Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் கர்ப்பத்தடைகள்

கர்ப்பத்தடைகள்

  • PDF

''நன்மை பிறக்குமா?" என்ற தலைப்பில் நார்ப்ளாண்ட்-1 என்ற கருத்தடை மருந்தை எதிர்த்துப் பெண்கள் போராடியதைச் சுட்டிக்காட்டியும், இதனால் புற்றுநோய், மனஅழுத்தம் போன்றன ஏற்படும் என்பதைப் போராடும் பெண்கள் எடுத்துக் கூறியதையும், உலகு எங்கும் மிக வறிய மக்களுக்குள் இவை பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவதையும் சுட்டிக் காட்டினர். (6.10.1994)34 பாரத இந்தியாவில் 1977-இல், அவசரக்காலச் சட்டத்தை இந்திராகாந்தி அமுல் செய்த போது, துப்பாக்கி முனையில் 65 இலட்சம் ஆண்கள் மலடு ஆக்கப்பட்டனர். இதே போன்று 1985-1990-இக்குள் 310 இலட்சம் பேரை மலடாக்கியும், 250 இலட்சம் பேரைக் கர்ப்பத்தடை செய்தும், 145 இலட்சம் பேரை வேறு வழியில் கருத்தடையும் செய்யப்பட்டனர். இதழ் 1994-3.246

 

 


கருத்தடை உரிமையைப் பெண்ணிலைவாதிகள் தமது சுயாதீனமான உடற்கட்டுப்பாட்டுச் சாதனம் என பிரகடனம் செய்யக்கூடும்;. ஆனால் வரலாற்றில் கருத்தடை சாதனம் என்பது பொருளாதார வாழ்வியலுக்கு உட்பட்டே இயங்குகின்றது. சமுதாயப் பொருளாதார இயங்கியல் கண்ணோட்டத்தை மீறி கரு அழிப்பு இயங்கி விடவில்லை. ஒரு பெண் இந்தச் சமூகத்தில் இருந்து எவ்வளவுதான் ஆணாதிக்கத்தால் ஒதுக்கப்பட்டபோதும் பெண் சமூகப் பொருளாதாரச் சுதந்திரத்திற்குள்ளேயே இயங்குகின்றாள், முடிவுகளையும் எடுக்கின்றாள். இதையே மார்க்ஸ் அழகாகக் கூறுவதைப் பார்ப்போம்.


''இது முதலாளித்துவப் பொருள் உற்பத்தி முறைக்கே உரித்தான மக்கள் தொகை விதியாகும். உள்ளபடியே, வரலாற்று வழியில் வந்த தனித்தனி பொருள் உற்பத்தி முறைகள் ஒவ்வொன்றும் அதற்கே உரிய மக்கள்தொகை விதியைப் பெற்றிருக்கிறது. இவ்விதி வரலாற்று வழியில் அந்தப் பொருள் உற்பத்தி முறைக்கு அமைத்த வரம்புகளுக்குள் மட்டும் செல்லத்தக்கது. வரம்பேதுமில்லாத சூக்குமத் தொகை விதி ஒன்று மரஞ்செடிகொடிகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டும் இருக்க முடியும். - அதுவும் கூட மனிதன் அவற்றின் பாதையில் குறுக்கிடாத வரைதான்.. ... .. இருக்கும் உபரியான உழைக்கும் மக்கள்தொகை, மறுபுறத்தில் முதலாளித்துவத் திரட்டலின் நெம்புகோலாகிறது. அது மட்டுமன்று, முதலாளித்துவப் பொருள் உற்பத்தி முறை நிலவிடத் தேவையான நிலைமையும் ஆகிறது."35 பாகம் 1.2 பக்கம் 849


என்னதான் சுதந்திரமாகக் கருஅழிப்பு உபகரணத்தைக் கையாள்வதாக எண்ணிப் பெருமைப்பட்டபடி இயங்கியபோதும் உண்மையில் சமூகப் பொருளாதாரச் சிந்தனை எல்லைக்குள்தான் ஒருமனிதனின் பயன்பாட்டுவிதி செயல்படமுடிகின்றது. இதை மேலும் மார்க்ஸ் ''..உண்மையில்;, பிறப்பு இறப்பு எண்ணிக்கை மட்டுமல்லாமல் குடும்பங்களின் அறுதி அளவும் கூட கூலி மட்டத்தோடு எதிர் விகித உறவு கொண்டுள்ளது. எனவே தொழிலாளர்களின் வௌ;வேறு வகையினர் பயன்படுத்தும் வாழ்வுச் சாதனங்களின் அளவோடும் எதிர்விகித உறவு கொண்டுள்ளது. முதலாளித்துவச் சமுதாயத்தின் இந்த விதி காட்டுமிராண்டிகளுக்கு, ஏன் நாகரிகக் குடியேற்றக்காரர்களுக்கே கூட அபத்தமானதாகவே தோன்றும். தனிநிலையில் பலமற்றதாகவும் ஓயாமல் வேட்டையாடி ஒழிக்கப்படுவதாகவும் இருக்கும் மிருகங்கள் தமது இனத்தை வரம்பின்றிப் பெருக்கிக் கொள்கின்றன அல்லவா, அதைத்தான் இந்த விதி நமக்கு நினைவு படுத்துகின்றன." என தொடர்ந்து எழுதிய மார்க்ஸ் ''நாட்டின் துயரங்கள்" என லயிங் எழுதியதை எடுத்து வைக்கின்றார். ''மக்கள் எல்லோரும் வசதியான நிலைமையில் இருப்பார்களேயானால் சீக்கிரமே உலகம் மனித இனமற்றதாகி விடும்."35 பாகம் 1.2 பக்கம் 865


ஒருபுறம் பாட்டாளி வர்க்கமும், மறுபுறம் பூர்சுவா வர்க்கமும் வௌ;வேறு எல்லைக்குள் கருத்தடை பயன்பாட்டைப் புரிந்து கொள்கின்றனர். இயற்கையில் மனித உயிரியலின் விதி என்பது அழிவுக்கும், பற்றாக்குறைக்கும் எதிராக நேர்விகிதத்தில் உயிரின் தோற்றத்தை அதிகரிக்கும். இதனால் மட்டுமே அந்த உயிரினம் தப்பிப் பிழைக்க முடிகின்றது. இதில் தோற்றுப் போகும் போது அந்த உயிரினம் மண்ணில் இருந்து அழிந்து போகின்றது. இது மரம் செடி கொடி என அனைத்து எல்லைக்கும் பொருந்தும். இதுவே இயற்கையின் வரலாறு. மனிதனின் குழந்தை என்பது மனித உயிர் வாழ்தலின் அடிப்படையாகும். குழந்தையை வாரிசாகவோ அல்லது எந்தவிதமான அபிப்பிராயத்தைக் கொண்டாலும் இது இயற்கையின் செயற்பாட்டை மறுத்து மனித வரலாற்றை இயற்கை வரலாறாகப் புனைவதன் வெளிப்பாடாகும்.


இன்று கருத்தடை என்பது இயற்கையின் கண்ணோட்டத்தில் இருந்து புரிந்து கொள்ளப்படவில்லை. மாறாக மனித வரலாற்றை இயற்கை வரலாறாகக் காட்டியே கருத்தடை விளக்கங்கள் நியாயப்படுத்தப்பட்டன. பெண்ணின் உடல் சுதந்திரம், பூர்சுவா வர்க்கத்தின் உல்லாசமான கூத்து வாழ்க்கைக்கு இடைஞ்சல், சில நாடுகளில் உணவுப் பற்றாக்குறை, சில நாடுகளின் ஜனத்தொகை எண்ணிக்கை போன்ற பல்வேறு கூறுகள் கருத்தடையை ஏற்படுத்த மூலமாகின்றது. இவை அனைத்துமே அபத்தமானவை. இயற்கையைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் பற்றிய எந்தவிதமான அக்கறையுமற்ற மனிதன் எப்படி இயற்கையைச் சிதைக்கின்றானோ அது போல் கருஅழிப்பைப் பிழையான வகையில் புரிந்து இயற்கையின் உயிரியல் கண்ணோட்டத்தைச் சிதைக்கின்றான்.


மனித அறிவியல், குழந்தை பிறப்பில் உடல் ஆரோக்கியம், சமூகத் தேவைக்குட்பட்ட குழந்தை, குழந்தை மீதான வாரிசுரிமை பற்றிய ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை மறுத்து, அனைத்துக் குழந்தையையும் தனது குழந்தையாகக் காணும் சமூகக் கண்ணோட்டம் போன்ற மனிதனின் சமூகக் கண்ணோட்டத்தைக் கொண்டு கருத்தடை பயன்படுத்தப்படாவிட்டால் ஆணாதிக்க அமைப்பில் இயற்கையின் உயிரியல் விதியை மீறுவதாகும்.


