் கரசேவகர்களுக்கும் தேநீர் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் இடையில் மோதல் நடந்ததாக இவ்விருவரும் காவல்துறையினரிடம் தெரிவித்து இருந்தனர். அவர்களுடைய பிரமாண வாக்குமூலம் இதோ.


லால்டாகுமார் பாலகிருஷ்ணன் ஜத்ஹவ் வயது 32, காந்திகிராம் கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்னும் நிறுவனத்தில் உதவி மேலாளர் (சிவில்) ஆக பணியாற்றி வந்தவர். மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள தனது சொந்த ஊரான குணாவிலிருந்து அஹ்மதாபாத் நகருக்கு சென்று கொண்டிருந்தார். இவருக்கு S-7 பெட்டியில் இருக்கை எண் 32ல் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கரசேவகர்கள் அந்த பெட்டியில் அவரை பயணிக்க விடவில்லை. “அதன் பிறகு”, என கூறத் தொடங்கிய ஜத்ஹவ் தனது வாக்குமூலத்தில், “S-6 பெட்டியின் வாயிலில் நின்று கொண்டிருந்த இராணுவ வீரனிடம் கேட்டு கொணடதன் பயனாக, நான் இருக்க சிறிது இடம் தந்தோடு மட்டுமல்லாமல் எனது உடமைகளை அங்கு வைப்பதற்கும், நின்று கொண்டு பயணிப்பதற்கும் அனுமதியளித்தார். இவ்வாறு 26 பிப்ரவரி 2002 அன்று இரவு 8:15 மணிக்கு சபர்மதி விரைவு தொடர் வண்டி S-6 ல் எனது பயணத்தை நான் துவக்கினேன். 27 பிப்ரவரி 2002 அன்று சபர்மதி விரைவு தொடர் வண்டி, கோத்ரா தொடர் வண்டி நிலைய நடைமேடை எண் 1ல் வந்து சேர்ந்தது. தொடர் வண்டியிலிருந்து நான் கீழே இறங்கவில்லை. அந்த நேரத்தில் கரசேவகர்கள் மற்றும் பஜ்ரங்தள் தொண்டர்களில் சிலர் முஸ்லிம் வியாபரிகளிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர்.”


