Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் விண்வெளி மோதல்

விண்வெளி மோதல்

  • PDF

 அண்டவெளி ஆய்வுகள் நீண்டு கொண்டே செல்கின்றன. சூரியனை சுற்றி வரும் ஒன்பது கோள்களும் அக்கோள்களின் துணைக்கோள்களும் இணைந்த சுற்றுவட்டப்பாதை சூரிய குடும்பத்தை அமைக்கிறது. புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ என ஒன்பது கிரகங்கள் சூரியனை சுற்றுகின்றன என்ற வரலாறு மாறி புளுட்டோஎன்பது கிரகமே இல்லை என்ற நிலைக்கு ஆய்வுகள் கூர்மையாகியுள்ளன. விண்வெளியில் ஏற்பட்ட ஒரு மோதல் நிகழ்வே பூமியின் மீதான பல்வேறு அழிவுகளுக்கும், உருவாக்கங்களுக்கும் காரணமாக அமைகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுவே உண்மை என ஆய்வுகள் கூறுகின்றன.

 

சுமார் 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையில் சுற்றிக் கொண்டிருந்த இருபெரும் விண்கற்களின் மோதல் பெருமளவிலான பாறைகளை பூமியின் மேல் விழச் செய்தது. இப்பாறைகளில் ஒன்று டைனோசர் இனத்தையே கூண்டோடு அழித்தது என்று அறிவியல் அறிஞர்கள் அண்மையில் தெரிவித்துள்ளனர். பூமியின் உயிரின வரலாற்றில் மிக முக்கிய அந்த நிகழ்வுக்கான விளக்கத்தை இவ்வாய்வு வழங்கியது. ஏறக்குறைய 10 கிலோமீட்டர் அகலமுடைய விண்கல் ஒன்று மெக்சிகோ யுகாட்டன் தீபகற்பத்தை 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கியது.

 

இம்மாபொரும் நிகழ்வு 165 மில்லியன் ஆண்டுகளாக செழிப்பாக வாழ்ந்து திரிந்த டைனோசர் மற்றும் இன்னும் பலவகை உயிரினங்களை அழித்து, பாலூட்டி இனங்கள்; பூவியில் கோலோச்ச பாதைக்காட்டியதோடு காலபோக்கில் மனிதகுல வளர்ச்சிக்கும் வழி செய்தது என பல அறிவியலாளர்கள் நம்புகின்றனர். உலகளவில் ஏற்பட்ட ஒரு சுற்றுச்சூழல் பேரழிவுக்கு இந்த விண்கல் மோதல் மூலக்காரணமாக இருந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த விண்கல் வேகமாக வந்து மோதியதால் பூவியின் மேற்பரப்பிலிருந்து கிளம்பிய தூசும் சிதறிய பாறைத்துகள்களும் வானில் தூக்கி எறியப்பட, மிகப் பெரிய ஆழிபேரலைகளும் உலகுதழுவிய காட்டுதீக்களும் தாண்டவமாட பல்லாண்டுகள் புவி இருளில் மூழ்கியிருந்தது.

 

அமெரிக்க மற்றும் செக் குடியரசு ஆய்வாளர்கள் கணினி மூலம் கணித்து 105 மைல்கள் மற்றும் 40 மைல்கள் அகலமான இரு விண்கற்களின் மோதல் பூமியில் எதிர்பாராத அழிவை ஏற்படுத்தி இருக்க 90 விழுக்காடு சாத்தியம் உள்ளது என்று கூறுகின்றனர். நதிமூலம் ரிஷிமூலம் போல் புவியில் விண்கல் வந்து மோத காரணமான செவ்வாய் வியாழன் கிரகங்களுக்கிடையில் சூரியனை சுற்றிக்கொண்டிருந்த இரு பெரும் விண்கற்களின் மோதல் சம்பவம் புவியிலிருந்து எறக்குறைய 100 மில்லியனக் மைல்களுக்கு அப்பால் நிகழ்ந்தது என்று அண்மையில் நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியான அவ்வாய்வு கூறுகிறது.