உணவுப் பற்றாக்குறையில் சிக்கியுள்ள அனைத்து நாடுகளிலும் குழந்தை பிறப்பு அதிகமாக உள்ளது என்பது இயற்கையின் விதிக்குட்பட்டதே. இந்த இயற்கையின் கண்ணோட்டத்தை ஒட்டிப் பெருகும் மக்களையிட்டுத் தேவைக்கு மிஞ்சி தின்று கொழுப்பவன்தான் கருத்தடையைப் பிரச்சாரம் செய்கின்றான். இதற்காக இந்த நாடுகளில் தன்னார்வக் குழுக்கள், உலகச் சுகாதார அமைப்பு, யுனிசேவ், செஞ்சிலுவைச் சங்கம்..... என அனைத்தும் குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து சலுகைகளை வழங்கி கரு வளத்தை அழிக்கின்றனர். இதில் பெண்ணியல்வாதிகளும் பெண்ணின் சுதந்திரம் என்ற கோரிக்கையின் கீழ் இதைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அமுல்படுத்துகின்றனர்.


வறியநிலையில் பட்டினியில் செத்துக் கொண்டிருக்கும் நாடுகளில் ஏன் இந்த நிலை ஏற்பட்டது? இந்த மக்களின் உணவை அவர்களின் பற்றாக்குறையில் இருந்தல்ல, அவர்களிடம் இருந்து கொள்ளையடிப்பதனால் வறுமை சமூகமயமாகின்றது. வசதியான பிரிவு மேலதிக ஆடம்பர நுகர்வுக்காகவும், சந்தையின் பெறுமானத்தைக் கட்டிக்காக்கவும், அழித்தும், சேதமாக்கியும் உருவாக்கிய ஏகாதிபத்தியமயமாதலினுடைய ஜனநாயகத்தின் விளைவுதான் பட்டினியாகும். உலகில் பணக்கார நாடுகளை நோக்கி கையேந்தும் காலத்துக்கு முன்பு, இந்த மக்கள் இவ்வளவு மோசமான வறுமையை அடைந்ததில்லை. சுயமான பொருளாதாரத்தில் தன்னிறைவுடன் வாழ்ந்தவர்கள் இன்று பட்டினியில் சாவது இன்றைய நவீனப் பொருளாதாரத்தின் கொடையாகும்;. கடலில் கொட்டியும், மண்ணில் புதைத்தும், எரித்தும், மிருகத்துக்குக் கொட்டியும் அழிக்கும் உணவு கையேந்தும் அந்த மக்களின் உழைப்பைச் சுரண்டியும், அபகரித்தும் பெறப்பட்டதாகும். உலக சந்தையைச் சூறையாடும் சுரண்டும் வர்க்கம் தமது ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்க ஏற்படுத்திய நிலைதான் இந்த அவலம்.


பின்னால் இந்த மக்களின் ஜனத்தொகைப் பெருக்கத்தைக் காரணம் கூறி, கருஅழிப்பு பிரச்சாரத்தைத் தீவிரமாக்குகின்றனர். அதற்கு சலுகைகள், உதவிகள், மனிதவளப் பரிவு கொண்ட செயல்கள், ஆணாதிக்கத்துக்கு எதிரான அரண் எனப் பலவாகத் தீவிரமான வடிவங்கள் இந்த மக்களுக்குள் சிந்தனையிலும், செயலிலும் அமுல் செய்து வருகின்றனர். கருத்தடைக்கு உள்ளாகும் இந்த மக்களின் பொருளாதாரப் பலமோ, ஆணாதிக்கத்தின் தீவிரமோ குறைந்ததா? என்றால் இல்லை. மாறாக அதிகரித்துச் செல்லுகின்றது.


இன்றைய பட்டினிக்கும், அவலத்துக்கும் ஒவ்வொரு வெள்ளை இனத்தவரின் நுகர்வே காரணமாகும். இங்கு அந்த மக்களின் மீதான குற்றம் (மக்கள் தொகைப் பெருக்கக் குற்றம்) என்பதல்ல. மாறாக வெள்ளை இன ஏகாதிபத்திய நுகர்வுச் சிந்தனைக்குட்பட்ட அனைத்து மக்களின் நுகர்வுதான் பட்டினியாலும், நோயாலும் இறக்கின்ற ஒவ்வொரு மனிதனின் இறப்புக்கும் மறைமுகமான பங்காளிகள் ஆவர். ஆனால் இங்கு இருந்துதான் எதிர்க் குற்றச்சாட்டும், அதற்குத் தீர்வாகக் கருத்தடையும் பின்னால் வெளிப்படுகின்றது.


கருத்தடை உபகரணம் என்பது இன்னொரு புறத்தில் மேற்கு ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்களின் பாரிய சந்தையையும், மூலதனத்தையும் திரட்டிக் கொடுக்கின்றது. இதனால் இலவச விளம்பரத்தைத் தீவிரமாக்குகின்றது. இது மேற்கில் பூர்சுவா குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாக்குகின்றது. மேற்கில் பூர்சுவா சொகுசுத்தனத்தில் குழந்தையை இடைஞ்சலானதாகப் பார்ப்பதும், சமூகக் கண்ணோட்டச் சிதைவும், கருத்தடை உபகரணங்கள் இலவசமாகக் கிடைக்க, கருத்தடை விளம்பரத்துக்கு இலகுவாகப் பலியிடப்படுகின்றனர். அத்துடன் பெண்ணியலின் கொச்சை புரிதலும், விளக்கமும் கருத்தடையால் மேற்கில் ஜனத்தொகை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. இது அந்த நாடுகளில் பல குழந்தைகளைப் பெற ஊக்குவித்த சலுகைகள், பணக் கொடுப்புகளை மீறியும் ஜனத்தொகை குறைப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இந்த ஏகாதிபத்தியம் மேற்கில் குழந்தை பெற்றால் குழந்தைக்கும், பெற்றோருக்கும் பணம் முதல் பல சலுகைகளையும், மற்ற நாடுகளில் குழந்தையைப் பெறாது நிரந்தர தடைசெய்தலில் தற்காலிகச் சலுகையுடனான விளம்பரம் என இரட்டைப் போக்கை நயவஞ்சகத்துடன் கையாளுகின்றது. இந்த இரண்டு போக்கில் இரண்டையும் அல்லது எதாவது ஒன்றையும் பல்வேறு ஏற்றத் தாழ்வுடன் புரிந்து கொண்டே கருத்தடை இன்று உள்ளது. இதை முன்னெடுக்கும் பெண்ணியல் அமைப்புகள் கூட இதில் இருந்து தப்பிவிடவில்லை. ஒற்றைப் பரிணாமத்தில் பெண்ணின் உடல் உரிமைக்கு அப்பால் அந்த உரிமை எப்படிச் சமூகத்தில் இருந்து சுதந்திரமாக இயங்குகின்றது என்ற அறிவின்றியே கூக்குரல் போடுகின்றனர்.


கருத்தடை என்பது ஏகாதிபத்தியக் கோட்பாட்டுக்குக் கட்டுப்பட்டவைதான். இதை அரசுகள் இன்று ஏகாதிபத்தியக் கட்டளைக்கு ஏற்ப நடைமுறைப் படுத்துவதில் தீவிரமாக இயங்குகின்றது. இந்தியாவில் அவசரகாலச் சட்டம் நிலவிய பாசிச சூழலில் இந்திராவும், அவரின் புதல்வர் சஞ்சய் காந்தியும் இணைந்து 65 இலட்சம் ஆண்களைத் துப்பாக்கி முனையில் மலடாக்கினர். இதுபோல் எண்ணிக்கை தெரியாத அளவுக்குப் பெண்களையும் மலடாக்கினர். இவை எதற்காக செய்யப்பட்டன? இது நாட்டின் தேவையில் இருந்த சமூகத்தை மாற்ற கையாண்டவையல்ல. மாறாக ஏகாதிபத்திய நலனுக்காகத் தேச மக்களைச் சிதைத்ததன் விளைவு. இது போல் பல இலக்குகளை ஆசை காட்டியும், ஏழ்மையை விலை பேசி பணம் கொடுத்தும், ஏமாற்றியும், துப்பாக்கி முனையிலும் நிகழ்த்தப்பட்டது. இது பல நாடுகளின் பொதுத்தன்மையாகும்.


இந்தக் கருத்தடைகளுக்கு ஏகாதிபத்தியப் பன்னாட்டுக் கண்டுபிடிப்புகளைப் பரிசோதிக்கும் உயிர் உள்ள ஜடங்களாக ஏழைப் பெண்கள் சிதைக்கப்படுகின்றனர். அதேநேரம் பாவனைக்குக் கெடுதல் என்று மேற்கில் தடைசெய்யப்பட்ட மருந்துகளை மூன்றாம் உலக நாடுகளில் கட்டாயப்படுத்திச் சந்தைப்படுத்தியும், வலுக்கட்டாயமாக விற்கவும் செய்யப்படுகின்றது. இவைகள் மூலம் இவைகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் கோடிகோடியாகப் பணம் திரட்டுவதுடன் மக்களின் ஜனநாயகம் பற்றியும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பது பற்றியும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். பெண்கள் தமது பூர்சுவா பெண்ணியல் புரிதலில் உடல் சுதந்திரம் பற்றி பன்னாட்டு விளம்பரத்துக்குட்பட்டே செயல்படுவதைத் தவிர்க்கமுடியாத அரசியல் எல்லைப்படுத்துகின்றது. இந்த ஜனநாயகம் சூறையாடும் சுரண்டல் ஜனநாயகம் என்பது மக்களுக்குப் புரிகின்ற போது இந்தக் கர்ப்பத்தடை பிதற்றல்களை மக்கள் வேரறுப்பது தவிர்க்க முடியாதது.

Last Updated on Saturday, 17 June 2017 13:46