Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சமூகவியலாளர்கள் நமது இயக்கமும், கம்யூனிசமும்!

நமது இயக்கமும், கம்யூனிசமும்!

  • PDF

*
நமது இயக்கம் எந்த வகையிலும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிர்ப்பான இயக்கம் அல்ல; கம்யூனிஸ்டுகளின் மூலக்கொள்கைக்கு விரோதமான இயக்கமுமல்ல. கம்யூனிஸ்டுகள், ‘பொருளாதார சமத்துவம் ஒன்றினால் மட்டுமே நாட்டு நலம் வளர்ந்தோங்கிவிடும், மக்களிடையே உள்ள பேதாபேதம் ஒழிந்துவிடும்’ என்று கருதி இருக்கிறார்கள். அதனால் நான் அவர்கள் கடவுள், மத, மூடநம்பிக்கை களைப் பற்றிப் பேசாமலே இருந்து வருகிறார்கள்.

பொருளாதார சமத்துவத்தால் சமுதாய பேதாபேதங்கள் அகன்றுவிடும் என்பது மேல் நாடுகளுக்குச் சற்றுப் பொருத்த மானதாயிருக்கலாம். மேல் நாட்டு மக்கள் எல்லாருமே ஒரே மதத்தை - அதாவது கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர்கள் ஆவார்கள். எனவே, இயல்பிலேயே அங்குச் சமுதாயத்தில் பேதாபேதம் இல்லாமலிருந்து வருகிறது. நம் நாட்டு நிலை அப்படி இல்லை. இங்குப் பிறவியிலேயே பேதாபேதம் கற்பிக்கப்பட்டு, மக்கள் பல சாதிகளாகப் பிரிந்து கிடப்பதோடு, உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி என்கின்ற பேதமும்; தாழ்ந்த சாதி மக்கள் உழைக்கக் கடமைப் பட்டவர்கள், உயர்ந்த சாதி மக்கள் அந்த உழைப்பின் பயனை அனுபவிக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதான கருத்தும்; இன்னும் பற்பல மூடநம்பிக்கைக் கருத்தும் ஆட்சிபுரிந்து வருகின்றன. இந்தப் பகுத்தறிவுக் காலத்திலும் இன்னும் கரும காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே, ஏழை மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் பணம் நாளடைவில் உயர்சாதிப் பார்ப்பான் கைக்கு எப்படியோ போய்ச் சேர்ந்து விடும்; மறுபடியும் மறுபடியும் பொருளாதார பேதாபேதம் ஏற்பட்டு விடும். ஆகவே, முதலில் நம் ஏழை மக்களுடைய உள்ளத்தில் மாற்றம் ஏற்படவேண்டும்; அவர்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் கம்யூனிசம் (பொருளாதார சமத்துவம்) அவர்களுக்கு முழுதும் பயன்படும்.

குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ - அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப் போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகிவிடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும். இதைக் கம்யூனிஸ்டுகள் உணர்ந்து மக்களுக்கு முதலில் அறிவு பெருகச் செய்ய வேண்டும்.

பணக்கார முதலாளி ஒழிவதற்கு முன்னால், புரோகிதப் பார்ப்பன முதலாளிகளும், கல் முதலாளிகளும், மட முதலாளிகளும் ஒழிய வேண்டும் என்பதை நம் கம்யூனிஸ்டுத் தோழர்கள் உணர்ந்து, முதலில் அவர்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கம்யூனிஸ்டுகளின் இன்றையக் கிளர்ச்சி நடைபெற்று வந்தாலும், நடைபெறாவிட்டாலும் இந்த நாட்டிற்கும் கம்யூனிசம் வரத்தான் செய்யும். ஏன்? கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமைதிக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதனமாகும் என்ற அறிவு, - அதுவே சத்தியமானது, அதுவே உண்மையானது என்ற அறிவு எல்லா நாடுகளிலும் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்திருக்கிறது. அந்த சுவாலை இன்றில்லையானாலும் நாளை இந்நாட்டையும் கவ்வத் தான் போகிறது. ஆங்கிலேயரின் தந்திரமோ, அமெரிக்கரின் அணு குண்டோ கம்யூனிசத்தின் பரவலை இனியும் தடை செய்து கொண்டிருக்க முடியாது.