 

பேப்டிஸ்டினா விண்கல் மற்றும் அதனோடு சேர்ந்த சிறுபாறைகள் அனைத்தும் இம்மோதலில் எஞ்சியவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இக்கற்கள்; சுற்றுவட்டப்பாதையிலிருந்து விலகி உருண்டோடி சூரிய குடும்பத்தின் உள்ளே நுழைந்து பூமி மற்றும் சந்திரனை ஒருவேளை செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களை கூட தட்டி சென்றிருக்கலாம் என கோலோரடோ பௌல்டரில் உள்ள தென்மேற்கு ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளரில் ஒருவரான வில்லியம் பாட்கே கூறினார். 

 

சூரிய குடும்பத்தில் இம்மோதலாலான பாதிப்புகள் குறிப்பிட்ட காலம்வரை இரண்டு மடங்காக இருந்தன என்று நம்பப்படுகிறது. 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற மோதலினால் ஏற்பட்ட விண்கல் பொழிவின் எஞ்சிய பகுதிகள் இன்றுவரை தொடர்கின்றன என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். பூமிக்கு அருகாமையில் உள்ள விண்கற்கள் இம்மோதலோடு இணைத்து பார்க்கப்படலாம் என பாட்கே கூறுகிறார்.

 

"குன்றின் மேலுள்ள மிக பெரிய பாறையிலிருந்து பெரும்பான்மை பகுதி பாறை மற்றும் அதிலிருந்து உடைந்த சிறு பகுதிகள் உருளுவதாக நினைத்து, அதன் கீழே பூமி எனப்படும் சிற்றூர் இருப்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்;" என பாட்கே கூறுகிறார்.

 

டைனோசர் இனத்தை அழித்த விண்கல் 6 மைல்கள் அகன்றதாக இருந்திருக்கும் என்று எண்ணப்படுகிறது. இது மெக்சிகோ யுகாட்டன் தீபகற்பத்தில் விழுந்ததால் 110 மைல்கள் அகல அளவுடைய சீக்ஷ_லூப் பெரும் பள்ளம் உருவானது. இவ்விண்கல் பேப்டிஸ்டினா விண்கல்லின் தன்மைக்கு இணையானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சந்திரனின் பரப்பில் காணப்படும் 55 மைல்கள் குறுக்களவு கொண்ட டைசோ பெரும் பள்ளமும் கூட 108 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விண்கல் மோதலால் ஏற்பட்டிருக்க, 70 விழுக்காடு வாய்ப்பு உள்ளது என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

 

சூரிய குடும்ப அமைவிலான ஆபத்தான சுற்றுச்சூழலையும். விண்கற்களின் சுற்றுப்பாதையில் நடைபெறும் மோதல்கள் பூமியிலுள்ள உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும், இவ்வாய்வில் கண்டறியப்பட்ட தகவல்கள் உணர்த்துவதாக பெல்ஜியம் பிரசல்ஸில் உள்ள விரிஜி பல்கலைகழகத்தை சேர்ந்த பில்ப்பே கிளேஸ் கூறிப்பிட்டுள்ளார். பாட்கே இக்கருத்தை அழுத்தமாக வழிமொழிகிறார். டைனோசர்கள் அதிக காலமாக பூமியில் வாழ்ந்தன. விண்கல் மோதல் சம்பவம் ஒருவேளை ஏற்படாமல் இருந்தால் அவை இன்னமும் கூட வாழ்ந்திருக்கும் என பாட்கே கூறுகிறார்.

 

மனிதகுலம் தவிர்க்க முடியாததா? அல்லது இத்தகைய பல்வேறு தொடர் விண்வெளி நிகழ்வுகளில் குறிப்பிட்ட ஒரு தருணத்தில் எதேச்சையாக உருவானதா? இக்கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினம்.

 

பல்வகை ஆய்வுகள் பூமியின் முகத்திலான உயிரினங்களின் தோற்றத்தை பற்றி விளக்கினாலும் அவற்றை ஒரு கருத்தாகத்தான் கொள்ள முடிகிறதே ஒழிய இது தான் சரியான கருத்து என்று அறுதியிட்டு கூற முடிவதில்லை. மனிதரின் அறிவாற்றல் பரந்து விரிந்தது என்றாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை இது உணர்த்துகிறது அல்லவா!

http://tamil.cri.cn/1/2007/10/15/ This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 01 August 2008 18:45