Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும்!

  • PDF

 

என்னுடைய 76-வது பிறந்தநாளாகிய இன்று ஒரு அறிக்கை விடவேண்டும் என்று என் தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதை அனுசரித்து இன்றைக்கு முக்கியமான பிரச்சனை என்றும், இனி நாம் அதிகமாக கவலை செலுத்த வேண்டிய பிரச்சனை என்றும் கருதுகிற ஒரு விசயத்தைப்பற்றி பொதுமக்களுக்கு எனது வேண்டுகோளாக தெரிவிக்கலாம் என்று கருதுகிறேன்.

 

தோழர்களே! தமிழ் நாட்டை வடநாடு பொருளாதாரத் துறையில் பெருங்கொள்ளை அடிப்பதோடு தமிழ்நாட்டை பொருளாதாரத் துறையிலும், தொழில்துறையிலும் தலையெடுக்க ஒட்டாமல் மட்டந்தட்டிக்கொண்டு வருகிறது. இந்த ஒரு முக்கியமான காரியத்துக்காகவே வடநாட்டான் அரசியலிலும், தமிழ்நாட்டை தனக்கு அடிமைப்படுத்தி தனது காலடியில் வைத்திருக்கிறான். இதற்கு அனுகூலமாக இந்நாட்டு பார்ப்பனர்கள் தங்களுக்கு இனி இந்நாட்டில் ஆதிக்கம்பெறவோ, இதுவரையிலும் வாழ்ந்தது போன்ற ஆதிக்க வாழ்வு வாழ முடியாது என்று கருதி வடநாட்டானுக்கு அவனது அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கு தமிழ்நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கு உடந்தையாகவும், உள் ஆளாகவும் இருந்து வருகிறார்கள்.

 

இந்த காரணங்களுக்காகவே வடநாட்டான் ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாட்டை விலக்கி சுதந்திரத் தமிழ்நாடாக ஆக்க வேண்டும் என்றும், நாட்டைக் காட்டிக்கொடுத்து பிழைக்கும் சமுதாயமாகிய பார்ப்பனச் சமுதாயத்தை தமிழ்நாட்டிலிருந்தே வெளியாக்கிவிட வேண்டுமென்றும நான் உறுதியாகக்கருதி என்னாலான முயற்சிகளை திராவிடர்கழகத்தின் மூலம் தொண்டாற்றி வருகிறேன். இது ஒருபுறமிருக்க இந்த சந்தர்பத்தையும், நடப்புக்களையும் ஆதரவாகக் கொண்டு உள்நாட்டிலேயே சில கொள்ளைக்கூட்டங்கள் தோன்றி வசதிபட்ட அளவுக்குக்கூட தமிழனை தலையெடுக்கவொட்டாமல் செய்து வருகின்றன. இங்கு சற்று விவரமாக சொல்ல வேண்டியிருக்கிறது.

 

இந்த நாட்டு அரசியலில் வெள்ளையன் இருந்த காலம் முதற்கொண்டே பார்ப்பனர்கள் ஏகபோகம் ஆதிக்கம் பெற்று தமிழர்களுக்கு சிறிதும் நல்வாய்பில்லாமல் தமிழர்கள் அழுத்தப்பட்டு வந்திருப்பதைக் கண்டிக்கும் முறையில் இந்நாட்டு தமிழ் மக்களால் நான் அறிய 1890-ஆம் ஆண்டிலிருந்தே பெருங்கிளர்ச்சி செய்யப்பட்டு வந்திருக்கிறது.

