Thu04252024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் காடுகள் வளர்த்து இயற்கையை காத்து : அறிவியலால் வெல்வோம்

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து : அறிவியலால் வெல்வோம்

  • PDF

ஓயாத மழை, வெள்ள பெருக்கு, தங்கமுடியாத குளிர், பனிச்சீற்றம், சூறாவெளிகள், நில நடுக்கம், ஆழிபேரலை என்று எதிர்பாராத இயற்கை சீற்றங்களால் பல்வேறு பகுதிகள் அழிவுகளை அனுபவித்து வருகின்றன. ஜனவரி பாதியில் சீனாவின் தென்பகுதிகள் கடுமையான பனி மழையால் அல்லலுற்றன. உள்ளுர் அரசுகள், பொது மக்கள், சீன விடுதலை படையினர் அனைவரும் இணைந்து போராடி, இயல்பு நிலையை மீட்டனர்.

 


பனி மழை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பாதைகள் மற்றும் தாவரங்கள் அனைத்திலும் பனி மூடிக்கொள்வதால் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலையை அது ஏற்படுத்தும். பாதையில் நடந்தால் வழுகிவிழத்தான் நேரிடும். மேலும் கடும் குளிர் உடலை தாக்கும். இவ்வாறு பன்முக இடர்களை பனி மழை கொண்டு வருகிறது. பனி மழை எப்படி உருவாகிறது என்று அறியும் ஆவல் ஏற்படுகிறது அல்லவா! பனியும் மழையை போல வழி மண்டலத்தில் தான் உருவாகின்றது. ஆனால் வழி மண்டத்திலுள்ள ஈரபதத்தை ஒன்றுக்கூட்டி மழையாகவும், பனியாகவும் பெய்யச் செய்வது எது என்று நீண்டகாலமாக வானிலை ஆய்வாளர்களுக்கு கேள்விக்குறியாகவே இருந்து. கடந்த திங்கள் கடைசி வாரத்தில் வெளியான அறிவியல் இதழின் புதிய பதிப்பில் பாக்டீரியா என்கிற நுண்ணுயிரியே அதற்கு காரணமாக இருக்கின்றது என்ற அறிவியலாளர்களின் புதிய ஆய்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.

 


லுசியான மாநில பல்கலைக்கழக உயிரின அறிவியல் துணை பேராசிரியர் ஃபெர்ன்டு சி. கிறிஸ்னரும், அவரது சகாக்களும் அண்டார்டிகா, பிரான்ஸ், மென்டானா மற்றும் யுன்கோன் உள்ளிட்ட இருபது இடங்களிலிருந்து பனிமாதிரிகளை பெற்று இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். வழிமண்டலத்திலான ஈரப்பதத்தை பாக்டீரியா நுண்ணுயிரி தான், தனது செயல்பாட்டால் ஒன்றுகூட்டி பனிமழையாக பொழிய செய்கிறது என்பதை அவர்கள் ஆய்ந்து அறிந்துள்ளனர்.


பனியில் இவ்வகை நுண்ணுயிரி மிகவும் செயல்திறன் மிக்கதாய் உள்ளதாகவும், உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட தாவரங்களை பாதிக்கும் Pseudomonas Syringae இன நுண்ணயிரி தான் ஈரபதத்தை பனியாக உருவாக்குகின்றது என்றும் கண்டுபிடித்துள்ளனர். எனவே பனி மழை ஏற்படும் பகுதியிலுள்ள தாவரங்கள் வேகமாக பாதிப்படைந்து வேளாண் இழப்பு அதிகம் ஏற்படும். இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் முன்பு இதே நுண்ணுயிரி தான் உலர்ந்த வானிலையை ஏற்படுத்தி பனி மழை உருவாகாமல் தடுக்க உதவியதாம். தற்போது அதே நுண்ணுயிரி வகை தான் பனி மழையை தூண்டுகின்ற உயிரியாகிவிட்டது. இவ்வகை நுண்ணுயிரிகளில் மேற்கொள்ளப்படும் தொடர் ஆய்வுகள் பனி மழையை கட்டுபடுத்தும் முறைமைகளை கொண்டு வருமா? அறிவியல் தீர்வுகளை தருமா? என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


பருவகாலங்கள் சீராய் வந்து
நெல்லும் பயிரும் விளைந்தது எல்லாம்
அந்தக்காலம் ஒஒஒ அந்தக்காலம் - இப்போ
இயற்கை சீற்றமே மக்களை வாட்டுது
வழி தெரியாமல் விழி பிதுங்குகிறோம்
இந்தக்காலம் ஒஒஒ இந்தக்காலம்


சீனாவில் ஏற்பட்ட இந்த பனிசீற்றம் கடந்த 15 ஆண்டுகளில் காண்டிராத கடுமையான பனிசீற்றமாகும். இது காலநிலை மாற்றம் ஏற்படுத்திய விளைவாகவும் இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சீனா மாசுபாடுகளை அகற்றி பசுங்கூட வாயுக்களின் வெளியேற்ற அளவை குறைக்கும் கடப்பாடுகளை மேற்கொண்டு திட்டமிட்ட இலக்குகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே நனவாக்கி வருகிறது. உலகில் காலநிலை பிரச்சனைக்கு தகுந்த தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் நாடாக சீனா மாறியுள்ளது. தொழிற்சாலைகள்,

போக்குவரத்து, விமானச்சேவை, தொடர் வண்டி மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு எரியாற்றல் மிக முக்கியமாகும். இவை வெளியேற்றும் மாசுபாடுகளை, பசுங்கூட வாயுக்களை குறைத்து கட்டுபடுத்துவது என்பது காலநிலை மாற்றத்திற்கு ஆக்கபுர்வ பங்காற்றுவதாகும். எனவே பல்வேறு மாற்று எரியாற்றல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காற்று, நீர், சூரிய, உயிரின வள ஆற்றல்கள் இதற்கு சில எடுத்துக்காட்டுகள்.


சூரிய ஆற்றலை பயன்படுத்துவதற்கான தாயாரிப்பு முறைகளில் அதிகமான மாசுபாடுகள் வெளியேற்றப்படுகின்றன என்ற எண்ணம் பரவலாக உள்ளது. ஆனால் எண்ணெய் எரியாற்றலை விட சூரிய எரிகலன் தயாரிப்பு மிக அதிகமான மாசுபாட்டை உருவாக்கும் என்பதை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரையான நான்கு முக்கிய வியாபார நோக்கிலான நிறுவனங்கள் உள்ளிட்ட 13 தொழில் நிறுவனங்கள் வெளியேற்றிய மாசுபாட்டு தரவுகளை அவர்கள் சேகரித்தனர். அவற்றை ஆய்வு செய்து பார்த்த போது சூரிய எரிகலன் தயாரிப்பால் குறைவான மாசுபாடு தான் உருவாகிறது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.


சூரிய எரிகலன் காரீயம், பாதரசம், மற்றும் நீலீயம் போன்ற உலோக வகைகளால் தயாரிக்கப்படுவதால் உலக வெப்பமேறலுக்கு அடிப்படையான கரியமில வாயுவை வெளியேற்றுகிறது என்பதை அறிவியலாளர்கள் மறுக்கவில்லை. ஆனால் எண்ணெய் எரியாற்றலை விட 90 விழுக்காடு குறைவான மாசுபாட்டை தான் சூரிய எரிகலன் உருவாக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். சூரிய எரிகலன் தயாரிக்க நீலீயம் பயன்படுத்தப்படுவதால் வரும் அமில வெளியேற்றம் நிலக்கரியை எரியாற்றலாக பயன்படுத்தும் மின்சார நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் 300 மடங்கு குறைவாகும் என்று நியுயார்க் அப்டனிலுள்ள புரூக்காவன் தேசிய ஆய்வகத்தின் சுற்றுச்சூழல் பொறியல் ஆய்வாளர் வாசிலீஸ் ஃபிதனாகிஸ் தெரிவிக்கிறார்.


சூரிய ஒளியாற்றல் இல்லாதபோது சூரிய எரிகலன் தயாரிப்பு நிறுவனங்கள் எண்ணெய் எரியாற்றலை தான் நம்பியுள்ளன. சூரிய ஆற்றலிலான மின்சாரத்தை பெருமளவு சேமித்து வைத்து தற்சார்பாக செயல்படக்கூடிய முயற்சிகளை அறிவியலாளர்கள் ஆய்வுகள் மூலம் தெடர்ந்து வருகின்றனர். சூரிய ஆற்றல் பெருமளவு சேமிக்கப்பட்டால் காலநிலை மாற்றதிற்கான மாற்று ஆற்றலாக, மாசுபாடுகள் மிகவும் குறைந்த ஆற்றலாக மாறும். இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகள் வருங்கால தலைமுறையின் நலமான வாழ்வை வளர்க்க வேண்டும். காலநிலை மாற்ற தடுப்பிற்கான அறிவியல் ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் தற்கால பலவீனங்களை வெல்லும். வளரும் தலைமுறையினருக்கு புலரும் நல்லக்காலம்.


காடுகள் வளர்த்து இயற்கையை காத்து
மாசுபாட்டை இல்லாமல் செய்து
தலைமுறை காப்போம் வளரும்
தலைமுறை காப்போம் – மனிதன்
தனது பொறுப்பை உணர்ந்து கொண்டு
இயற்கையோடு வாழ்ந்து விட்டால்
வருங்காலம் இனி நல்லக்காலம்
வருங்காலம் இனி நல்லக்காலம்

 

http://tamil.cri.cn/1/2008/03/10/ This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it