Language Selection

உலகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் ஒன்றோடொன்று முரணானவையா? சரி முரணானவை என்றால் எப்படி? எந்த வகையில்? எந்த வர்க்க நலன்களின் அடிப்படையில்? இந்தியாவில் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களினதும், தேசிய முதலாளினதும் நலன்கள்,

 இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களாக இருப்பதில்லை. எனவே அதை பற்றிய ஒரு விவாதமல்ல இது.

 

அண்மைக் காலமாக மேற்குக்கு எதிராக இந்தியா அல்லது தென்னாசிய நாடுகளின் பகை முரண்பாடுகள் பற்றி கற்பனையில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. புலி, புலியல்லாத ஆய்வுகள் கூட இதற்குள் கட்டமைக்கப்படுகின்றது. இந்த வகையில் ஒரு அரசியல் தளம், உலகமயமாதல் எதார்த்தத்தை திரித்தே கட்டமைக்கப்படுகின்றது. இந்த வகையில் புலிகள் மட்டுமல்ல, புலிகளின் எதிர்தரப்பின் ஒரு பகுதியும் கூட இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். வாதங்கள் சகட்டு மேனியில் கண்மூடித்தனமாகவே நடத்தப்படுகின்றது. அரசியலற்ற வெற்றுத்தனங்கள், இப்படி வம்பளக்க வைக்கப்படுகின்றது.

 

இது போன்றே ஜே.வி.பி அரசியல் செயல்பாடுகள் இருப்பதாக நம்பப்படுகின்றது. தென்னாசிய சமூகத்தை சார்ந்து, குறிப்பாக இந்தியாவைச் சார்ந்து நின்று மேற்கை எதிர்ப்பது போன்ற ஒரு அரசியல் பிரமையை, நாடகத்தை, ஒரு மயக்கத்தை உருவாக்குகின்றனர். சிலர் புலி மேற்கைச் சார்ந்ததாக காட்டி, தென்னாசிய அரசியலை ஆதரிக்கும் வகையில் புலிகளை அழிக்க வேண்டும் என்கின்றனர். இப்படி முரண்நிலைத் தன்மையான வாதங்கள். புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்கவும், தாங்கள் என்ன அரசியலைக் கொண்டுள்ளோம் என்ற அடிப்படையில் செயல்படத் தவறுகின்ற போதும் இது வீங்கி வெம்புகின்றது. கற்பனைப் புனைவுகளும், குதர்க்கமும், குழப்பமும் இதன் அரசியல் சாரமாகும்.

 

புலிகளின் அரசியல் நெருக்கடிகள் முதல் சமகால நிலமைகளை புரிந்து விளக்குதல் எப்படி என்ற கேள்வி விடையாகவே, இந்த மலிவான அரசியல் திரிபு புகுத்தப்படுகின்றது. இதன் பின்னணியில் புலியை மேற்கின் எடுபிடிகளாக செயல்படுவதாக சித்தரிப்பது முதல், இந்தியாவுக்கும் மேற்குக்கும் முரண்பாடுகள் உள்ளதாக காட்டி புலிகள் நீச்சல் அடிப்பது வரை, இந்த கற்பனை அரசியல் அரங்கம் கட்டமைக்கப்படுகின்றது.

 

உண்மையில் அரசியல் பொருளாதார அடிப்படையில் வாதிடத் தவறுகின்றனர். மேலோட்டமான நிகழ்ச்சிகள் மீது மேய்கின்ற ஒரு திசைவிலகலாகவே, இவை பொத்தாம் பொதுவில் அணுகப்படுகின்றது.

 

புலிகளின் விமானத் தாக்குதல் நடந்ததன் பின்பாக இந்த நடவடிக்கை தென்னாசியாவுக்கு ஆபத்து என்றும், இது மேற்கத்தைய சதி என்றும், இதுபோன்ற பல புலியல்லாத கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. சர்வதேச ரீதியாக புலிகள் பற்றிய நிலைப்பாட்டுக்கு மாறானது. உலகமயமாதல் புலிகளை ஒரே வகையில் தான், ஒரு நேர்கோட்டில் தான் புரிந்து கொள்கின்றது. புலிகளைப் பற்றி அபத்தமான வகையில் மதிப்பிடுவது மட்டுமின்றி, தென்னாசிய சூழலையே தலைகீழாக்கி விடுகின்றனர். புலிகளை அனைத்துக்குமான மையப்புள்ளியாக வைத்து, தென்னாசிய மற்றும் மேற்கத்தைய நலன்களைப் பற்றிய ஆய்வுகள், முடிவுகளை அறிவிப்பது அபத்தமாகும்.

