Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel

இருள்

  • PDF

வாடிய உயிர்கள அணைப்பாய்

ஆடிஓ டிப்போய் இட்டும்,
அருந்துதல் அருந்தி யும், பின்
வாடியே இருக்கும் வைய
மக்களை, உயிர்க்கூட் டத்தை,
ஓடியே அணைப்பாய் உன்றன்
மணிநீலச் சிறகளாவ
மூடுவாய் இருளே, அன்பின்
முழக்கமே, உனக்கு நன்றி!

இருளின் பகலாடை இரவாடை

விண்முதல் மண் வரைக்கும்
வியக்கும்உன் மேனி தன்னைக்
கண்ணிலே காண்பேன்; நீயோ
அடிக்கடி உடையில் மாற்றம்
பண்ணுவாய் இருளே, உன்றன்
பகல்உடை தங்கச் சேலை!
வெண்பட்டில் இராச் சேலைமேல்
வேலைப்பா டென்ன சொல்வேன்!

இருள், நீர்நிலை, கதிர், சுழல்வண்டு

'எங்குச் செல் கின்றாய்' என்று
பரிதியை ஒரு நாள் கேட்டேன்;
'கங்குலை ஒழிக்க' என்றான்.
கடிதுசெல் தம்பி என்றேன்.
அங்குன்னைத் தொடர்ந்தான்; நீயோ
அகல்வதாய் நினைத்தான்; என்னே!
எங்கணும் நிறைந்த நீர் நீ!
அதில், 'கதிர்', சுழல்வண் டன்றோ! நீ

நீ முத்துடை போர்த்து நின்றாய்

கள்ளரை வெளிப் படுத்தும்
இருட்பெண்ணே, கதை ஒன்றைக் கேள் ;
பிள்ளைகள் தூங்கினார்கள் ;
பெண்டாட்டி அருகில் நின்றாள் ;
உள்ளமோ எதிலும் ஒட்டா
திருக்கையில், நிமிர்ந்தேன், நீயோ
வெள்ளைமுத் துக்கள் தைத்த
போர்வையை மேனி போர்த்தே.

கொண்டையில் நிலாக் கொண்டைப்பூ

மண்முதல் விண் வரைக்கும்
வளர்ந்தஉன் உடல் திருப்பிக்
கண்மலர் திருப்பி நின்றாய்!
பின்புறம் கரிய கூந்தற்
கொண்டையில் ஒளியைக் காட்டும்
குளிர்நிலா வயிர வில்லை
கண்டேன்; என் கலங்கும் நெஞ்சம்
மனைவியின் திருமுன் செல்லும்!

பிறப்பும் இறப்பும்

வானொடு நீபி றந்தாய்!
மறுபடி, கடலில் தோன்றும்
மீன் என உயிர் உடல்கள்
விளைந்தன! எவ்வி டத்தும்
நீநிறை வுற்றாய்! எங்கும்,
பொருளுண்டேல் நிழலுண் டன்றோ!
பானையில் இருப்பாய் ; பாலின்
அணுத்தோறும் பரந்தி ருப்பாய்!

உருப்படியின் அடையாளத்தை இருள் அறிவிக்கும்

உயர்ந்துள்ள அழகு மூக்கின்
இருபுறம் உறைவாய் ; மங்கை
கயல்விழிக் கடையில் உள்ளாய்;
காதினில் நடுப்பு றத்தும்,
அயலிலும், சூல்வாய் பெண்ணின்
முகத்தினில் அடையா ளத்தை
இயக்குவாய் இருளே, உன்சீர்,
ஓவியர் அறிந்தி ருப்பார் !

இருளே அழகின் வேர்

அடுக்கிதழ்த் தாமரைப் பூ
இதழ்தோறும் அடிப்பு றத்தில்
படுத்திருப் பாய்நீ ! பூவின்
பசைஇதழ் ஒவ்வொன் றுக்கும்
தப்புக்காட் டுகின்றாய் ! இன்றேல்,
தாமரை அழகு சாகும் !
அடுத்திடும் இருளே, எங்கும்,
அனைத்துள்ளும் அழகு நீயே !

அறியாமைதான் இருள்;
ஆனால் அதுதான் அறிவைச் செய்யும்

அறிவென்றால் ஒளியாம். ஆம்ஆம்!
அறியாமை இருளாம். ஆம்ஆம்!
அறியாமை அறிவைச் செய்யும்;
அறியாமை அறிவால் உண்டோ ?
சிறுவனைத் தீண்டிற்றுத் தேள்;
நள்ளிருள் ; விளக்குத் தேவை;
நிறைவேற்ற நெருப்புக் குச்சி
தேடினார் ; கிடைக்க வில்லை.

இருளின் பெருமை இயம்ப அரிது

பெட்டியில் இருப்ப தாகப்
பேசினார் ; சாவி இல்லை;
எட்டுப்பேர் இதற்குள் தேளால்
கொட்டப்பட் டுத்து டித்தார்;
"கட்டாயம் து஡ய்மை வேண்டும்"
என்னுமோர் அறிவு தன்னை
இட்டளித் திட்ட நல்ல
இருளே உன் பெருமை என்னே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm