Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் காஸா: முற்றுகைக்குள் வாழ்தல்

காஸா: முற்றுகைக்குள் வாழ்தல்

  • PDF

இஸ்ரேலிய இராணுவ முற்றுகைக்குள் 1.5 மில்லியன் பாலஸ்தீனிய மக்கள். அவர்கள் வாழ்வது காஸா என்ற மாகாணம். இல்லை, அது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை. அம்மக்களின் அத்தியாவசிய தேவைகள்,சமையல் வாயு, மின்சாரம், தண்ணீர்,உணவு, மருந்து, எதுவுமே இஸ்ரேலிய படைகளை கடந்து போவதில்லை. இதனால் மருத்துவமனைகளில், குழந்தைகளின் இறப்புவீதம் அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வதே ஒரு போராட்டம் தான்.

 

உத்தியோகபூர்வமாக இஸ்ரேலின் ஒரு பகுதியான காஸாவை சேர்ந்த மக்கள், பாலஸ்தீனியர்கள் என்ற காரணத்தால் மட்டுமல்ல, தமக்கு பிடித்த ஹமாஸ் கட்சியை, பொதுத்தேர்தலில் ஜனநாயகரீதியாக தெரிவு செய்ததே, அவர்கள் செய்த "மாபெரும் குற்றம்." ஜனநாயகக் காவலர்களாக வேடம் போடும் மேற்குலக நாட்டு அரசுகள், காஸா மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற களமிறங்கவில்லை. அதற்கு மாறாக, பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யயப்பட்ட ஹமாசுடன் ஒத்துழைக்க மறுத்தனர். ஒரு பக்கம் ஜனநாயகத்திற்காக போராடும் மேற்குலக கனவான்கள், மறு பக்கம் தமக்கு பிடிக்காத கட்சிகளை மக்கள் தெரிவு செய்தால், ஜனநாயக மறுப்பாளர்களாக மாறிவிடுகின்றனர். சிலி, கொங்கோ, அல்ஜீரியா, வெனிசுவேலா... இந்த வரிசையில் காஸா. இப்படி இவர்களது ஜனநாயக முகத்திரை அடிக்கடி கிழிந்து, சுயரூபம் தெரிகின்றது.

 

இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகளை விட்டு விடுவோம். மனித அவலத்தை தடுக்கும் வகையில் "வெற்று தீர்மானங்களை" யாவது எடுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கு, இரண்டு வருடமாக காஸா மக்கள், இராணுவ முற்றுகைக்குள் இன்னலுருவது மட்டும் கண்ணுக்குத் தெரியவில்லை. "சர்வதேச சமூகமும்" (யார் அது?) அக்கறைப்படுவதில்லை. "நடுநிலை தவறாத" மேற்குலக ஊடகங்களுக்கு, தற்போது "சீன முற்றுகைக்குள் வாடும் திபெத்தியர்கள்" நிலை பற்றி புலனாய்வு செய்வதால், நேரம் கிடைப்பதில்லை போலும்.

 

இத்தகைய பின்னணியில், சில அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்களின் கடும் முயற்சியினால், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் ஆகிய பல்வேறு தேசத்தவர்களை கொண்ட, குழுவொன்று, இரண்டு மீன்பிடி வள்ளங்களில், சைப்ரசில் இருந்து காஸா நோக்கி சென்றுள்ளனர். "Free Gaza" என்று அழைக்கப்படும் இந்த குழுவில், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டொனி ப்ளேரின் உறவுக்காரப் பெண்ணொருவரும், கிரீஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், சில (இஸ்ரேலிய) யூதர்களும் பங்கு பற்றுவது சிறப்பம்சமாகும்.

 

Free Gaza Movement, தமது பயணத்தை தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே, இஸ்ரேலில் இருந்து 375 கி.மி. தொலைவில் இருக்கும் சைப்ரஸ் தீவில் ஒரு பத்தரிகையாளர் மகாநாட்டை நடத்தி தமது மனிதாபிமான உதவி பற்றி தெளிவு படுத்தியிருந்தனர். மருந்து, மற்றும் பிற நிவாரணப் பொருட்களை ஏற்றிச்செல்லும் தமது பயணம், காஸா முற்றுகையை முறியடிக்கும் ஒரு அடையாள நடவடிக்கை என்றும் கூறினர்.

 

சைப்ரசின் லர்னகா துறைமுகத்தில் இருந்து கிளம்பிய, 42 நிராயுதபாணிகளான சமூக ஆர்வலர்களின் பயணத்தை தடுக்குமாறு, இஸ்ரேலிய அரசு சைப்ரஸ் அரசிடம் கேட்டும், அது கைகூடவில்லை. முன்பு ஒருமுறை, எழுபதுகளில் பாலஸ்தீன விடுதலை போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில், வெளிநாடுகளில் புகலிடத்தில் இருந்த பாலஸ்தீன அகதிகளின் குழுவொன்று, இது போன்றே சைப்ரசில் இருந்து கப்பலில் தமது தாயகம் திரும்ப திட்டமிட்டனர். அனால் இரவோடு இரவாக மொசாத் உளவாளிகள், சைப்ரசில் லிமசோல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (அகதிகளின்) கப்பலை குண்டு வைத்து தகர்த்தால், அந்தப் பயணம் நிறைவேறவில்லை. அது போன்றே தற்போதும் எதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என்ற அச்சம் இருந்தது.

 

Free Gaza குழுவினரின் வள்ளங்கள், புயல்காற்றையும், கடல் கொந்தளிப்பையும் மீறி, இஸ்ரேலிய கடல்பரப்பை அண்மித்த வேளை, இஸ்ரேலிய கடற்படை அவர்களது தொலை தொடர்புகளை அடிக்கடி இடையூறு செய்தது. முதலில் காசாவினுள் பிரவேசிக்க விடமாட்டோம் என்று அடம்பிடித்த இஸ்ரேலிய அரசு, பின்னர் அத்தகைய நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம் என்பதால், காஸா செல்ல அனுமதித்தது. காசாவில் தரையிறங்கிய சர்வதேச சமூக ஆர்வலர்களை, பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் கடற்கரையில் கூடி நின்று வரவேற்புக் கொடுத்தனர். காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில், இரண்டு வருட முற்றுகைக்குள், இன்னல்களுக்குள் உயிர்வாழும் மக்கள், சர்வதேசத்தால் பாராமுகமாக விடப்படவில்லை, என்பதை காட்டுவதே தமது நோக்கம் என்று Free Gaza ஆர்வலர்கள் தெரிவித்தனர். இன்று (24-8-2008) காசாவில் அந்த ஆர்வலர்கள், பத்திரிகையாளர் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்த போதும், CNN, BBC போன்ற "நடுநிலை தவறாத" ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

 

இதற்கிடையே, இரண்டு வருட பொருளாதார முற்றுகையாலும் காஸா பாராளுமன்ற தொகுதிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட ஹமாஸ் அரசை அசைக்க முடியவில்லை, என்பதை கண்டு கொண்ட இஸ்ரேலிய அரசு; தற்போது குறுக்குவழியில் குண்டுவெடிப்புகள், அரசியல் படுகொலைகள் மூலம் அதனை சாதிக்க விளைகின்றது. அதற்காக ஹமாசின் எதிராளிகளான பதா கட்சியின் உறப்பினர்கள் சிலர் இஸ்ரேலிய கூலிப்படையாக செயற்படுகின்றனர். பாலஸ்தீன பகுதிகளில் ஊழல் ஆட்சி காரணமாக தோல்வியுற்ற பதா கட்சி, எதிர்க்கட்சியான ஹமாஸை அகற்ற, இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. பதா உளவுப்பிரிவு அதிகாரி டஹ்லன் தலைமையிலான குழுவொன்றுக்கு, அமெரிக்காவும், எகிப்தும் இராணுவப்பயிற்சி வழங்குகின்றன. காஸா தெற்கு பகுதியை எல்லையாக கொண்ட (ஒரு அரபு நாடான) எகிப்து, தனது எல்லைகளையும் மூடியுள்ளது. சில கடத்தல்காரர்கள் நிலத்துக்கு கீழே சுரங்கம் தோண்டி அத்தியாவசிய பொருட்களை கடத்திவந்த போதும், எகிப்திய போலிஸ் அத்தகைய சுரங்கங்களை கண்டுபிடித்து மூடி வருகின்றது. சுரங்கம் எவ்வளவு தூரத்திற்கு போனாலும், இஸ்ரேலின் நவீன நுண்ணறி கருவிகள் கண்டுபிடிக்கின்றன.

http://kalaiy.blogspot.com/2008/08/blog-post_24.html

Last Updated on Sunday, 24 August 2008 19:13