 

உதாரணமாக 1892-லும், 1893-லும் சென்னை மாகானத்தில் கவர்னராயிருந்த லார்டு வென்லக் துரை அவர்களுக்கு இந்நாட்டு தமிழ் (திராவிட) பெருங்குடி மக்களின் பெயரால் கவர்னருக்கு பகிரங்கக்கடிதம் என்பதாக குறிப்பிட்டு இரண்டு கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளின் நகல் என் கைவசம் இருக்கின்றன. அக்கடிதங்களில் சமுதாயத்துறையிலும், அரசியல் துறையிலும் பார்ப்பனர் ஆதிக்கத்தையும், கொடுமையையும் ஆதாரப்பூர்வமாக புள்ளிவிவரங்களோடு எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. மற்றும் அக்கடிதத்தில் அவற்றை அனுசரித்து மெயில் முதலிய பத்திரிக்கைகளின் கருத்துக்களையும் டாக்டர் மில்லர் போன்ற பெரியோர்களின் கருத்துக்களையும் எடுத்துப் போட்டு காட்டப்பட்டிருக்கின்றன.

 

இதை எதற்காக குறிப்பிட்டேன் என்றால் பார்ப்பன ஆதிக்கமும், கொடுமையும் பற்றி சொல்வது ஜஸ்டிஸ்கட்சி ஏற்பட்ட பிறகோ, அல்லது சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகோ அல்லவென்றும், 1890-லேயே நம்மவர்கள் உணர்ந்து முறையிட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்தக்காட்டுவதற்காகவே. நிற்க, இத்தொல்லைகள் அல்லாமல் தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலே மற்றொரு தொல்லை வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது. அது என்னவென்றால் உத்தியோகத்துறையில் - தமிழன்- பார்ப்பனரல்லாதான- என்கிற பெயரால் தனக்குறிய பங்கை வலியுறுத்த ஆரம்பித்த பிறகு பார்ப்பனர் அதை எதிர்த்து ஒடுக்கும் வகையில் தங்களால் ஆனவற்றையெல்லாம் செய்து ஒடுக்கிபின் மீதி- அதாவது பார்ப்பனரல்லாதவருக்கு ஏதாவது சலுகைகாட்டி பதவி கொடுத்துத்தான் தீரவேண்டும் என்ற நிலைமை நிர்பந்தம் ஏற்பட்ட சந்தர்பத்தில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக்கொண்டு சில பதவிகளை வெள்ளையனுக்கு கொடுப்பதும், அவனுக்கு கொடுப்பது மக்களுக்கு இஷ்டமில்லை என்றால் வெளி மாகாணக்காரர்களுக்கு கொடுப்பதும், அவர்களுக்கு கொடுப்பதும் சாத்தியப்படாத சந்தர்பங்களில் கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஆகியவர்களுக்கு கொடுப்பதும், அது சாத்தியப்படாத சந்தர்ப்பங்களில் ஆந்திரர், மலையாளி, கருநாடகர் ஆகியவர்களுக்கு கொடுப்பதுமாய் சூழ்ச்சி செய்து தமிழர்களுக்கு எவ்வளவு கொடுமையும், குறைபாடும் செய்யவேண்டுமோ அந்த அளவுக்கு செய்து வந்தார்கள்.

 

வெள்ளையன் அரசாங்கமும் இவர்களுக்கு ஆதரவு கொடுத்தே வந்திருக்கிறது. இப்போது வெள்ளையன் ஆட்சி ஒழிந்துவிட்டது. இந்தியன் ஆட்சி என்று ஏற்பட்டுவிட்டது. அதோடு நாடும் பல விதத்திலும் வடநாடு- தென்னாடு என்று பிரிந்துவிட்டது. அது மாத்திரம் அல்லாமல் மொழிவாநாடு என்னும் பேரால் ஆந்திர நாடும் தமிழ்நாட்டை விட்டுப் பிரிந்துவிட்டது. இதனால் ஆந்திரர்கள் தொல்லை அரசியலிலும், உத்தியோகங்களிலும் ஒரு அளவிற்கு ஒழிந்து விட்டது என்றாலும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள், கர்நாடகர்கள் என்பவர்களது தொல்லை அரசியல் ஆதிக்கத்திலும் உத்தியோகத்திலும் ஒழிந்தபாடில்லை.

 

இதை ஏன் சொல்கிறேனென்றால், தமிழ்நாடு மொத்த ஜனசங்கையில் பார்ப்பனர் 100- க்கு இரண்டேமுக்காலும், கிறிஸ்தவர் 100 - க்கு 4-ம், முஸ்லிம்கள் சுமார் 100 - க்கு 5-ம், மலையாளிகள் சுமார் 100- க்கு 8-ம், கர்நாடகர்கள் 100 - க்குக் 5-ம் (இவைகள் உத்தேசமான புள்ளிகள்) இவ்வளவு பேரும் சேர்ந்து, ஜனசங்கியையில் தமிழ்நாட்டார் -தமிழர் அல்லாதவர்கள்,100 -க்கு 25-பேர்களுக்கு உட்பட்டவர்களாகவே இருந்தாலும் இந்த கூட்டத்தினர் ஒவ்வொருவரும் நீதி நிர்வாக தலைமை உத்தியோகங்களில் சுமார் 100 - க்கு 60 - பேர்களாகவும், முக்கியமான உயர்ந்த உத்தியோகங்களில் 100 - க்கு 75-பேர்களாகவும் இருக்கிறார்கள்.

 

இதை ஏன் பிரித்துக் குறிப்பிட்டுக்காட்டுகிறேன் என்றால் தமிழ்நாட்டிலே தமிழர்களைத் தவிர, அதாவது மேற்படி கூட்டத்தினர் தவிர்த்த தமிழர்களைப் பற்றியாவது, தமிழர்களின் பழக்கவழக்க, கலாச்சார குறைபாடுகளைப் பற்றியாவது, சமுதாயத்துறையில் அவர்களுக்குள்ள இழிவைப் பற்றியாவது, அரசியல், கல்வி, பொருளாதாரத் துறையிலாவது, மேலேகாட்டிய இந்தக்கூட்டத்தாருக்கு சிறிதும் கவலையில்லை என்பதோடு, பெரிதும் மாறுபட்டவர்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.தமிழர்கள் சமுதாயத் துறையில் கீழான சாதியராக - சூத்திரர்களாக இருப்பதைப்பற்றி இவர்கள் யாருக்கும் கவலையில்லை. எப்படியாவது தங்களுக்கு தங்கள் விகிதத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையளவு பதவிகள் கிடைப்பதனால் தமிழன் கதி எக்கேடு கெட்டாலும் இவர்கள் இலட்சியம் செய்பவர்கள் அல்லர்.

 

அவரவர்கள் தங்கள் தங்கள் சமூகத்துக்கு எப்படி நடந்து பயன்பெறுவது என்பதையே பெரும்பாலும் இலட்சியமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். அப்படியே இருந்தும் வந்திருக்கிறார்கள். அதனால்தான் எந்த விதத்திலும் தங்களைவிட தனிப்பட்ட யோக்கிதை இவர்களுக்கு இல்லாமலிருந்தும் தமிழர்களைவிட இவர்கள் 3 - பங்கு ஆதிக்கத்தில் பதவியில் இருந்துவருகிறார்கள். இதில் குறிப்பாகக் கூற வேண்டுமேயானால் மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக்கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும், ஆரிய வர்ணச்சிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், ஆனதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளை பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்கின்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டு பார்ப்பனரல்லாதார் என்கிற கணக்கில் ஏராளமான மலையாளிகளுக்கு கொடுப்பதையே - அவர்கள் தாராளமாகவந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் - அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனரில்லாத பெரும் பதவிகளிலும் மலையாளிகளே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முதலில் ஒரு சில உதாரணங்களைக் கூறுகிறேன்.

 

சென்னை அரசாங்க நிர்வாகத்தின் தலைமைப் பீடாதிபதியான, சீப்செக்ரட்டரி: திரு.ராமுண்ணிமேனன், சீப் எஞ்சினியர்: திரு. கே. நம்பியார், சூப்பரின்டெண்டிங் எஞ்சினியர்கள்: 1. திரு.நாயக், 2. திரு.காமத், வைத்திய இலாக்கா: எழும்பூர் பிள்ளைப்பேறு ஆஸ்பத்தரி சூப்பரின்டெண்ட்டு: திரு. ஆர்.கே.கே.தம்பான: அசிஸ்டெண்ட் சூப்பிரின்டெண்ட்: திரு. கிருஷ்ண மேனன்: ஸ்டான்லி ஆஸ்பத்திரி சூப்பரின்டெண்ட், திரு.கே.என்.பிஷரொட்டி: பெண்கள் ஆஸ்பத்திரி, திருவல்லிக்கேணி, சூப்பரின் டெண்ட்: திருமதி. பாருகுட்டிராமன்.கல்வி இலாக்கா:- பிரஸிடென்சி கல்லூரிபிரின்ஸ்பால்: திரு. பாலகிருஷ்ணநாயர், குவீன்மேரீஸ் கல்லூரி:திருமதி.லேடிவெலிங்டன்: திருமதி.வர்கிஸ். சட்டக்கல்லூரி டைரெக்கடர்: திரு.குன்னிராமன். இவை - ஒருசில நிர்வாக அடிப்படைப்பதவிகளிலுள்ள மலையாளிகளை உதாரணத்துக்கு எடுத்துக் காட்டப்பட்டன.இனி மாவட்ட (ஜில்லா) தலைமைப் பதவிகளிலுள்ள மலையாளிகள் எண்ணிக்கையைக் காட்டுவதற்கு போலிஸ் இலாக்கா ஒன்றை மாத்திரம் உதாரணமாக எடுத்துக்காட்டுகிறேன்.

 

இவைகளிலிருந்து மற்ற இலாக்காக்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இதில் 13-ஜில்லாக்களோடு சென்னையைச் சேர்த்தால் 14-ஆகும். இவற்றில், சென்னையில் கமிஷனர்: திரு.பார்த்தசாரதி அய்யங்கார் என்ற ஒரு பார்ப்பனர் இருப்பது மாத்திரமல்லாமல் அடுத்த பதவியான டிப்டி கமிஷனர் என்பதில் மூன்றிலும் மூன்று மலையாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் முறையே..

 

1. திரு. அடிகை (லா அண்டு ஆர்டர்), 2. திரு.தாமோதரன் (கிரைம்),3. திரு.சுகுமாரன் (டிராபிக்). ஆய்ஜிக்கு அசிஸ்டெண்ட்: திரு.வி.பி.நாயர். அசிஸ்டெண்ட் கமிஷனர்கள்: 1. திரு.செதுமாதவமேனன்(லா அண்டு ஆர்டர்), 2. திரு. சேதுமாதவநாயர்: (புரொகிபிஷன்).இனி ஜில்லாக்களில் போலிஸ் சூப்பரின்டெண்ட்டுகள்: திருச்சி: திரு. விஸ்வநாத அய்யர்: மதுரை(வ)திரு. ஏ.சி.நம்மியார்: திருநெல்வேலி:திரு. மாப்ளா அப்துல்லா. வடஆர்க்காடு திரு. ஷெனாய், சேலம்: திரு.பாலக்கிருஷ்ணமேனன், நீலகிரி: மாப்ளாரூக்கி இவைதவிர மற்ற ஜில்லாக்களிலும் அய்யர், அய்யங்கார்கள்.

