Language Selection

வாயும் வயிறும் வளர்த்து நிதம்
வலியப் புகழ் தேடித் திரியும் சிலர் முற்றத்திலோ
போயும் போயும் பொழிந்தோம், என
காயும் நிலவின் வான்பழி மட்டுமல்ல?
வெறும் வித்தகக் கவிஞன் என்ற வீண்பழியும்
வாரா வண்ணம்,
விளங்கட்டும் கவிமுற்றம்


நாம் வர்ணித்து காட்டுவோம் என்பதற்காக
வந்து போகவில்லை நிலவு,
விண்மீன்கள்சிணுங்கும் இரவோடு சிற்றினம் சேராமல்
சுயநலத்தில் ஒதுங்கும் போக்கோடு
ஓரிடத்தில் உறையாமல்
பொதுவில் உலகுக்கு முகம் காட்டும்
தன்னைப் போல உன்னையும் எதிர்பார்த்தே
ஒவ்வொரு நாளும் வருகிறது நிலவு!
வர்ணித்துக் காட்டாதே! வாழ்ந்து காட்டு!


கண்களால் காணும் கனவுகளை விடவும்
நீங்கள் கவிதைகளால் கண்ட கனவு தகுதியானது
ஏன் தெரியுமா?
கனவுகளில் நாம் சிந்திப்பதில்லை.
அனுபவிக்கிறோம்,
உங்கள் கவிதைகளில் (அனுபவிக்க மட்டுமல்ல)
சிந்திக்கிறோம்!


உறக்கத்தில் அமைதியாகக் கண்ட கனவையே
பலருக்கு, ஒழுங்காகச் சொல்லத் தெரிவதில்லை.
இதில் உறங்காத கனவுகளை
இந்த ஊரே சொல்லும்படி
என்னமாய்ச் சொன்னீர்கள்! நன்றி கவிஞர்களே!


உறக்கம் கிடக்கட்டும்
சிலர் விழித்துக் கொண்டிருக்கும்போதே
எதையும் விளங்கிக் கொள்வதில்லை!
பாக்கி கடன் அடைக்க முடியாமல்
குடும்பத்துடன் விவசாயி
பாலிடால் குடித்து சாவதைப் பார்த்தபிறகும்
நோக்கியா வந்ததனால்
நாடு முன்னேறிவிட்டது, என்று யாராவது சொன்னால்
ஆமாம், ஆமாம் என்று
வேகமாய் தலையாட்டும்
சில விளங்காத ஜென்மங்கள்.
இப்படியொரு சூழ்நிலையில்...
உறங்காத கனவுகளின் உணர்ச்சிகளை
நம் நரம்புகளில் ஊட்டிவிட்ட
மனிதக் கவிதைகளை
மனதாரப் பாராட்டுவோம்!
இது நிலா முற்றம்
குழந்தை தாய்க்கு சோ×ட்டுதல் போல
இங்கே குறைகளும் கூட அழகாகும்.
சிதறிய பருக்கையில் உணர்ச்சியின் பசிகள்
பவுர்ணமி முகத்தில் ஒப்பனை எதற்கு?
பசப்பாத உணர்ச்சிகளுக்கு பஜனை எதற்கு?


பொய்நேர்த்தி காட்டாத
உங்கள் செய்நேர்த்திக் கனவுகளோடு
சேர்ந்து கொள்கிறேன், நானும்...


படுத்தால் கனவு பிடுங்குதென்று
பலர் சொல்லக் கேட்டதுண்டு
படுத்துத் தூங்கினால்
விழுந்து பாம்பு புடுங்குது
விழித்து எழுந்தால்
ப.சிதம்பரம் போட்ட பட்ஜெட் புடுங்குது
பாதை தேடி, பலர் விழிகள் நடுங்குது.


சிலர் விழித்திருந்தாலோ! வில்லங்கம்
கனவு கண்டாலோ விபரீதம்
காந்தி சுதந்திரமாய் விழித்திருந்தபோது
ஆட்டுப் பால் காலியானது
அவர் கனவுகண்ட சுதந்திரத்தால்
சாணிப்பால் நம் வாயில் போனது


அம்பானிகள் கண்ட கனவில்
பி.எஸ்.என்.எல்.லின் விழிகள் பிதுங்குது
களவாடிய அரசுப் பணத்தை
கனவிலேயே கழித்துக் கொள்ளச் சொல்லி
"ரிலையன்சின் ரிங்டோன்'
தேசத்துக்கே பழுப்புக் காட்டுது.


வால்மார்ட்டின் வர்த்தகக் கனவில்
இந்தியச் சில்லறை வணிகம் செத்து மிதக்குது.
கோக்பெப்சியின் கனவு
பல குரல் வளையெங்கும் ஓடுது.
எங்கள் பட்டுப்போன வாய்க்கால் கனவு
எலி செத்து நாறுது!
கனவுகளில் வரும் அபத்தங்களைவிடவும்
சிலர் நினைவுகளில் செய்யும் அபத்தங்கள்
நீடித்த வியப்பளிக்கும்!
இரவு உணவின்றி படுக்கப் போவோர்
இந்தியாவில் இருபது சதவீதம்!
பிறப்பது பெண்பால் என்றால்
கருவினை கருக்கிடும் கள்ளிப்பால்.
மீறிப் பிறந்தாலும் ஊறாது தாய்ப்பால்.
ஊட்டச்சத்தின்றி உயிர்ப்பலிகள்.
உறுப்புகள் விற்று... பொறுப்புகள் சுமக்கும் குடும்பங்கள்.
இவ்வளவு பிணங்களும்... கண்களை மறைக்க
இதோ... இந்தியா வல்லரசாகப் போகிறது என்று
சிலர் பீதியூட்டும் அபத்தங்களை
கனவிலும் யாராவது காண முடியுமா?


கனவான்களே! கலாம்களே!
காலந்தோறும் நீங்கள் கண்ட கனவால்
கடைசியில் எங்கள் கிட்னியும்
கழண்டு போனது.
இதயமும் வறண்டு போனது.


இரவுகள் பொதுவாய் இல்லாத நாட்டில்
கனவுகள் பொதுவாய் எப்படி இருக்கும்?


ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கும்
பிட்சா கார்னர்களுக்கும்
இரவு சம்பாதித்துக் கொடுக்கிறது.
நடைபாதை இரவுகளோ
சில்லிடும் பனியின் கொலைக்கரத்தால்
சில ஏழைகளின் உயிரையும்
செலவு செய்து விடுகிறது.


இழவு வீட்டுக்குச் சென்று வரும் வழியில்
குளத்தின் பனிக்குள்
உறையும் நிலவைப் பார்த்து, நீரைத் தொட்டு
நடுக்கும் நடுத்தர வர்க்க இரவு
அறுக்கும் வயலின்
கொதிக்கும் சுனையுடன், உடல் சுடச் சுட
உழவன் குளத்தில் இறங்கும் வேகத்தில்
பனிக்கும் குளிர்விட்டுப் போகும்
நீரைப் பழிக்கும் உழைப்பின் வியர்வை இரவு!


தங்க நாற்கரச் சாலையில்
தடம் குலுங்காமல் விரைகின்றன.
பன்னாட்டுக் கம்பெனிகளின் கனவுகள்
கண்ட்டெய்னர், கண்ட்டெய்னராக...
எங்களூர் கப்பிச் சாலையில் கால் இடறி
தயிர் விற்பவள் தடம் புரண்டு
மண்பானைக் கனவுகள்... மண்ணாய் போகுது!
தரையும் தாரை வார்க்கப்படும் நாட்டில்
புவியீர்ப்பு விசை கூட
பொதுவாய் இருக்குமா என்ன?