(பம்பாயில்- 12-02-1950-இல் சொற்பொழிவு, ‘விடுதலை’ - 22-02-1950)

கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கும், திராவிடர் கழகக் கொள்கைகளுக்கும் அதிகமான பேதம் கிடையாது. அதாவது, இன்றைய தினம் ஒரு தற்குறியை அழைத்து அவனிடம் கட்சிகளைப்பற்றிக் கேட்டால், அவன்,‘கம்யூனிஸ்ட் கட்சி என்றால் பணக்காரர்களை ஒழிப்பது; நாட்டைத் தொழிலாளிகள் ஆதிக்கத்தில் ஆக்குவது’ என்றும்; ‘திராவிடர் கழகம் என்றால் பார்ப்பனீயத்தையும், பணக்காரனை - ஏழையை - பார்ப்பானை - பறையனை உண்டாக்கிய சாமியை யும் ஒழிப்பதும், கோவில்களிலே அடைபட்டுக் கிடக்கும் குழவிக் கற்களை உடைத்து எறிந்து அதன் சொத்துக்களைக் கல்விக்கும், தொழிலுக்கும் ஆஸ்பத்திரிக்கும் உபயோகப்படுத்த வேண்டும் என்றும் கூறுவது’ என்றுந்தான் கூறுவான்.

அப்படியே தான் இன்றையதினம் பொதுமக்களும்கூட நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சி பணக்காரர்களை ஒழிப்பதில் முதற்படியில் நிற்கிறது. திராவிடர் கழகம் பார்ப்பனீயத்தை ஒழிப்பதில் முதல்படியில் நிற்கிறது. என்றாலும், பணக்காரர்களை ஒழிப்பதில் திராவிடர் கழகத்திற்குக் கவலை இல்லை என்று சொல்ல முடியாது. பணக்காரர்களை ஒழிக்க வேண்டியது அவசியந்தான். ஆனால், பார்ப்பனீயத்தை, மூடநம் பிக்கையை ஒழிக்க வேண்டியது மிகமிக அவசியம் என்று திராவிடர் கழகம் கருதுகின்றது.

பணக்காரத்தன்மைக்கு பார்ப்பனீயமும், மேல் சாதி - கீழ் சாதித்தன்மையும், கடவுள் தன்மையும்தான் காரணம். இவற்றை ஒழிக்காமல் பணக்காரர்களை ஒழித்தால் மறுபடியும் பணக்காரர்கள் முளைத்துக்கொண்டே இருப்பார்கள். சாக்கடையையும், கொசுக்களையும் ஒழித்தால்தான் அழுக்குத் தண்ணீரையும், மலேரியாக் காய்ச்சலையும் ஒழிக்க முடியும். ஆகையால்தான், திராவிடர் கழகம், ‘பணக்காரத் தன்மையை ஒழிக்க அஸ்திவார வேலை’ என்று கருதி, இதைச் செய்கின்றது.

பணக்காரத் தன்மைக்கு எளிதில் எதிர்ப்புக் கிடைக்கும்; பார்ப்பனீயத்திற்கு எதிர்ப்புக் கிடையாது. இந்த நாட்டில் இது ஒரு பெரிய கஷ்டம். ஆதலால், முதலில் சுலபமானதைச் செய்து கொண்டு பிறகு கஷ்டமானதைச் செய்து கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். ஆகையால், நாம் இந்த கம்யூனிசத்தை ஏற்பதில் தவறு இல்லை. இதுதான் மக்களின் நல்வாழ்விற்கு வழி. என்றைக்காவது உலகம் அங்கு சென்றுதான் நிற்கும், அதுவும் சீக்கிரம் செய்து நிற்கும்.

(தந்தை பெரியார் சொற்பொழிவு, ‘விடுதலை’ - 04-10-1951)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_03.html