 

அதாவது மதுரை(தெ)திரு.கிருஷ்ணசாமி அய்யர்: இராமநாதபுரம்: திரு. நரசிம்ம அய்யங்கார், மலபார்: திரு. இராமானுஜ அய்யங்கார், தென்கன்னடம்: திரு. முத்துசாமி அய்யர். மீதியுள்ள ஜில்லாக்களில் இரண்டில் ஆங்கிலோ கிறிஸ்த்தவர்களும், ஒரே ஒரு ஜில்லாவில், தென்னாற்காட்டுக்கு மட்டும் திரு. பாலக்கிருஷ்ண உடையார் என்ற தமிழரும் இருந்து வருகிறார்கள். இவர் பதவியும் ஆட்டத்தில் இருக்கிறது.இவை தவிர அரசாங்க போலீஸ் இலாக்கா (போர்ட்போலியோ) நிர்வாகத் தலைமையில், செரட்டரி: திரு. ஆர்.ஏ. கோபால்சாமி அய்யங்கார்: டிப்டி செக்ரட்டரி:டி.ஏ. சுப்புசாமி அய்யர் ஆகிய இரண்டு பார்ப்பனர் இருப்பதுபோக மற்றும் இரண்டு டிப்டி செக்ரட்டிரிகள்: 1.திரு.ஒய்.சிவராம மேனன்,2. திரு.சி.ஆர்.பணிக்கர். மற்றும் பப்ளிக் (பொலிடிகல்) என்று கூறப்படும் இரகசிய நிர்வாகத் தலைமையில் செக்ரட்டரி: திரு.டி.என். இலட்சுமிநாராயண அய்யர்: அண்டர்செக்ரட்டரி: திரு. ஆர். பாலசுப்பரமணி அய்யர். அரசாங்கத் தலைமை ஸ்தாபனங்கள் இந்தப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.

 

இவை உதாரணங்களாக எடுத்துக்காட்டப்பட்ட ஒரு சிலவேயாகும்.மற்ற இலாக்காக்களிலும் 100- க்கு 90- பேர்களான தமிழர்களைத் தவிர மற்ற சமுதாயக்காரர்களே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.இந்த நிலைமை இதற்கு முன்பே இருந்து வந்தாலும் இவ்வளவு மோசகரமான நிலைமை, அதாவது செக்ரிட்டேரியட், போலிஸ்- முதலியவற்றில் இவ்வளவு மோசகரமான நிலைமை - திரு. ஆச்சாரியார் அவர்கள் காலத்தில் ஏற்பட்டதாகவே தெரிகிறது. இங்கே பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்-தமிழனுக்கு ஆட்சியில் இடமெங்கே? தமிழன் வாழ்வில் ஆட்சியின் உதவி தேடுவதற்கு வழி எங்கே? தமிழனை பழிவாங்கும் தன்மையிலே இந்த நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைத்தவிர வேறு காரணம் ஒன்றும் காணோம். ஆகையால், ஒவ்வொரு இனத்தாரும், ஒவ்வொரு ஜில்லாக்காரர்களும் பிரிந்து மொழிவாரி மாகாண நாடு பெறும் வரையில் பதவிகள் ஜில்லா விகிதமாவது அந்தந்த ஜில்லா அடையும்படி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

 

சமீபகாலத்தில் திருவாங்கூர் - கொச்சி இராஜ்ஜியத்தில் தமிழர் உரிமை கேட்டதற்காக, தமிழர்களை அந்தநாட்டு மலையாளிகள் நடத்திய விதத்தைப் பார்த்தால், குறைந்தளவு நாம் நமது உரிமைக்காவது பாடுபடக்கூடாதா என்று தோன்றுகிறது. இந்த உணர்ச்சியின் பெயரால்தான் இந்த எண்ணங்கள் நமக்குத்தோன்றுகின்றன. ஆகவே தமிழர் இவற்றைப்பற்றி நல்ல வண்ணம் யோசித்து, கட்டுப்பாடான கிளர்ச்சி செய்வதன் மூலம் பரிகாரம் பெறவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதுவே என்னுடைய பிறந்தநாள் விழா வேண்டுகோள்.

 

(தந்தை பெரியார் விடுதலை அறிக்கை 17.09.1954)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_596.html