 

மேற்கில் புலிகளை ஒடுக்கும் நடிவடிக்கைகள் நடக்காத நிலையில், அதையிட்டும் புலம்பும் புலியெதிர்ப்பு, மேற்கு புலிக்கு ஆதரவாக இருப்பதாக காட்டுவது நிகழ்கின்றது. மேற்கு நடவடிக்கைகள் சட்டதிட்ட எல்லைக்குள் இருப்பதைக் காண்பதில்லை. புலிகளிடம் மட்டும் ஜனநாயகத்தைக் கோரும் ஜனநாயக விரோதிகளுக்கு, இது சூக்குமமாகி புரிய மறுக்கின்றது. மேற்கின் நிலைப்பாடுகள் இனப்பிரச்சனையை தீர்க்கின்ற எல்லைக்குள் தான், நடவடிக்கைளை மட்டுப்படுத்துகின்றது. இந்த வகையில் இலங்கை அரசின் தீர்வு நடவடிக்கையுடன் ஒருங்கிணைந்ததாகவே அமையும்.

 

முரண்பாடு பற்றிய கற்பனை ஆய்வுக்கு மையமாக இந்தியாவின் கொள்கை பற்றியும், அதன் மேற்கு விரோத நிலை பற்றியும் பற்பல எடுகோள்கள். உண்மையில் அரசியலை ஒரு இடை நீக்கல் வழியாக கற்பித்து, அதன் ஊடாக தேடுவது இதன் சாரமாகும்.

 

மேற்குடனான தென்னாசிய முரண்பாடு அதாவது இந்திய முரண்பாட்டின் சாரம் என்ன? அது எங்கிருந்து, எப்படி எந்த வழியில் உருவாகின்றது. இதற்கான அரசியல் அடிப்படை தான் என்ன? பொருளாதார அடிப்படைகள் தான் என்ன?

 

1. இந்தக் கேள்விகள் பற்றியும், இந்தியாவின் உள்ளார்ந்த புரட்சிகர பிரிவுகளின் மைய விவாதத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது.

 

2. முரண்பாடு, முரண்பாட்டின் தன்மை என்பது அனைத்தும் தழுவியது. முரண்பாடுகள் இல்லாத உலகம் என்பது கற்பனையானது. ஒரு மனிதனுக்குள்ளும், அவனின் சிந்தனைக்குள்ளும் கூட முரண்பாடுகள் உண்டு. ஒரு முரண்பாடு அனைத்தும் தழுவியதாக, காணப்படும் போது, முரண்பாடுகளின் எதிர் நேர் முரண் தன்மையில் ஒன்று மேலோங்கி காணப்படும். சடப்பொருள் முதல் உயிர் உள்ளவற்றின் இயக்கமே அது சார்ந்தது தான்.

 

இந்த வகையில் மனிதனைச் சூறையாடும் இன்றைய உலகமயமாதல் என்ற சமூக அமைப்பில், இந்தியாவுக்கும் மேற்குக்கும் இடையில் முரண்பாடு உண்டா? இங்கு இவர்களுக்கு இடையில் அரசியல் பொருளாதார முரண்பாடுகள், எதிர்நிலைத் தன்மையிலா காணப்படுகின்றது? இல்லை, மாறாக முரண்பாடுகள் நட்பு முரண்பாடாக காணப்படுவதுடன், மேற்கின் நலன்கள் தான் இந்தியாவின் நலன்களாக உள்ளது. அதாவது மேற்கின் நலன்கள் என்பது, சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டும் நலன்கள். ஏகாதிபத்திய நலன்கள் என்பதும் இது சார்ந்ததே. இந்த வகையில் தான் இந்திய ஆளும் சுரண்டும் வர்க்கம், உலகமயமாதலை ஒருங்கமைத்துள்ளது. அனைத்து சுரண்டல் வடிவங்களும், அதை பாதுகாக்கும் சட்ட அமைப்புகளும், மேற்கின் (ஏகாதிபத்திய) சுரண்டல் நலன்களுடன் பின்னிப்பிணைந்தாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள முரண்பாடுகள் படிப்படியாக களையப்படுகின்றது. அதாவது இந்தியாவின் உழைக்கும் மக்களுடன் உள்ள ஆளும் வர்க்கத்தின் முரண்பாடுகள், முத்தி ஒரு மோதலாக மாறாத வண்ணம் மிக அவதானமாக இருக்கும் போதுதான், மேற்குடனான முரண்பாடுகள் இருப்பது போல் காட்சியளிக்கின்றது. கானல் நீராக உள்ள இந்த முரண்பாடு, படிப்படியாகவே அகற்றப்படுகின்றது. உழைக்கும் மக்களுடான முரண்பாட்டை அவர்களுக்கு இடையிலானதாக்கி, மேற்கு முரண்பாடுகள் களையப்படுகின்றது.

 

இப்படி இந்தியாவின் ஆளும் வர்க்க நலன்கள் என்பது, மேற்கத்தைய சுரண்டல் நலனுக்கு முரணாக இருப்பதில்லை. இந்தியாவின் சர்வதேசக் கொள்கை என்பது, மேற்குக்கு எதிரானதல்ல. அதாவது ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு எதிரானதல்ல.

 

இந்திய தரகுமுதலாளிகளின் நலன்கள் என்பது, இந்தியாவின் பரந்துபட்ட மக்களின் நலன்கள் அல்ல. இது ஆளும் வர்க்கத்தின் நலன்களாகும். இந்தியாவின் நலன்கள் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்கு முன்பாகவே, ஏகாதிபத்திய சுரண்டலை அடிப்படையாக கொண்டே இருந்தது. இந்தியாவின் அன்றாடம் உருவாகும் தேசிய முதலாளிகளின் நலன்களை, இந்தியாவின் ஆளும் வர்க்கம் பிரதிபலிப்பதல்ல. இந்தியாவின் தேசிய முதலாளிகளின் நலன்கள், இந்தியாவின் போலிச் சுதந்திரத்தின் பின்பாக கூட பாதுகாக்கப்படவில்லை. அவையும் படிப்படியாக அன்றாடம் அழிக்கப்பட்டே வந்தன. இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல் படி, அவை மேலும் வேகமாக திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. இப்படி இந்திய மக்கள் நலன் சார்ந்த எந்த வர்க்கக் கூறினதும் நலன்களை, இந்தியாவின் ஆளும் வர்க்கம் கொண்டிருப்பதில்லை. மாறாக அதற்கு எதிராக செயல்படுகின்றது. இதுவே தென்னாசிய நாடுகளின் நிலை கூட.

 

இந்த நிலையில் இலங்கை விவகாரத்தில் இந்திய நலன்கள் தனித்துவமாக செயல்படுதில்லை. அதாவது மேற்குக்கு எதிரான ஒரு வர்க்கத்தின் நலனுக்காக, இலங்கை விடையத்தில் இந்தியா முரண்படுவது கிடையாது. அப்படி ஒரு வர்க்கத்தை இந்தியா பிரதிபலிப்பதில்லை. இந்நிலையில் முரண்படுவதாக கூறுவது, எந்த வர்க்கத்தின் நலனை அடிப்படையாக கொண்டது?

 

வர்க்கங்களைக் கடந்தது இந்தியாவின் முரண்பாடு என்பது கற்பனையானது. ஒரு சார்பு நிலை என்பது, எங்கும் எதிலும் வர்க்கம் சார்ந்தது. இந்தியாவின் ஆளும் வர்க்க நலன்கள், ஏகாதிபத்திய வர்க்க நலனுக்கு முரணானதல்ல. முரணானது என்பது எப்படி?

 

புலிகளின் வர்க்க நலன் இந்திய நலனுடன், அதாவது மேற்கத்தைய நலனுடன் முரண்பட்டதல்ல. அதனால் அந்த எல்லையில், புலிகளுடன் அவர்கள் முரண்படுவதில்லை. புலிகளுடனான முரண்பாடு என்பது, புலிகளின் நலன்சார் நடவடிக்கை அந்த நாடுகளின் சுரண்டல் வர்க்கத்தின் நலனுக்கு இசைவானதாக அதே திசையில் இருப்பதில்லை. குறிப்பாக புலிகளின் தனிமனித நலன்சார் நடவடிக்கைகள், உலகமயமாதல் பொது நடைமுறைக்கு எதிரான வகையில் குத்தும் முள்ளாகி முரண்படுகின்றது. சுரண்டும் வாக்கங்களுக்கு இடையிலான முரண்பாடு, புலிகள் விடையத்தில் அதீதமான குழுவாதத்தால் பகைமுரண்பாடாக மாறிச் செல்லுகின்றது. இது உலகமயமாதல் பொருளாதார அமைப்புக்கு எதிராக அல்ல, மாறாக ஒரு மாபியாக் கும்பலுக்குரிய ஒரு பின்னணியில் இது ஏற்படுகின்றது.

