Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சமூகவியலாளர்கள் ஐயங்கார் தர்மம்!

ஐயங்கார் தர்மம்!

  • PDF

கோவை சிறீமான் வெங்கிட்டரமணய்யங்கார் தர்மத்தின் இரகசியம் 'குடி அரசில் வெளியானதினால் சிறீமான் ஐயங்கார் முதல் பல பிராமணர்களுக்கும், அவரது தர்மத்தில் பங்கு கொண்ட - கொள்ள இருக்கும் சில பிராமணரல்லாத பத்திராதிபர்கள், பிரசாரகர்கள் என்போருக்கும் ஆத்திரங் கிளம்பிவிட்டது. தர்மத்தைப் பற்றி நமக்கு பொறாமையா? யார் தர்மம் செய்வதாயிருந்தாலும், அது என்ன தர்மமாயிருந்தாலும், பொதுவாக உண்மைத் தர்மம் என்றாலே அதை வரவேற்பார்களே தவிர எவரும் அதை வெறுக்கமாட்டார்கள். ஆனால் பொது ஜனங்களை ஏமாற்றச் செய்யும் ஒரு சூழ்ச்சிக்கு தர்மம் என்று பெயர் கொடுப்பதனால் அறிவுள்ளவன் - யோக்கியன் பொது ஜனங்கள் ஏமாறும்படி பார்த்துக் கொண்டிருக்கவேமாட்டான். அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பவன் கோழையும் சுயநல வாதியுமே ஆவான்.

 

கோவை ஜில்லாவில் உண்மையான தர்மம் செய்த பிரபுக்களில்லாமலில்லை. உதாரணமாக, கோவைக்கடுத்த பீளமேடு என்னும் ஊரில் சிறீமான்கள் பி.எஸ். கோவிந்தசாமி நாயுடு அன் சன்ஸ் என்கிற பிரபல நாயுடு கனவான்கள் குடும்பம் இருந்து வருகிறது. அவர்கள் தக்க செல்வமுள்ளவர்கள். 20 - லட்ச ரூபாய் மூலதனமுள்ள ஒரு பெரிய நூல் மில்லை நிர்வகித்து வருகிறார்கள். இவர்கள் பொதுஜன உபகாரத்தில் இறங்கினார்கள். 30,40 - ஆயிரம் ரூபாய் சிலவில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் கட்டினார்கள். அதற்கு பதினாயிரக்கணக்கான பூமி விட்டார்கள். மாணவர்களுக்கு விடுதி (ஹாஸ்டல்) ஏற்படுத்தினார்கள். இளைஞர்கள் விவசாயமும் கைத்தொழிலும் கற்க ஒரு தொழிற்சாலை யேற்பாடு செய்தார்கள். இதற்காக தங்கள் குடும்ப சொத்தில் ஒரு பாகத்தையும் தங்களுக்கு மில்லில் வரும் வருஷவாரி வரும்படியில் ஒரு பாகத்தையும் இத்தர்மத்திற்கு எழுதி வைத்தார்கள்.

 

இப்பொழுதும் கோயமுத்தூருக்கு யார் போனாலும் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம். இதில் இரகசியம் ஒன்றுமில்லை. இந்த தர்மம் தாலுகா, ஜில்லா போர்டு எலெக்ஷனுக்காகவோ சட்டசபை எலெக்ஷனுக்காகவோ அவர்கள் செய்யவில்லை. இத்தர்மம் செய்ததைக் கூலி கொடுத்து ஆள் வைத்து விளம்பரப்படுத்தவில்லை. அவர்களது தர்மமும் தானாகவே வருஷக் கணக்காய் நாளுக்கு நாள் விருத்தியாகிக் கொண்டே வருகிறது.

 