இனி கனவுகள் கூட
உனக்கு உரிமை இல்லை.
கண்டமெல்லாம் அமெரிக்காவின் வசம்
வெறும் "காண்டம்' மட்டுமே
இந்திய இளமைக்கு கைவசம்.


நீ ஒரு மாணவனா?
உனது கல்விக்கான மானியத்தை
வெட்டச் சொல்லுது
உலகவங்கியின் கவுச்சிக் கனவு.
அறிவார்ந்த நம் தொழில்நுட்பக் கனவுகளை
தனது காலடியில் போடச் சொல்லி
விழிகளை உருட்டுது அமெரிக்கத் தினவு.
நீ ஒரு விவசாயியா?
உனக்கான இலவச மின்சாரம், நீர்
அனைத்தையும் நிறுத்தச் சொல்லி
உனது கண்களை பறிக்கிறது
உலக வர்த்தகக் கழகத்தின் கனவு!
மண்ணை அகழ்ந்து
நாம் புதைத்து வைத்த இரத்தக் கனவுகளை
அன்னிய டப்பா உணவில்
அடைக்கப் பார்க்குது
இனி நம் அன்னையின் கருவிலும்
அன்னிய மூலதனம்!


பழுப்பு நிலக்கரி கனவுகளுக்காக
பாதாளத்தில் மண் சரிந்து
மூடிய விழிகள் எத்தனை? எத்தனை?
வழுக்கும் கிரானைட் வார்த்து எடுக்க
உயிர் வழுக்கிச் சிதைந்த முகங்கள் எத்தனை?
பரந்து கிடக்கும் மின்சாரம், தொலைபேசி இழைகளுக்குள்ளே
இறந்து துடிக்கும் தொழிலாளர் உயிரணுக்கள்
ஒன்றா? இரண்டா?
மயங்கி விழும் உனக்கு ஒரு சோடா கொடுக்க
மைல் கணக்கில் இயங்கிடும் மிதிவண்டியே
இரும்புக் குரலில் என்னைவிட்டுவிடு
போதும் எனக் கதற
உயிர் மூச்சுக் கொடுத்து தொழிலாளி
உருவாக்கிய சந்தைகள் எத்தனை?
சத்தமில்லாமல் அத்தனையையும்
தட்டிப் பறிக்க வரும் மறுகாலனி ஆதிக்கத்தை
உங்கள் உறங்காத கனவுகள்
ஒழிக்காமல் விடுமா என்ன?
நீங்கள் மண்ணைக் கிளப்பிடும் காற்று
எதிரிகளின்
கண்ணை உறுத்தட்டும் உங்கள் கனவுகள்!


மாறாக!
இரண்டு ரூபாய் அரிசியில் கிறங்கி...
இலவச டி.வி.யில் மயங்கி...
இழிவுகளோடு உறங்கி..னால்
என்ன கனவு வரும்?
""கூட்டணி வைத்து பல பாம்புகள் துரத்தும்
நாயும் கூட கேவலம் பேசும்
பன்றிகள் பக்கத்தில் நிற்க அருவருத்து ஓடும்,
எதிர்ப்புணர்வே இல்லாததைப் பார்த்து
எறும்புகள் மண்ணை வாரித் தூற்றும்...''
இனியாவது அடிமைக்கனவைக் கலைப்போம்
விடுதலைக் கனவுகள் விதைப்போம்
கனவு காணும் மனிதர்களாக மட்டுமல்ல
கனவுகள் நம்மை காணத் துடிக்கும்...
மனிதர்களாக இருப்போம்!

துரை சண்முகம்

 

(1.2.2007 அன்று தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் நடைபெற்ற ""கவிதை முற்றம்'' எனும் நிகழ்ச்சியில் "உறங்காத கனவுகள்'' எனும் தலைப்பில் தலைமை தாங்கி வாசித்த கவிதை)


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