கோவிந்சிங் ரத்னசிங் பாண்டே, வயது 46 அஹ்மதாபாத்தில் இராணுவ வீரராக பணியாற்றும் இவர், லக்னோவிலிருந்து அஹ்மதாபாத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தார். “ எனக்கு சபர்மதி விரைவு தொடர் வண்டியில் பெட்டி எண் S-6 படுக்கை எண் 9ல் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. 26 பிப்ரவரி 2002 அன்று நள்ளிரவு 1:15 மணிக்கு சபர்மதி விரைவு தொடர் வண்டி லக்னோ தொடர் வண்டி நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. நான் பெட்டி எண் S-6 ல் ஏறிய போது 5 முதல் 6 பெண்கள் படுக்கை எண் 9ல் இருந்தனர். எனது பயண சீட்டை அவர்களிடம் காண்பித்து அதிலிருந்து போகுமாறு அப்பெண்களை கேட்டு கொண்டேன். அப்போது 50லிருந்து 52 வயது வரை மதிக்கதக்க பஜ்ரங்தள் தொண்டர் ஒருவர் என்னிடம், பெண்கள் மேல் படுக்கைக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளது எனவே நான் அந்த மேல்படுக்கையை எடுத்து கொள்ளுமாறு கூறி படுக்கை எண் 3ஐ தந்தார். எனது உடமைகளை படுக்கை எண் 9க்கு கீழே வைத்து விட்டு, நான் படுக்கை எண் 3ல் அமர்ந்து கொண்டேன். அந்த பெட்டியில் கிட்டதட்ட 250 பேர் வரையில் இருந்திருப்பார்கள. அவர்களில் பெரும்பாலானோர் முன்பதிவு செய்யாமல் பயணம் செல்பவர்களே, மேலும் இவர்கள் பஜ்ரங்தள் அமைப்பை சார்ந்தவர்கள். ஒவ்வொரு தொடர் வண்டி நிலையத்திலும் வண்டி நிற்கும் போது பஜ்ரங்தள் ஆட்கள் நடைமேடையில் இறங்கி “ஜெய் சிரிராம்” என்று கோஷமிட்டு வந்தனர். 27 பிப்ரவரி 2002 அன்று காலை 7:30 லிருந்து 7:45 க்குள் தொடர் வண்டி, கோத்ரா தொடர் வண்டி நிலைய நடைமேடை எண் 1ல் வந்து சேர்ந்தது. எனவே நான் எழுந்தேன். பத்து முதல் பன்னிரெண்டு எண்ணிக்கையிலான பஜ்ரங்தள் ஆட்கள் எனது பெட்டியிலிருந்து இறங்கி “ஜெய் சிரிராம்” என்று கோஷமிட ஆரம்பித்தனர். அதன் பிறகு மற்ற பெட்டிகளிலுள்ள பஜ்ரங்தள் ஆட்களும் இறங்கி “ஜெய் சிரிராம்” என்று கோஷமிட்டனர். நடைமேடையில் அதிக சப்தமாக இருந்தது. பிறகு 3 முதல் 4 நிமிடங்கள் கழித்து பஜ்ரங்தள் ஆட்களில் சிலர் பெட்டியின் உள்ளே ஓடி வந்து ஜன்னல்களை மூடிய பிறகு, நடைமேடையில் தர்க்கம் ஏற்பட்டதால் கல்வீச்சு நடப்பதாக சத்தம் போட்டார்கள். கதவுகளையும் ஜன்னல்களை மூடி விடுமாறு எல்லோரிடமும் சொன்னார்கள்.”


கோபத்தை தூண்டிய நிழ்வு இரண்டாம் நிகழ்வு: கரசேவகர்களில் சிலர் நடைமேடையிலிருந்து ஒரு முஸ்லிம் இளம் பெண்ணை வலுகட்டாயமாக தூக்கிச் சென்றனர்.


வாக்குவாதத்திற்கும் மேலாகவே நடைமேடையில் சர்ச்சை நிகழ்ந்துள்ளது. கரசேவகர்களில் சிலர் நடைமேடையிலிருந்து ஒரு முஸ்லிம் இளம் பெண்ணை வலுகட்டாயமாக தூக்கிச் சென்றனர். 18 வயதிற்கு சற்றே குறைவான சோபியா பானு செய்கு என்ற இளம் பெண் தனது தாயார் மற்றும் சகோதரியோடு கோத்ராவிலுள்ள தங்களது உறவினர்களை பார்த்து விட்டு தங்களது சொந்த ஊராகிய வதோத்ராவுக்கு செல்ல, தொடர் வண்டி நிலையத்திற்கு வந்தனர். கோத்ரா துர்சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்திற்கு பின்பு 28 மார்ச் 2002ல் தான் இவர்களது வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்திருந்தும் கூட, 22 மே 2002ல் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப் பத்திரிக்கையில் இந்நிகழ்வு பற்றிய எந்தவொரு தகவலையுமோ அல்லது இவர்களுடைய வாக்குமூலங்களையோ குறிப்பிடவில்லை.

 

தொடர் வண்டி தீ வைப்பு சம்பவத்திற்குக் கொண்டு சென்ற மற்ற நிகழ்வுகளின் சங்கிலித் தொடரை, நான்கு மாதங்களுக்குப் பின், 20 செப்டம்பர் 2002 அன்று தாக்கல் செய்யப்பட்ட முதல் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் தான் இவ்வாக்குமூலங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.