சமீபத்தில் சென்னிமலை வேட்டுவபாளையம் பூசாரி என்கிற ஒரு பக்தர் பதினாயிரக்கணக்கான ரூபாய் பெறுமான சொத்தை தர்ம சாஸனம் எழுதி அந்நியர் கையிலேயே ஒப்புவித்து விட்டார். அதற்கு ஒரு விளம்பரமும் அவர் செய்யவேயில்லை. இவற்றைவிட வெகு சமீபத்திலுள்ள கொடுமுடியில் சிறீமான் பெரியண்ணஞ் செட்டியார் என்கிற ஒரு கனவான் சில நாட்களுக்கு முன் 15,000 - ரூபாய் பெறுமானமுள்ள பூமியும், 8,000 - ரூபாய்க்கு கட்டடமும் கட்டிக் கொடுத்து, இப்போது மறுபடியும் 50,000 - ரூபாய்க்கு மேல் பெறும்படியான சொத்துக்களை கொடுமுடி சங்கர வித்தியாசாலை என்கிற பள்ளிக்கூடத்திற்கு செட்டில்மெண்ட் மூலம் எழுதி வைத்து சுவாதீனமும் செய்து விட்டார். மேற்கொண்டு ரொக்கப் பணமாக 12,000 - ரூபாய் ஸ்கூல் பண்டுக்குக் கொடுத்துமிருக்கிறார். இவர் எவ்வித திறப்பு விழாவும் அங்குரார்ப்பண விழாவும் செய்யவில்லை. விளம்பரமும் செய்யவில்லை. பத்திரிகைக்காரருக்குப் பணங்கொடுத்துப் போடச் சொல்லவுமில்லை.

 

மகாத்மா காந்தி, பண்டித நேரு, சிறீமதி சரோஜனி முதலிய பெரியோர்களுக்குத் தனது தர்மப் பெருமையை எழுதவுமில்லை. இப்படியெல்லாமிருக்க, கேவலம் ஒரு சட்டசபை ஓட்டுப் பெற எதிர் அபேட்சகரைத் தோற்கடிக்க இவ்வளவு தந்திரங்களும் மந்திரங்களும் செய்தால் செய்தவர் மிகப் பெரியவராய்ப் போய் விடுகிறார். அதை வெளியில் எடுத்துச் சொல்லுபவர்கள் அயோக்கியர்களாய்ப் போய்விடுகிறார்கள் என்றால் மக்கள் நிலையை என்ன வென்று சொல்லுவது. சிறீமான் ஐயங்காரைப்போல் தைரியமாய் தர்ம விளம்பரம் செய்ய எவராவது பின் வாங்கினால் அவர்கள் தோல்வியுற வேண்டியதா? இந்த தைரியத்திற்காக மாத்திரம் ஐயங்கார் வெற்றியுற வேண்டியதா? சட்டசபை மெம்பராவதற்கு இந்த தைரியம்தானா யோக்கியதை? சிறீமான் ஐயங்கார் இவ்வளவு விளம்பரம் ஏன் செய்ய வேண்டும்? இவரும் இரண்டு தடவை-ஆறு வருஷகாலம் சட்டசபைப் பதவியை அடைந்து அநுபவித்தாய் விட்டது; இனி வேறொருவர் தான் அநுபவிக்கட்டுமே; யார் வீட்டு சொத்து. இந்த ஜில்லாவில் 60,000 - ஓட்டர்கள் இருந்தால் சுமார் 3,000 - ஓட்டர்கள்கூட பிராமணர்கள் இருக்க மாட்டார்கள். 57,000 - பிராமணரல்லாத ஓட்டர்கள் இருக்கும் ஒரு ஸ்தானத்திற்கு 3,000 - ஓட்டுள்ள பிராமணர் எத்தனை தடவை அந்தப் பதவியை அநுபவிப்பது? ஆறு வருஷம் பார்த்தது போதுமென்று இவர் ஏன் கெளரவமாய் விலகிவிடக் கூடாது?

 

கோயமுத்தூர் ஜில்லாவில் சட்டசபைப் பதவியை அநுபவிக்க இவரைவிட வேறு நபர்கள் இல்லையா? கேவலம் இந்தப் பதவி பெற இவ்வளவு தந்திரம் செய்து 57,000 - பேரையும் ஏமாற்றி சட்டசபைக்குப் போகிறவர், போனபின் இவரால் ஜனங்கள் என்ன பலன் அடைய முடியும்? இம்மாதிரி பேராசையுள்ளவர்கள் எவ்வளவு காலத்திற்கு ஜனங்களை ஏமாற்ற முடியும்? சிறீமான் ஐயங்கார் விளம்பரமும் வெற்றியும் ஏதாவது சாமார்த்தியத்தையும், சக்தியையும், தேச பக்தியையும், நாணயத்தையும், தகுதியையும் பொறுத்திருக்கிறதா?