 

மேற்கத்தைய மற்றும் இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு, புலிகள் பற்றிய அதன் வர்க்க உள்ளடக்கத்தில் முரண்பாடு கிடையாது. மாறாக அந்த நாடுகளின் சுரண்டும் வர்க்கம், சுதந்திரமாக சுரண்ட புலிகளின் மாபியா நடவடிக்கைகள் தடையாக இருக்கின்றது. இதனால் அதை அமைதியாக தீர்த்துக்கொள்ள, அந்த வர்க்கங்கள் தமக்குள் முனைப்புக் கொள்கின்றது.

 

சிலர் புலிகள் அதீதமாக மேற்கை சார்ந்ததாக நம்பவைக்க முனைகின்றனர். இந்தியாவுக்கு எதிரானதாக காட்ட முனைகின்றனர். சுரண்டும் வர்க்கத்தின் தரகுத்தன்மையின் குறிப்பான நிலையை, பொதுவானதுக்கு பொருத்த முனைவதாகும். எந்த சுரண்டும் வர்க்கத்தின் நலனுக்காக செயல்படுவது என்ற முரண்பாடாகும். ஏகாதிபத்திய முரண்பாடுகள், பிராந்திய முரண்பாடுகளின் அடிப்படையில் இது உள்ளது. இது பொதுவான இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் நட்பு முரண்பாடாகவே உள்ளது. இதில் ஒன்றை சார்ந்து நிற்க முனைதல், சுரண்டும் தரகு முதலாளிகளின் இருத்தலாகும். இது இந்தியாவின் தரகு முதலாளிகளுக்குள்ளும் காணப்படுகின்றது. இது எங்கும் தழுவிய ஒரு முரண்பாடு. புலிகள் பொதுவான மேற்கத்தைய சார்பும், உள்ளார்ந்த அதனுடன் இந்திய சார்பு நிலையும் கூட காணப்படுகின்றது.

 

சுரண்டும் வர்க்கத்தின் குறிப்பான நலன்கள் சார்ந்த போக்காகும். இதுவே பகை முரண்பாடாக, ஆளும் வர்க்க மோதலாக மாறுவது உண்டு. இன்று இலங்கை விவகாரத்தில் இது பகை முரண்பாடாக செயல்படவில்லை. இந்தியாவின் ஆளும் வர்க்கம், ஏகாதிபத்திய நலன்களுடன் ஒன்று கலத்தலிலுள்ள சொந்த வர்க்க முரண்பாட்டை களைவதற்கான அதனுள்ள முரண்பாடு, புலிகள் விடையமாக இருப்பதில்லை. இது மிகையான கற்பனை. ஆனால் அப்படி இருப்பதாக புலிகள், புலிகள் அல்லாத பலரும் நம்ப முனைகின்றனர். புலியை மையமாக வைத்து, சர்வதேச நிகழ்ச்சியை குருட்டுக் கண்ணால் புஞ்சிப் பார்ப்பதன் விளைவு இது.

 

குட்டிபூர்சுவா இயக்கமாக தொடங்கி தரகு முதலாளிய இயக்கமாக மாறிய புலிகள், மேற்கு சார்பு நிலையை மேற்கொள்கின்றது. இது எந்த விதத்திலும் இந்திய ஆளும் வர்க்க சுரண்டல் நலனுக்கு முரணானதல்ல. தரகு முதலாளியப் புலிகள் இந்த வர்க்க சார்புத் தன்மையை அரசியல் நடைமுறையாக்க முடியாது போன நிலையில், ஒரு மாபியாக் குழுவாக மாறிவிட்டது. அது தரகு முதலாளிய வர்க்க நலனையும் இன்று பிரதிபலிப்பதில்லை. தரகு முதலாளிய வர்க்க எல்லையைக் கடந்த அதன் மாபியாத்தனம், உலகமயமாதலுக்குள் எப்படி புகுந்து கொள்ளை அடிப்பது என்ற எல்லைக்குள் அது தானாக சீரழிந்துவிட்டது. அது மாபியாத்தனத்தை பாதுகாக்க, மக்களுக்கு எதிரான ஒரு தேசியத்தை அரசியல் கோரிக்கையாக வைத்து, பாசிசமாக தன்னை அலங்கரிக்கின்றது.

 

உலகமயமாதலின் சுரண்டும் வர்க்கங்கள் இந்த மாபியா குழுவைப் பயன்படுத்தி நீச்சலடிப்பதில்லை. அதேபோல் உலகமயமாதல் என்ற சுரண்டும் வர்க்கத்தை, புலிகள் தமக்கு தமது மாபியாத் தனத்துக்கும் பயன்படுத்த முடியாது. சுரண்டும் வர்க்கத்தின் உள்ளான முரண்பாடுகள் எங்கும் தழுவியது. இது சிறப்பாக இந்தியா மேற்கு என்று மட்டும் பிரிந்து காணப்படுவதில்லை.