காவல்துறைக்கு சோபியா அளித்த வாக்குமூலத்தில் கூறுவதாவது: “நானும் எனது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் எனது மாமாவின் வீட்டிலிருந்து காலை 7:30 மணியளவில் கால்நடையாகவே கிளம்பி கோத்ரா தொடர் வண்டி நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். EMU இரயில் நடைமேடை எண் 1லிருந்து புறப்படுவதால், அந்நடைமேடையிலுளள்ள தண்ணீர் வீட்டின் அருகே நாங்கள் காத்திருந்தோம். இந்த நேரத்தில் தான் சபர்மதி தொடர் வண்டி தஹுத் புறத்திலிருந்து வந்து நடைமேடையில் நிறுத்தபட்டது. தொடர் வண்டியிலிருந்து சிலர் நடைமேடையில் இறங்கினார்கள். அவர்களுடைய தலையில் காவி நிற பட்டி கட்டப்பட்டிருந்ததோடு, அதில் “ஜெய் சிரிராம்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. இவர்கள் தேநீர் மற்றும் சிற்றுண்டி அருந்துவதற்காக தொடர் வண்டியிலிருந்து இறங்குவதைப் போன்று தான் தெரிந்தது. இந்த நேரத்தில், காவிபட்டை அணிந்திருந்த சிலர், நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்தனர். அவர்கள் தாடி வைத்திருந்த ஒருவரை கம்பால் தாக்கினார்கள். (தாடி வைத்திருந்த) அவர் ஒரு முஸ்லிம். அவர்கள், “அடியுங்கள்..... முஸ்லிம்களைக் கொல்லுங்கள்” என்று கத்திக் கொண்டிருந்தார்கள். எனவே நாங்கள் மிகவும் பயந்து போய் இருந்தோம்.


அதன் பிறகு எனது தாயார் மற்றும் சகோதரி ஆகியோருடன் நான் பயணிகள் தங்கும் அறைக்கு செல்ல நகர்ந்தோம். இந்த நேரத்தில் அந்த குழுவிலிருந்தவர்களுள் ஒருவன் பின்புறமாக வந்து அவனது கைகளால் எனது வாயை பொத்தி தொடர் வண்டியின் பெட்டிக்குள் கொண்டு செல்ல முயன்றான். இதை பார்த்தப் எனது தாயார், “அவளைக் காப்பாற்றுங்கள்.... அவளைக் காப்பாற்றுங்கள்” என்று கதறினார். இதன் பின்னர் என்னை இழுத்து சென்று கொண்டிருந்தவன் என்னை விட்டுவிட்டான். நாங்கள் மிகவும் பயந்து போய் இருந்தோம். பயண பதிவு செய்யும் குமஸ்தாவின் அறைக்குள் நின்று கொண்டோம். சிறிது நேரத்திற்கு பின், வதோதராவுக்கு செல்லும் எண்ணத்தை விட்டு விட்டு நாங்கள் வெளியே வந்து ஒரு ரிக்ஷாவை பிடித்துக் கொண்டு பலிய்யாவிலுள்ள (கோத்ரா தொடர் வண்டி நிலையத்திற்கு பக்கத்திலுள்ள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி) எனது மாமி வீட்டிற்குத் திரும்பி விட்டோம்.”

 

சோபியாவின் கூற்றுப்படி, பர்தா அணிந்திருந்த மற்றொரு பெண்ணையும் கூட கரசேவகர்கள் நடைமேயிலிருந்து இழுத்துச் செல்ல முயன்றதாகவும் தெரிவித்தார். ஆனால் இன்று வரையிலும் காவல்துறையினர் அப்பெண்ணை அடையாளம் காணவோ அல்லது அவளது வாக்குமூலத்தை பதிவு செய்யவோ தவறிவிட்டனர்.


இது போன்ற சர்ச்சைகள் கரசேவகர்களுடன் ஏற்பட்ட காரணத்தால், முஸ்லிம்கள் தொடர் வண்டி மீது கல் வீச தொடங்கினார்கள். S-6ல் பயணம் செய்த இராணுவ வீரரான பாண்டே உள்பட அத்தொடர் வண்டியில் பயணம் செய்த மற்ற பிரயாணிகளும் இவ்வுண்மையை உறுதி செய்துள்ளனர்.