 

சிறீமான் ஐயங்கார் பணத்தையும், தந்திரத்தையும், விளம்பரத்தையும், பிராமணரல்லாதார் சமூகத் துரோகத்தையும் அவர்களது முட்டாள்தனத்தையும்தானே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதை உத்தேசித்துத்தானே அநுபவசாலிகள், அரசியலில் பணத் திமிரும், தந்திரமும், சூழ்ச்சி விளம்பரமும், சமூகத் துரோகமும், அறியாமை யால் நேரும் நஷ்டமும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட வேண்டும் என்று கதறுகிறார் கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டிருந்தால் சிறீமான் ஐயங் கார் 6 - வருஷம் அநுபவித்துவிட்டு இன்னும் 3 - வருஷத்திற்கு இவ்வளவு விளம்பரம் செய்வாரா?

 

முதலாவது, ஒரு வருஷத்திற்கா வது இவருக்கு முறை வருமா? 30 - ஆயிரம் அல்லது 50- ஆயிரம் சிலவு செய்தாலும் கிடைத்து விடுமா? 2 - லட்சமல்ல 10 -லட்சம் என்று தர்ம விளம்பரம் செய்தாலும் ஆகிவிடுமா? கோயமுத்தூர் ஜில்லாவானது தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஜில்லா. சிறீமான் ஐயங்காரைப் போல் எத்தனையோ பணக்காரரும், பட்டக்காரரும், ஜமீன்தாரரும், சக்தியுள்ளவர்களும், அவரைவிட தகுதியும் உரிமையு முள்ளவர்களுமிருக்க ஐயங்காரே அடிக்கடி வரவேண்டுமென்பது "வேதக் கட்டளையா, சாஸ்திர சம்மதமா? மனுதர்மமா" இந்த ஒரு சிறு பதவியே பிராமணரல்லாதார் 100-க்கு 97 - பேர் உள்ள சமூகத்தை இவ்வளவு மோசம் செய்யுமானால் இன்னும் பெரிய பதவிகள் - சுயராஜ்யப் பரிபாலனம் போன்ற ராஜா மந்திரிப் பதவிகள் - இன்னும் எவ்வளவு மோசத்தை விளைவிக்காது? தவிரவும் இந்த நியாயமான சங்கதியை நாம் எழுதும் போதே சிறீமான் ஐயங்காருக்கும், அவரது சிஷ்யக் கோடிகளுக்கும், சிப்பந்தி கோடிகளுக்கும் இவ்வளவு ஆத்திரமும் கோபமும் மனவருத்தமும் வருமானால், தமிழ்நாட்டிற்கே ஏன் இந்தியா தேசத்திற்கே ராகு கேதுகள் போல் இருக்கும் பிராமணப் பத்திரிகைகளும், பிராமணப் பிரசாரகர்களும், அவர்களால் ஆட்கொள் ளப்பட்ட பிராமணரல்லாத பிரசாரகர்களும் உண்மைக்கு விரோதமாய் இரவும் பகலும் பிராமணரல்லாதார் மீது பொய்யும், பித்தலாட்டங் களும் சொல்லி விஷமப் பிரசாரம் செய்கின்றார்களே அதனால் பிராமணரல்லாதார்களுக்கு எவ்வளவு சங்கடமும், ஆத்திரமும், கோபமும் வராது?

 

'குடிஅரசு' போன்ற பத்திரிகையாவது சுமார் 10 - பிராமண சந்தாதாரர்களைக்கூட உடைத்தானதாயிருக்காது. அதிலும் 7 - பேர் கெளரவ சந்தாதாரர்களாயிருப்பார்கள். 'சுயராஜ்யா', 'சுதேச மித்திரன்' போன்ற பத்திரிகைகள் பிராமணரல்லாதார் பணத்திலேயே நடக்கிறது. பிராமணரல்லாதார் தங்கள் பணத்தையே கொடுத்து தங்கள் சமூகத்தையே பாழாக்குவதற்கு உடந்தையாயிருப்பது போல் அவைகளுக்கு சந்தாதாரர்களாயிருக்கிறார்கள். இதைக் கேட்பவர்களுக்கு எவ்வளவு மனவேதனை ஏற்படும். ஒவ்வொரு நாளும் இந்தப் பிராமணரல்லாதார்களைப்பற்றி எழுதும் பொய்யும் புளுகும் கணக்கு வழக்கில்லை. அதைக் கவனிக்கவோ, திருத்தவோ, கோபப்படவோ, ஆத்திரப்படவோ ஆளில்லை. 'குடிஅரசு' உண்மையை- தன் மனதிற்கு உண்மையென்று பட்டதை எழுதினால் இதற்கு இவ்வளவு அடா துடியா? சிறீமான் ஐயங்காருக்குத்தான் பணமிருக்கிறது; பத்திரிகைகள் இருக்கின்றன; பணம் வாங்கிக் கொண்டு பேசவும் எழுதவும் ஆளுகள் இருக்கிறார்கள். இதனால் எவ்வளவு அக்கிரமம் செய்தாலும் தாராளமாய்ப் பெரிய மனிதராய் விடுகிறார். இவைகள் இல்லாதவர்கள் கதி என்ன ஆவது? எவ்வளவு யோக்கியர்களாயிருந்தாலும் தேசபக்தர்களாயிருந்தாலும் அவர்கள் யோக்கியதை வெளிவருவதற்கில்லை. வெளிவராவிட்டாலும் அவசியமில்லை. அவர்களுடைய தொண்டு தேசத்திற்குப் பிரயோஜனமில்லாததோடு அயோக்கியர்கள் செய்கையும் அயோக்கியத்தனமும் உலகத்தில் மதிக்கப்பட்டு மலிந்து போகிறதே என்பதுதான் நமது உண்மையான சங்கடம். அல்லாமலும் தென்னாட்டில் தென்னாட்டாரின் பிரதிநிதிகள் சிறீமான்கள் சென்னை ஏ. ரெங்கசாமி ஐயங்கார், எஸ்.சீனிவாசய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி ஐயர், எம்.கே.ஆச்சாரியார், கோவை சி.வி. வெங்கிட்டரமணய் யங்கார், கும்பகோணம் சக்ரவர்த்தி ஐயங்கார் ஆகிய இவர்கள்தானா? இவர்களைவிட யோக்கியர்களும் தேச பக்தர்களும் வேறு எவரும் நமது நாட்டில் இல்லையா? இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பேசுகிறவர்களும் எழுதுகிறவர்களுந்தானா பிதேசத் தொண்டர், பிதேச பக்தர். இவர்களுக்கு எப்படி இந்தப் பதவி வந்தது? பணமும் பத்திரிகையும் தங்கள் கைவசமிருப்பதோடு யோக்கியமற்ற வழியில் சிலவிடுவதும் எழுதுவதுமான குணத்தினால்தானா அல்லவா?

 

தமிழ்நாட்டின் சார்பாக சபர்மதி ராஜி ஒப்பந்தத்திற்குப் போயிருப்பவர்கள் எத்தனை பேர்? சிறீமான்கள் சீனிவாசய்யங்கார், ரெங்கசாமி ஐயங்கார், சத்தியமூர்த்தி ஐயர் ஆகிய இவர்கள் செய்துவரும் ராஜியை ஒப்புக் கொள்ளவாவது இவர்களை யோக்கியர்கள் என்று சொல்லவாவது தமிழ் நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள். இவர்களைத் தலைவர்கள் என்று சொல்லும் நமது சிறீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரையே சத்தியமாய்க் கேட்போம். இவர்கள் தலைவர்களா? இவர்களை யோக்கியர்கள் என்று அவர் கருதுகிறாரா? இவர்கள் சொற்படி நடக்க தயாராயிருக்கிறாரா? ஒன்றிற்குமில்லை. இப்படியிருக்க இவர்கள் எப்படித் தலைவர்கள் ஆகி றார்கள்? பணமும் ஆளும் பத்திரிகையும்தான் காரணம்.

 

அநேக யோக்கியர்களும் உண்மை தேசபக்தர்களும் அவர்களது இன்றியமை யாத தொண்டும் தேசத்திற்கு உபயோகப்படாமல் ஏன் மறைந்து கிடக்கிறது. பணமும், ஆளும், பத்திரிகையும் இல்லாததால்தான். ஆதலால் பாமர ஜனங்கள், ஓட்டர்கள் இவ்விளம்பரங்களை நம்பி ஏமாறாமலும் அநாவசியமாய் அந்நியரை வைகிறார்கள் என்று நினைத்து நம்மீது அவசரப்பட்டு ஆத்திரப்படாமலும் உண்மையை அறியும்படி வேண்டுகிறோம்.

 

(தந்தை பெரியார் - 'குடிஅரசு' -09.05.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_18.html