Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

குழந்தைப் பள்ளிக்கூடம் தேவை

  • PDF

கூட்டின் சிட்டுக் குருவிக் குஞ்சு
வீட்டின் கூடத்தில் விழுந்து விட்டது!
யாழ்நரம்பு தெறித்த இன்னிசை போலக்
கீச்சுக் கீச்சென்று கூச்ச லிட்டது.
கடுகு விழியால் தடவிற்றுத் தாயை
தீனிக்குச் சென்றதாய் திரும்ப வில்லையே!

தும்பைப் பூவின் துளிமுனை போன்ற
சிற்றடி தத்தித் திரிந்து, சிறிய
இறக்கையால் அதற்குப் பறக்கவோ முடியும்!

மின் இயக்க விசிறி இறக்கையால்
சரேலென விரைந்து தாய்க்குருவி வந்தது.
கல்வி சிறிதும் இல்லாத் தனது
செல்வத் தின்நிலை தெரிந்து வருந்தி,
"இப்படி வா"என இச்இச் என்றதே!
அப்படிப் போவதை அறிந்து துடித்ததே!

காக்கையும் கழுகும் ஆக்கம் பெற்றன!
தாக்கலும் கொலையும் தலைவிரித் தாடின;
அல்லல் உலகியல் அணுவள வேனும்
கல்லாக் குழந்தையே கடிதுவா இப்புறம்
என்றது! துடித்த தெங்கணும் பார்த்தது!

மேலிருந்து காக்கை விழிசாய்த்து நோக்கிப்
பஞ்சுபோற் குஞ்சைப் பறித்துச் சென்றதே!
எழுந்து லாவும் இளங்குழந் தைகளை
இழந்து போக நேரும்;
குழந்தைப் பள்ளிக் கூடங்கள் தேவையே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt250