Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சமூகவியலாளர்கள் காதலைத் தீய்த்த கட்டுப்பாடு

காதலைத் தீய்த்த கட்டுப்பாடு

  • PDF

வேற்றூர்போய் நள்ளிரவில் வீடுவந்த
வேலனிடம் ஆள்ஒருவன் கடிதம்தந்தான்.
ஏற்றதனை வாசிக்க லுற்றான்வேலன்:
"என்னருமைக் காதலரே கடைசிச்சேதி;
நேற்றிரவு நாமிருவர் பூந்தோட்டத்தில்
நெடுநேரம் பேசியதை என்தாய்கண்டாள்!
ஆற்றாத துயரால்என் தந்தை,அண்ணன்
அனைவரிட மும்சொல்லி முடித்துவிட்டாள்.

குடும்பத்தின் பெயர்கெடுக்கத் தோன்றிவிட்டாய்
கொடியவளே! விஷப்பாம்பே! என்றுதந்தை
தடதடவென் றிருகையால் தலையில்மோதித்
தரையினிலே புரண்டழுதார். அண்ணன்அங்கு
மடமடவென் றேகொல்லைக் கிணற்றில்வீழ்ந்தே
மாய்வார்போல் ஓடிப்பின் திரும்பிவந்து
படுபாவி தாலியற்ற பிறகும்இந்தப்
பழுதுநடை கொள்வதுண்டோ என்றுநைந்தார்.

தாயோஎன் எதிர்வந்து தாலியோடு
சகலமும் போயினஏடி இன்னும்என்ன!
தீயாகிக் கொளுத்திவிட்டாய் எம்மையெல்லாம்!
தெருவார்கள் ஊரார்கள் இதையறிந்தால்
ஓயாமல் தூற்றிடுவார்! யாம்இவ்வூரில்
உயர்ந்திருந்தோம்; தாழ்த்திவிட்டாய் அந்தோ!நீதான்
பாயேனும் விரித்ததிலே படுப்பதுண்டா
பதியிழந்தால்? மூதேவி என்றுசொன்னாள்.

தந்தையார்அடி உன்னைக் கொன்றுபோட்டுத்
தலையறுத்துக் கொள்ளுகின்றேன் என்பார்.அண்ணன்
அந்தமதி யற்றவனைக் கொல்வேன்என்றே
அருகிருக்கும் கொடுவாளைப் பாய்ந்தெடுப்பான்!
இந்தவிதம் கொதித்தார்கள் இரவுமட்டும்!
இனிஎன்னால் அவர்கட்குத் தொல்லைவேண்டாம்;
சுந்தரனே, என்காதல் துரையே!உன்னைத்
துறக்கின்றேன் இன்றிரவில் கடலில்வீழ்ந்தே!ரு

காதலியின் கடிதத்தில் இதைவாசித்தான்!
கதறினான்! கடல்நோக்கிப் பறந்தான்வேலன்!
ஈதறிந்தார் ஊரிலுள்ளார்! ஓடினார்கள்!
எழில்வானம், முழுநிலவு, சமுத்திரத்தின்
மீதெல்லாம் மிதக்கும்ஒளி, அகண்டாகாரம்
மேவுபெருங் காட்சியில்ஓர் துன்பப்புள்போல்
மாதுகடற் பாலத்தின் கடைசிநின்று
வாய்விட்டுக் கதறுகின்றாள் வசமிழந்தாள்:

எனைமணந்தார் இறந்தார்;என் குற்றமல்ல;
இறந்தவுடன் மங்கலநாண், நல்லாடைகள்,
புனைமலர்குங் குமம்அணிகள் போனதுண்டு;
பொன்னுடலும் இன்னுயிரும் போனதுண்டோ ?
எனைஆளும் காதலுக்கோர் இலக்கியத்துக்
கிசைந்ததெனில் உயிரியற்கை; நான்என்செய்வேன்?
தனையடக்கிக் காதலினைத் தவிர்த்துவாழும்
சகம்இருந்தால் காட்டாயோ நிலவேநீதான்!

கண்படைத்த குற்றத்தால் அழகியோன்என்
கருத்தேறி உயிர்ஏறிக் கலந்துகொண்டான்!
பெண்படைத்த இவ்வுலகைப் பல்லாண்டாகப்
பெற்றுணர்ந்த நெடுவானே! புனலே!கூறீர்,
மண்படைப்பே காதலெனில் காதலுக்கு
மறுப்பெதற்குக் கட்டுப்பா டெதற்குக்கண்டார்?
புண்படைத்த என்நாடே, கைம்மைக்கூர்வேல்
பொழிகின்றாய் மங்கையர்மேல்! அழிகின்றாயே!

ஆடவரின் காதலுக்கும் பெண்கள்கூட்டம்
அடைகின்ற காதலுக்கும், மாற்றமுண்டோ ?
பேடகன்ற அன்றிலைப்போல், மனைவிசெத்தால்
பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட்கின்றான்!
வாடாத பூப்போன்ற மங்கைநல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல்தீதோ?
பாடாத தேனீக்கள், உலவாத்தென்றல்,
பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ ?

இளமைதந்தாய், உணர்வுதந்தாய், இன்பங்காணும்
இன்னுயிரும் தந்திட்டாய் இயற்கைத்தேவி,
வளமையற்ற நெஞ்சுடையார் இந்நாட்டார்கள்
மறுக்கின்றார் காதலினைக் கைம்மைகூறி!
தளைமீற வலியில்லேன்! அந்தோ! என்றன்
தண்டமிழின் இனிமைபோல் இனியசொல்லான்
உளமாரக் காதலித்தான் என்னை!அன்னோன்
ஊர்நிந்தை ஏற்பதனைச் சகிப்பேனோநான்!

ஓருயிரும் இரண்டுடலும் நாங்கள்!எம்மை
உளிகொண்டு வெட்டிவிட்ட கட்டுப்பாடே,
தீராத காதலினை நெஞ்சத்தோடு
தீய்த்துவிட்டாய் என்றாள்.பின் ஓடிவந்து
சீராளன் தாவினான்! வீழ்ந்தாள்!வீழ்ந்தான்!
தேம்பிற்றுப் பெண்ணுலகு! இருவர்தீர்ந்தார்!
ஊரார்கள் பார்த்திருந்தார் கரையில்நின்றே
உளம்துடித்தார்; எனினும்அவர் உயிர்வாழ்கின்றார்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaathal.htm#dt116