 

இந்தியா பிராந்திய ஆதிக்க சக்தியாக இருத்தல் என்பது, உலகமயமாதல் நலனுக்கு முரணானதல்ல. உலகமயமாதலில் உள்ளார்ந்த வர்க்கத்தின் நலனை அடிப்படையாக கொண்டே, பிராந்திய ஆதிக்கத்தை செலுத்த முனைகின்றது. மற்றைய ஆதிக்க சக்திகளுடனான முரண்பாடு என்பது, இன்றைய உலகமயமாதலில் போக்கில் பகை முரண்பாடானதல்ல. மாறாக சுரண்டும் வர்க்கங்களிடையேயான நட்பு முரண்பாடுதான். இதில் புலிகள் விடையத்தில், புலிகளை கையாள்வதில் முரண்பாடுகள் உள்ளதாக காண்பதும் காட்டுவதும் சுத்த அபத்தம்.

 

இலங்கையில் எந்தளவில்? எப்படி? மேற்கத்தைய மற்றும் இந்திய ஆதிக்கம் நீடிப்பது என்பது, உலகமயமாதல் பொருளாதார நலனுக்கு முரணாக செயல்படுவதில்லை. அப்படி ஒரு முரண்பாடு ஏற்படும் போது, அதுவே இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒரு யுத்தமாக மாறுகின்றது.

 

சிலர் இலங்கையை பொருளாதார ரீதியாக சுரண்டுவதற்குரிய நாடல்ல என்கின்றனர். மாறாக இராணுவ தளம் சார்ந்தது என்கின்றனர். இதன் மூலம் ஏகாதிபத்திய இந்திய முரண்பாட்டை காட்ட முனைகின்றனர். இலங்கை இராணுவ ரீதியானதாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் சுரண்டலுக்குரிய ஒரு நாடாகவே உள்ளது. இராணுவ ரீதியானதும், சர்வதேச கடல் போக்குவரத்து சார்ந்தும் இலங்கைக்கு உள்ள முக்கியத்துவம், என அனைத்தும் உலகமயமாதலின் பிரதான சுரண்டும் வர்க்கத்தின் பொது நலனுடன் பின்னிப்பிணைந்தது. இதை பகை முரண்பாடாக, உலகமயமாதலில் செயல்படும் சுரண்டும் வர்க்கங்கள் கையாள்வது கிடையாது.

 

அனைத்தும் தழுவிய முரண்பாடு எங்கும் எதிலும் உண்டு என்பதும், அதை பகை முரண்பாடாக மட்டும் பூதக்கண்ணாடி கொண்டு தேடிக் காட்டுவது அரசியல் அபத்தமாகும். பிராந்திய ரீதியான முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி, பகையாக மட்டும் திரித்துக்காட்டுவது அதை விட அபத்தமாகும். முரண்பாடுகள் என்பது, தனித்து ஒன்றாக மட்டும், அது மட்டும், அதுவே முழித்துக் கொண்டிருப்பதில்லை அது பலவாக இருப்பதுடன், ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாகவும் முன்னிலைக்குரிய இடத்துக்கு மாறிச் செல்லுகின்றது.

 

புலிகளின் பாத்திரம் என்பது, அதன் எஞ்சிய அரசியல் அடிப்படையை தகர்த்து வருகின்றது. வெறும் லும்பன் மாபியா அராஜக குழுவாக, அரசியல் ரீதியாக பாசிட்டுகளாக மாறிவிட்டனர். இதன் வர்க்க அடிப்படை என்பது குறுகி குட்டி இராணுவத் தளபதிகளின் நலன்களாகி சீரழிந்துவிட்டது. இது தன்னை தற்பாதுகாத்துக் கொள்ளும் இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. சினிமா பாணியிலான கதாநாயக நடவடிக்கையின் மூலம், தனது இருப்பை தக்கவைக்க முனைகின்றது. ஒரு வர்க்கத்தின் சுரண்டல் நலன் என்ற, அரசியல் அடிப்படையில் செயல்படுவது கிடையாது. அராஜகவாத லும்பன்தன சாகசத்தில், தனது இருப்பு சார்ந்த போராட்டத்தை நடத்துகின்றது. இந்தக் குழுவின் அராஜகவாத லும்பன் செயலை, மேற்குடன் அல்லது இந்தியாவுடன் இணைத்துக் காட்டுவது, புலிகளைப் போல் அரசியலற்ற வெற்றுத் தனமாகும்.

பி.இரயாகரன்
14.4.2007


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